May 6, 2014

லேண்ட்ஸ்டௌன்

லேண்ட்ஸ்டவுன் (Landsdowne) - உத்தரகாண்ட்
தில்லியிலிருந்து மீரட்-> பிஜ்னூர்->நஜிபாபாத் -> கோத்வாருக்குப் பிறகு தான் மலைப்பகுதி தொடங்குகிறது.  அதிகம் சுற்றுலாத்தலமாக அறியப்படாமல் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் தற்போது இல்லை. தில்லியிலிருந்து 250 கிமீ. காலை ஆறுமணிக்கோ அதற்கு முன்போ கிளம்புவதால் மீரட்டின் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கலாம் என்பதால் ஆறுமணிவாக்கில் வீட்டிலிருந்து இறங்கினால் மேகம் இருண்டு , மழைக்காற்று . காரில் ஏறும்போதே சடசட வென மழைத்தூரல். லேண்ட்ஸ்டவுன் தில்லிக்கே வந்துவிட்டிருந்தது.


பயண தூரத்தின் சரிபாதியாக வரக்கூடிய மீராப்பூருக்கு அருகில் சில தாபாக்கள் உண்டு. மதிய உணவுக்கு அங்கே இளைப்பாறுதல்.சாலையோரக்கடைகள் தவிர்த்து மல்டி மில்லியன்ஸ் ( போகும்வழியில் இது சாலையின் மறுபுறத்தில் இருப்பதால் தவறவிட்டோம்) சுகாதாரமான கழிப்பறைகளுடன் கூடிய உணவகம் என்பதாக அறிவுறுத்தப்பட்டிருந்தோம்.

 மலையேறும்  போது நல்ல சாலை. சில இடங்களில் மட்டும் கொண்டை ஊசி வளைவுகள் உண்டு. தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓக் க்ரோவ் இன் ஐ நடத்தும் தம்பதியினர் தொடர்ந்து வருகையை மற்றும் சரியான பாதையில் தான் வருகிறோமா என்பதை விசாரித்துக்கொண்டே இருந்தனர். மதிய உணவுக்கு அவர்களுடன் வெல்கம் லஞ்ச் என்று சொல்லி இருந்தார்கள்.

நாங்கள் கோத்வார் அருகில் சிறிய குன்றின் மீது அனுமன் கோயிலைக்கண்டதும் நிறுத்திவிட்டோம். மகனுக்கு பஜ்ரங்க்பலி என்றால் அவ்வளவு பிரியம். அருகில் ஓடும் ஆறும் ( ஒற்றையடிப்பாதை அளவே ஓடினாலும் சலசலப்பு உயரம் வரைக்கேட்டது) மலையடிவார அழகும் சித்பலி அனுமன் கோயில் இருந்த குன்றில் பல சித்தர்கள் வந்திருந்து தியானம் செய்திருப்பதற்கு காரணமாக இருந்திருக்கலாம். மலையடிவாரத்தில் பொன்வயலழகும் ...

மலையில் காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. மலையேறத்தொடங்கும் முன்பே ஒரு இடத்தில் மகன் எங்களிடம் “கண்களை மூடி இயற்கையின் சத்தத்தைக் கேட்டுப்பாருங்கள்” என்று சொன்னபோது ஆச்சரியமாய் யாரு இவனா இவனா சொன்னது என்று  கேலி செய்துகொண்டிருந்தோம்.
oak grove inn
ஓக் க்ரோவ் இன் சென்றடைந்ததும் தம்பதிகள் எங்களை அவர்கள் வீட்டிற்கு வந்தவர்களைப்போல உபசரித்து உரையாடிவிட்டு  விடுதியின் உணவருந்தும் அறைக்கு அழைத்துச்சென்றார்கள். வீட்டில் தயார் செய்வது போன்ற உணவு. அமைதியான பரிசாரகர்கள். சப்பாத்தி , சாதம், பருப்பு, சப்ஜி வகைகள். எனக்கு சுற்றுலாவில் முதல் விருப்பம்  அடுத்தவர் சமைத்து சுடச்சுட  சாப்பிடுவது. அது இன்னும் சுவையாக இருக்கும் பட்சத்தில் இன்னும் ஒரு படி  மகிழ்வு.  அவர்கள் சமைத்த அறை கூட சமைத்தது போலவே இல்லை. அத்தனை சுத்தம். அவர்களும் எங்களுடன் அமர்ந்து உணவருந்தியது ஒரு உறவினர் வீட்டிற்கு வந்திருந்தது போலவே இருந்தது.

மற்ற அறைகளெல்லாம் தனித்தனி அறைகள். இது ஒன்று பெரியது. அவர்கள் வீட்டைச்சுற்றிலும் விதவிதமான செடிகள். அவை கவர்ந்திழுக்கும் வண்டுகள். பறவைகள். சூரியன் மறையும் போது ரசிக்க அங்கே இரண்டு இடங்கள் . ஒன்று மரவீடு போன்ற ஒரு இடம். அதற்கும் அடியில் ஒரு ஹைட் அவுட்.
oak grove inn