April 6, 2011

மந்திரக்கோல்

பெண் எழுத்து என்கிற தலைப்பில் நம்ம ஆசியா கூப்பிட்டிருக்காங்க..ரொம்ப நாட்களாக பிள்ளைகளின் பரிட்சையும் விடுமுறையும் என்று நான் எதையும் எழுத இயலவில்லை. பாருங்க இப்படி இருக்கு பெண் எழுத்து. பலவிதமான கடமைகளுக்கு நடுவில் பெண்கள் விசயங்களைப் பகிர்ந்துகொள்வதை கொஞ்சம் தள்ளிப்போடுவதை வழக்கமாக்கியே வைத்திருக்கிறோம். அப்படியே பகிர்ந்துகொண்டாலும் அதன் தொடர்விளைவுகளைப் பற்றியும் யோசிக்கிறோம். சிலர் பரீட்சார்த்தங்களில் ஈடுபடுகிறார்கள். முயற்சிக்கிறார்கள் . சிலர் வெற்றி பெறுகிறார்கள். எழுத்தைப் பெண் எழுத்தென்று பிரிக்கவேண்டிய அவசியமில்லை என்று கூறுவது ஒரு புறமிருந்தாலும் அதன் அவசியம் என்று ஒன்று இருக்கிறது.

உலகம் முழுதும் ஆண்களைப்பற்றிய கருத்துக்கள் ஒன்று விடாமல் ஆண்களால் எழுதப்பட்டுவிட்டதோடு அவர்களே பெண் மனம் என்ன சிந்திக்கும் அவளுக்கான துயரங்கள் என்ன? அதற்கான தீர்வுகள் என்ன என்பதையும் எழுதி வைத்திருக்கிறார்கள். எந்த ஒரு விசயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. பல வருடங்களாக நாம் அந்த ஒரு பக்கத்தையே ஏன் பார்க்கவேண்டும் மற்றோரு பக்கத்தையும் பார்க்கலாமே.. அதற்காகவேனும் பெண்களின் எழுத்து என்று ஒன்று நிறைய வரவேண்டியே இருக்கின்றது. இன்னமும் கூட போதுமன உயரத்தை அந்த எழுத்து அடையாமல் இருப்பதற்கு அவர்களுடைய தளைகளே காரணம். அவை அன்பான தளைகளாய் இருப்பதால் கொஞ்சம் கடினம் தானே.

பெண் எழுத்து என்ற உடன் சமீபமாய் படித்த, நினைவுக்கு வந்த சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன் .

நினைவுக்குறிப்பாக அக்கதையைப்பற்றி சிறிதாக எழுதி வைத்திருக்கிறேன் இங்கே சசி தேஷ்பாண்டேயின் “என் அன்பான சாரதி” வயதான காலத்தில் கணவனை இழந்த தாய்க்கும்சிறுவயதில் கணவனை இழந்த மகளுக்கும் இடையில் எழும் பிரச்சனையைக் குறிப்பிடும் கதை.

-----------

The white masai என்று ஒரு படம் பார்த்தேன் . ஒரு ஜெர்மனியப்பெண் பாய் ப்ரண்டுடன் கென்யாவுக்கு லீவுக்கு சென்றவள் அங்குள்ள பழங்குடியன் ஒருவன் மேல் கொண்ட ஈடுபாட்டால் அங்கேயே தங்கிவிடுகிறாள். அது அந்த பெண் எழுதிய உண்மைக்கதையைக் கொண்டு எடுக்கப்பட்டது என்பதால் அதனைப்பற்றி இணையத்தில் தேடியபோது அதன் பின் அவர் மேலும் இரண்டு புத்தகங்களூம் போட்டிருப்பதாகத் தெரிந்தது. நேர்மறை எதிர்மறை கருத்துக்கள், அப்புத்தகத்தை விட அந்த பெண்ணின் குணத்தைப்பற்றிய அலசல்கள் தான் அதிகம் கிடைத்தது. வாழ்க்கையில் சடாரென்று முடிவெடுப்பது பற்றி பலருக்கும் பல கேள்விகள் இருந்தது. ஃபேரிடேல்களைப் படித்து வளர்ந்தவர்களுக்கு கூட வாழ்க்கையில் அதுபோன்ற சந்தர்ப்பங்களை நம்பமுடிவதில்லை. மேலும் கலாச்சாரத்தில் எதிரெதிர் துருவங்களைச்சேர்ந்ததாலேயே அவளால் அங்கு தொடர்ந்து வசிக்கமுடியவில்லை என்று குறிப்பிட்டு அலசிக்கொண்டிருந்தார்கள். கலாச்சாரத்தை விடுவோம்.. ஒன்றுமில்லை ஒரே கலாச்சாரமாக இருந்தாலும் கூடவே பெண்கள் ஒருகுடும்பத்திலிருந்து மற்றொன்றுக்கு வாழ்க்கைப்படும்போது வருகின்ற ப்ரச்சனைக்கும் இதற்கும் எனக்கு வித்தியாசமே தெரியவில்லை.

பதினைந்து வருடத்திற்கு பின் பழங்குடி கிராமத்தை மகளுக்கு காண்பிப்பதற்காக (புத்தகத்துகாகவும் இருக்கலாம்) சென்று பார்த்தபோது அவருடைய மூன்றாம் புத்தகத்தில் மூன்று மனைவிகளில் இவரை முதல்மனைவியாய் இன்றும் மதிப்பதாக குறிப்பிட்டிருக்கிறார் . இதுவும் நமக்கு ஆச்சரியத்தைக்கொடுக்காது . ஏனெனில் மனைவிகள் எத்தனை இருந்தாலும் தலைவன் உயர்ந்தவன். தலைவிகளின் வாழ்க்கையின் பின்புலத்தை அக்குவேறு ஆணிவேறாக அலசுவது தான் பண்பாடு..

உலகின் எந்த மூலையில் எந்த கலாச்சாரத்தைச்சேர்ந்தவனை அவள் கல்யாணம் செய்திருந்தாலும் ஈகோ , சந்தேகம் போன்ற ப்ரச்சனைகள் வர வாய்ப்புக்கள் இல்லையா என்ன? ஒரு பெண் இந்த புத்தகத்தை விமானத்தில் படித்ததால் ஜன்னல் வழி தூக்கிப் போடமுடியவில்லை என்றார். இந்த மாதிரியான எண்ணங்கள் எல்லாம் இதுவரை ஆண்களால் மட்டுமே பெண்களைப்பற்றி எழுதப்பட்டதாலே தான் இருக்கவேண்டும்.

--------------------
திரைப்பாடல்களில் கூட பல வருடங்களாக பெண் மன ஆசைகளை ஆண்களே எழுதி வந்ததற்கும் தாமரை வந்த பின் பெண்ணின் கோணத்தில் எழுதப்பட்ட பாடல்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தைக் காணலாம். இன்னும் சொன்னால் ஆண்கள் காதல் வயப்பட்டு பாடும் சினிமாப்பாடல்கள் கூட  தாமரை எனும் பெண்ணின் கவிதையின் மூலம் இன்னும் அழகாகத் தெரிவதாக நான் உணர்கிறேன்.
------------------------
ஆங்கில பதிவுகளில் நான் தொடரும் ரோசாரியாவின்  பதிவில் பெண்களின் அன்றைய நிலை ஒரு இடத்தில் சுட்டப்பட்டபோது வயது வித்தியாசமில்லாமல் பலரும் அது இன்றும் தொடர்வதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். The more things change, the more they remain the same...
----------------------------
சமீபத்தில் மீட்டுருவாக்கக்கதைகள் , புராணக்கதையில் இருக்கும் பெண்களின் நிலையை வேறு பார்வையில் ( வேறென்ன பெண்ணுக்காக யோசிக்கும் பார்வையில் தான் ) எழுதப்பட்டகதைகள் பற்றிய நிகழ்வொன்றினைப்பற்றி சுசீலாம்மா சொன்னார்கள். ஆனால் குழந்தைகளின் விடுமுறையால் என்னால் அதனைச் சென்றுபார்க்க முடியவில்லை. எவ்வளவோ காலங்களாக பெண்கள் குறைவாகவே எழுதுவதால் ஆண்களால் கட்டமைக்கப்பட்ட சமூக நீதிகளால், எப்பொழுதாவது எழுத்தென்னும் கூர்வாட்களுடன் புறப்பட்டால் அது பெண் எழுத்தென்றே கூறி சிறுமைப்படுத்தப்படுவதும் நடந்துகொண்டே இருக்கிறது.
-------------------------
பலகாலமாக நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம் . பள்ளிப்பிள்ளைகளின் புத்தங்களில் அப்பா பேப்பர் படிக்கிறார். அம்மா சமைக்கிறாள் என்று இருக்கிறதே என்று. ஆனால் தற்போது மகனின் பள்ளிப்புத்தகத்தில் அம்மா புத்தகம் படிக்கிறாள். அப்பா செடிக்கு தண்ணீர் ஊற்றுகிறார். அம்மாவும் அப்பாவும் சமைக்கிறார்கள் என்று நான் அவனுக்கு சொல்லிக்கொடுக்கும்போது அட என்றபடி புத்தகத்தை வடிவமைத்தவர்களைத் தேடி முன்பக்கம் சென்றபோது அது பள்ளியின் தலைமை ஆசிரியையும் மற்றும் இரு ஆசிரியைகளும் என்று அறிந்தபோது பெண்களின் கைகளுக்கு ஒரு மந்திரக்கோல் கிடைத்தால் இப்படியே எல்லா சரியான இடங்களில் சரியானபடி பொருந்திப்போய்விடுமோ என்று தோன்றுகிறது.