Showing posts with label புத்தக விமர்சனம். Show all posts
Showing posts with label புத்தக விமர்சனம். Show all posts

September 16, 2019

மொழியே நம் அடையாளம்

 ரூட்ஸ் நாவலில் ஆசிரியர் அலெக்ஸ் ,  ஆப்பிரிக்காவிலிருந்து அடிமை வேலைக்கு கடத்தப்பட்ட குண்த்தாவின் பார்வையிலிருந்து அடிமைகள் எப்படி அடிமைத்தனத்தில் ஊறிவிடுகிறார்கள் என்று சொல்லிக்கொண்டே வருகிறார்.  ஒரு முழு ஆண்டு எந்த காவலையும் வைக்காமல் முதலாளி காணாமல் போனால் கூட வந்து பார்க்கும் போது அவர்கள் அப்படியே முணுமுணுத்துக்கொண்டு புலம்பிக்கொண்டும் வேலை செய்தபடியே தான்  இருப்பார்கள் . முதலாளி சொல்லாததையும் முந்திக்கொண்டு செய்யும் அளவுக்கும் போகிறவர்களாக , தன்னை அடிமைப்படுத்தியவர்களின் பெருமைகளை தன்னுடைய பெருமைகளாக நினைத்து பூரிப்பவர்களாக, தன் மதிப்பை , தன் வேர்களை உணராதவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கிடையே சுயமரியாதையோடு வாழ்வதும் விடுதலை எண்ணத்தை ஓரமாய் பிடித்துவைத்துக்கொண்டு வருடங்கள் வீணாக  ஓடுவதை எண்ணிக் கலங்குபவனாக அவனொருவன் மட்டுமே. கொஞ்சம் கொஞ்சமாய் தன் மறுதலிப்பை குறைத்துக்கொண்டு தன்னை அறியாமல் ஒப்படைக்கத் தொடங்கியபின் தான் யாரென்று மறந்து போவதற்கு, அவன் தன் மொழியை மறப்பதே காரணமாக நினைக்கிறான். மொழியைக்கொண்டே தான் அவன் இனக்குழு அடையாளம்.

நம்முள் எழும் சிந்தனையே  நாம் என்றால், அந்த சிந்தனையை எந்த மொழியினால்  செய்கிறோம்; எந்த சிந்தனைகளால் வளர்க்கப்படுகிறோம் என்பதில் உறுதியாக ஒரு தாக்கம் , ஒரு போக்கு இருக்கத்தானே இருக்கும்.

மொழியின் முக்கியத்துவத்தை இழப்பது,  நம் சிந்தனையை , நம்மை இழப்பது இல்லையா? 
#RootsAlexHaley

November 16, 2011

யந்திரவாகனன்


சிறுமுயற்சிக்கு 5 வருடம் நிறைந்துவிட்டது.
அதற்கு காரணமாயிருந்த நட்புகளுக்கு என் நன்றிகள்.

நான் செம்படம்பர் மாதம் தில்லி ஹிந்தி அகடமியில் கவிதை வாசித்தபோது என்கவிதைகளை மொழிபெயர்த்து தந்த பாலசுப்ரமணியம் சார் அவர் மொழிபெயர்த்த இப்புத்தகத்தை தன் நல்லாசிகளோடு கையெழுத்திட்டுத்தந்தார்கள். நாவலை மற்ற கதைகளைப்போல நான் வேகவேகமாக கடக்கவே முடியவில்லை. நாலோ ஐந்தோ பக்கம் படித்துவிட்டு மூடிவைத்துவிட்டு நானும் அவரைப்போலவே உள்ளே யோசிக்கக்கூட ஆரம்பித்துவிட்டேன். யோசனை ஓடி ஓடி ஒரு சில கவிதைகள் கூட எழுதிவைத்தேன். மனசுக்குள்ள(யும்)யே பேசித்தீர்த்துக்கிறவங்களுக்கு இந்தக்கதை படிக்க ரொம்பவுமே பிடிக்கலாம். உடலைத்தேர் என்றும் ஆத்மாவை தேரோட்டி என்று கொண்டதாக உருவகிக்கும் ஆழமானதொரு கதையை மொழிபெயர்த்தவரே எனக்கு பரிசளித்தது மிகப்பெருமையாக கருதுகிறேன். நன்றி சார்.

[கவிதை வாசிப்பு நிகழ்ச்சியை இங்கே யூட்யுபில் காணலாம்..
என்கவிதைகளின் முதல் மேடை..பிழைகளைப் பொறுத்தருள்க. கவிதை வாசிப்பு நிகழ்விற்கு என்னை பரிந்துரைத்த திரு ஷாஜகான் அவர்களுக்கு சிறுமுயற்சியின் பாதையில் ஒரு முக்கிய நிகழ்வை தந்ததற்காக தனிப்பட்ட நன்றியை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

ஹிந்தியில் என் கவிதைகள்

இரண்டு கவிதைகள் ராஜஸ்தானி மொழியில் திரு நீரஜ் தையா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.]


--------------------------------------------
யந்திரவாகனன் - சந்திரசேகர் ரத் ஒரியா மொழியில் எழுதிய நாவல்.
ஹிந்தியில் - சங்கர்லால் ப்ரோஹித்
தமிழில் - திரு ஹச்.பாலசுப்ரமணியம்

தாசர் என்கிற கிராமத்துக்கோயிலில் பூஜை செய்கிற மனிதரோட கதை. கிடைக்கிறதை விட அதிகமா எதிர்ப்பார்க்காத நிம்மதியான மனுசனான தாசர் ,உலகத்து வாழ்வில் வாழ்வதைவிட மனசுக்குள் ஒரு வாழ்க்கையை தனியா வாழ்ந்துகிட்டிருக்கார். சொல்லப்போனா அவர் மனசுக்குள்ள வாழற வாழ்வைத்தான் முழுமையா வாழ்ந்தார்ன்னு நினைக்கிறேன்.

தோட்ட வேலை செய்கிற மாலியையும் சத்பதி போன்ற தத்துவநெறிகளை அறிந்த மனத்தெளிவு கொண்டவராக மதிக்கப்படறவரையும் சமமாக ஞானிகளாக பாவிக்கிறார். அவர்களை ஏறக்குறைய துலாபாரத்துல ஒரு தட்டில் வைத்து தன்னை அஞ்ஞானியாக மற்றோரு தட்டில் வைத்து உள்ளுக்குள்ளேயே தர்க்கம் செய்துக்கிறார்.



பழமையான எண்ணங்களில் தத்துவங்களில் பழகிப்போன வாழ்க்கையை வாழ்ந்தாலும் அவரோட மனசுக்குள்ளே அவற்றை கேள்வியும் கேட்டு விவாதம் செய்கிறார். பசுவை தானம் குடுக்கச்சொல்லி ஒருவருக்கு சொல்லிவிட்டு அதை தனக்கான ஆதாயத்துக்காக சொல்லிவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியில் மனுச மனங்களின் கள்ளங்களை அவர்களின் நேர்மையைப்பற்றி கேள்விக்கேட்டுக்கொள்கிறார். விதியைப்பற்றி இறந்த பின்னான உலகம் பற்றியும் படித்தவனானாலும் நீலகண்டருக்கு இருக்கின்ற பொறாமையைப்பற்றியும் நீளநீளமாக யோசித்து நேரம் கடத்தி மனைவியின்
“இப்படியே தான் உக்காந்திருக்கப்போறீங்களா ?”

போன்ற அதட்டலில் நிகழுலகத்துக்கு வந்து வந்து போகிறவர்.



புரிக்கு திருவிழா பார்க்க குடும்பத்தை அழைத்துச்செல்லமுடியாத நிலையில் ..

“கோவிந்த தூவதசி வர்ரது எல்லாரும் கிளம்பராங்க , புண்ணியம் சம்பாதிக்கவா போறானுக ? அட ஒரு ஆடு நொண்டித்துன்னு பின்னால் வர எல்லா ஆடும் நொண்டுமே அது மாதிரி கதைதான்”
என்று திருவிழாவில் கடையும் கொண்டாட்டமும் என்று கடவுளை நினைக்காதவங்களை பற்றி குறைபட்டுக்கொண்டே மனைவியின் புலம்பலிலிருந்து தப்பித்து கோயில் வாசலில் தூங்கிய தூக்கத்தின் நடுவில் கனவில் அவர் புரிக்குச் சென்று கடவுளையும் தரிசித்துவிடுகிறார்.

ரயில் வண்டியிலிருந்தே ஜெகன்னாநாதனை நினைத்தபடி கூட்டத்தில் முண்டியடித்து

‘ஹே பரந்தாமா! ஈரேழு பதினாலு லோகமும் உன்னுடைய லீலாபூமி . பிரபு! உனக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா? அகற்றிடு மேகநாதர் மதிலை..மேகத்தின் பக்கமாக உயர்த்தி விடு இதை. எவ்வளவு தூரத்திலிருந்து உன்னை தரிசிக்க வந்திருக்கு ஜனகோடிகள். ஏழை எளியவர் எல்லாரையும் உள்ளே நுழைய விடு . எல்லாரும் பக்கத்தில் வரட்டும் .. ஹரி ஜெகந்நாதா! ஜெய் ஜகன்னாதா!உன்னைக் கண்களால் பருகும்போதே இந்த உயிர் பிரிஞ்சுடனும் 

என்றபடி மற்றவர்களுக்காகவும் வேண்டி உருகி வழிபடும் அவர் உள்ளுக்குள் கண்ட தரிசனத்தைப் போல கோயிலுக்கு போனவர்கள் கூட கண்டிருக்கமுடியாது.


சத்பதியைப்பற்றி மாலியும் தாசரும் உரையாடுவதிலும் சத்பதியிடம் விவாதிக்கிற இடங்களிலும் தத்துவங்களை கேள்விகேட்டு புரிந்துகொள்ள முயல்கிறார்கள்.

ஒருநாளானால் மனைவியும் குழந்தைகளும் தன்னை வாழ்க்கையில் பெரும் மோகத்தில் ஆழ்த்தும் சக்திகளென்று வெறுத்து யோசித்தாலும் மருத்துவம் பார்க்க பணமில்லாமல் மனைவியும் ஒரு மகனும் இறந்த பின்  மனைவியின் மேலான அன்பு மேலிட மனம் பேதலித்து நிற்கிறார்.

 தனக்குள்ளே பேசி தர்க்கம் செய்து வாழ்ந்தவர் பேதலித்த மனதோடு வாய் வார்த்தை குறைந்து உள்ளுக்குள் ஆமைஓட்டுக்குள் சுருங்கியது போல இருக்க, அவரின் மனம் மாற்ற கொள்ளவேண்டுமென்று சத்பதி தலயாத்திரை அழைத்து செல்கிறார். மௌனச்சாமியாராக..காசிக்கு சென்று கங்கையில் முங்கி சிவனை தரிசிக்க செல்லும் வழியில் அவருடைய பேதலித்த நடையைக் கண்டு கடைக்காரர்கள் தாமாக அவரையும் பூஜித்து, கடவுளுக்கு சாத்த பூவும் பொருட்களும் குடுக்க..
‘கடைசியில் பிச்சையும் எடுத்தாய் இல்லையா?’
இவர்களுக்கு என்ன பைத்தியமா? என்னை மதிப்பதற்கு ..காசியில் எது வேண்டுமானாலும் நடக்கும். தினம் ஒரு மகான் தோன்றக்கூடும் மனிதனைபிடித்து மகானாக்குவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கபோகிறது
என்றபடி சத்பதி மகராஜிடம் வேடிக்கையாக .. காசி மக்களுக்கு பக்தி ஜாஸ்தி இப்படி பைத்தியம் பிடிச்சு என்னையும் பைத்தியமாக்கிவிட்டார்கள் என்று சொல்கிறார்.

எவ்வளவு மனைவியை மறக்க நினைக்கிறாரோ அவ்வளவு அவள் நினைவுக்கு வருவதை
‘’” இந்த டுக்கு அம்மா அடிக்கடி நினைவுக்கு வராளே ஏன் ? ஒரு நாழிகைப் பொழுதாக நானும் பார்க்கிறேன் அவள் ஞாபகமே வருதே! மனம் ரொம்ப சஞ்சலமடைகிறது’ மதுரா பிருந்தாவன்னு சொல்றாளே எப்படி இருக்கும் போய் வரலாமா என்றாள் நான் சிரிச்சி மழுப்பினேனே.. அவ ஆத்மா மறந்திருக்காது . அவளும் கூடவே வந்திருக்கா. என் சரீரத்தில் புகுந்து அவளும் பிருந்தாவன் பார்ப்பா போலிருக்கு. //

தாசரும் அவரை மனசமாதனம் படுத்த

இவ்வளவு தூரம் கிளம்பி வந்தது அதையெல்லாம் விடறதுக்குத்தானே . நீர்தான் வீணாக நிழலை பார்த்துண்டு ஓடறீர்’

இல்லே சுவாமி! வெளிச்சத்துக்கு வரும்போதெல்லாம் நிழலையும் கூடவே கொண்டுதானே நடக்கவேண்டி இருக்கு.

ஒளியை இலக்காகக் கொண்டு நாம் முன்னேறினா நிழல் தானே
பின்னடைஞ்சுடாதா? அதுக்கு போய் கவலைப்படுவானேன்?’

அப்ப நிஜம்மாவே நிழல் விட்டுப்போயிடும்ன்னு சொல்றேளா? ஒளிபக்கத்தில் வரவர நிழலும் அதிலிருந்து சக்தியைப் பெருக்கிக்கும் . ஒளியோட சேர்ந்துட்டா அங்க நிழல் இருக்காதே. அது ஒளியில் லயித்துவிடும்’
எத்தனையோ சிந்தனைத்தெளிவாக ஓரொரு சமயம் பேசினாலும் ,தன்னை சுற்றி நடப்பதையோ , பேச்சுக்களையோ உணரமுடியாத நிலையிலேயே சிலநாட்கள் குழம்பி பின் மனைவி ஆசையாக செல்லவேண்டுமென்றாளே அந்த ஜகன்னாத புரியில் இறக்க ஆசைபடுகிறேன் என்று அங்கேயே சென்று இறக்கிறார்.

படித்தவராகவும் இந்த சாதரண மனுசன் மேல பொறாமையும் கொண்டிருந்தவராகவும் இருக்கிற நீலகண்ட பண்டிதருக்கும் தாசருடைய மரணத்திற்கு பின்பு அவரின் மகத்துவம் ,பொறாமையற்ற எளிமையான மனது புரிகிறது.

September 2, 2011

ஸெர்யோஷா என்றொரு சிறுவன்

கள்ளம் கபடமற்ற குழந்தையின் நிலையிலிருந்து கேள்விகளாலும் சந்தேகங்களாலும் அறிவை விசாலமாக்கிக் கொள்ளத் தொடங்கி இருக்கும் ஒரு சிறுவனின் கதை. புதிய தந்தைக்கும் ஸெர்யோஷா என்கிற சிறுவனுக்கும் முகிழ்கின்ற சிறு நேசத்தின் வாசம் இக்கதை எங்கும் வீசி நிற்கிறது.ஸெர்யோஷாவின் வாழ்வில் சிறிய மகிழ்ச்சிகளும் உண்டு. வாட்டும் கேள்விகளும் உண்டு. வாசிப்பவரை சில நேரம் குழந்தையாக்கி மகிழவைக்கிறார் வேரா பனோவா. சில நேரம் ஏக்கத்தில் திண்டாடவைக்கிறார். நீங்கள் மீண்டுமொருமுறை குழந்தையாக வாழ்ந்து பார்க்க நேரிடலாம்.

 அறிமுகக்காட்சியிலேயே “பெரியவர்கள் சூனியக்காரியைப் பற்றி கதைகள் படித்துவிட்டு அதே மூச்சில் “ ஸெர்யோஷா , சூனியக்காரிகள் உண்மையில் இருப்பதில்லை “ என்று சொன்னால் பொதுவாக இந்த புத்தகங்களை நம்புவது எப்படியாம்? “ என்று உள்ளுக்குள் பெரிய சிந்தனையாளனாகத்தான் நமக்கு அறிமுகமாகிறான்.

 ஸெர்யோஷா நேர்மையான கீழ்படிதலுள்ள எளிமையான சிறுவன். பெற்றோராக இருந்தால் இப்படி ஒரு பிள்ளையைப் பெற்றவராக இருக்க விருப்பமுண்டாக்க போதுமான குணங்கள் அவனுக்கு இருக்கிறது. நண்பர்கள் குழுவுடன் ஆனந்தமாக பொழுதைக் கழித்தபடி இருந்தவனைப் பார்த்து , தாய் “ நம் வீட்டில் ஒரு அப்பா இருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது ‘ என்று சொல்லும்போது அவனுக்கு அப்படி தோன்றவில்லையெனினும் அம்மாவுக்கு அப்படி தோன்றுகிறது என்றால் நாம் அதை ஆமோதிப்பது நல்லது என்ற தெளிவு இருக்கிறது.

 அவனால் சரியாக எண்ணங்களை வெளிப்படுத்தத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் குழந்தையின் மன அலைகளை நாம் அறிவது எவ்வாறு? பொதுவாகவே பலரும் மரத்தை நறுக்கி நறுக்கி போன்சாய் செய்வது போல குழந்தைகளை சொல்பேச்சு கேட்க வைப்பதில் கவனமாயிருந்துவிடுவதுண்டு. தன் வளர்ச்சியாக அவர்களின் சிந்தனை போகும் பாதையைப் பற்றி பெரியவர்கள் அறிவதுமில்லை முயல்வதுமில்லை.

அப்பா இல்லாவிட்டால் மோசம் தானே என்று கேட்டுவிட்டபின் தான் அப்பா இருப்பது மோசமா இல்லாதிருப்பது மோசமா என அவன் சீர்தூக்கிப்பார்க்கிறான். போரில் இறந்துபோன அப்பாவின் புகைப்படத்தினை மட்டும் பார்த்து அவனால் அன்பு கொள்ளமுடியவில்லை. எப்படியும் நமக்கு நன்மை செய்பவராய் இருப்பார் என்ற நம்பிக்கையில் புது அப்பாவின் வரவை எதிர்கொள்கிறான்.

குழந்தைகள் நேரடியாகக் கேட்டு தெளிவுபடுத்திகொள்வார்கள். ஒளிவு மறைவில்லை. ’நீ என்னை இடுப்புவாரால் அடிப்பாயா’ என்று புது அப்பாவிடம் நேரடியாகக் கேட்டு தெளிந்து அமைதியுறுகிறான். அது போல தங்களிடம் சொல்வது போல் பெரியவர்கள் செயல்படுகிறார்களா என்று கவனிப்பதில் சமர்த்தர்கள். ஞாயிறு புதியசைக்கிள் வாங்கித்தருவதாக ஒப்புக்கொண்ட பின் அதை நிறைவேத்தி தருகின்ற புது அப்பாவான கொரஸ்தல்யோ நேர்மையானவன் . ஸெர்ன்யோன்ஸாவின் உணர்வுகளை மதிப்பவன் என்ற ரீதியில் அவன் மனதில் இடம்பிடிக்கிறான்.

பெரியவர்கள் தேவையற்ற வார்த்தைகளை கொட்டி இறைப்பதாக உணர்கிறான் ஸெர்யோஷா . தேநீரைக் கொட்டியதற்காக வருத்தப்படும் அவனை தேவையற்ற வார்த்தைகளால் அத்தை அர்ச்சிப்பது போன்றோ ,அம்மா அவன் எல்லாவற்றிற்கும் தயவு செய்து என்று இணைத்து பேசவேண்டும் என்பதற்காக படும் அவஸ்தைகளோ அற்ற கொரஸ்தல்யோ வித்தியாசமானவனாகத் தெரிகிறான்.

மிட்டாய் இருப்பதாக ஏமாற்றி தாளை தருகின்ற பெத்யா மாமாவை முட்டாள் என்று விமர்சித்தது சரியானது என்றும் அவன் ஆட்களை புரிந்துகொள்ளக்கூடிய அறிவாளி என்றும் கொரஸ்தல்யோ சொல்கிறபோது நன்றியுடையவனாகிப் போகிறான். ’சண்டைக்குப் போவாய் அப்போது காயங்களை கண்டு அழுது நிற்பாயோ பையனே’ என்கிற போது நெஞ்சு நிமிர்த்தி வீரனாகிறான். கொரஸ்தல்யோவின் வார்த்தைகள் ஒவ்வொன்றாலும் அவன் உருக்கொண்டுவந்தான்.

கொள்ளுப்பாட்டியின் இறுதிச்சடங்கில் “ வழியனுப்ப வந்தாயா உனக்கு என்ன அவள் மேல் பிரியமா ?”என்று கேட்கும் தோஸ்யா அத்தைக்கு .. ”பிரியமில்லை” என்று தானே சொல்வான். இனி அவள் இல்லாத வீட்டில் அவன் விருந்துண்ணப் போனால் மிரட்டவோ குற்றம் கண்டுபிடிக்கவோ யாரும் இருக்கமாட்டார்கள் என்பதில் அவன் எளிய உள்ளம் அமைதியுறுகிறது. எல்லாரும் இறப்பார்கள் என்றாலும் நீ இறக்கமாட்டாய் என்று சொல்கிற தந்தையை அவன் நம்புகிறான்.

கொரஸ்தல்யோவின் பண்ணைக்கு செல்லும்போது அவன் ஏன் தினமும் அவசரமாக பண்ணைக்கு ப் போகிறான் . அவன்வராவிட்டால் வேலையாட்களுக்கு இன்னின்னது செய்யவேண்டுமென்று எப்படித்தெரியும் என்று உணர்கிறான். பண்ணையாளின் மேல் கோவம் காட்டினாலும் வேலையை விட்டு நீக்காத அவன் செய்கையைக் கண்டு சர்வ வல்லமை மட்டுமல்ல இவன் நல்லவனும் கூட என்று பெருமிதம் கொள்கிறான்.

விண்மீன்களைப் பற்றியும் கிரகங்களைப் பற்றியும் அறிந்துகொண்ட நாட்களில் அவன் சிந்தனை நீள்கிறது. “செவ்வாய்கிரகம் பெரியதாக இருந்து அதில் மனிதர்கள் வசிக்கலாம் என்றால் ம் ஒரு வேளை என்னையே போன்ற பையன் இதே போன்ற சறுக்கு வண்டியுடன் அங்கே இப்போது நின்று கொண்டிருக்கலாம், ஒருவேளை அவன் பெயரும் ஸெர்யோசாவாக இருக்கலாம்’ என்று வியந்து போகும் அச்சிறுவன் இது போன்ற சிந்தனைகளை பகிர்ந்தால் ஏனையோர் கேலி செய்வதுண்டு. ஆனால் கொரஸ்தெல்யோவ் அவனை மதிப்பான். “அதெற்கென்ன நடக்கக்கூடியதுதான்’ என்பான்

மற்றொரு குழந்தையை தாய் பெற்றெடுக்க இருக்கையில் தந்தையிடம் தனக்கு பையன் வேண்டுமென்பது விருப்பமென்றும் பக்கத்துவீட்டு பெண்ணைப்போல தான் அக்குழந்தையை பாதுக்காக்க கடமையானவனாகிப் போவானோ என்றெல்லாம் அவன் சிந்திக்கத்தொடங்குகிறான். எல்லா ஏற்பாடுகளையும் செய்கிற தாயும் தந்தையும் இன்னமும் மருத்துவமனையிலிருந்து குழந்தையை கொண்டுவரத்தாமதப்படுத்துவது தான் ஏனென்று அவனுக்கு புரியவில்லையாம்.

”குழந்தைகள் எங்கிருந்து கொண்டு வரப்படுகின்றன என்பது தெரிந்ததுதான். அவை ஆஸ்பத்திரியில் விலைக்கு வாங்கப்படுகின்றன. ஒருத்தி ஒரே சமயத்தில் இரண்டு குழந்தைகளை விலைக்கு வாங்கினாள். எதனாலோ அவள் முழுவதும் ஒரே மாதிரியான குழந்தைகளை வாங்கினாள். ஒரு குழந்தையின் கழுத்தில் மச்சம் இருக்கிரதாம். இன்னொன்றுக்கு மச்சம் கிடையாதாம். இந்த மச்சத்தைக் கொண்டுதான் அவள் குழந்தைகளை அடையாளம் கண்டு கொள்கிறாளாம். ஒரே மாதிரிக் குழந்தைகள் அவளுக்கு எதற்கோ தெரியவில்லை. வெவ்வேறு விதமான குழந்தைகளை வாங்கி இருக்கலாமே “

நண்பன் வாஸ்யாவின் மாமாவைப்போல அனைவரும் பச்சைக்குத்திக்கொள்கையில் தானும் பெரியவன் என்று நிரூபிக்க பச்சைக்குத்திக்கொண்டதில் இருந்து அவனுக்கு உடல்நலமின்றி போகின்றது. படுக்கையும் வீடே கதியாகவும் இருந்த சிறுவனுக்கு சிறைச்சாலையிலிருந்து வருகின்ற வேற்றாள் சுவாரசியத்தையும் கேள்விகளையும் கொண்டுவருகின்றான். அவனிடம் பாஷா அத்தை காட்டுகின்ற வேற்றுமைகள் அவனுக்கு மனிதரிடத்தில் நல்லவன் கெட்டவன் இன்னும் இன்னும் பல வேறுபாடுகள் இருப்பதை குழப்பத்தோடு அறிகிறான். அலமாரித்தட்டில் இருக்கும் இரண்டு வகை சோப்பில் , ரோஜா நிற சோப்புக்கு பதில் பழுப்பு நிற சோப்பால் கைகழுவிக்கொள்ளும் வேற்றாளைப் பார்த்து இப்படி யோசிக்கிறான்.

“ ரோஜா சோப்பினால் கைகழுவிக்கொள்ள வேண்டுமென்று அவனுக்குத் தெரியாதோ அல்லது மேஜை விரிப்பையும் இன்றைய சூப்பையும் போலவே அவனுக்கு ரோஜா சோப்பும் ஆகாதோ தெரியாது. “
சிறைக்கு சென்றவன் கெட்டவன் என்றாகிறது. ஆனால் அவனுக்கு இரக்கம் காட்டுவது எதற்கு என்று குழம்புகிறான். திருடினால் பிடிப்பார்கள் என்று தெரிந்து ஏன் திருடினான். பள்ளியில் புத்தகம் திருடும் சிறுவனுக்கு சிறை கிடையாதென்றால் ஏன் ? அவன் கேள்விக்கு எரிச்சலுறும் அம்மாவிடம் கொரெஸ்தெல்யோவ் பின்பு விளக்குகிறான்.

”அவன் என்ன வேண்டுகிறான் தெரியுமா ? அவனுக்கு ஆமாம் அல்லது இல்லை என்ற பதில் தான் வேண்டும் இடைப்பட்ட பதில் அவனுக்குப் புரிவதில்லை.” குழந்தையின் அனைத்துக் கேள்விக்கும் பதில் தரவேண்டாம் என்று நினைக்கின்ற அம்மாவிற்கு தெரியாமல் தந்தை அவனுக்கு பதிலளிக்கத்தான் செய்கிறார்.

கதை சொல்லக் கேட்ட மாத்திரம் பெரியவர்களுக்கு வந்துவிடுகின்ற வேலையைப்பற்றியும் அவனுக்கு மிக வருத்தமுண்டு. எப்படியோ கதை சொல்ல வராத கொரெஸ்தெல்வைக்கூட ஒத்தாசை செய்து அவன் கதை சொல்லப்பழக்கிவிட்டிருந்தானாம். இத்தனை ஒட்டிப்பழகி அவன் உணர்வாகிப்போன தந்தையையும் தாயையும் அவன் பிரிந்திருக்கவேண்டிய கட்டம் வந்தால் அவனால் தாங்கமுடியுமா. கொரெஸ்தெல்யோவின் வேலைகாரணமாக வெளியூர் செல்லவேண்டி வரும்போது இவன் உடல்நிலையைக் காரணம் காட்டி சிறிது நாட்கள் அதே ஊரில் அவன் தங்கியிருக்கும் படி சொல்கிறார்கள்.

அன்றிலிருந்து அவன் சிந்திப்பதெல்லாம் தான் நோயாய் இருப்பதால் அவர்களுக்கு அவன் சுமையாகிவிடுவான் என்ற எண்ணம் தான். அன்புக்குரியது எதுவும் சுமையாக இருக்காது என்று சிந்திக்கத்தொடங்கிவிட்டவன் . தந்தையின் விளக்கமெல்லாம் கேட்டபின்னும் தான் தொல்லைக்குள்ளானாலும் அவர்களோடு வாழவே ஆசைப்படுவதை சொல்லத் தெரியவில்லை. அழுவதில்லை என்ற வாக்கிற்கு கட்டுப்பட்டு அவன் அவர்கள் கிளம்பும் நேரம்வரை உள்ளுக்குள் குமைகின்ற பகுதிகள் நெகிழ்ச்சி தருபவை. துயரத்தில் கூனிக்குறுகி அவன் நடக்கையில் “ தயாராகு கிளம்பு ’என்கிற தந்தையின் குரலைக் கேட்டதும் நம்பமுடியாத மகிழ்ச்சியில் அவன் கொரெஸ்த்ல்யோவ் நம்மை நேசிக்கிறான் என்று பெருமிதம் கொள்கிறான்.

கதை முழுதும் சிறுவனின் மனவோட்டங்களாலும் தந்தைக்கும் மகனுக்குமான உறவின் அழகுணர்ச்சியிலும் முடிவான மகிழ்ச்சியிலும் வாசிப்பவருக்கு இனிமையானதொரு அனுபவத்தைத் தருகிறார் வேரா பனோவா. இவர் ஸ்டாலின் பரிசைப் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆவார். குழந்தையைப் பற்றிய கதையாக இருந்தாலும் இதனை பெற்றவர்களுக்காகத்தன் வெரா பனொவா எழுதி இருக்கிறார். வாசிப்பவர்கள் இனி குழந்தையை அணுகும்போது அவர்கள் எண்ணவோட்டம் என்னவாக இருக்குமென்று யோசிக்கத்தொடங்குவார்கள். மேம்போக்காக யோசித்தால் மிகச்சாதரணமான விசயத்தைக் கையாண்டது போலத்தெரிந்தாலும் உள்பொதிந்திருக்கும் விசயம் மிக மேன்மையானது. குழந்தைகள் உலகம் நம்மிலிருந்து வேறுபட்டது. நாம் அதைத் தாண்டி வந்ததை மறந்து அவர்களை தவறாக கையாள்வதை தவிர்க்க உணர்த்துகிறார் வேரா பனோவா.

புத்தகம் : ஸெர்யோஷா என்றொரு சிறுவன் எழுதியவர்: வேரா பனோவா மொழிபெயர்ப்பு: ஜெபி வெளியீடு ஜெபி அண்ட் கோ. -------------------------------------------------- ஈழநேசன் முல்லை.org ல் சனிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2010 01:43 வெளிவந்தது.
-------------------------------------------------------
இக்கதைப்பற்றிய மற்றொரு பதிவு ஷெர்யோஷாவும் குட்டீஸ் சிந்தனைகளும்



 திரைப்படமாகவும் கிடைக்கிறது. யூட்யூப் ல்.. நான் இனிமேல்தான் பார்க்க இருக்கிறேன். இப்போது தான் கண்டுபிடித்தேன்.

August 20, 2010

ஸெர்யோஷாவும் குட்டீஸ் சிந்தனைகளும்

புத்தகங்களைப் போல போதையொன்று இல்லையென்ற ரீதியில் அவை சில நேரம் கிறக்கத்திலேயே வைத்திருக்கும். வேண்டாவெறுப்பாய் போ என்று ஒதுக்கினாலும் மீண்டும் மீண்டும் போய் விழுந்துவிடுகிறோம் தானே. விடுமுறை பொள்ளாச்சியில், புத்தக உலகம் என்கிற கடையைத் தாண்டிப் போகிற போதெல்லாம் எப்போதடா உள்ளே நுழைவோம் என்றிருந்தது. மகளின் பிறந்தநாளுக்காகக் காத்திருந்தோம்.
கௌரிகிருஷ்ணாவில் பரோட்டாவும் புத்தக உலகில் புத்தகங்களும் என்று திட்டமிட்டிருந்தோம்.

நிறைய புத்தகங்களை ஒருசேரப்பார்த்தால் எதை எடுப்பது எதை விடுவது என்று தெரிவதில்லை. நூலகத்தில் என்றால் செலவு பற்றியும் கவலை இல்லை . ஆனால் காசு கொடுத்து வாங்குவது என்றபிறகு மிகுந்த யோசனையும் இருக்கும். மகள் அவளுக்கான தேடுதலில் இருந்தாள். குழந்தையும் அல்லாத பதின்ம வயதும் இல்லாத அவளுக்கு குறைவான புத்தகங்களே இருந்தது. அதில் இரண்டை எடுத்துக்கொண்டாள்.

குழமம் ஒன்றில் பரிந்துரைத்த ’இரண்டாம் இடம்’ நாவல் நான் எடுத்துக்கொண்டேன். அந்த நாவலை நான் ரயில் பயணத்தில் கோவையில் துவங்கி கீழேயே வைக்காமல் படித்து முடித்தபோது ஃபரிதா பாத் வந்துவிட்டது. . சின்னவளா இருக்கும்போதிலிருந்து ரஷ்யக் கதைபுத்தகங்களை வாசித்த ஆசையில் ஒரு குறுநாவல் ஒன்று ’ஸெர்யோஷா என்றொரு சிறுவன் ’. வங்காளிக்கதைகள் தொகுப்பு ஒன்று.

இந்த ஸெர்யோஷாவைப் படிக்கத்தான் தாமதம் செய்துவிட்டேன். உங்களில் சிலர் இக்கதையைப் படித்திருக்கலாம். போனவாரம் கதையைப்படித்ததும் முடிவில் தொண்டை அடைத்து கண்ணில் நீர்முட்டிக்கொண்டு வந்தது. சில இடங்களில் குழந்தையாக சில இடங்களில் குழந்தைகளின் தாயாக என்று மாறி மாறி யோசித்து ஒருவழியாகிவிட்டேன். இப்பொழுது இற்றைகள் எழுதும் ஒரு தாயாக குழந்தைகளின் சிந்தனைகளை கவனிக்க முயற்சி எடுக்கிறேன் தான் .. ஆனாலும் இன்னமும் கூட முயற்சி செய்ய வேண்டுமோ போதாதோ என்று தோன்றுகிறது. சின்னச்செடியை நறுக்கி செதுக்கி மரமாகவிடாம போன்சாய் செய்வது போல டூஸ் அண்ட் டோண்ட்ஸ் வைத்திருக்கிறோமே நிறைய. மேலும் சொல்லும் அறிவுரையைப் போல நடந்து காண்பிப்பதும் சிரமம் தான்.

கதை முழுதும் சிறுவனின் மனவோட்டங்களாலும் தந்தைக்கும் மகனுக்குமான உறவின் அழகுணர்ச்சியிலும் முடிவான மகிழ்ச்சியிலும் வாசிப்பவருக்கு இனிமையானதொரு அனுபவத்தைத் தருகிறார் வேரா பனோவா. இவர் ஸ்டாலின் பரிசைப் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் அவருடைய இரண்டாம் படைப்பாம் இது. குழந்தையைப் பற்றிய கதையாக இருந்தாலும் இதனை பெற்றவர்களுக்காகத்தான் வெரா பனொவா எழுதி இருக்கிறார். வாசிப்பவர்கள் இனி குழந்தையை அணுகும்போது அவர்கள் எண்ணவோட்டம் என்னவாக இருக்குமென்று யோசிக்கத்தொடங்குவார்கள். மேம்போக்காக யோசித்தால் மிகச்சாதரணமான விசயத்தைக் கையாண்டது போலத்தெரிந்தாலும் உள்பொதிந்திருக்கும் விசயம் மிக மேன்மையானது. குழந்தைகள் உலகம் நம்மிலிருந்து வேறுபட்டது. நாம் அதைத் தாண்டி வந்ததை மறந்து அவர்களை தவறாக கையாள்வதை தவிர்க்க இக்கதையில் உணர்த்துகிறார் வேரா பனோவா.

{Vera Panova’s Серёжа (translated as Seryozha and Time Walked and A Summer to Remember}
இக்கதையைப் பற்றிய என்னுடைய சிறு விமர்சனத்தை ஈழநேசன் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்க்ள். (சிறுமுயற்சியிலும் இங்கே பதியப்பட்டுள்ளது.)  நண்பர்கள் அங்கு சென்று வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வரிக்கு வரி அதைப்பற்றி பேச எனக்கு நிறைய இருக்கிறது. ரசித்த பகுதிகள் என்று பிரித்து சொல்லவே முடியாமல். ..ஒவ்வொன்றையும் ரசித்திருக்கிறேன். அதனால் தான் அங்கிருப்பது மிகச்சிறிய விமர்சனம் என்கிறேன். :)

January 7, 2010

கயிறு நாவலின் சில துளிகள்

கதையின் தொடக்கத்தில் கோயிலைச் சேர்ந்த 'எருமத்ர' மடத்தினை 'கண்டெழுத்து' (நில அளவுRevenue survey and settelment period) எழுதவருகிற 'க்ளாசிப்பேரு கொச்சுப்பிள்ளை' (classifier)க்காக சுத்தம் செய்து தயார் ஆக்குகிறார்கள். கோடாந்திர முத்தாசான் போன்றவர்களுக்கு கிளாசிப்பேர் என்றால் அந்த பெயரை வைத்து என்ன மாதிரியான வேலை அது, என்ன ஜாதியைச் சேர்ந்தவர் என்று பல குழப்பங்கள். அதுகாலம் வரையிலும் பிராமணல்லாதவரை எருமத்ரமடத்தில் தங்க வைத்ததில்லை. ஆனால் பொன்னு தம்பிரான் (ராஜா) உத்தரவு . இதனைக் காலமாற்றம் நிகழத்தொடங்கியதின் குறிப்பு எனக்கொள்ளலாம். செய்யும் வேலையினைக் கொண்டு ஒருவருடைய நிலை உயர்த்தப்பட்டுவிட்டது.

க்ளாசிப்பேர் கொச்சுப்பிள்ளை ஊரிலுள்ள குடும்பங்களில் இருக்கின்ற உழைக்கின்ற மக்களை கணக்கெடுத்து அதன் பேரில் அவர்களுக்கு நிலங்களை எழுதி வைப்பார். உழைக்க இருக்கும் ஆண்மகன்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் குடும்பங்கள் பின் வரி கட்டுவது சிரமாமாகும் என்கிற எண்ணத்தினால் தங்கள் பெயரில் அதிக நிலம் வந்துவிடகூடாதென நினைத்தனர்.

குட்டநாட்டு பகுதியில் நிலங்கள் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டவையே. கடல்மட்டத்துக்கு மூன்றடி தாழ்வாக இருக்கும் நிலங்களின் கடல்நீரினை வெளியேற்றி சுற்றுவேலியாக தடுப்புக்களை ஏற்படுத்தியே நிலங்களை விளைச்சலுக்கு ஏற்றபடி மாற்றி விவசாயம் செய்துவந்தனர். எனவே க்ளாசிப்பேருக்கு லஞ்சமாக பலரும் கிழங்குகள், நேந்திரங்கள், பறை பறையாக நெல் மற்றும் சக்கிரங்கள் (தங்கம்) கொண்டுவந்து கொடுப்பதும் வேண்டுதல் விடுப்பதுமாக இருந்தனர்.

தர்மசாஸ்தாவின் கோவில் என்பது அவ்வூரில் முக்கியமான அங்கம். வங்கிகள் போன்ற அமைப்பாகவும் அது செயல்பட்டு வந்திருக்கிறது. கோவிலில் பூஜை செய்பவர்கள் தங்கும் இடத்தை இல்லம் என்றும், இல்லத்துக்கும் மடத்துக்கும் சொந்தமான நிலங்களை குத்தகைக்கு விட்டு அதன் பலனாக வருகிற நெல்லை மடத்தில் சேமிக்கிறார்கள். கடனாகவும் நெல். வட்டியாகவும் நெல். கோடாந்திர், சீரட்ட , மங்கலச்சேரி என பல குடும்பங்களின் நிலைகள் முதல் பாகத்தில் அவர்களின் உழைக்கும் மக்களின் எண்ணிக்கையாலும் கோவில் மடத்தின் முக்கிய பங்கு வகிப்பதனாலும் உயர்ந்தே இருந்து வந்திருக்கின்றன.

க்ளாசிப்பேரின் மனைவி பேராசை கொண்டவளாக இருக்கிறாள். அவளுடைய தாய் அரண்மனையில் தம்பிராவின் தோழி என்பதால் கிடைத்த பரிசே கொச்சுப்பிள்ளையின் க்ளாசிப்பேர் வேலை. தங்கம் கொடுக்க முடிந்தவர்களுக்கே க்ளாசிப்பேர் தேவையானபடி செய்துகொடுக்கிறார். இதனால் ஊரில் அசாதாரண சூழல் உருவாகி சில குடும்பங்கள் அதிகப்படியாக கடன்பட்டு நெல் அளக்கவேண்டியாகிறது . உழைக்கின்ற எண்ணிக்கை அதிகமிருக்கின்ற குடும்பங்கள் உயர்கின்றன. அவ்வப்போது உயர்ந்தநிலையில் இருப்பவர்கள் கோவிலில் முக்கிய அங்கம் வகிக்க நகர்கின்றது காலம். இங்கேயும் ஜாதியிலிருந்து நகர்ந்து பணத்தின் முக்கியத்துவம் , நிலையை உயர்த்தத் தொடங்கிவிடுகிறது.

அதிகாரிகளின் நட்பினால் ஔதவ் என்கிற கிரிஸ்துவருக்கும் நிலம் கிடைத்து மற்ற இனத்தினரும் விவசாயம் தொடங்கினர். அவர்கள் கடின உழைப்பு கொண்டவர்களாய் இருந்தனர். வெள்ளைக்காரர்களின் நட்பின் காரணமாக நிலத்து நீரை வெளியேற்ற மோட்டார்கள் அமைத்தும் விவசாயத்தில் சிறந்து அதிகப்படியான நிலங்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கினர். முஸ்லீம் மதத்தினராக மதம் மாறியவர்களும் வியாபாரங்களினால் சிறந்து மேலே வந்தனர்.

சீலந்திபிள்ளில் பரமுஆசான் காசிக்கு செல்லுமுன் அவருடைய குடும்ப சொத்தான பல ஏடுகளும் ஓலைகளும் கல்யாணி அம்மாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. கல்யாணி அம்மாவின் மகன் கேசவன் போன்ற சிலரால் கல்வியறிவு அனைத்து நிலை மக்களுக்கும் கொண்டு செல்ல முயற்சிக்கப்படுகிறது. ஆனால் ஊராரின் எதிர்ப்பால் காலந்தாழ்ந்தாலும் காந்தீயம் அச்சிற்றூருக்கும் நுழைவது மற்றும் ஆளும் பிரிட்ஷ் அரசாங்கத்தால் அரச குடும்பத்தினரும் அனைத்து நிலை மக்களுக்கும் கல்வி தர ஆசிரியர்களை கட்டாயப்படுத்துவதுமான காலமாற்றத்தில் கல்வி பல தரப்பு மக்களுக்கும் சென்று சேர்கின்றது. இக்கல்விசீர்த்திருத்தமே பின்னாளைய பலமாற்றங்களுக்கும் வித்தாகிறது.


மருமக்கள் தாய அமைப்பினால் பெண்களுக்குத்தான் சொத்துரிமை. ஒரு தரவாடு அல்லது குடும்பம் என்பது அம்மா , அம்மாவின் தங்கைகள் , அண்ணன் தம்பிகள் , குழந்தைகளைக் கொண்டது. கணவன் என்பவர் வந்து போகும் வழக்கம் இருந்தது. குடும்பத்தின் முழுபொறுப்பையும் அம்மாவன் என்கிற அம்மாவின் அண்ணன் தலைமை ஏற்று காரணவர் என்ற பெயருடன் வழிநடத்திவருவார். அவர் உழைத்த அனைத்தும் குடும்ப மொத்தத்துக்குமாக இருந்து வந்தது. நாயர் ஆக்ட் காரணமாக சொத்துரிமை கணவன்- மனைவி என்று மாறிய நேரத்தில் தலை எண்ணி பாகம் பிரித்தபோது காரணவர் - தலைவர் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் தங்கைகளின் மகன் மகளுக்கு சென்று சேர்ந்ததே அன்றி அவரின் குழந்தைகளுக்குச் சென்று சேரவில்லை.

கொச்சூட்டிலி அம்மா ,உன்னாச்சி அம்மா வரிசையில் வந்த குஞ்சுமாளுவின் கணவர் குஞ்சுநாயர் நாயர் ஆக்ட் சட்டத்தால் தன் சொத்துக்களை இழந்து வாழ நேரிடுகிறது. விவசாயத்தில் ஏற்பட்ட கஷ்டநஷ்டங்களால் ரப்பர்தோட்டங்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்களை மலையில் இருக்கும் காடுகளை அழித்து ஏற்படுத்துகிறார்கள். குஞ்சுநாயரின் மகன் மணிகண்டன் திருவனந்தபுரத்துக்கு கல்லூரியில் படிக்கச் செல்கிறான். இக்கதாபாத்திரம் தகழியை ஒத்து வருகிறது.

கவிதை எழுதும் மணிகண்டனுக்கு விசு என்கிற நண்பனால் புரட்சி போராட்டங்கள் செய்யும் யூத் லீக் உடன் அறிமுகம் ஏற்படுகிறது. ஆனால் குஞ்சுநாயரின் உணர்ச்சிபூர்வமான கடிதம் அவனை அவற்றிலிருந்து விலகி ஊருக்கு திரும்பச் செய்கிறது. விசு மணிகண்டனை கோழை என்கிறான். குஞ்சுநாயரின் இறப்பும் அதனைத்தொடர்ந்து கணவருடனேயே இறந்த தாயின் இறப்பும் மணிகண்டனை மனம் பிறழ்ந்தவனைப் போல ஆக்குகிறது. மனதால் சுதந்திரத்தையும் மக்கள் வாழ்வில் ஒரு மேன்மையும் ஏற்பட ஏங்கியபடி சுற்றியலைகிறான். மணிகண்டனின் எண்ணங்களின் வடிவில் தகழியின் பல எண்ணங்களைக் காணமுடிகிறது. அவ்வபோது மணிகண்டன் காணுகின்ற கனவில் அதிகார வர்க்கங்களின் சுரண்டல்களுக்கு எதிரான செயல்கள் வெற்றி பெற்று எங்கும் பசுமையும் மகிழ்வும் வெற்றியுமாக தோன்றி வருகிறது.



நெல்லுக்கு பற்றாக்குறை நேர்ந்த நேரம் யுத்தத்திற்கு நெல் சென்ற காலம். எதற்குமே விலையின்றி மக்கள் வாழ்வின் நிலை தடுமாறுகிறது. இளைஞர்கள் வாழ்வாதாரத்திற்காக இராணுவத்தில் சேருகிறார்கள்.சிலர் மலேயாவுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். மலேயாவில் என்ன நடக்கிறது என்றும் தெரியாது , இராணுவமென்றாலும் தெரியாது யாருக்காக யுத்தம் எதற்கு இறக்கிறோம் என்றும் தெரியாது. இங்கிருந்து உணவுக்கு இல்லாமல் இறப்பதற்கு இருக்கும்வரை குடும்பமாவது நிம்மதியாக உண்டு உறங்கட்டுமென்று செல்கிறார்கள். குடும்பத்தினரோ தினம் தினம் கடிதத்திற்கோ தந்திக்கோ காத்திருக்கிறார்கள். அவர்களின் மணியார்டரையோ , அவர்களின் இறப்பையோ, காணாமல் போன செய்தியையோ கொண்டுவரும் தபால்காரர் அவர்கள் வாழ்வில் முக்கியமானவராகிறார்.


பல வருடங்களாக எதிர்பார்த்திருந்த சுதந்திரதினக் காலையை வர்ணிக்கும் போது ,
'விடிவெள்ளி உதித்து உயர்ந்து நின்றது. சூரியனுக்குப் பிரத்தியேகத் தன்மை எதுவுமில்லை. பிரத்தியேகமான பிரகாசமோ
தெளிவோ ஏதுமில்லை. அது என்றும் போல நடைபெற்றதொரு சூரியோதம் சிற்சில வீடுகளில் தேசீயக் கொடி ஏற்ற்ப்பட்டிருந்தது ' என விவரித்துவிட்டு சோதருபுலையர் வீட்டில் காலைப்பொழுது வெற்றிலைக்கு பாக்கு இல்லாத ஒரு சாதரண நாளாக விடிந்ததைக் குறிப்பிடுகிறார். தொழிலாளிகளுக்கு மாற்றம் வந்துவிடவில்லை என்பது அவருடைய கருத்தாக இருந்திருக்கிறது.

மூன்றாம் பாகத்தில் மிக விரிவாக சுதந்திர இந்தியாவின் தொடக்கத்தில் நடந்த தேர்தல்கள் ,காங்கிரஸ் கம்ப்யூனிசம் இடையிலான போட்டிகள் மற்றும் ஜாதி அரசியல்களை அவர் குறிப்பிட்டிருப்பதை வாசித்தால் இன்றைய தேர்தல் நிலைகளுக்கு அன்றைக்கும் சற்றும் குறைவு இல்லை. பணமும் மிரட்டலும் அன்றைக்கும் சாதித்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

\\காங்கிரஸுக்குள்ளே கூட பரஸ்பரம் காலுக்கடியிலேருந்து மண்ணை அள்ளி எடுத்துக்கிறாங்க என்றார் ஔசேப்பு .

ஆமாம் அது தானே நாசம் !
கிரிகரி சொன்னார் :"ஒருவன் இன்னொருவனுக்கு உடன்படமாட்டான் அது இந்த நாட்டின் இயல்பு பண்டைய
நாட்களிலிருந்தே அப்படித்தான் //


குத்தகைகள் வரத்து இல்லை. இல்லத்தில் விவசாயம் செய்பவர்களும் இல்லை. ஒருவேளை உணவுக்கும் தவிக்கின்ற நிலை இல்லத்துக்கு நேர்கிறது. கோவில் இல்லத்து நம்பூதிரிகளின் மகன் நக்சலில் சேர்ந்துவிடுகிறான். இயக்கத்துக்கு எதிராக இயக்கத்தின் பணத்தில் குடும்பத்துக்கு உதவி செய்த காரணத்துக்காக அவன் தற்கொலை செய்து இறக்கிறான்.


எருமத்ரமடம் இடிந்து அவ்விடம் ஒரு விளையாட்டு மைதானமாகிவிட்ட .காலத்தின் சுழற்சியில் நிலச்சீர்திருத்தம் வருகிறது. அன்று க்ளாசிப்பேருக்கு செய்த ஏற்பாடுகளை மீண்டும் லேண்ட் ட்ரிப்யூனல் அதிகாரிகளுக்கு செய்யவேண்டியாகிறது. கண்டெழுத்தில் மக்களைத் தேடி நிலங்களை எழுதிவைத்தார்கள். மாறாக லேண்ட் ட்ரிப்யூனல் அதிகாரிகளோ நிலங்களைப் பறித்தெடுக்க வந்திருப்பதாக அஞ்சுகிறார்கள். அதிகப்படியாக இருக்கும் நிலங்களை அரசு பட்டா போட்டு நிலமற்றவர்களுக்கு பிரித்துக் கொடுக்கும். மீண்டும் ஒரு கேள்வி . வருபவர் எந்த ஜாதிக்காரராக இருப்பார். யாருக்கு நன்மை செய்வாரோ என்ற அவர்களின் பயம் அப்படி கேட்க வைக்கிறது.

\\'எந்த ஜாதியென்றாலும் படித்தவர்களுக்கு உத்தியோகம். அப்போ என்னன்னா , கல்வி கிடைச்சிட்டா அவன் யாருன்னாலும்
சரி அவங்க ஜாதிக்காரங்களிலே உயர்ந்தவனாயிடுவான் , மேலேமேலே உயர்ந்து போயிடுவான் , புலையன்
மேலதியகாரியாயிட்டா, ஏனைய ஜாதிக்காரங்க அதிகாரிகள் ஆகிற மாதிரிதான். அவனவன் காரியத்தை அவனவன்
பார்த்துக்குவான். அவனவனுக்கு பணம் சேரணும்: அவனவன் நல்லா வரணும் கார் வேணும் பங்களாவேணும் '//

விவசாயப்புரட்சியினால் ரசாயன உரங்களும் சுற்றுவேலிகள் கருங்கல்லாயும் மாறிய நேரத்தில், மலைவெள்ளத்தின் குணாதிசயம் என்னவென்று இன்றைய விவசாயிகளுக்கு தெரியாத வருத்தத்தை கிரிகரி மூலம் காட்டுகிறார்.
\\-'மலை வெள்ளத்தைப் பார்த்தீங்களா கிரிகரியண்ணா?'
-'ஓ அதுக்கு இப்போ என்ன செய்யறது , ஒரு துளி நீர் வயலுக்குள்ளே விழவில்லை. ரசாயன வளமும் விஷமும்
போட்டு மண்ணைக் கெடுத்தாச்சு இப்போ மண்ணில் புல்லு கூட முளைக்காது'
-'அப்படின்னா இந்த ஊரில்லுள்ள ஜனங்களெல்லாம் கஞ்சித்தண்ணி குடிக்கிறதெப்படி"
-'அரிசி தரவேண்டியது அரசாங்கமல்லவா? அரசாங்கம் எங்கிருந்தாவது அரிசி கொண்டாந்து தந்திடும் .
அதை வாங்கிச் சாப்பிடுவோம்.'
- காசெங்கிருந்து? வேலை வெட்டி இருந்தாதானே காசிருக்கும்.//

நிலம் வேண்டாமா? யாருக்குமே வேண்டாமா? படிப்பும் வேலையும் என்று சென்றுவிட்ட தலைமுறையை, பழைய தலைமுறை கேட்கும் கேள்வி எதிரொலிக்கிறது. . விவசாயம் வேண்டாம் விவசாய நிலம் வேண்டாம். எங்கெங்கு பார்த்தாலும் வீடுகளும் தொழிற்சாலைகளும் அரக்கனைபோல விவசாய நிலங்களை விழுங்கிக்கொண்டு, இன்றும் இந்நிலைத் தொடர்வதை நாம் பார்க்கத்தானே செய்கிறோம்.
’ஆனால் காணப்படுகின்ற இம்மக்களுக்கெல்லாம் உணவு வேண்டாமா? ’- என
முடிவில் கதாபாத்திரத்துனூடாக ஒலிக்கும் இயற்கையை நேசித்த தகழியின் கேள்விக்கு விடை தான் எங்கே?
[ஈழநேசனுக்காக எழுதியது இங்கேயும் ஒரு பகிர்தலுக்காக..]
நன்றி: ஈழநேசன் முல்லை.ஆர்ஜ்

January 6, 2010

கயிறின் வரலாறும் கயிறில் வரலாறும்

நாவல் ஒன்றில் அதிகபட்சம் எத்தனை கதாபாத்திரங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம்? எத்தனை பேருடைய வாழ்க்கையை , எத்தனை வருடங்களின் நிகழ்வுகளை உங்களால் அறிந்து கொள்ளமுடியும்? இவை அத்தனைக்கும் உங்கள் பதில் என்னவாக இருந்தாலும் அது தவறாகவே முடியக்கூடிய சாத்தியம் கயறு நாவலில் நிச்சயம் உண்டு . சுழற்சி முறையில், ஒரு காலத்தில் பிரபுக்களானவர்களின் குலம் தாழ்நிலைக்கும், தாழ்நிலையில் இருந்த குடும்பங்கள் மேலெழுந்து நிலங்களை சேமித்தும், பின் நில உச்சவரம்புசட்டத்தில் மீண்டும் அனைவரும் அதை இழந்தும் என்று வாழ்வு சுழல்கிறது. பல தலைமுறைகளை தகழியோடு நாமும் ஒன்றாய் வாழ்ந்து பார்த்துவிட்ட உணர்வை இவ்வாசிப்பனுவத்தில் பெறலாம்.

.
தகழி சிவசங்கர பிள்ளை என்றால் வாசிப்பனுபவம் உள்ள எவரும் அறியக்கூடிய பெயர் தான். அப்படியே வாசிப்பனுபவம் இல்லாது போனாலும் நீங்கள் திரைப்படம் பார்ப்பதில் விருப்பமுள்ளவரெனில் “செம்மீன்” கதையாசிரியர் எனும்போது அறியக்கூடும்.


சிவசங்கரப்பிள்ளை 1912 ல் கேரள குட்டநாடு ஆலப்புழாவிற்ககு அருகில் தகழி எனும் இயற்கை எழில் மிக்க சிற்றூரில் பிறந்தவர். பின் தகழி என்று அவ்வூரின் பெயராலேயே அழைக்கப்பட்டார். அவருடைய தந்தை சங்கர குரூப் ஒரு கதகளி கலைஞர். தன்னைப்போல கலைஞனாக மட்டும் இருக்க வேண்டியதில்லை என்று மகனை வக்கீலுக்கு படிக்க வைத்திருந்தார். கதகளி, விவசாயம் , வக்கீல் தொழில் என அறிந்து கொண்ட இவை எல்லாவற்றின் கூடவும் அவர் மலையாள இலக்கிய உலகில் மிக சிறந்த படைப்பாளியாக உயர்ந்து நின்றார். மிக இளவயதிலேயே அவர் கதைகள் எழுதத்தொடங்கினார். பத்மபூஷன் விருது, சாகிதிய அகாடமியின் விருது( கயறு) மற்றும் ஞானபீட விருது(கயறு) போன்ற உயரிய விருதுகளைப் பெற்று மலையாள இலக்கியத்தில் அழியாத இடம் பெற்றவர்.. 1999 ல் தன் 87 வது வயதில் இயற்கை எய்திய அவருக்கு சங்கரமங்கலத்தில் அவர் வாழ்ந்த வீடே இன்று காட்சியகமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

தகழி , கல்வியறிஞர் பாலகிருஷ்ணப்பிள்ளை மற்றும் பள்ளித்தலைமையாசிரியர் கைரளிக்கார குமாரப்பிள்ளை மூலம் பல இந்திய இலக்கிய படைப்புக்கள் மற்றும் ஐரோப்பிய இலக்கியங்களில் ஆர்வம் கொண்டார். எழுத்தாளர் மாப்பசான் மற்றும் சிந்தனையாளர்கள் மார்க்ஸ் மற்றும் ஃப்ராய்ட் இவர்களின் தாக்கத்தைக் கொண்ட எழுத்தாளாராக அறியப்படுகிறார். ஒடுக்கப்பட்ட மக்களின், ஏழைகளின் துயரங்களைப்பற்றி அவர் கதைகளில் நாம் அதிகமாகக் காணலாம்.

தோட்டியின் மகன் , செம்மீன்,இரண்டு படி, ஏணிப்படிகள், ஓசோப்பின் மக்கள் மற்றும் சுக்கு போன்றவை பெயர் பெற்றவையாகும். 40 நாவல்களும் நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் படைத்திருக்கிறார்.பொதுவாக எழுதவேண்டும் என்று தோன்றினால் ஒழிய அவர் எழுத அமர்வதில்லை , எழுதத் தொடங்கி ஒரு வாரயிறுதியிலேயே நாவலையே முடித்துவிடக் கூடியவர் என்று கூடச் சொல்வதுண்டு. செம்மீன் கதையை அப்படியே ஒரு வாரயிறுதியில் எழுதி முடித்திருக்கிறார் .மூன்று வருடங்களில் கயிறு நாவல் எழுதப்பட்டதாகக் குறிப்பு..


ஒரு வரலாற்று செய்தியாளரைப் போல 1930 க்கு பின் கேரளாவின் நிகழ்ந்த மாற்றங்களைப உற்று நோக்கி பதிவு செய்திருக்கிறார். அந்நாளைய ஜாதீய அமைப்புகளின் கட்டுமானம் வலுவானதாக இருந்தது. நிலச்சுவான்தார்கள், அவர்களுக்கு கீழ் குத்தகைக்கு நிலமெடுத்த விவசாயிகள் , அவர்களுக்கு கீழ் விவசாயக்கூலிகள் என்று இருந்து வந்தனர். கடனுக்காகவோ அல்லது விசுவாசத்துக்காகவோ தங்கள் வாழ்க்கையையே வேலை செய்து கழிக்கவேண்டிய நிலையில் இருந்த கீழ்த்தட்டு மக்கள் இருந்த காலம். நிலச்சீர்திருத்தம் , சமூக பொருளாதார மாற்றம் , மற்றும் அரசியல் மாற்றங்கள் மூலம் அக்கட்டுமானம் தலைகீழாக மாறிவிட்டதை அக்கால கட்டங்களின் நிகழ்வுகளோடு கதையில் பதிவு செய்திருக்கிறார்.

இந்நாவலின் தமிழாக்கம் சி.ஏ பாலன் அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் மற்றும் மலையாள மொழிகளுக்கு சிறந்த பாலமாக விளங்கிய இவர் ஜெயகாந்தன், கல்கி , ஜானகிராமன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புக்களை மலையாளத்திற்கும் தகழி, கேசவதேவ் , பொற்றேகாற்ட் போன்ற சிறந்த மலையாள ஆசிரியர்களின் படைப்புக்களை தமிழுக்கும் மொழியாக்கம் செய்திருக்கிறார்.


மூன்று பாகங்களாக அச்சடிக்கப்பட்டிருகிற இந்நாவல் ஒவ்வொன்றும் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கிறது. மனித உணர்வுகளை கதையில் மிகமிகத் துல்லியமாக உணர்த்துகிறார். அன்பு , காமம், காதல், பாசம் , தனிமை , போட்டியும் பொறாமையும் ,துரோகமும் இந்நாவல் பேசாத உணர்வுகள் இல்லையென்றே சொல்லலாம். கயறு நாவல் 250 வருட கால நீட்சியில் கேரள நாட்டில் நடைபெற்ற நிகழ்வுகளை, ஐந்தாறு தலைமுறைகளில் வீழ்ந்தும் எழுந்துமாகிய குடும்பங்களை , அக்குடும்ப மனிதர்களை கொண்டு பின்னப்பட்டதாகும். நாவல் என்றால் இப்படி என்ற வடிவமைப்புக்கு மீறியதும் , எந்த ஒரு கதாநாயகனைச் சுற்றியும் பின்னப்பட்டதாகவும் இல்லை. நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களின் வாழ்வை கண் முன் நிறுத்தும் கதை. கதையை உருவாக்குவது என்பதும் வாழ்க்கையை கதையாக்குவது என்பதும் ஒன்று அல்ல. பின்னது மிக சவாலானதும் கூட என்று கூறுகிறார் தகழி. இது ஒரு வாழ்க்கை சித்திரம்.

கயறு நாவலைப் பொறுத்தவரையில் கதாபாத்திரங்களிலோ அல்லது அவற்றின் போக்கில் , குணாதிசியத்தில் தாமாக எந்த ஒரு மாற்றத்தையும் புகுத்தவில்லை என்றும் அவை தானாகவே எழுத்தின் ஓட்டத்தோடு உருப்பெற்றதாகவும் முன்னுரையில் கூறுகிறார். சுதந்திரத்துக்கு முன்பும் பின்புமான காலங்கள், காங்கிரஸ், கம்ப்யூனிசம், நக்சல் ,குருகுலக்கல்வியிலிருந்து மாறி ஆங்கில வழிக் கல்வியும் அதனால் ஏற்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் , காந்தீயவாதம் அதனால் மக்கள் அடுக்குகளில் நிகழ்ந்த மாற்றம், பழங்காலத்திலிருந்தே எல்லா தரப்பிலும் புரையோடிப் போயிருக்கும் லஞ்ச ஊழல் என அக்கால சமூகத்தினைப் பற்றிய அத்தனைக் குறிப்புக்களையும் காணலாம்.


ஒருமுறை ஒரு நிலம் தொடர்பான வழக்கில் வாதாடுவதற்காக 135 வருடங்களுக்கு முன்பான நில அளவுச்சட்டக் குறிப்புக்களைத் தேடி அனுப்பப்பட்டபோது தாலுகா அலுவலகத்திலிருந்து தூசிகள் நிறைந்த கட்டுகளில் அக்காலகட்டத்தில் நிலத்தைப் பெறுவதற்காக நிகழ்த்தப்பட்ட குழப்பங்கள் , நிலத்தைச் சுற்றிய கதைகள் என்று அவர் முன் தெள்ளத்தெளிவான ஒரு வரலாற்று பொக்கிஷமே கிடைத்தது. ஆனால் அதை எழுதுவதற்கு ஒரு முறை அல்லது அமைப்பு அவருக்குத் தேவைப்பட்டது. அதனை ஒரு மேல்நாட்டு பாணி அமைப்பில் எழுதப் பிரியப்படாமல் குறுகுறுப்பை பலவருடங்களுக்கு சுமந்து கொண்டிருந்திருக்கிறார். ஒரு நாள் மகாபாரதத்தின் நினைவு தோன்றி அதைப்போன்ற அமைப்பில் எழுதலாம் என்று முடிவெடுத்து கயிறு நாவலைப் படைக்கத் தொடங்கினாறாம்.

மக்களுக்கு நிலத்தின் மேல் ஏற்பட்ட பற்றினால் 'நிலம்' தான் இக்கதையில் நாயகன் என்றும் இது ஒரு காதல்தோல்வியின் கதை என்றும் சொல்கிறார் தகழி. மனிதனுக்கு நிலத்தின் மீதான தாகம் தொடங்கியது எப்போதென்று தெரியாது . ஆனால் விவசாய நிலத்தில் இறங்கி உழைப்பதிலிந்து ஒரு காலத்தில் அனைவரும் விலகத் தொடங்கிவிட்டார்கள். நில அளவு சட்டத்தில் நிலங்கள் பிரிந்தது. பின் குடும்பத்தில் தலை எண்ணி பாகம் பிரித்ததில் பிரிந்தது. கடனுக்காக , யுத்தகாலத்திற்காக பின் கூட்டுறவு சங்க அமைப்பில் என்று தாங்கள் உழைத்த வயலின் நெல்மணி தங்கள் வீடுவந்து சேராத நிலை வந்தது. நிலத்தின் மீது இருந்த தாகம் குறைந்தது. தொழிற்சாலைகள் , வெளிநாடுகள் , அரசாங்க வேலைகள் மக்கள் பணத்திற்காக உழைப்பை திசை மாற்றினர்

கேரளாவில் அக்காலத்தில் 'மருமக்கள்தாயம்' என்கிற பெண்வழி உறவுக்குத்தான் முன்னுரிமை இருந்தது. பெண்குழந்தைகளைப் பெறுவது குடும்பம் செழிக்க. ஆண்குழந்தைகளைப் பெறுவது குடும்பத்தின் செழிப்பை உயர்த்த என்று ஒரு அமைப்பு. ஒருவன் தன் தங்கை குழந்தைகளுக்கு சொத்து சேர்க்கிறான். தன் குடும்பத்துக்கு அல்ல. நாயர் ஆக்ட் (1912) என்கிற சட்டத்தினால் அப்பாரம்பரியக் கூட்டுக்குடும்பங்கள் உடைந்தன. தலை எண்ணி பாகம் பிரித்தல் என்று தரவாட்டில் ( குடும்பத்தில்) இருக்கும் மகன் மகள்களுக்கு சொத்துக்கள் பாகங்களா பிரிக்கப்பட்டது. அதற்கு பிறகு கணவனுடைய உழைப்பு மனைவிக்கு என்று மாறியது. அது நாள் வரை சகோதரிகள் மற்றும் நம் குடும்பம் என இருந்த தலைமகன்கள் சொத்திழந்து குடும்பங்கள் நிலை குலைந்தன.

அத்தகைய ஒரு நாயர் குடும்பத்தின் கோணத்திலிருந்து கதை, சிறு சிறு இழைகள் இணைந்த நீண்ட கயற்றினைப் போல பல தனிமனித வாழ்க்கைகளால் இணைந்த ஒரு சரித்திரத்தினைப் போல நாவலாக நீண்டு செல்கிறது. கதைக்குள் கதையாக பல நூறு சிறுகதைகள் பிண்ணிப் பிணைந்தது கயறு நாவல் , அச்சரித்திரத்தில் சிறுதுளிகளை இங்கே ருசிப்போம் - (தொடரும்)

( இக்கட்டுரை ஈழநேசன் தளத்திற்காக நான் எழுதியது)
நன்றி ஈழநேசன்

August 30, 2009

புதிய தலைமுறை - இதழ்

சிறிது நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கை இதழில் என்னவெல்லாம் நமக்குப் பிடித்தமானது , எவையிருந்தால் ஒரு பத்திரிக்கையை தரமென்று ஒத்துக்கொள்வோம், எவை தேவையில்லாத பகுதிகள் என்று ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினார்கள். கூடவே வாங்கிப்படிகின்ற பத்திரிக்கையின் பெயரையும் கேட்டிருந்தார்கள். நான் வாங்கிப்படிக்கும் பத்திரிக்கையின் பெயர் அங்கே குடுக்கப்பட்ட பட்டியலில் இல்லாததால் அதனை தனியாகக் குறிப்பிடவேண்டிய கட்டத்தில் இட்டு நிரப்பினேன். நான் தற்போது வாங்கிப்படிக்கும் ஒரே புத்தகம் தில்லியில் வெளியாகும் வடக்குவாசல் மட்டுமே..

முன்பு விகடன் மட்டும் வாங்கிப்படித்துக் கொண்டிருந்தேன். கட்டுரைகள் , கதைகளை கிழித்து புத்தகமாக பைண்ட் செய்துகொள்வது எனக்கு பிடித்தமானதாக இருந்தது. ஆனால் சில வருடங்களாக அப்படி சேமிக்கத் தக்கதாக எனக்கு ஒன்றும் தோணவில்லை. அதன் வடிவமைப்பை மாற்றியதும் எனக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்... மேலும் இங்கே வலைப்பூக்களும் மற்றும் வாசிப்புக்களுக்குமே எனது பகுதி நேரம் செலவாகியதும் ஒரு காரணம். கருத்துக்கணிப்பில் என்னால் சரியாக பதிலளிக்க முடியவில்லை என்று தான் நினைக்கிறேன்.

புதிய தலைமுறையின் மாதிரி இதழை அனுப்பி வைத்திருந்தார் மாலன். அட்டைப்படம் இளைஞர்களுக்கானது என்று காட்டுவது போல இருந்தது. நான் பொதுவாக புத்தகத்தை பின்புறமாகவே படிப்பது வழக்கம். உருப்பட்டாப்பல தான் என நினைக்கிறீங்களா? அங்கே தான் உருப்பட என்கிற தலைப்பில் புத்தக அறிமுகப் பகுதி இருந்தது. எங்கே போனது என் அல்வாத்துண்டு புத்தத்தின் விமர்சனம் வெளிவந்திருந்தது. நிச்சயம் உருப்படத்தேவையான புத்தகமே என்பதால் தொடர்ந்து அது போன்ற நல்ல புத்தகங்களுக்கு விமர்சனம் வருமென்றும் உருப்படியான இதழாக புதிய தலைமுறை இருக்குமென்றே ஃபர்ஸ்ட் இம்ப்ரெசன் விழுந்தது. .
இதற்கு முன் புதிய தலைமுறையை படித்தவர்கள் ஆரம்பத்திலிருந்து வாசித்து வெற்றி வெற்றி எனக்கூறிக்கொண்ட முதல் கட்டுரையை ஃபர்ஸ்ட் இம்ப்ரெசனாக எடுத்துக்கொண்டதாகச் சொன்னார்கள்.

அடுத்த பகுதியான கணினிப்பகுதியில் ஈகலப்பைப் பற்றி எல்லாமே ஓசி என்று கொடுத்திருந்தார்கள். ஆனால் ஈகலப்பை சிலநாட்களாக சரியாக பதிவிறக்கம் செய்ய இயலாமல் இருந்தது. மேலும் எல்லாரும் NHM க்கு மாறிவிட்டோமே என்று தோன்றியது. ஆனால் கேள்வி பதில் முறையில் நன்றாகவே தமிழ் எழுதிக்கு அறிமுகமாக இருந்தது.
எல்லாமே தலைகீழ் முறையில் சொல்லிக்கொண்டு வருகிறேன் என்பது நினைவிருக்கட்டும்.. :)

மறுகூட்டலுக்குப் பின் மாநிலத்தில் முதலிடத்தை தான் நூலிழையில் தவறவிட்ட செய்தியறிந்த மாணவனின் சோகக்கதை,நிறைவான கதையாக அருணா அவர்களின் ‘நிறைவு ‘ சிறுகதை, கோடம்பாக்கத்து சுனாமிகளான புது இயக்குனர்களின் கதை எல்லாமே எனக்குப் பிடித்தது. நடுவில் டைம் பாஸ் என்கிற குமுதம் ஆறுவித்தியாசம் போன்ற ஒன்று இருந்தது. என்னால் விடை காணவே முடியலை டைம் வேஸ்ட் ஆனது தான் மிச்சம். கண்ணைப் பரிசோதனை செய்யனும் போல.. :)

நடுப்பக்கத்து குடும்ப மரம் அழகு.. நேரு குடும்பத்துக்கப்பறம் நம்ம தமிழ்நாட்டுக்குடும்பம் தான் பெரிய ஆலமரம்.பைக் வாங்குவது எப்படி ? தல சொல்லறது நல்லவே இருக்கு. எனக்கு, நோய் அதன் அறிகுறிகளை எல்லாம் படித்து படித்து இப்பல்லாம் எதுவந்தாலும் அதுவா இருக்குமோ என்று பயப்படுகின்ற நோய் வந்துவிட்டது அதனால் சர்க்கரை இந்திய இளைஞர்களைத் தின்கிறது என்ற கட்டுரையை தாண்டி கடவுள் எங்கே இருக்கிறார் கட்டுரைக்கு சென்று விட்டேன்.ஒன்று இருந்தால் அதற்கு எதிரிடையான ஒன்றும் இருந்தாக வேண்டியதில்லை என்கிற வாதம் அருமையா இருந்தது.கவுன்சிலிங்க்ன்னா இப்படித்தான் இருக்கும்ன்னு சொல்லி இருக்காங்க அதிஷா & லக்கி எளிமையாப் புரியுது. உதவிக்காத்திருக்கு என்கிறபகுதி நன்றாக இருக்கிறது. இதுபோன்ற தகவல்கள் தொடர்ந்து தரவேண்டும்.

இளைஞர்களுக்கு அறிவுரை பிடிக்கறதில்லை, தமிழும் பிடிப்பதில்லை, புத்தகங்களும் பிடிப்பதில்லை.... தமிழில் புத்தகத்தைப் படிக்கவரும்போது சத்தமில்லாம கொஞ்சம் நல்ல விசயங்களையும் புகட்டிவிடுமாறு கேட்டுக்கிறேன்..