December 21, 2011

எண்ணப்பின்னல்கள்


எண்ணப்பின்னல்கள்
பின்னலும் பிரித்தலும்
பிரித்தலும் பின்னலுமாய்

பின்னிக்கொண்ட மகிழ்ச்சிகள்
மகிழ்விழை இழைந்தோர் நிலையும் - நீ
நிலைத்த நெஞ்சில் ஈரமுமாய்

ஈரவிழிச் சொற்கள்
சொல்லிழந்தோர்ப் புள்ளியில் மலரவும்
மலர்மனதில் எண்ணப்பின்னல்கள்
முதல்முறையாக பின்னல்கோலாட்டம் கண்டபோது தோன்றியது முதல் மூன்றுவரிகள்

December 11, 2011

உள்வெளி


கோணங்களை மாற்றிவைத்தாலும்
அக எதிரொளிப்பில்
ஒளியிழைகளைப் பற்றி
மேலேறி நிற்கிறது
குறுக்குவெட்டிலும் நோக்கி
பிழைகளைப் பட்டியலாக்கி
முடிவுகளை மேலேற்றி
வடிவம் செய்கிறது

சத்தமின்றி சில உயிர்களை
அச்சட்டகத்திலாக்கி
பார்வைக்கு மறைவாய்
அலையத்தொடங்குகிறேன்.

வின்மீண் தொலைவில்
வேறொரு உலகம் சமைத்தும்
பருவங்களில்
நீர் வற்றாத ஓவிய ஆறாக
உள்ளே தான் உறைந்திருக்கிறதது

உள்ளோடும் ஈர்ப்பில்
சுருங்கி சுருங்கி
அளவில்லாததும்
உருவில்லாததும் ஆனபின்னும்
நிரம்பாத வெற்றிடமும் கொண்டு..

இம்மாத வடக்குவாசலில் வெளிவந்திருக்கும் என் கவிதை