August 31, 2011

தூரத்து வெளிச்சம்

இறக்கை இழந்த
சிறுநெல்மணிக்கான
பறவைக் குறுநடையோடு
தேடித்தேடி
களைத்திருந்தான்

எவனுக்கோ இவனுக்கோ
உருவங்கள் சாயங்கள் மறையும் வரை
சீட்டுக்கள் என்றும் ஏமாற்றுவதில்லை

கதைகளைப் புனைந்து
வாக்குகளை உரைக்கும்
ஆருடக்காரனின்
அடுக்கு மொழிகள்
தன் வசீகரங்களை இழந்திருந்தது

சொன்ன சொற்களுக்கான
உரைகள்
திருத்தப்பட்டன
சொல்லாத சொற்கள்
அரங்கேறி
வாழ்க்கை கலைத்தது

ஆருடங்கள் மாறுகிறதாயில்லை
ஆருடக்காரன்
மாறிக்கொண்டே இருக்கிறான்
வேதனை உதறி
எட்டி இட்ட நடையின் வழியில்
கோர்த்த கரங்களால்
உடைபடும் வேலிகள்
---------------------------------
(புதன்கிழமை, 14 அக்டோபர் 2009 )முல்லை( ஈழநேசன்)

----------------------------------

August 17, 2011

ஜாக்தே ரஹோ - விழித்துகொண்டிரு

நேற்று பலூன்மாமா கல்வெட்டு வின் பஸ்ஸை எல்லாரும் பகிர்ந்திருந்தார்கள், திண்ணை மற்றும் காலியிடங்களில் வழிபோக்கர்கள் தங்குவதற்கு அனுமதிக்காத நம் ஊர்களில் மனிதம் செத்துவிட்டதாகக் கூறி இருந்தார். தங்க விடுகிறோமோ இல்லையோ இன்றளவில் தண்ணீர் கொடுக்கக்கூடப் பயமாக இருக்கிறதாம்.

கல்லூரிக்கு நாங்கள் தண்ணீர் எடுத்துச்சென்றோமா என்று நினைத்துப் பார்க்கிறேன். நான்கு மணிநேரக்கல்லூரிக்கு நாங்கள் தண்ணீர் எடுத்துச்சென்றதாக நினைவில்லை. பஸ்ஸுக்கு காத்திருக்கும் போது அங்கு ஒரு குடிசை வீட்டில் தண்ணீர் கேட்போம் அவர்களும் ஒரு செம்பு நிறைய தண்ணீர் தருவார்கள்.ஊரில் எங்கள் வீடும் ரோடு பார்க்க இருந்ததால் யாராவது தண்ணீர் என்று கேட்டு வருவார்கள்.நாங்களும் கொடுப்பதுண்டு. வீட்டுக்கு எதிர்புறத்தில் ஒரு பொதுக்குழாயும் உண்டு. அதில் தண்ணீர் வருகின்ற நேரத்தில் போவோர் வருவோரும் அங்கே தண்ணீர் குடிப்பதுண்டு. பலசமயம் உடைந்து தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கும்.

தனிவீடுகளில் இன்று தண்ணீர் கேட்கவந்து அடித்துபோட்டு கொள்ளை என்கிறார்கள். சரி அடுக்குமாடிகளிலோ காவலுக்கு ஆள் இருப்பான் உள்ளே நுழைய முடியாது. இப்படி ஒரு படத்தைப் பார்த்தது  நினைவு வந்தது.
ஜாக்தே ரஹோ.. (விழித்து இரு..)1956


ராஜ்கபூர் நடித்தபடம் .இப்படி ஒரு நல்லபடத்தை சொந்த செலவில் எடுத்திருக்கிறார். படத்தில் அவருக்கு அதிகம் வசனமில்லை. எல்லாம் முகக்குறிப்பில் தான். மிக அருமையான நடிப்பு. ஒரு ஏழை விவசாயி நகர்புறத்திற்கு தன் வாழ்வின் முன்னேற்றத்திற்காக வந்து சேர்கிறான். அவனுக்கு தண்ணீரக்கு தட்டழிந்து ஒரு அடுக்கு மாடிக்குடியிருப்புக்குள் இருந்த தண்ணீர்குழாயில் தண்ணீர் குடிக்க நுழைகிறான். அழுக்கு உடையும் பஞ்சப்பராரி தோற்றமும் அவனை ஒரு திருடன் என நினைக்கவைத்து குடியிருப்பே அவனைத்தேடி அலைய அவன் ஒவ்வொரு வீடாக ஒளிந்து தப்பிக்க முனையும் போது ... அங்கே வசிக்கும் ஒவ்வொருவரும் , பெரியமனிதப்போர்வையில் செய்கின்ற திருட்டுத்தனங்களை , தவறுகளை காண்கிறான்.

மனைவியிடம் திருடும் கணவன், குடிகாரன் மனைவியை படுத்தும்பாடு, கள்ளநோட்டு அச்சடிப்பவன், ஜோசியம் என்று பொய்வேசம் போடுபவன் என இருக்கிறது அந்த பெரியமனிதர்களின் இடம் . கள்ளநோட்டுக்களை அடிப்பவனோடு மருத்துவர் உடந்தை. அவர்களிருவரும் வீடுகளுக்கு இடையில் ரகசியப்பாதை வைத்து திருடனைத் தேடிவரும் போலீஸ் குழுவிலிருந்து தங்கள் தவறை மறைக்க முயல அங்கே போய் ராஜ்கபூர் சிக்கிக்கொள்கிறார். தங்களுக்காக ராஜ்கபூரை பலியிடவும் அவர்கள் தயங்கவில்லை.. போலீஸ் வந்து சோதனை செய்வதும் அதற்கு முன் ஒரு குழுவாக காவல் செய்பவர்களும் பின் வருகின்ற பத்திரிக்கையாளர்களும்.. 1956 லேயே அப்படித்தான்,  இன்னமும் பிப்லிலைவ் எடுக்கவும் நம்மிடம் கதை இருக்கிறது.

படத்தைப் பார்த்து பலநாட்களாகிவிட்டதால் சில பகுதிகள் நினைவில் இல்லை. ரோந்துகுழு அமைக்கப்படும்போது அதன் தலைவன் மிக நல்ல வசனங்கள் பேசுவான் . அதற்கான வீடியோ கிடைக்கவில்லை. இந்தப்பாடலைக் கேளுங்கள், படத்தில் வரும் ஒரு பஞ்சாபி ரோந்துக்குழுவின் பாடல்..
The Lyrics and its Translation


Oye aiwe duniya dewe duhai,
jhootha pondi shor
te apne dil to pooch ke vekho
kaun nahi hai chor

The world appeals for no reason
the liar makes hue and cry
Why don't you ask your heart
who is not a thief!


te ki mein jhooth bolya
koi na
te ki mein mein kufr tolya
koi na
te mein ki zeher gholya

Hey have I lied?
No!
Hey have I spread disbelief?
No!
Hey have I poisoned?
No!


Oye hath dooje ka maar maar ke
ban de log ameer
mein ainu kainda chori
dunika kendi taqdeer
By pulling stuff from others hands
people become rich
I call it thievery
the world calls it destiny

te ki mein jhooth bolya
koi na
te ki mein mein kufr tolya
koi na
te mein ki zeher gholya

Hey have I lied?
No!
Hey have I spread disbelief?
No!
Hey have I poisoned?
No!

O hut ke
Paraji bach ke

Hey move aside
Sir, be careful!


O vekhe pandit gyaani-dhyaani
daya-dharam de bande
Ram naam japte
khaave goshala de chande

I have seen wise and pious
men of religion and kindness
They chant the name of Ram
and hoard all the charity


te ki mein jhooth bolya
koi na
te ki mein mein kufr tolya
koi na
te mein ki zeher gholya

Hey have I lied?
No!
Hey have I spread disbelief?
No!
Hey have I poisoned?
No!

O hut ke
Paraji bach ke

Hey move aside
Sir, be careful!

O sachche phansi chade vekhe
jhoota mauj udave
Loki kende rab di maya
Mein kenda anyay

I have seen honest people hanged
while the culprit enjoys life
People say it god's will
I call it injustice

te ki mein jhooth bolya
koi na
te ki mein mein kufr tolya
koi na
te mein ki zeher gholya

Hey have I lied?
No!
Hey have I spread disbelief?
No!
Hey have I poisoned?
No!

O hut ke
Paraji bach ke

Hey move aside
Sir, be careful!
(thanks to sandeep)

இரக்கமே இல்லாமல் ராஜ்கபூரின் உடம்பில் பணக்கட்டுகளை அடுக்கி ஜன்னல் வழியாக வெளியேறவைக்கிறார்கள். மேலே இருந்து தொங்கும் துணியை அறுக்கிறான் முதலாளி. கீழே இருந்து நெருப்பு பற்றவைக்கிறான் ஒருவன். கீழே திரண்ட மக்கள் ( யாரு எவன் என்று தெரியாவிட்டாலும் கூட்டமாக சேர்ந்து கொடிபிடித்தால் கொடிபிடிப்போம், தர்ம அடி போட்டுகிட்டிருந்தால் அதையும் செய்வோம்) ராஜ்கபூரை கீழே இருந்து பொருட்களால் அடிக்கத்தொடங்குகிறார்கள். திருடன் திருடன் என்று திட்டும் அவர்கள் பணம் பையிலிருந்து கீழே விழும்போது அடுத்தவன் பணமென்ற உணர்வின்றி பணம் பணம் என்று பொறுக்கத்தொடங்கிவிடுகிறார்கள்.


மேலும் கொஞ்சம் பணத்தை இறைத்து கவனம் திருப்பி ,தப்பி மேல் மாடிக்கு சென்று நீங்கள் படித்தவர்கள் , பெரியமனிதர்கள் ,நீங்கள் என்னைத்திருடன் என்றா சொல்கிறீர்கள் .. நீங்கள் மட்டுமென்ன..அனைவருமே திருடர்கள் என்று அவர்களின் குற்றங்களைச்சொல்லும்போது அனைவரும் அவனைக் கொல்ல நெருங்குகிறார்கள். அந்தக்காட்சியில் வசத்தின் வீச்சு அருமையானதாக இருக்கும். (அதன் வீடியோ கிடைக்கவில்லை. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.)


மீண்டும் தப்பி ஒரு வீட்டில் நுழையும் போது டெய்சி ராணி (குழந்தைநட்சத்திரம் )அங்கே அவரிடம் கனிவுடன் பேசுகிறார். நீ திருடனா ? இல்லை தானே? அப்பறம் எதுக்காக நீ பயப்படனும் தைரியமாக நட . யாரும் உன்னை எதுவும் செய்யமாட்டார்கள் என்று தன்னம்பிக்கை கொள்ளச்செய்கிறாள். தைரியமாக அவர் நெஞ்சு நிமிர்த்தி நடந்துவெளியேறுகையில் சோதனையிடவந்த போலீஸ் அங்கே தவறு செய்த பெரியமனிதர்களைக் கையும்களவுமாகப் பிடித்துச்செல்கிறார்கள். எளிய விவசாயியை யாரும் கவனிக்கவே இல்லை. அந்த காட்சியை இந்த வீடியோவில் பார்க்கலாம்.


இந்தப்படத்தை என் மகனோடு பார்த்துக்கொண்டிருந்தேன். அழுக்கு உடையும் ஏழையுமாய் இருப்பவனெல்லாம் திருடன் இல்லைடா என்று சொல்லிக்கொண்டிருந்தேன். குழந்தை அவனுக்கு தைரியம் சொல்லும் காட்சி வரை கவலையாக இருந்த அவன் முகம் மலர்ந்ததைக் கண்டேன். இன்று இப்பதிவை எழுதத் தயார் செய்தபோது கூட.. இந்தக்காட்சியை மீண்டுமொருமுறை பார்க்கவேண்டுமென்று  உட்கார்ந்திருந்தான்.
Jaago mohan pyaare, jaago
Jisne mann ka deep jalaaya
(Who ever lit the lamp in heart)
Duniya ko usne hi ujalaa paaya
(has found the world lit)
Mat rehna ankhiyon ke sahaare
(Do not depend on eyes only)
Jaago mohan pyaare, jaago
(Arise dear Mohan, Wake up)


August 16, 2011

தமிழ்மீடியாவில் சிறுமுயற்சி


தமிழ்மீடியா தளத்தில் சிறுமுயற்சி தளம் பற்றி அறிமுகம் வெளிவந்திருக்கிறது. இன்றைய வலைப்பூ பகுதியில் சிறுமுயற்சிக்கும் இடமளித்த அவர்களுக்கு என் நன்றிகள். இங்கே கீழே இருப்பது அங்கே வெளிவந்திருக்கும் பதிவு.

-----------------------------------------------------------------

வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக,

தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக மாற்றுங்கள்.. எனக் கூறும் முத்துலட்சுமி அதற்கு எல்லாவிடங்களிலும் தேவையானது சிறு முயற்சி என்பதைச் சொல்லாமல் சொல்வது போல் தன் வலைப்பதிவுக்கு வைத்திருக்கும் பெயர் சிறு முயற்சி.
இவரது வலைப்பதிவின் பெயர் சிறு முயற்சியாக இருந்தாலும், அதன்மூலம் இவர் பதிவு செய்கின்ற விடயங்கள் பெருமுயற்சி என்பதில் சந்தேகமில்லை. புதிய இடங்களைச் சுற்றிப்பார்பது சுகமென்றால், அதனை அழகாகவும் ரசனையாகவும் மற்றவர்களுக்கு சொல்வது மகிழ்ச்சி கலந்த பெருமிதம்.
தொடர்புச் சாதனங்களும், உலக வலையாக்கம் விரிவுபடாதிருந்த காலத்தில், தமிழ் எழுத்துலகில் தனது பயணக்கட்டுரைகள் மூலம் உலகின் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லும் அனுபவத்தைக் கொடுத்தவர் எழுத்தாளர் மணியன். இன்று அந்தச் சூழ்நிலை மாறி, பலரும் பலதும் தெரிந்திருக்கக் கூடிய சூழலிலும், அதேவிதமான ரசனைச்சுவையைத் தனது எழுத்துகளால் வலைப்பதிவில் பதிவு செய்யும் முத்துலெட்சுமியின் முயற்சியை சிறுமுயற்சி என்றிடலாமா..?
சுற்றுப் பயண அனுபவங்கள் என்றில்லாமல் பல்வேறு அனுபவங்களையும் தனது ரசனையின் நோக்கோடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது சிறுமுயற்சியில். இவ்வாறு அனுபவங்களை, அறிந்தவைகளை அழகாகப் பதிவு செய்யும் முத்துலெட்சுமி குறித்து பலராலும் அறிந்து கொள்ளப்படாத செய்தி ஒன்று உள்ளது.
4தமிழ்மீடியாவில் முன்பு வாரமொரு வலைப்பதிவு பகுதியிலும், 'ஆனந்தி' சஞ்சிகையில் வலைப்பதிவு பகுதியையும் சிறப்பாகத் தொகுத்தளித்தவர் என்பதை, 4தமிழ்மீடியா 4வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இவ்வேளையில் பெருமையோடு தெரிவித்து, பல வலைப்பதிவுகளின் பரவலான அறிமுகத்துக்குக் காரணமாக இருந்த அவரது சிறுமுயற்றி வலைப்பதிவினை இந்தப் பகுதியில் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
அவரா..இவர் என ஆச்சரியப்படுகின்றீர்களா?.. 

August 12, 2011

யாவரும் நலம்




தரைமுழுதும் உதிர்ந்திருக்கும்
பின்கட்டு முருங்கைப்பூ,
செலவழிக்க விரும்பாத
சிறுவாடாய் ,
சின்னப்பிள்ளைகள் சிரிப்பினில் மகிழ்ந்திருந்த
மல்லிகை மணம் வீசும்
முற்றமிருக்கும்.
இல்லாதவர் பெயர்தாங்கிய
பலகைகள் தொங்கும்
இலக்கமிட்ட வாயில்
அனைவருக்குமாய் தவமிருக்கும்.
முகவரிகள் தொலைத்தபின்
நலமில்லா விவரம் தாங்கி
இருபக்கமும் கடிதமில்லை.
சோறிட்ட காகங்கள்
நன்றியோடு
நினைவில் நிறுத்தி
கரைகின்ற ஒரு பொழுதில்
யார் காலடியாவது
புழுதி கலைத்து நுழையுமெனில்
மீண்டும் ஒருநாள்
கடிதங்கள் வரக்கூடும்.
பேனாக்கள் உயிர்த்தெழுந்து
நலங்கள் விசாரிக்கப்படலாம்.
நலங்களை நினைப்பதில்
எங்கிருக்கிறது பிழை?
யாவரும் நலமென
எதற்கும் நாம் கையெழுத்திட்டுப்
பழகிக்கொள்வோம்.

August 11, 2011

கேப் மே ஃபெர்ரி ரைட்


கேப் மே எமலன் பிசிக் எஸ்டேட் (Emlen Physick Estate)


பிசிக் ந்னு ஒரு டாக்டர் . ஆனா அவர் டாக்டருக்கு ப்ராக்டிஸ் செய்யலையாம். விவசாயி யா மாறிட்டாராம். அவர், அவருடைய அம்மா , ஒரு அத்தை அந்த எஸ்டேட் வீட்டில் இருந்தாங்களாம். பிசிக்கோட தாத்தா தான் அமெரிக்க அறுவை சிகிச்சை மருத்துவத்துக்கு தந்தையாம்.. அவர் கண்டுபிடித்த சிகிச்சைக்கான புதிய முறைகளும் கருவிகளும் இன்றும் பயன்படுகிறதாம்..

வீடுகள் வாங்கி விற்பதும் , (கேப் மே)ஊர் எப்படி இருக்கவேண்டும்ன்னு முடிவு செய்யும் கூட்டங்கள் நடத்துவதுன்னு அவர் பொழுதைப்போக்கி இருக்கிறார். அவருக்குப் பின்னால் அந்த இடத்தை இப்பொழுது மிட் -அட்லண்டிக் செண்ட்டர் என்கிற ஆர்ட் அண்ட் ஹுயுமனிடீஸ் நிறுவனம் எடுத்து நடத்துகிறதாம். வருகிறவர்கள் நுழைவுக்கட்டணம் கொடுப்பதை வைத்தே நிர்வாகம் நடக்கிறதாம். இதையெல்லாம் இதோ இவங்கதான் எங்களுக்கு சொன்னாங்க...

சுற்றிக்காட்ட அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கூட்டம் வரவேண்டும் . அதனால் எங்களைக் காக்க வைத்திருந்தார்கள். எங்களுக்கு கேப் மே ஃபெர்ரிக்கு அடுத்து போகவேண்டுமே என்ற போது சரி உங்களுக்கு முதல் தளம் மட்டும் காட்டுகிறேன். நீங்கள் பிறகு செல்லலாம் என்றார். அதுல என்ன பெருந்தன்மையோ.? மற்றவர்கள் வரும் முன் மேல்தளத்தை எங்களுக்கு காட்டி இருக்கலாம். ம்..

வீட்டின் ஒவ்வொரு அறையும் அன்றைய காலத்தில் எப்படி அலங்கரிக்கப்பட்டிருந்ததோ அதே முறையில் அப்படியே இருந்தது. வரவேற்பரையின் ப்ரம்மாண்ட அலங்கராங்களும் , உணவுக்கூடத்தின் அருமையான தட்டு கரண்டிகளின் கலெக்சனும் ( என் மருமகனுக்கு ஸ்பூன் கரண்டின்னா பிரியம் எடுத்து தரலன்னா அழுவான் அடுத்த அறைக்கு ஓடுங்க ) பெரிய பெரிய இரும்பு அடுப்புகளும் சின்ன இரும்பு இஸ்திரி பெட்டியும் துணி துவைக்கும் மர அடுக்குகளும் வித்தியாசமான ஒன்று தான். மரவேலைப்பாடுகள் நிறைந்த அந்த வீடு அழகோ அழகு.  இன்னும் அந்த எஸ்டேட்டில் பார்க்க வேண்டியது இருந்தாலும். என்ன கிடைத்ததோ அதை சரியாகப் பார்த்துவிட்டோம். இந்த வண்டியில் வைத்து இன்னும் சில இடங்களையும் உள்ளே காண்பிப்பார்களாம்.


கீழ்தளத்தைச் சுற்றிக்காண்பித்துவிட்டு வீட்டுக்கு வந்த விருந்தாளியை வழியனுப்புவது போல வெளீயே வந்து சரியான நேரத்துக்கு ஃபெர்ரியைப் பிடித்துவிடுவீர்கள்ன்னு நினைக்கிறேன் என்று சொல்லி வழியனுப்பினார்கள்.




இந்த இணைப்புக்கு சென்று அந்த அறைகளை நீங்களும் பார்க்கலாம்.


கப்பலுக்கு நேரமாச்சு..



வாங்க இந்த வீடியோவைப் பாருங்க.. அப்படியே நீங்களும் கூடவே காரில் அமர்ந்தபடியே கப்பலுக்கு ஏறுங்க..

கேப் மே டெர்மினல் பாருங்க நீலக்கலர் கூரையோட எவ்வளவு அழகா இருக்கு. அந்தப்பக்கம் லூயிஸ் லயும் டெர்மினல் இதே அமைப்பும் நிறமும் தான்.

இதோ இந்த வழியாப்போனோம்ன்னா கப்பலுக்குள் கார்களை நிறுத்தற இடம் இருக்கு.

 நிறுத்திட்டு அப்படியே படிகளில் ஏறி மேல போகலாம். மேலே ஏறும்போதும் இறங்கும்போதும் மிகக்கவனம் வேணும்.. அடிக்கின்ற காற்றோ அல்லது கப்பலின் ஆட்டமோ நம்மை தண்ணிக்குள் தள்ளிவிட்டுவிடும். கைப்பிடியை சரியாப்பிடிச்சுக்கவேணும்..

முதல் தளத்தில் நல்ல உணவுக்கூடமும் கடையும் இருக்கிறது. வாங்கும் உணவுகளை கப்பலின் ஆட்டத்தோடு சரியான மேஜைக்குக் கொண்டு செல்வது கூட பெரிய விசயம் தான். கொஞ்சம் மஃபின்ஸும் சல்சாவும் சிப்ஸும் ஐஸ்க்ரீமும் வாங்கிக்கொண்டு அமர்ந்தோம். பிறகு அதற்கடுத்த தளத்துக்கு ஏறவேண்டும். காற்று தள்ளுகிறது. கதவைத்திறக்க ரெண்டு ஆள் பலம் வேண்டும். படிகளில் ஏறி மேலே போனால் வெள்ளை நிற பெஞ்சுகள் வரிசை வரிசையாக இருக்கிறது.




கடலைக்கிழித்துக்கொண்டு செல்லும் கப்பலின் தடம் பின்னால் .. சிறுது நேரம் அதை ரசித்துவிட்டு .. கப்பலின் முன் பகுதிக்குச் சென்றோம்.


அப்போது தூரத்தில் ஒரு யாட்ச் படகு காற்றில் சரிந்தது போலத் தெரிந்தது . கப்பலின் கேப்டன் உடனே ஒலிபெருக்கியில் ,’நாம் அவர்களுக்கு உதவி தேவையா என்று பார்த்துவிட்டு பிறகு தொடர்வோம்’ என்ற படி அதன் அருகில் செல்ல ஆரம்பித்தார். ஒலிபெருக்கியில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கேட்டார். அங்கிருந்து ஒரு கை அசைப்பு வந்ததும் சரி என்று மீண்டும் லூயிஸ் நோக்கித் திரும்பினோம்.

 ஒரு பாய்மரக்கப்பல் வந்தது. அதைப்பார்ததும் கதை மற்றும் காமிக்ஸ் புத்தகத்தில் பார்த்த கனவு போன்ற கடற்பயணத்தில் இருப்பது போன்ற உணர்வு ..

 இந்தப்பயணம் கேப் மே யிலிருந்து லூயிஸுக்கு தரைவழிப் பயணமான 4 நான்கு மணிநேரத்தை கடல்வழியில் ஒருமணி நேரமாகக் குறைக்கிறது. கடலுகு நடுவில் சிறிய இரண்டு லைட் ஹவுஸ்களும் உண்டு. இப்பொழுது தானியங்கி . ஆனல் முன்பு தனியாக அங்கே சிலர் காவல் காத்துக்கொண்டிருந்தார்களாம்.  எப்படி இருந்திருக்கும்?

googlegoogle

August 8, 2011

கவிஞர் தாமரை

முன்பு ஈழநேசன் தளத்திற்காக கவிஞர் தாமரையைப் பேட்டிக்கண்டு எழுதி இருந்தேன். அவர்கள் தற்போது தளத்தை முல்லை என்ற பெயரில் மாற்றிவிட்டிருக்கிறார்கள். எனது தளத்தில் ஒரு சேமிப்பிற்காக இங்கே இணைத்திருக்கிறேன்.
----------------------------------
16.10.09

கனிமொழி மற்றும் வைசாலி கண்ணதாசன் போன்றோர் முன்பே பாடல்கள் எழுதி இருந்தாலும் அவர்கள் திரையிசைப் பாடலாசிரியர்களாக தங்கள் துறையை மாற்றிக் கொள்ளவில்லை. இயந்திரவியல் படித்து இயந்திரங்களுடன் பழகத்தலைப்பட்ட ஆறுவருடங்களின் பின் கவிதைகளுக்கான தன் தாகத்தை உணர்ந்தவராய் பாடல் புனையத் தொடங்கியவர் கவிஞர் தாமரை.


பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகள், கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் அவருடைய ஆக்கங்கள் அறியப்படத் தொடங்கியபோது இயக்குனர் சீமானால் திரைத்துறையில் ’இனியவளே’ திரைப்படத்திற்காக தேவாவின் இசையில் ’தென்றல் எந்தன் நடையைக் கேட்டது’ பாடல் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். ஆண்கள் மட்டுமாய் (நடிப்பு தவிர்த்து) இருந்துவந்த துறைக்கு பெண் வருவதும் தன்னை நிலை நிறுத்தி கொள்வது என்பதும் எளிதானது அன்று.


கவுதம் மேனன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் எழுதிய பாடல்கள் இவருக்கு மிக நல்ல பெயரை ஈட்டித்தந்தன. சின்னத்திரையிலும் கணேஷ் வசந்த், பஞ்சவர்ணம் , பாக்யராஜின் “ ஒரு கதையின் கதை” போன்ற தொடர்களுக்காகப் பாடல்கள் எழுதிய அனுபவமும் இவருக்கு இருக்கிறது. முற்றிலும் பெண்களால் உருவாக்கப்பட்ட ’மித்ரு மை ப்ரண்ட்’ படத்தில் இவர் பாடலாசிரியராக இருந்திருக்கிறார்.

பெண்களின் உணர்வுகளையும் ஆண்களின் வரிகளில் கேட்டே பழகிய நமக்கு , தாமரை எழுதிய ’வசீகரா’ பாடல் தமிழ்த் திரைப்படத்தில் முதன் முதலாக பெண் ஒருத்தியின் காதல் உணர்வு பெண் பார்வையில் எழுதப்பட்ட பாடலாக பதிவாகி இருக்கிறது. பெண்ணின் தேவைகளை ஆசைகளை அவளே வெளிப்படுத்துவதில் வேறுபாட்டினைக் காட்டிய அந்தப் பாடல் அனைவரையும் வசீகரித்த ஒன்று. ஆங்கில வார்த்தைக் கலப்பற்ற பாடல்களைத் தரவேண்டுமென்கிற எண்ணமிருப்பவர். மட்டுமல்லாமல் மிக அழகான தமிழ்ச் சொற்களை இதுவரை பயன்படுத்தாத வகையில் திரைப்பாடல்களில் புகுத்துபவர் என்றும் சொல்லவேண்டும். இன்றைய கணினி உலகத்தில் இளைஞர்களும் வெற்றிப்பெற்ற பாடல்களில் வருகிற அந்தப் புதிய தமிழ்ச் சொற்களை என்னவென்று தேடித் தெளிந்து கொள்வது தமிழுக்கு நன்மையல்லவா? பாடலைப்பாடுபவரும் சரியான உச்சரிப்பைத் தருகிறாரா என்பதை இவர் கவனிக்கும் பழக்கமுடையவர். கூட்டாக அனைவரும் கவனம் எடுத்துக்கொண்டு வெளிவரும் பாடல் அழகாக அமைந்துவிடுவதில் ஆச்சரியமில்லை.


மேலும், இரட்டை அர்த்தக் கலப்புக்கள் மற்றும் ஆபாச வரிகள் இன்றி வெளிவரும் மிக மெல்லிய உணர்வுகளைக் காட்டும் வரிகளைக் கொண்ட தாமரையின் பாடல்கள் மக்களின் மனதை வருடி மகிழ்விக்கிறது . ஃபைவ் ஸ்டார் படத்தின் ஒரு பாடலில்
வானவில்லாய் ஆணும்
வண்ணம் ஏழாய் பெண்ணும்
இருந்தால் இன்னும்
வானின் அழகு கூடும்
சுட்டு விரலாய் நீயும்
கட்டை விரலாய் நானும்
எழுதும் எதுவும்
கவிதையாக மாறும்
எளிமையாகவும் காதலைச் சொல்வதில் நளினமாகவும் வந்து விழுகிறது வார்த்தைகள்.

வேண்டாத வேலையென்று ஈழத்துப் பிரச்சனைகளை பலர் தவிர்த்துக் கொண்டிருக்க ,சிலரோ ஆறுதலாகப் பேசிவிட்டு அமைதிகொள்ள , தாமரை அதிகாரங்களையும் எதிர்த்துக் குரல் கொடுத்த வண்ணமிருக்கிறார். தன் கவிதைத் தொகுப்புகளிலும் மேடைப்பேச்சுக்களிலும் அவரின் எண்ணங்களை உரத்துச் சொல்கிறார். ஈழநேசன் (தற்போது முல்லை)  இணையதளத்திற்காக தனிப்பட்ட முறையில் தாமரை அளித்த பேட்டியைக் கீழே காணலாம்.

இரட்டை அர்த்தக்கலப்பற்ற.. மெல்லிய உணர்வுகளைக் காட்டக்கூடிய நல்ல தமிழ் வார்த்தைகளால் ஆன பாடல்களைத் தருவதற்கு நீங்கள் தனியாக முயற்சி எடுக்க வேண்டி இருக்கிறதா?
ஆமாம், நான் திரைப்படங்களில் பாடல் எழுத வந்து 12 வருடங்களாகின்றன. அப்பொழுது ஆங்கில வார்த்தைகளும் இரட்டை அர்த்தங்களுமான பாடல்கள் வெற்றிப்பெற்றுக் கொண்டிருந்த காலம் தான். வரும்போதே அப்படியான பாடல்களை எழுதமாட்டேன் என்று ஒரு முடிவெடுத்துத்தான் எழுத வந்தேன்... வாய்ப்புக் கிடைப்பதே அபூர்வமாக இருக்கும்; அல்லது வாய்ப்பே கிடைக்காது. நான் நிபந்தனை போடக்கூடிய நிலையும் இல்லை. ஆனாலும் நான் உறுதியாக இருந்தேன். நான் நினைப்பது போல எழுத வாய்ப்புக் கிடைத்தால் எழுதுவது, இல்லை என்றால் அந்த வாய்ப்பே வேண்டாமென்று இருந்தேன். அப்படி எத்தனையோ பாடல்களை நிராகரித்திருக்கிறேன். காலப்போக்கில் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி நல்ல அழகான பாடல்களாக எழுதும்போது அதுவே ஒரு அடையாளமாகி வெற்றிகளைப் பெற்று தந்திருகிறது.

முன்பெல்லாம் வானொலியில் கவிஞர்களைப் பற்றியும் பாடல்களை எழுதியபோதான சுவாரசியங்களையும் தொகுத்துப் பேசி பாடல்களை அளிப்பார்கள்.. இப்போது தொலைக்காட்சி, வானொலி ஏன் இணையம் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பாக மாறிவருகிற காலகட்டத்தில் இணையத்திலும் கூட கவிஞர்களைப் பற்றிய அதிக குறிப்புகள் இருப்பதில்லை. இது பற்றி உங்கள் கருத்து?


இது ஒரு வருத்தமான விசயம்..கவிஞர்களுக்கான மரியாதை தரப்படவேண்டும்.. .குறுந்தகடுகள் ஒலிநாடாக்கள் வருகிறது இல்லையா? பலசமயங்களில் குறுந்தகடு வெளிவந்தபின் தான் எங்களுக்குத் தெரியவரும். அவர்கள் கவிஞர்களின் பெயரைக் குறிப்பிடத்தவறி இருக்கலாம், அல்லது ஒருபடத்துல நிறைய கவிஞர்கள் எழுதறாங்க .. அப்போழுது குறுந்தகட்டில் ஒன்றாகச் சேர்த்துப் போட்டு இருப்பாங்க.. எந்தப் பாட்டு யாரு எழுதினார்கள் என்று தெரியாது. . தற்பொழுது வெளிவந்த ஒரு திரைப்படக் குறுந்தகட்டில் கவிஞர்கள் பெயரே இல்லை..என்ன செய்வது நாம ? கண்டிக்கப்படவேண்டிய விசயம்தான் இது.

தாய்த் தமிழ்ப் பள்ளிக்கான உங்கள் (ஆர்வம்) ஆதரவு ,விரிவாக்கம் பற்றிச் சொல்லுங்களேன்.

ஆதரவுன்னு சொல்வதை விட அந்த முறையை சென்னையில் , அம்பத்தூர்ல ஆரம்பித்தது என் கணவர் தியாகு. இதே போன்ற பள்ளிகள் இன்று தமிழ்நாட்டில் 20 , 25 பள்ளிகள் இருக்குன்னு சொல்றாங்க.. அவற்றுக்கு முன்னோட்டம் எங்கள் பள்ளி. தமிழ்க் குழந்தைகள், தமிழ்வழியில் , தாய்மொழியில் படிக்கணும்னு முயற்சி எடுத்து தொடர்ந்து செய்து வருகிறார்.
இப்ப 5 ஆம் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்பு வரை என்றாகி இருக்கிறது. பள்ளியின் முதல்மாணவி இன்று பொறியியற் கல்லூரியில் சேர்ந்து பட்டமே வாங்கிட்டாங்க.. .இடம் வசதியும் போதவில்லை..உயர்நிலைப் பள்ளியாக்க உதவி தேவைப்படுகிறது. உதவி கிடைத்தால் கல்லூரிவரை கூடச் செய்யலாம்..

விருதுகள் பெறுவது பற்றி உங்கள் மனநிலை என்னவாக இருக்கிறது?
விருதுகளை நான் முக்கியமாக நினைப்பதில்லை . கவிஞர்கள் விருதைத் தாண்டி இருக்கவேண்டும் என்றும் நினைக்கிறேன். ஆரம்பக்கட்டங்களில் விருதுகள் ஊக்கமளிக்கலாம்.. எழுத்துக்கு அங்கீகாரமாகவும் , பரவலாகப் பலருக்கும் சென்று சேர்வதற்கும் அவை பயன்படலாம். ஒருகட்டத்தில் விருதுகளைத் தாண்டி நாம வளர்ந்துரனும். தகுதியான விருதுகளைப் பெற்றுக்கொள்வதில் தவறு இல்லை. தகுதியற்ற விருதுகளை மறுக்கவும் செய்யவேண்டும் . தமிழகஅரசு விருது, மக்களோட வரிப் பணத்துல இருந்து கிடைப்பது அந்த ஒரு காரணத்துக்காக அதை வாங்கலாம்ன்னு எனக்குத் தோணும்.. ஆனா எந்த விருதுகளா இருந்தாலும் அரசியல் இல்லாமல் உண்மையான நடுவர்குழு அமைத்துத் தேர்ந்தெடுக்கப்படனும்.
மற்றபடி விருதே வேணாம்ன்னு ஒரு நிலை எனக்கு வரனும்ன்னு நினைக்கிறேன்.. மக்கள் நினைக்கனும், இவர்களுக்கு விருதுகொடுக்கலையே, கொடுத்திருக்கலாமேன்னு நினைக்கனும்..இவங்களுக்குக் குடுத்துட்டாங்களேன்னு நினைக்கக்கூடாது..(சிரிக்கிறார்)


தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பவர் நீங்கள்.. போருக்குப் பின்னும் மீள்குடியேற்றம் கனவாக, முகாம்களில் ஈழமக்கள் துயருற்று இருக்கிறார்கள். அவர்கள் வாழ்நிலை சீராவதற்கு ஏற்படும் தாமதம் பற்றிய உங்கள் கருத்து என்ன?
உலகம் முழுதும் இலங்கை அரசைக் கண்டனம் செய்து கொண்டிருக்கிறாங்க. இந்தியாவோ மற்ற நாடுகளோ சொல்லி இலங்கை கேட்பதில்லை. போருக்குப் பின் இலங்கை அரசு எப்படி நடந்துகொள்ளும் என்பது எல்லா மத்திய, மாநில, உலக அரசுகளுக்கும் தமிழின உணர்வாளர்களுக்கும் முன்பே தெரிந்த விசயம் தான். அதை இன்று தான் தெரிந்துகொண்டது போல அரசுகள் நாடகம் ஆடுகின்றன. இந்தியாவே இலங்கை அரசைப் பாதுகாப்பது போல் இருப்பதனால் தான் உலகநாடுகள் தயங்குகின்றன .. போர்குற்றங்களுக்காக ஹிட்லரைச் சேர்ந்தவர்கள் பிற்காலத்தில் ராணுவ நீதிமன்றத்தால் தண்டனை பெற்றது போல இன்று உடந்தையாக இருப்பவர்கள் அனைவரும் கூண்டில் ஏற்றப்பட வேண்டும்.
நேற்று (11.10.09)காலை என் கணவரும் முன்னின்று நடத்திய தமிழினப் பாதுகாப்பு மாநாடு நாள் முழுதும் நடந்தது. காலை பேரணியில் மூவாயிரம் பேர் கலந்துகொண்டாங்க..மாலை பொதுக்கூட்டம் இருந்தது . கூட்டத்தில் சில தீர்மானங்கள் எடுத்தோம். அதில் நானும் ஒரு தீர்மானம் வாசித்தேன். இலங்கையை நாம் வற்புறுத்த வேண்டுமெனில் பொருளியல் தடை விதிக்கலாம். தனிமைப்படுத்தலாம். தமிழ்த் திரைப்படத்துறை சேர்ந்தவர்கள் படப்பிடிப்புக்கு இலங்கை போகாமல் இருக்கவேண்டும்.

August 1, 2011

சுப்புடு நினைவில் ஒரு இசை விழா

வடக்குவாசல் புத்தகங்கள் வெளியிடும் நிகழ்வும் மற்றும் சுப்புடு நினைவில் ஒரு இசை விழாவும் என்று இந்த வாரம் மூன்று நாள் நிகழ்வு இருந்தது. பொதுவாகவே வடக்குவாசல் நிகழ்வில் தமிழிசை கேட்க நல்ல வாய்ப்பு என்பதால் ஆவலாக எதிர்பார்ப்பதுண்டு. முன்பே வெள்ளி, சனிக்கிழமைகளை அதற்கென ஒதுக்கி வைத்துவிட்டோம். ஞாயிறு அன்று மட்டும் செல்ல இயலவில்லை. மகளுக்கு அடுத்த நாளுக்கான பாடங்கள் தயார் செய்யவேண்டி இருந்தது.
{அன்று அவசரமாய் பத்திரிக்கைகளுக்கு அனுப்ப படம் வேண்டுமென்று என்னுடைய கேமிரா படங்களைத்தான் வாங்கினார்கள்.. எந்த பத்திரிக்கையில் வந்ததென்று தான் தெரியலை :) }




வெள்ளி மாலை என்றாலும் கூட கலாம் என்னும் ஈர்ப்புக்கென சில மக்கள் , இசைக்கான மக்கள், புத்தங்களின் ரசிகர்கள் என அரங்கம் இரு தளங்களும் நிறைந்துவிட்டது. கலாமின் உரை பற்றி விரிவாக கலாநேசன் இங்கே பதிவிட்டிருக்கிறார்.


இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தப் பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.- கலாம்

தானாகவே முயல்பவர்களுக்கு எந்த வித உந்து சக்தியும் வெளியிலிருந்து தேவைப்படுவதில்லை. ஆனால் பலருக்கு ஊக்கமும் உந்துதலும் வெளியிலிருந்தே தேவைப்படுகிறது. இல்லையென்றால் இத்தனை எப்படி எப்படி, வெற்றியின் கதைகள் புத்தகங்கள் விற்பனையில் முதலிடத்தில் இருக்குமா?
அப்படி ஒரு ஊக்கத்தை அளிப்பவராக இருக்கிறார் கலாம்.. ஒவ்வொரு முறையும் அவர் கேள்விகளோ உறுதிமொழியோ அல்லது தன் கவிதையோ மேடையில் சொல்லும்போது மக்களையும் கூடவே சிறுவர்சிறுமிகளைப்போல ஒப்புவிக்க வைத்துவிடுகிறார்.

சுப்புடுவின் நினைவுகளைப்பற்றி பகிர்ந்துகொண்டார் கலாம் , சுப்புடு எழுதிய கடிதத்தையும் வாசிக்கச்செய்தார் . அக்கடிதத்தில் இருந்தபடியே சுப்புடு இறந்தபோது மொகல் தோட்டத்து ரோஜாமலரோடு தான் சென்றதையும் சொன்னார். மேலும் அக்கடிதத்தில் ”கலாம் உங்கள் கவிதைகளை நாட்டியமாக்க வேண்டுமென்றால் மிகத் திறமைவாய்ந்த நாட்டியமணிகளால் தான் முடியும் . எனவே எக்காலத்திலும் அதில் நாட்டியமாட அனுமதிக்காதீர்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார் சுப்புடு. அந்த வரிகள் வாசிக்கப்பட்டபோது ”அது தான் சுப்புடு ”என்றார் கலாம் சிரித்தபடி. .. அவர் நாட்டியம் தானே ஆடக்கூடாதென்றார் பாடலாக அன்று சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் பாடினார்கள். ஒரு கவிதை சிறியது.
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே
வளமான நாடாக்குவோம்
இள உள்ளங்கள் பொறி ஏற்றியே

அறிவாற்றலும் தொழில் மாட்சியும்
எங்கள் லட்சியம் ஈட்டிடும் ஆயுதமே
சிறு லட்சியந் தனில் சிந்தனை
வீணாவதை மாபெரும் குற்ற மென்போம் (வளமான )

பொருள் வளமோடு நன்னெறியோடு
நம் பாரதம் உயர்ந்திட உழைத்திடுவோம்
கோடிகள் நூறாகிலும் இந்த
லட்சியச் சுடரினை பரப்பிடுவோம் (வளமான)
இக்கவிதையின் இன்னோரு பத்தி எனக்கு தெரியவில்லை. இசையுடன் அழகாக இருந்தது.

மற்றொன்று மிக நீளமானது (ஆலமரம் பற்றிய கவிதை) மிகக்குறைந்த நேரத்தில் அதனை இசைவடிவமாக்கி பாடிவிட்டதாக பின்னர் பென்னேஸ்வரன் மேடையில் அறிவித்தார்.

வெளியிடப்பட  இருந்த புத்தகங்களை பற்றியும் அவற்றின் ஆசிரியர்களையும் பாராட்டிப்பேசினார் கலாம்.
வெளியிடப்பட்ட புத்தகங்கள்
சிந்தனைச் சிதறல்கள் - ய.சு.ராஜன்
விருட்சங்களாகும் சிறுவிதைகள் - சி.டி.சனத்குமார்
சனிமூலை - ராகவன் தம்பி
வடக்குவாசல் நேர்காணல்கள் - ராகவன் தம்பி
தேவந்தி - எம். ஏ சுசீலா
சுசீலாம்மாவின் தேவந்தி கதைத் தொகுப்பிலிருந்து தனக்குப் பிடித்த கதையைக் குறிப்பிட்டு கலாம் மேடையிலேயே பாராட்டிய விதமும் அவர் ஏன் அப்படி அக்கதையை தேர்ந்தெடுத்து குறிப்பிட்டார் என்றும் சுசீலாம்மா இந்த இணைப்பிலுள்ள பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்கள். தேவந்தி புத்தகத்தை சுசீலாம்மாவின் மகள் மற்றும் பதிவர் விட்டலன் இருவரும் மேடையில் கலாம் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.


பிறகு சீர்காழிசிவசிதம்பரம் அவர்களின் கச்சேரி தொடங்கியது. வாரீர் தமிழ் தேன் பருகவாரீர் எனத்தொடங்கினார். கலாம் அவர்களின் இரண்டு கவிதைகளைத் தொடர்ந்து இனிய தமிழ் பாடல்களால் எங்கள் ஆவலைத்தீர்த்தார். திருக்குறள்- செய்நன்றி அறிதல் பகுதியிலிருந்து சில குறள்களை பாடலாக்கித்தந்தார். இதுவும் வடக்குவாசல் நிகழ்வின் ஒரு சிறப்பம்சம். ‘மாயவித்தை செய்கிறானே’ கஞ்சிரா,மோர்சிங், வயலின் ,மிருதங்கம் என பக்கவாத்தியத்திய கலைஞர்களோடு கச்சேரி களைகட்டியது.

‘நீயல்லால் தெய்வமில்லை’ இந்தப்பாடலைக் கேட்டால் நெகிழ்ந்து அழுகை தொண்டை அடைக்கும்.
ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய் நீயல்லால் தெய்வமில்லை முருகா ....

‘சின்னஞ்சிறு பெண்போலே’ ...
’சங்கே முழங்கு’ .. ( கீழே உட்கார்ந்து கார் விளையாடிக்கொண்டிருந்த சபரியும் பாட ஆரம்பித்துவிட்டான் சங்கே முழுங்கு)
‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது’ ....
தூரதொலைவிலிருந்து வந்தவர்கள் சிலர் கிளம்பத்தொடங்கிவிட்ட போதிலும் இருக்கின்ற மக்கள் விரும்பிக்கேட்ட பாடல்களைத் தொடர்ந்து பாடுவதில் ஆர்வமாக இருந்தார் சீர்காழி. இருக்கையிலிருந்து எழுந்து ஒரு வயதான அம்மா ( அவர்கள் எழுந்த வேகமும் பாடலைச் சொன்னவேகமும் நிச்சயம் அவர்களின் உள்ளிருந்த இளவயதைச்சொன்னது) ’அமுதும் தேனும் எதற்கு பாடுங்க’ என்றார். தேனாக இருந்தது கச்சேரி முழுவதும். அவரே எழுதிய ஆங்கிலப்பாடல் லார்ட் முருகா லண்டன் முருகா பாடலும் பாடினார். :)

சனி மாலையன்றும் அரங்கம் நிரம்பிவிட்டது. சுப்புடு குடும்பத்தினர் ஒரு அறக்கட்டளை நிறுவி இளைஞர்களுக்கு சுப்புடுவிருது வழங்க இருக்கிறார்கள். இவ்வருடத்திற்கான விருது குமாரி சௌம்யாவிற்கு வாய்ப்பாட்டிற்கும் , மிருதங்கத்திற்கு ஒரு சிறுவனுக்கும் கிடைத்தது. (ஸ்ரீராம் எனநினைக்கிறேன்).

ஐ ஏ எஸ் பாலசந்திரன் அவர்கள் தமிழிசையை பரவலாக்கவேண்டிய அவசியத்தினைக் குறித்து சிறிய உரையாற்றினார்.
நித்யஸ்ரீ தத்வமறிய தரமா”என்று கணபதியை ரீதிகௌளையில் பாடித் தொடங்கினார்.
சென்ற இசைவிழாவின்போது நித்யஸ்ரீ அவர்களின் பாட்டி காலமானதால் தில்லி வர இயலாமல் போனது. எனவே இம்முறை பாட்டி பாடும் பாடல்களில் தனக்குப் பிடித்தமானவற்றை பாடினார்.
'மரியாத காதய்ய’, பாகிமாம்ராஜ ராஜேஸ்வரி, ஈசனே கோடி சூர்யப்ரகாசனே ,ப்ருஹிமுகுந்தேத்தி ரசனே...
எங்கள் ஊர் மலை மந்திர் முருகன் மேல் பாடப்பட்ட ’உத்தர ஸ்வாமிமலை உகந்த முருகா உன் சிற்றடி தனில் பணிந்தேன்’ என்ற பாடலையும் பாடி தில்லி மக்களை குளிர்வித்தார். இந்தப் பாடல் மீனாட்சி அம்மாள் என்பவர்களால் இயற்றப்பட்ட பாடல். அவர்களை முருகன் பாட்டியென்றே பலரும் அறிவார்கள். முருகன் மேல் விருப்பமாக பல பாடல்களையும் எழுதியுள்ளார்.

கவிமணியின் ’எங்கள் நாட்டுக்கு எந்த நாடு ஈடு ?’(பெருமைக்கென்ன கேக்கனுமா..)

’தீராத விளையாட்டு பிள்ளை ’.. அதே பாட்டியின் சாயலில் பாடினார்.

’கோட்டைக்கட்டாதேடா மனிதா ..’ இந்தப்பாடலை நான் கேட்டதே இல்லை.
மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் வசந்த் ராக தில்லானா பாடி நிகழ்ச்சியை நிறைவுசெய்தார்.

மகளுக்கு நித்யஸ்ரீ என்றால் மிகப்பிடிக்கும். அவருடைய கையெழுத்தைப்பெறவும் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் மேடையேறினோம். சிரித்தமுகத்துடன் ”பாடறியாம்மா .. நல்லா பாடு” என்று கூறி கையெழுத்திட்டுக் கொடுத்தார்கள். வீடு வரும்போது தீராதவிளையாட்டுப்பிள்ளையே காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது.