November 27, 2006

அம்மாவும் பண்டிகையும்

பண்டிகை நாட்களில் அம்மா மேலும் அழகாகத் தோன்றுவார்கள்.புத்துணர்ச்சியோடு வேலைகளை செய்யும் போது மற்ற நாட்களை போல அல்லாமல் நாமும் சேர்ந்து உதவி செய்ய வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விடுவார்கள். கார்த்திகை மாதம் வந்ததும் தினமும் வாசலில் இரு விளக்கு வைப்போம். திருநாள் அன்று பழைய விளக்கு எல்லாம் தேய்த்து வைத்து பின் ஈரம் போக துடைத்து வைப்போம்.
50 விளக்கு என்றால் 100 திரி திரிக்கச் சொல்வார்கள் அம்மா.இரண்டு இரண்டாக இடவேண்டுமாம் .அப்போதெல்லாம்..இன்று கிடைப்பது போல் திரி கடைகளில் வாங்கும் பழக்கம் இல்லை.பஞ்சை திரியாக்கி எண்ணி வைப்போம்....விபூதி குழைத்து விளக்கின் பக்கங்களில் வைத்து அவை காயும் முன் குங்குமம் அதன் மேல் வைத்து அழகு செய்து என்று தம்பியும் நானும் உதவி செய்யும் போதே அம்மா எங்களுக்கு சில விசயங்கள் சொல்வார்கள்.
அரிசி மாவினால் கோலங்கள் இடும் போது சிறு எறும்புக்கும் நாம் உதவியாக இருக்கவே அரிசி மாவுக் கோலம் இடுகிறோம். மஞ்சளில் கதவில்
பட்டைகள் இடும் போது மஞ்சள் கிருமி நாசினி அது தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் நம் வீட்டில் நுழைவதிலிருந்து காக்கும்
என்று சொல்வார்கள்.


சில கதைகளும் கிடைக்கும் பண்டிகை தினத்தில். அம்மா அரிசி மாவினை குழைத்து கை அச்சினை கதவின் மேல் பதிப்பார்கள். ஏனென்று கேட்டால் அதற்கு ஒரு கதை.

மகாபலி வருடம் ஒரு முறை ஓணத்தன்று வருவதாய் கேரளத்தில் சொல்வது போல் கார்த்திகை அன்று வருவார் என்றும் அதற்காக கை பதிப்பது நம் பக்கத்து ஒரு நம்பிக்கை...என்பார்கள்.
கார்த்திகை மாதம் காற்று நிறைய இருக்கும் . தீய சக்தி இந்த அச்சினால் ஏதும் வீட்டில் வர அஞ்சும் என்றும் அவர்கள் பாட்டி காலத்து நம்பிக்கை ப் பற்றியும் சொல்வார்கள்.

செவிக்கும் உணவளித்து பின் வகைவகையாய் ... திண்பண்டங்களும் கிடைக்குமே பண்டிகை வந்தால் .




November 24, 2006

வளரும் நாடுகளை குறிவைக்கிறார்கள்

வளர்ந்த நாடுகள் சிலவற்றை அறிமுகப்படுத்தி, அவற்றை தவிர்கக நினைக்கும் நேரத்தில் தான் , அவற்றை வளர்ந்த நாடுகளைப் பார்த்து வளரும் நாடுகள் கற்றுக் கொள்கின்றன. வளர்ந்த நாடுகள் பர்கர்,பீட்சா மற்றும் கோலா போன்றவற்றை குழந்தைகள் உடல் நலத்துக்கு கெடுதல் விளைவிக்கும் பொருட்கள் என்று உணர்ந்து தங்கள் நாட்டு பள்ளிகளில் விற்பதினை தடை செய்கிறார்கள். இங்கோ நம் குழந்தைகள் அவற்றுக்கு அடிமையாக ஆரம்பித்து இருக்கிறார்கள்.
கார்டூன் பாத்திரங்களின் உருவங்கள் பொறித்த விளையாட்டு பொருட்களுக்காகவும், பொம்மைகளுக்காகவும் இன்று மெக்டொனல்ட் அழைத்துச் செல்லுமாறு பெற்றோர்களை குழந்தைகள் வற்புறுத்துகிறார்கள்.எங்கிருந்து தெரிந்து கொள்கிறார்கள். மிகச்சரியாக குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடுவில் விளம்பரங்களை ஒளிபரப்பி அவர்களைத் தூண்டுகிறார்கள்.நாம் என்னதான் தவிர்த்து வந்தாலும் இவ்விளம்பரங்கள் மூலம் எல்லாம் அவர்களுக்கு அறிமுகம் ஆகிவிடுகின்றன.
இப்போது இத்தகைய விளம்பரங்களை குழந்தைகள் நிகழ்ச்சிக்கு நடுவில் ஒளிபரப்ப வளர்ந்த நாடுகள் தடைவிதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வருங்கால தலைமுறைகளைப்
பற்றிக் கவலைப் படுகிறார்கள்.
அங்கே விற்பனை கெடுவதால் ஏற்படும் நட்டத்தினை சரிசெய்ய இதுபோன்ற தடைகள் அதிகம் இல்லாத வளரும் நாடுகளை நோக்கி நிறுவனங்கள் நகர்கின்றன .நம் விளையாட்டு வீரர்களும் நடிகர்களும் அதற்கு மாடல்களாக வருகிறார்கள். நானும் குடிக்கிறேன் நீங்களும் குடிங்கள் என்று.
என் குழந்தையின் பள்ளியில் நர்சரியில் கோலாகுடித்தால் பல் கருப்பாகிவிடும்
பால் குடி வெண்மையாய் இருக்கும்..ஆப்பிள் சாப்பிடு கன்னம் சிவப்பாகிவிடும் என்று சொல்லிக் கொடுத்துவிட்டு....அவர்களின் பணத்தேவைக்கு நீச்சல் பயிற்சி வகுப்புக்கு வெளியில்கோலா பானத்தையும்
சிப்ஸ்ம் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.
இது பற்றி ஹிந்துவில்

November 15, 2006

யாருக்கு போர் வேண்டும்?

வேதாத்திரி மகரிஷி எழுதிய கருத்துக்கள் இங்கே.
மனிதகுலத்தில் வாழ்க்கை வளம் காக்கும் முயற்சியில் ஏற்பட்ட ஆட்சி முறைகள் பலப்பல. தடியாட்சி,முடியாட்சி சர்வாதிகார ஆட்சி கடைசியாக குடியாட்சி அன்று ஆட்சி முறைகள் வந்தன.ஆட்சியாளர்கள் எடுத்த பாதுகாப்பு முயற்சியே போர்களாக உருவானது. இப்பொழுது மனித குல வாழ்க்கை வசதிகளும் விஞ்ஞானமும் கல்வியின் மூலம் உயர்ந்துள்ளன.இன்னுமா போர் மனிதனுக்கு வேண்டும்? யாருக்கு போர் வேண்டும்?யுத்தத் தளவாடங்கள் செய்து விற்பனை செய்பவர்களுக்கு மாத்திரம் போர் வேண்டும்.ஐக்கிய நாடுகள் சபையில் ஐந்து நாடுகளுக்கு ரத்துரிமை [VETO power] என்ற அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.எனவே அந்தச் சபை உலகக் குடியாட்சி முறையாகச் செயல்பட முடியவில்லை. சில நாடுகளுக்கே உள்ல இந்த உரிமையை ரத்து செய்ய வேண்டும்.
ஒவ்வொரு நாடும் எல்லை பாதுகாப்பு ராணுவம் வைக்காமல் ஐநா சபை எல்லா நாடுகளுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு செய்யவேண்டும்.
போரில்லா நல்லுலகம் வேண்டும்.வளம் பெற்று வாழ்வோம்.
மேலும் மகரிஷியின் எழுத்துகளை படிக்க அறிய
http://www.vethathiri.org/