December 4, 2012

வார்த்தைகளும் மௌனங்களும் - 2


த சீக்ரெட் லைஃப் ஆஃப் வார்ட்ஸ்(2005)-


The secret life of words - Isabel Coixet

எண்ணெய் எடுக்கும் இடத்தைப்பற்றி ஒரு டாக்குமெண்ட்ரி எடுக்கச்சென்ற இசபெல்  ..அங்கே கிடைக்கும் வெளியுலகத்திலிருந்து பிரிக்கும் தனிமையும் அதனால் அங்கிருப்பவர்களுக்குள் உருவாகும் ஒரு நெருக்கத்தையும் வைத்து ஒரு படம் எடுக்க நினைத்தாராம்..

 இதிலும் சாராவே (Sarah Polley) கதாநாயகி   காதுக்கு கருவி பொருத்தி கேட்கக்கூடியவராக உணர்ச்சிகளற்ற முகத்தோடு ஒரே விதமான உணவை ஒரே விதமான வேலையை ஒரேவிதமான வாழ்க்கையை இயந்திரத்தனமாக வாழ்பவராக  சாரா  அப்படியே வாழ்ந்திருக்கிறார். சாராவுக்காகவே  இந்தப்படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்..

ஹன்னா ஒரே விதமான பூத் தையல் செய்வாள். ஆனால் அதையும் முடித்ததும் தூக்கி எறிந்துவிடுவாள்.. யாரோடும் பழகாமல்.. வருகின்ற கடிதங்களைப் படிக்காமல்.. காதுக்கு பொருத்திய கருவியையும் அணைத்தே வைத்து இருக்கிறாள். மௌனத்தினால் அவள் அவளைச்சுற்றிலும் வேலியிட்டுக்கொண்டு அதற்குள் வாழ்கிறாள். 

4 வருடங்களாக விடுப்பு எடுக்காமல் சரியான நேரத்திற்கு வந்து வேலை செய்யும் நீ கண்டிப்பாக விடுமுறை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மேலதிகாரி வற்புறுத்தி அனுப்பி வைத்தாலும் அவளால் என்ன செய்யமுடியும் என்று அவள் ஹோட்டல் அறையில் வெறுப்புடன் எல்லாவற்றையும் கலைத்துப்போட்டு விட்டு அழுகிறாள். 

தற்செயலாக ஒரு உணவகத்தில் காதில் விழுந்த விசயத்தை வைத்து எண்ணெய் எடுக்கும் இடத்தில் ஏற்பட்ட விபத்தில் காயமுற்ற ஒருவரை தற்காலிகமாக பார்த்துக்கொள்ள நர்ஸ்  வேலையைச் செய்ய ஒப்புக்கொள்கிறாள். அங்கே சென்றபின் அங்கே இருக்கின்ற ஒவ்வொருவரும் எப்படி உலகத்திலிருந்து தனிமைப்படுத்திக்கொண்டு அங்கே இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்கிறாள். 

ஜோசப் என்கிற அந்த காயமுற்றவன் தற்காலிகமாக கண் தெரியாமல் போனவன் மற்றும் தன்காரியங்களைத் தானே செய்துகொள்ளமுடியாத ஒருவன். ஜோசப் ஹன்னாவுடன் பேசமுயற்சிக்கும் போதெல்லாம் அவள் பதில் சொல்லாமல் இருந்தாலும் ஜோசப் தானாகவே அவளுக்குப் பெயர் வைத்து தனக்கு நீச்சல் தெரியாது என்று தொடங்கி ..தன் ரகசியங்களை , தன் குற்ற உணர்ச்சியை ,தன் மனதின் கஷ்டங்களைப் பகிரத்தொடங்க கொஞ்சம் கொஞ்சமாக ஹன்னாவும் பேசத்தொடங்குவாள். 
ஹன்னாவின் தனிமைக்கு காரணம் அவள் போர்க்காலத்தில் கொடுமைக்குள்ளாக்கப்பட்டது , எப்படி பெண்களைக் கொடுமைப்படுத்தினார்கள் எப்படி தன் தோழி இறந்தாள். எப்படி தன் உடம்பெல்லாம் கத்தியால் கீறப்பட்டது என்று மௌனத்திலிருந்து வெளியேறி  வார்த்தைகளாக்கி சொல்லும் போது இசபெல் காட்சியை ஹன்னாவின் வார்த்தைகளின் மூலமாக மட்டுமே காட்சிப்படுத்துகிறார். 

ஹன்னா தினம் ஒரு புதிய சோப் பயன்படுத்துவதாக காட்டியபோது அது ஏன் என்று முதலில் தெரியவில்லை... அவளுடைய இறந்தகாலத்தை அழிக்க அவள் தினம் புதிய ஒன்றைப் பயன்படுத்துவதாகக் காட்சிப் படுத்தியிருக்கலாம்.

ஜோசப்பை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபின் ஹன்னா தன்னைப்பற்றியவிவரங்களை தராமலே திரும்பிவிடுவாள்.ஆனால் ஜோசப் அவளைத்தேடிகொண்டு வருவது ஒரு சுபமான முடிவு தான்.  படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் வருகிற சிறுமியின் குரல் ஹன்னாவின் பாதிக்கப்படாத வயதின் குரலாக இருக்குமோ ? 

துக்கமோ, பயமோ நம்பிக்கைக்குரிய இடத்தில் பகிர்ந்துகொள்ளப்படும் போது அது மாறிவிடக்கூடியது . 



Hanna: Um, because I think that if we go away to someplace together, I'm afraid that, ah, one day, maybe not today, maybe, maybe not tomorrow either, but one day suddenly, I may begin to cry and cry so very much that nothing or nobody can stop me and the tears will fill the room and I won't be able to breath and I will pull you down with me and we'll both drown. 

Josef: I'll learn how to swim, Hann

December 3, 2012

வார்த்தைகளும் மௌனங்களும் -1




பெண்கள் அதிகம் பேசக்கூடியவர்கள் . ஆனால் மௌனங்களும் காக்கத் தெரிந்தவர்கள்.

இங்க்லீஷ் விங்க்லீஷ் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு மனசு கலங்கிப்போன அன்று இதை இவ்வளவு சின்னச்சின்ன விசயங்களோடு அழகாக காட்டமுடிந்ததன் காரணம் அது ஒரு பெண்ணால் எடுக்கப்பட்டதால் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். இன்னும் சொல்லப்போனால் திரைப்படத்தைப் பார்க்கும்போது கதையில் அந்தச்சின்னச்சின்ன விசயங்களைக் கவனத்தில் எடுக்கக்கூட சில ஆண்களால் முடியாமல் போகலாம் என்றும் தோன்றிக்கொண்டிருந்தது.

ஆனால் ஷிண்டேயின் முயற்சி தோற்கவில்லை, எனக்குத் தெரிந்து விமர்சனம் எழுதிய சில நண்பர்களும் அவர்களின் சிறுகுறைகளை உணர்ந்ததாகச் சொல்லிக்கொண்டார்கள்.

அன்று உடனே பெண்களால் இயக்கப்பட்டப் படங்களைத் தேடிப்பார்ப்பது என்று தொடங்கினேன். இதுவரை  அந்த வரிசையில் இந்தப்படத்தையும் சேர்த்து 6 திரைப்படங்களை  பார்த்து முடித்தேன்.

.மை லைஃப் வித்தவுட் மீ (2003) - இசபெல் கோசெட் (Isabel Coixet)

My Life Without Me 


மை லைஃப் வித்தவுட் மீ ..  ஷிண்டெ யைப் போலவே இசபெல் கூட விளம்பரத்துறையிலிருந்தே சினிமாவுக்கு வந்திருக்காங்க..  எப்படியோ அவங்க படம் கைக்கு கிடைச்சுப் பார்த்துட்டமே என்று அவங்களைப்பற்றி படிச்சப்போ அவங்களும் எங்கயோ உலகத்தில் ஒருமூலையில் இருந்து பார்த்துட்டு உங்க படம் நல்லா இருந்ததுன்னு சிலர் சொல்றாங்க.. அதுவே போதும்.. எனக்கு படம் எடுக்கப்பிடிக்கும். என்று சிம்பிளா முடிச்சிக்கிறாங்க.. ரொம்பப்பேசராங்க .ஆனா எல்லாமே ஸ்பானிஷ் ல   பேட்டிக்கொடுத்திருக்காங்க.

தான் இறக்கப்போகிறோம் என்று தெரிந்த பின் சில செயல்களை செய்யவேண்டும் என்று முடிவெடுக்கும்
ஒரு பெண்ணின் கதை. கணவனின் அன்பில் குழந்தைகளின் அன்பில் குறையேதும் காணாத ஒரு பெண் தான். ஆனா இறக்கபோகிறோம் என்கிற அழுத்தத்தை மறக்கவோ அல்லது வாழ இருக்கும் நாட்களை வேறுவிதமா வாழ்ந்து பார்க்கவேண்டும் என்ற எண்ணமோ அவள் சில வித்தியாசமான முடிவுகளையும் அதில் சேர்த்திருப்பாள். அவற்றை அவள் ஏன் செய்யவேண்டும் அல்லது ஏன் செய்யக்கூடாது என்பதற்கு
நாம் செல்லவேண்டியதில்லை. அப்படி ஒரு நிலையில் யார் என்ன முடிவெடுப்பார்கள் என்பது யாராலும் முன்கூட்டியே சொல்லமுடியாது.

இசபெல் சுபமான முடிவுகொண்ட படங்களை விட கஷ்டமான முடிவு கொண்ட படங்கள் உங்களை திரும்ப உலகத்துக்கு வரும்போது நிம்மதியா இருக்கவைக்கும்ன்னு கேலியா சொல்லிக்கிறாங்க..

இசபெல் இதுபோன்ற ட்ரைலர் ல வாழ்கிற பணக்கஷ்டத்தோடு வாழ்க்கையை நகர்த்தும் அமெரிக்கர்களைப்பற்றி சினிமாவில் இதுவரை சித்தரிச்சதற்கு மாற்றாக காண்பிக்கனும் முயற்சித்திருக்கிறதா சொல்றாங்க..

Ann: THINGS TO DO BEFORE I DIE.
Ann: 1. Tell my daughters I love them several times.
Ann: 2. Find Don a new wife who the girls like.
Ann: 3. Record birthday messages for the girls for every year until they're 18.
Ann: 4. Go to Whalebay Beach together and have a big picnic.
Ann: 5. Smoke and drink as much as I want.
Ann: 6. Say what I'm thinking.
Ann: 7. Make love with other man to see what it's like.
Ann: 8. Make someone fall in love with me.
Ann: 9. Go and see Dad in Jail.
Ann: 10. Get false nails. And do something with my hair.

 ஆன் 17 வயதில் திருமணம் ஆனவள். இரண்டு குழந்தைகளின் தாய். அப்பா சிறையில் இருப்பார். அம்மாவின் வீட்டின் பின்னால் ட்ரைலர் வண்டியில் தான் இவர்கள் குடியிருப்பு. கணவருக்கு வேலை இழப்பினால்
தற்காலிகமாக நீச்சல்குளம் கட்டும்பணி. இவளுக்கு இரவு நேரம் கல்லூரியை சுத்தம் செய்யும் பணி.

கிடைக்கின்ற கொஞ்ச நேரத்திலும் கொஞ்சம் பணத்திலும் அன்பை பகிர்ந்துக்கிற சின்னகுடும்பம்.. ஆனா வாழ்க்கையில் அடுத்த நாளைப்பற்றிய சிந்தனையோ ஆசையோ அதிகம் இல்லாமல் ஓடிக்கிட்டே இருக்கின்ற வாழ்க்கை.  ஒரு சமயம் படத்துல வர வசனம் இது...
\\Thinking. You're not used to thinking.//

அவள் தன் கணவனை ஒரு இசை நிகழ்ச்சியில் சந்தித்ததாகக் நினைவுகூர்கிறாள். அழுதுகொண்டிருந்த அந்தச்சின்னப்பெண்ணை தேற்ற தன்னிடம் கைக்குட்டை இல்லை என்று தன் டீசர்ட்டை கழட்டி கொடுத்த அன்பானவன். என்னிடம் எதையும் கேட்டு தொந்திரவு செய்யாத அன்பானவள் என்று அவளைப்புரிந்தே இருக்கிறவன்..

அவளின் ஏழாவது எட்டாவது திட்டங்கள் ஒன்று போல் தோன்றினாலும் ஒன்றல்ல.. அதற்காக அவள் முயற்சி செய்வதாக படத்தில் காட்டப்படவில்லை. அவளின் நோயின் சோகமும் தனிமையும்.. போலவே
நிலையில் இருக்கும் இன்னோரு மனிதனின் தற்செயலான சந்திப்பு. அறையின் வெறுமையையும் அவனுடைய தனிமையும் மாற்றுவதற்கு அவளின் தேவையும் இருந்தது போன்ற ஒரு அமைப்பு.

மருத்துவரிடம் அவள் பதிவு செய்த கேசட்டுகளைக் கொடுத்து இறந்தபின் சேர்க்கக் கேட்கிறாள். எல்லாருக்கும் செய்திகளை  சேர்க்கிறாள்..எல்லாரிடமும் மன்னிப்புகளைக் கேட்கிறாள். சோகமென்றால்
படத்தில் சோகமான காட்சிகள் அவ்வளவாக இல்லை.சாவைக் காட்டவில்லை. அழுகையைக் காட்டவில்லை. ஆனால் சோகத்தை நம் இதயத்தில் உணரவைக்கும் ஒரு முகம் கதாநாயகி சாரா வுக்கு.. (Sarah Polley)

ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அவர்களின் வசனங்களும் நன்றாக இருந்தது.. ஒரு நாவலை கதையாக்கியிருக்கிறார்கள் என்கிற போது அதைப்படிக்கவேண்டும் என்கிற ஆவலைத்தூண்டுவதாய்
வசனங்கள்.

எல்லாரும் தான் சாகப்போகிறார்கள் . ஆனால் நாள் குறிப்பிட்டபின் அதுவும் ஒருமாதம் என்றபின் அவள் சுற்றி இருக்கிறவர்களை கவனிக்க ஆரம்பிக்கிறாள். யோசிக்கவும் ஆரம்பிக்கிறாள் . டயட் டயட் என்று பாடுபடும் தோழி, லாட்டரி பணம் கிடைத்தால் என்ன செய்வேன் என்று சொல்லும் ரெஸ்டரண்ட் ஊழியர் ..எல்லாரையும் குறை சொல்லும் அம்மா ஏன் அப்படி நடந்துகொள்கிறாள்.. இதுவரை சந்திக்கத் தோன்றாத அப்பாவை சந்தித்துவிடவேண்டும் , என்னதான் வேதிப்பொருள் கலந்திருந்தாலும் சாகப்போகிற நாள் தெரியாமல் பிடித்திருக்கிறது என்று எல்லாம் வாங்கி சாப்பிடும் மக்களின் மனநிலை. யாராவது சூப்பர்மார்க்கெடில் சாவை நினைப்பார்களா என்றபடி நடப்பாள்..



சூப்பர்மார்க்கெட்டில் எல்லாரும் மகிழ்ச்சியாக நடனமாடுவது போன்ற காட்சி..
லீ அவளைத்தூங்கும்போது கவனிக்கும் காட்சி, ஆன் ம் அவள் அப்பாவும் பேசுவது , மனைவியைப் புகழ்ந்து பேசும் கணவன்,  அவன் உறங்கியபின் அவனுக்கு லவ்யூ சொல்லும் மனைவி....லீ யும் ஆன் ம் சந்திக்கும் கடைசி சந்திப்பு... என பலகாட்சிகள் எனக்கு குறிப்பாக  மிகவும் பிடித்திருந்தது.
அவளுடைய இரண்டாவது திட்டத்திற்கு வசதியாக வந்து வாய்க்கும் பக்கத்துவீட்டு ஆன், கதை சொல்லும் காட்சியும் மிக அருமையானது..


October 5, 2012

என் வீட்டு ஜன்னல் எட்டி...


முன்பிருந்த செம்பருத்திச் செடி வெளியூர் போய் இருக்கும் போது குட்பை சொல்லிவிட்டுப்போய்விட்டது.. வெறுமையாய் இருந்த தொட்டிக்கு வேறு ஒரு செம்பருத்தியை அதுபோலவே கொண்டுவருவதாய் சொல்லி இருந்தார் தோட்டக்காரர். ஆனால் வேறு விதமான ஒரு செம்பருத்தி . அதன் முதல் பூவையே நான் வெறுத்தேன். மிகவும் அளவில் பெரியதாக..சிவப்பு நிறம் அடர்த்தியற்று வெளிரென்று  அதை நான் பறிக்கவும் இல்லை . சாமிக்கு வைக்கவும் இல்லை. என்னை சமாதானப்படுத்த வேறு ஒரு சிகப்பு செம்பருத்தியும் ஒரு வெள்ளை செம்பருத்தியும் கூட கொண்டுவந்தார். ஆனால் எனக்கு பழைய செம்பருத்தியைப் போல எதுவும் வரவில்லை.

தோட்டவேலையையும் கணவருக்குக் கொடுத்துவிட்டு எப்போவாவது ஒரு சின்ன ஹாய் (மற்ற செடிகளுக்குதான்) சொல்லுவதுடன் இருந்தேன். பால்கனிக்கு போனாலும் ஒரு பாராமுகம் தான். கூடவே ஒரு பப்பாளியை நட்டு அதற்குரிய தனித்தன்மையையும் கொடுக்க மறுத்தேன்.  பப்பாளி பூக்கவே இல்லை அது வேறு விசயம்.

மாடிவீட்டிலிருந்தும் , பக்கத்துவீட்டிலிருந்தும் புதுச்செடியின் பூ அழகு என்று பாராட்டையும் வாங்கிக்கொண்டது. ’க்கும் ’ என்று சொல்லிவிட்டு அந்த விசாரிப்பையும் நான் அதற்கு சொல்லவே இல்லை.

அடுக்களை ஜன்னலை திறந்து வைத்து சமைக்கும் போது பின்னால் இருக்கும் மரங்களையும் குருவிகளையும் ரசிப்பது வழக்கம்.[அடுக்களையில் இருக்கிறோம் என்பதை மறக்கத்தான்..:) அதனால் தான் அடிக்கடி சூடு படுகிறதோ :) ] ஒரு நாள் ஓரமாய் எட்டிப்பார்க்கும் இந்த செம்பருத்தி என்னைப்பாரேன் என்றது .அட அழகா இருக்கியே என்று ஒரு கணம் நினைத்துவிட்டேன்.


அந்த நேரம் பார்த்து மகளும் வந்து நான் என்ன ரசிக்கிறேன் என்று கேட்டுவிட்டு..இந்தச்செடிக்கு எவ்வளவு  பாரேன்மா.. நம்ம வீட்டுப்பக்கத்தில் பூக்காமல் வெளியே போய் இத்தனைப்பூக்கிறது  என்று சொல்லவும் தான் நிஜம்மாகவே இந்த செம்பருத்தி ஜன்னல் எட்டிப்பார்த்து  புன்னகைக்கத்தான் இப்படிப் பூக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

இருந்தாலும் நான் பறிக்கப்போவதில்லை. இவ்வளவு அழகா புரிஞ்சுக்கிற செடியிலிருந்து பறிச்சு வைக்கலையேன்னு கேக்கவாப் போறார் சாமி. (சோம்பேறித்தனத்துக்கு என்ன ஒரு சப்பைக்கட்டு)

 பார்க்கின்ற மலரூடு நீயேயிருத்தி அப்பனிமலர் எடுக்க மனமும் நண்ணேன் ’ - தாயுமானவர்



September 20, 2012

கைநிறைய அள்ளிய நீர்


அள்ளாமல் விட்ட நதிக்காய்
குறைபட்டுக்கொண்டே
பெருநதியிலிருந்து
கைநிறைய அள்ளிய நீரும்
நொடிக்கொரு துளியாய்
குறைகின்ற சலிப்பின்றி
நதியோரமாய் நடப்பதெப்படி?
----------------------------




நம்பிக்கைகளுக்கு வலிக்காமல்
சொல்லிக்கொண்டேன்
கடினமற்ற பாதையில்
கூழாங்கல் தெரிய
நதியாக ஓடி
இசையாக இசைந்திருக்கவும்
ஆரவாரித்து வீழ்வதென்றாலும்
அருவியாக இசைத்திருக்கவுமாய்

September 16, 2012

குறையொன்றுமில்லை


குறையொன்றுமில்லை

செய்யாமல் போன நேர்த்திகளுக்காய்
குறிப்புகள் காட்டினால்
என்னை
குறை சொன்னதாகுமென்று
கையோடு கொணர்ந்த
வேறொன்றில்
கணக்கை நேர் செய்துகொள்கிறாய்

---------------------------------






சுவர்க்கண்ணாடி

எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள்
பேசாது கேட்டுக்கொண்டிருந்தது
உயிர்ப்பொன்றை அறிந்து
மறைக்கத்தொடங்கிய நாளில்
நினைப்பதெல்லாம் கூட
கண்டுபிடித்துக்கொண்டிருந்து











September 14, 2012

கண்ணேறு

அவர்கள் ரயில் தண்டவாளங்களைத் தாண்டி ப்ளாட்பாரத்தில் ஏறினார்கள். வயதான ஒரு ஆண் ஒரு பெண். இளமையாக ஒரு பெண் இடுப்பில் ஒரு பெண்குழந்தை. நடுவயதில் ஒரு ஆண் ஒரு பெண். அவர்கள் எத்தனை நாளாக வீட்டிற்கு வெளியே சுற்றிக்கொண்டிருந்தார்களோ மூட்டை முடிச்சுக்களோடு அவர்கள் நெருங்கியபோது முன்னால் ஓடிவந்தான் கால்சட்டை அணியாத அழுக்குச்சிறுவன். 

உலகத்திலேயே மிக மகிழ்ச்சியோடும் தன்னம்பிக்கையோடும் ராஜநடை போட்டு , நிழலாக குறிப்பிட்ட இடத்தைத் தேர்ந்தெடுத்து அமர்ந்த தாத்தாப் பாட்டியின் அருகில் சென்று நின்று கொண்டு ,பின்னால் வந்துகொண்டிருந்த தாயை வேகமாக வரச்சொல்லி அழைத்தான். 

அரசமரத்தின் இலைகள் ,சரசரக்க பேசாமல் அமைதிக்காத்த அந்த வெயில் மதியத்தில் குடிநீர்க் குழாயை அருகில் கண்டதும் அந்த இளம் தாய்க்கு ஒரு வேகம். கைக்குழந்தையின் உடைகளைக் களைந்து நேராக குழாயில் அதனை முழுக்காட்டினாள். தான் குளித்து குளிர்ந்தது போல அந்தத்தாயின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி .

குழந்தையும் பொக்கைவாய் காட்டி சிரித்து மலர்ந்தாள். அதுவரை சுற்றியிருப்பவர்களை கவனிக்காத அக்குடும்பத்து பெரியமனுஷி பாட்டி சுற்றும் முற்றும் பார்த்தாள். குழந்தையின் சிரிப்பை விட்டு முகமற்றாவும் முடியாமல் அதேகணத்தில் எவரேனும் கண்ணேறு போடுவார்களோ என்று கலக்கமுமாக எங்களையும் நோக்கினாள். நாங்கள் கவனிக்காதவர்கள் போல் பார்வையை தூரமாய் நகர்த்தி வைத்தாலும் அவள் மனம் ஆறவில்லை.

தாத்தாவிற்கு ஒரு பீடி கொடுங்களேன் என்று அருகிலிருந்த மனிதர்களிடம் ஒரு பீடியை வாங்கித்தாத்தாவிடம் தந்துவிட்டு அவர் கால் செருப்பை எடுத்தாள் .குழந்தையை சுற்றி இப்படியும் அப்படிமாக கண்ணேறு கழித்தாள் .பிறகு அந்த செருப்பாலேயே அதன் தோளில் இரண்டு தட்டு தட்டினாள். கால்சட்டையில்லாத சிறுவன் வேகமாக வந்து பாட்டியை நாலு அடி அடித்தான். 



புதிய ஆடை அணிவித்து பேத்தியுடன் பாட்டி சிரித்து விளையாடுவதை அவர்கள் அறியாமல் ஒரு புகைப்படம் எடுத்தேன். எங்கே அந்தப்பாட்டி திட்டுவார்களோ என்று தொலைவிலிருந்து  தான் எடுத்தேன்.


September 13, 2012

தனியே தன்னந்தனியே..


ரயிலுக்கு நேரமாகி இருந்தது..  திரும்பி வரும்போது கொண்டுவரவேண்டிய பொருட்களுக்காக இடம் விட்டு பாதி காலியாக ஒரு பெட்டியும் ,ஏறக்குறைய காலியாக சீரியல் நடிகையின் கைப்பையைப் போல ஒரு தோள்ப்பை  தயாராக இருந்தது.. முதன்முறை தனியாக பயணிக்கிறேன் என்பது மட்டும் கலவரமாக இருந்தது.திருக்குறள் எக்ஸ்ப்ரஸ்.. தில்லியிலிருந்து நெல்லை (திருச்செந்தூர்) வரை என்றால் ஏறக்குறைய இந்தியாவின் இந்தக்கோடியிலிருந்து அந்தக்கோடி தானே.

வீட்டில் எது எது எங்கிருக்கிறது? சில செய்முறைகள் என எல்லாருக்கும் குறிப்புகளைக் கொடுப்பதில் கவனமாக இருந்தேன். எல்லாம் எங்களுக்குத்தெரியும் என்கிற குரல்கள் எனக்கு தெம்பளிப்பதற்காகவே வந்தது. ஆனால் அது என்னைக் கேலிசெய்வதாகப் பட்டது.

 மகள் கைப்பிடித்து நடந்து வளர்ந்தபின்  (இப்பவும் கூட நடந்தால் கைக்குள் கை கோர்த்துக்கொள்வாள்) . பிறகு மகன் . கைப்பையில் இருந்து எதையாவது எடுக்கவேண்டும் என்று அவன் கைப்பிடியை விட்டால் போதும் உடையின் நுனியைப் பிடித்துக்கொள்வான்.  இது என்னவோ போல் எதையோ விட்டுவிட்டுப் போகும் உணர்வு. ரயிலேறிய பிறகு மகனும் வந்திருந்தால் கைப்பையில் ஏறியிருக்கக்கூடிய விளையாட்டுப் பொருட்கள், சாக்லேட்கள் ,பிஸ்கட்களில்  இன்மை உணர்தல்.  வண்டியில் கொறிக்க எதுவுமே வரவில்லை. அழுவதற்கு அவனுமில்லை. ஆனால் எப்பயும் இல்லாமல் எனக்கு கொறிக்க ஆசையாக வருகிறது. பசிக்காத வயிறும் பசிக்கிறது.

எதிரில் விஜயவாடா வரை செல்லும் கணவன் மனைவி. மருந்து அட்டைகளை (இரும்புசத்து மாத்திரையும் கால்சியமும்) நான் வைத்திருந்த புத்தகத்தின்மேல் அந்தப்பெண் வைத்தப்போது  சந்தேகமே இல்லாமல் முதல் ப்ரசவத்துக்கு ஊருக்குப் போகும் பெண் என்று தெரிந்தது. அவள் கணவன் வாசனைப்பாக்கை அதக்கிக்கொள்ளும் போது அந்தப் பெண் ஓயாமல் பேசுவாள் அவர் ம் ம் என்று பதில் சொல்லுவார். அவர் அவள் ஓய்வாக சாய்ந்து இருக்கும் போது ஓயாமல் பேசுவார் . அவள் ம் கொட்டுவாள். ஆகா என்ன ஒரு புரிதல் :)) அவள் சாப்பிடத்தொடங்குவது வரை நானும் காத்திருப்பேன். வயிற்றுப்பிள்ளைக்காரியைப் பார்க்க வைத்து சாப்பிடுவாங்களா என்ன? அதிகம் வெளியாருடன் பேசவிருப்பமில்லாதது போல அமைதியாக இருந்தார்கள்.


 ஒரே ஒருமுறை பாக்கில் கொஞ்சம் வாங்கி அவளும் வாயில் போடும்போது நீங்கள் இப்போது இதெல்லாம் சாப்பிடக்கூடாதே என்று என்னையும் அறியாமல் சொல்லிவிட்டேன்.

பக்கத்து இருக்கைக்காரர். ஐம்பது வயது .பெயர் தியாகி..தொலைபேசித்துறையில் வேலை .. மீரட்டில் இருந்து திருச்சிராப்பள்ளி செல்பவர் .திருச்சியில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்பவர்களுக்கு மேனேஜராக அவருடைய பயணம்.  ஆனால் கன்னியாகுமரி வரை செல்ல இன்னோரு பயணச்சீட்டும் வைத்திருந்தார். முதல் நாள் காலை முழுதும் கன்னியாகுமரி செல்லும் ஆர்வத்தில் இருந்தார். நடுநடுவில் அவருடைய நண்பர் இன்னோரு பெட்டியிலிருந்து வந்து எங்களோடு அமர்ந்து பேசுவார்.

முதலில் ரயில் உணவை ஏன் வாங்கவில்லை என்பதில் பேச்சு ஆரம்பித்தது .வட இந்தியா ரொட்டிக்கும் நம்ம ஊரு சப்பாத்திக்கும் என்ன பெரிய வித்தியாசம். அவருக்கு ஒரே குழப்பம். தென்னிந்தியாவில் போய் என்னமாதிரி சாப்பாடு கிடைக்கும் என்றும்... தமிழ்க்காரங்க இந்தி பேசமாட்டாங்க அதனால் நிச்சயம் ப்ரச்சனை வரும் என்றும் சொல்ல ஆரம்பித்தார். குழுவில் யாரும் கன்னியாகுமரி வரவில்லை. தனியாகச்செல்ல பயம் . கொஞ்சம் கொஞ்சமாக கவலையாக ஆரம்பித்தார். நாங்கள் எவ்வளவோ சொன்னபோதும்,வீட்டைவிட்டு வெகுதொலைவு சென்று ப்ரச்சனைன்னு வந்தா என்ன செய்வேன் என்று தனியாகப் போகப்போவதில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

எங்கள் பெட்டியில் மொபைல் சார்ஜ் செய்யும் வசதி இருக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு தாங்காது என்பதால் அணைத்து வைத்திருந்தேன்.தியாகி நண்பரோட பெட்டியில் போய் சார்ஜ் செய்யும் போது எனக்கும் செய்து தாங்களேன் ..அலாரம் வைக்க வேண்டும் என்றேன். அதெற்கென்ன என் போனில்  வைக்கலாமே என்றார். அப்ப நீங்க திருச்சியில் இறங்கலையா என்றதும்..?

ஓ அதுசரிதான்.. இல்லை.. இல்லை.. நான் கன்னியாகுமரி போகவில்லை நான் இரவு ஒருமணிக்கே திருச்சியில் இறங்கிவிடுவேன் என்று குழம்பிய குழந்தை போல இருந்தார். எப்போது நான் கன்னியாகுமரி தனியாக சுற்றிப்பார்க்கப்போவதில்லை என்று முடிவு செய்தேனோ அப்போதிலிருந்து இலகுவாக உணர்கிறேன் என்று வேறு சொல்லிக்கொண்டார்.
(என்ன இருந்தாலும் குடும்பத்தை விட்டுட்டு ஊர் சுற்றுவர்களைக் கண்டால் எனக்கு கோபம் வரும் . இப்ப ரொம்ப நல்லது அடுத்த முறை குடும்பத்தோடு வந்தால் சரியாக இருக்குமே என்றும் சொன்னேன்)

மதிய உணவின் போது கைகளைக் கொண்டு ஏன் தென்னிந்தியாவில் சாப்பிடுகிறீர்கள் என்று ஆரம்பித்தார். அப்பத்தான் இவ்வளவு நேரம் இவருக்கு பரிதாபப்பட்டதே தப்பு என்று தோன்றியது.

எதிர் சீட்டுக்கு விஜயவாடாவில் ஏறியவர்களுக்கு ஒரு சின்னப்பெண் . ஐஸ்க்ரீம் வேண்டுமென்று அழுது என் மகனில்லாத குறையைத் தீர்த்தாள். ஒருவேளை கவிதை எதும் தோன்றி (தோணவே இல்லைங்க)அப்போது பார்த்து எழுதிவைக்க எதுவும் இல்லாமல் போய்விடக்கூடாதே என்று ரயில்நிலையத்தில் வாங்கிய நோட் பேடில் முகங்களை வரைந்தாள். அவளோடு சேர்ந்து நானும் பூனை வரைந்தேன்.. பில்லி என்றாள்.. எலி வரைந்தேன் எலி மாதிரி இல்லையோ என்னவோ .. யோசித்தாள். டாம் இது ஜெர்ரி என்றேன்.. பாய்ந்து அப்பாவின் கைபேசியில் இருந்த டாம் அண்ட் ஜெர்ரியைக் கொண்டு வந்து ஓடவிட்டாள். பின் இன்னோரு பக்கம் இன்னோரு பக்கம் என்று முகங்களாய் வரைந்து தள்ளினாள்.. தியாகிக்கு பொறுக்கவில்லை.. வாங்கி வையுங்களேன் என்றார். வரையட்டுமே என்று நான் இருந்தேன் .அவருக்கென்ன தெரியும்...? ஒரு அம்மாவின் கஷ்டம்.

ஒரு ஆச்சரியமான விசயம் . நான் நெல்லையில் இறங்கினேன். தியாகி அண்ட் கோ திருச்சியில் இறங்கினார்கள். டாம் ஜெர்ரிப்பாப்பா கன்யாகுமரியில் இறங்க இருந்தாங்க.. ஆனால் நாங்க எல்லாருமே திரும்ப மதுரையில் இருந்து ஒரே நாள் சம்பக்ராந்தி வண்டியில் ஒரே பெட்டியில் மீண்டும் திரும்பி வந்தோம். 

திருச்செந்தூரில் கோயில் கடைகளைத் தாண்டுகையில், ஒரு நினைவு, கோயில்கடையைத் தாண்டாமல் அழுகிற பையனுக்கு தொலைபேசி
’அம்மா கோயிலில் இருக்கேன் இங்க நிறைய கடை இருக்கு .. உனக்கு எதாச்சும் வாங்கிட்டு வரேண்டா’
’சரி சரி அக்காக்கிட்ட போனைக் கொடுக்கிறேன்..’
’எல்லாரும் எப்படி இருக்கீங்க..’
‘எங்களுக்கு என்ன நல்லா சந்தோசமா இருக்கோம்.. ’




August 22, 2012

இயல்

ஆர்க்கும் கரையிலிருந்து
தொலைவில்
வெகுதொலைவில்
பழக்கமான மௌனத்தில்
விழுந்து மிதக்கிறது
ஆழிமழை

மின்னி மறைந்து கொண்டிருந்தது
இருளின் பரப்பை 
பழகவிடாத ஒளிக்கத்திகள்

இயல்பாய் இருப்பதென்பதாய்த்தான்
சற்றே கவனங்கள் சிதறுவதை
கவனிப்பதுவும்

---------------------------------------------------
வருடங்கள் மிகுத்து
கிளை பரந்தும்
வேர்பரவா மரமதென்று
உறங்காதென்று
வணங்கி நிமிர்ந்து பின் 
புழுவாகி பாம்பாகி
மரமாகியோ
சாபம் தீரவோ 
காத்திருந்த மரத்தின்
நினைவுக்கென்று 
பட்டை உரித்தார் 
உய்விக்க வந்த
கடவுளோ இவர்?

May 30, 2012

நற்குறிகள்

தோகை நீண்ட மயில்
இரட்டை மைனாக்கள்
இன்றைக்கும்
நற்குறியோடு விடிந்தது
இருந்தும்
என்னோடு
காத்திருப்பை விட்டுச் செல்வதும்
உன்னோடு
பிரிவைக் கொணர்வதும் 
என்றும் மாறுவதில்லை


-----------------------------------



நிதானமாய் 
காத்திருக்கிறேன்
நொடிகள் தெரிகிறது
இதயம் துடிப்பதைக்கொண்டு 
நேரம் சொல்லமுடிகிறது

நாழிகை தெரிவதில்லை
நாளும் தெரிவதில்லை

கடிகாரப்படியும்
நாட்காட்டிப்படியும் பேசி 
பதட்டம் நிறைக்கிறார்கள்
சுற்றிலும் நகர்பவர்கள்

காலம்

காலம்

துகள் துகளாய் 
இறந்து கொண்டிருக்கிறது
முற்றிலும் தீர்வதற்குள்
கவிழ்த்து வைத்தாலும் 
அதே சீரில்.


------------------------


எனது கிராமத்தில் 
கதவடைத்து வாழ்கிறார்கள்
எனது நகரத்தில்
அடுத்தவர் வாழ்க்கையை 
உற்று நோக்குவோர்
அதிகரிக்கிறார்கள்
இரண்டுமற்ற இடத்தில்
நீங்களும் நானும்
நம் நகர கிராமங்களோடு.

May 29, 2012

இறக்கை தொலைத்தது தேவதை

விரல்களுக்குள் அடங்கிவிடும்
ஓசைகள் தான்
வரிகளை உடைத்து
ஆயிரமாயிரமாய் 
அர்த்தப்படுத்தியபின் 
களிம்பென்றும்
காயமென்றும்
பிரித்தது போக 
மீதி இறக்கை விரித்து 
பறந்து மறைந்தது

ஆண்டாண்டுகளாய் 
உறங்கி 
விழித்தெழுந்து 
தானாய் பூத்தது தாமரை

உடைத்தது நான்
அறிந்தது நான்
எல்லாம் தந்ததாய் தேவதைக்கு
படைப்பதற்கு எதுவும் அவசியமில்லை 
இறக்கை தொலைத்து
கூட இருக்க சம்மதிக்கிறது
தேவதை

May 26, 2012

வானவில் இற்றைகள் (சவுத் இந்தியா)

சூப்பர் மார்க்கெட் ல பிடிச்ச பிஸ்கட் , ஜூஸ் எல்லாம் எடுத்தாச்சு.. மாடியில் இருந்த டாய் செக்‌ஷனில் மட்டும் எதும் சரிப்பட்டு வரல..வரும்போது ரொம்ப டல்..

மகள்: டேய் அதான் எல்லாம் பிஸ்கட்லாம் வாங்கினியேடா
மகன்: இருந்தாலும் டாய் வாங்கலியே
மகள்: ஃபுட் இல்லன்னா லைஃப் ல சாவோம்.. டாய் இல்லன்னா சாவோமாடா?
மகன்: எனக்கு லைஃப்ல டாய் ம் வேணும் ஃபுட் ம் வேணும்
மகள்: ஓகே அப்பன்னா ரெண்டு நாள் ஃபுட் மட்டும் சாப்பிடு..
ரெண்டு நாள் டாய் மட்டும் வச்சி விளையாடு புரியும் உனக்கு..
(யம்மாடி ...)
------------------------------------------------------------------------------
”அம்மா தாயே” (என்று ஆரம்பிச்சு பராசக்தி எல்லாரையும் காப்பாத்தும்மான்னு நான் முடிக்கிறதுக்குள்ள.. )

”பராசக்தி காப்பாத்தும்மா’ன்னு மட்டும் சொன்னான்.. 

”யாரைடா காப்பாத்தனும் “

”என்னையை , அம்மாவை...”
(அப்பறம்ங்கறமாதிரி நான் பாக்கவும்)

”சவுத் இந்தியாவை “ ( சென்னை சூப்பர் சிங்க்ஸ் ஜெயிக்கனும்ன்னு நினைச்சுட்டே இருந்ததால் இருக்குமோ)

இந்தியாவை ..
பாகிஸ்தானை...
ஸ்ரீலங்காவை...
எர்த்தை .... 

அப்பறம்ன்னு அவன் இப்ப என்னைப்பார்க்கிறான்..
----------------------------------------------------------
”இன்னிக்கு ஒரு அன்லக்கி டே எனக்கு”ன்னு முகத்தை சோகமா வச்சிக்கிட்டு சொன்னான்..குட்டிப்பையன்
”ஏண்டா அப்படி வருத்தப்படர அளவு என்னடா ஆச்சு?”
”எனக்கு இன்னிக்கு பேட்டிங்க் கிடைக்கவே இல்ல..”
”வீட்டுக்கு வந்தா அப்பா டீவி தரமாட்டேங்கராங்க..”
”நீ என்னடான்னா மிருதங்கம் ப்ராக்டிஸ் செய்யு ஸ்டோரி புக் படி”ன்னு சொல்றே.. 

May 16, 2012

வாசப்புகைப்படம்


மண்கிளறி களையூறி
பார்த்துப்பார்த்து
உயிராக்கினாலும்
பூக்கும்போதெல்லாம்
களைந்தெறிந்த
கோபமின்றி
பூகிள்ளிய கரங்களை
தோட்டத்துக் காற்றை
வாசத்தால் நிறைக்கிறாய்
.
ஈரமும் உடைதலுமாய்
கிளைத்த
என்னுயிரை
மனதை
எனை
அறியாதவற்கு தர
வாசப்புகைப்படமாய்.

May 1, 2012

ஒற்றைக் கூழாங்கல்


கவனமாய் கோத்த
முத்தாரத்தில்
எல்லாமுமாய் கூடி
கவனம் ஈர்த்தபடி
இருக்க
ஒற்றைக் கூழாங்கல்
அமைதியாய் அங்கே
பொருந்திவிட்டிருந்தது

-----------------------------------------------------

நிலா பார்த்து
நட்சத்திரங்கள் எண்ணிமுடித்து
என்றொருநாள் பாலைக்கனவு

மலையேறி முகடெட்டி
பள்ளத்தாக்கில் கரைந்து
என்றொருநாள் பனிமலைக்கனவு

எங்கேயும் போகப்போவதில்லை
என்பதைத்தான்
கனவில் வந்த கனவு
சொல்லிக்கொண்டிருக்கிறது




March 19, 2012

தேவைகள்

மதிப்பீடு

புரிகின்ற கேள்விகளுக்கு
அடித்தல் அழித்தல் போக
இருப்பதும்
கணக்குகளை சிதறடிக்க
தயாரிக்கப்பட்ட
சில புரியாத பதில்கள்
அவற்றிலும்
எழுதாத பதில்களுக்கே
முதலிடம்

--------------------------------------------

தேவைகள்


அந்தரத்தில்
இழுத்துக்கட்டப்பட்ட கயிற்றில்
முன்னேறவும்
நிலைப்படுத்திக் கொள்வதற்காகவும்
சில சாய்வுகள்

சிக்கலில் முடிச்சுகள்
தேடியவேகத்தில்
இறுகிக்கொண்டிருக்கிறது
என்றானபின்
சில நிதானங்கள்

தற்செயலாக நடந்துவிடும்
தவறுகளுக்கு
சில மன்னிப்புகள்.

March 16, 2012

உன் நியாயம்

உன் நியாயம் 
---------------------

சாய்ந்தமர்ந்து 
புன்சிரிப்புடன் உலகாள்கிறாய்
நானல்ல 
துன்பத்திற்கு காரணம்
அவரவரே என்கிறாய்
கவனங்களை ஒருமுகமாக்கி
பின் சிதறடிக்கிறாய்
தேடுபவன் கண்டுகொள்வான் 
என்றபடி 
ஒளிந்துகொள்ளாமல் 
விண்ணுக்கு வளர்ந்து நிற்கிறாய்
கீதை சொல்லி
உணர் என்கிறாய்
கீழ்படிதலை வெறுக்கிறாய்
இருக்கிறாயா? இல்லையா?
ஆராய்ந்து கொண்டிருப்பவனின் 
கண்களுக்குள் 
முரண்படுகிறாய்.
-----------------------------------------------------------------------
                                                 முன் தடயமற்ற பாதை
                                                      ------------------------------
                                                 பனி வெடித்து சரிந்து
                                                 துடைத்தாற்போல்
                                                 சீராகிறது 
                                                 நினைவுகளற்ற வெளியாய்
                                                 நடக்கத்தூண்டியபடியே இருந்தது
                                                 நிச்சயமற்ற ஒரு நொடியில்
                                                 மீள் நிகழ்த்துகிறது 

March 13, 2012

நேரிட்டே சொல்லித் தீர்




உண்டி சுருக்கி
உணர்வு சுருக்கியும்
போதாமல்
பேயுரு பெற
அம்மையில்லை
அழுந்திய மனத்தால்
ஆடித்தீர்க்க 
இன்று பேயுமில்லை
நேரிட்டே சொல்லித் தீர்
------------------------------   






காற்றை கிழித்து
சரியான நோக்கில்
வீச வீச 
திசைகள் பழக்கப்பட்டு 
மீண்டும் வாகாக
திரும்பிக்கொண்டிருந்தவரை
விளையாட்டு

திரும்பாமல் தாக்கிய
தினத்தில்
தொடங்குகிறது போர்

--------------------------




நிறுவிக்கொள்ளவென்று
முகமூடியிட்டபின்
முயன்றாலும் 
முடியப்போவதில்லை
இளைப்பாறுதல்
-----------------------------------

March 8, 2012

விடுதலை

அறைந்து கதவை சாத்தி வெளியே இருந்து தாழிடும் ஓசைக் கேட்கிறது. அப்பா வெளியே கிளம்பிவிட்டார். காலையிலேயே 5 மணிக்கே விழித்துக் கொண்டுவிட்டேன். ஆனால் விழித்துக்கொண்டாலும் சிந்திப்பது மட்டும் இல்லை. வீட்டு வெளிக்கதவை அறைந்து சாத்தி தாழிடும் ஓசைக் கேட்டால் மட்டுமே சிந்திக்க வேண்டும் என என் மூளை பழக்கப்படுத்தப்பட்டுவிட்டது. 

காலையை அறிவிக்கும் ஒளிகிரணங்கள் ஏதும் எங்கள் வீட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால் எனக்கு ஒளிகிரணங்கள் என்பது ஒரு பார்வையற்றவளின் கற்பனை வடிவமே. என் நினைவிலிருந்தே கூட அது அழிந்து போய்விட்டது. ஆனால் சூரியக்கிரணங்களின் வெப்பத்தின் உணர்வு எப்படி இருக்குமென்ற நினைவிருக்கிறது. உணர்வுகள் இன்னும் இறந்து போகாமல் இருப்பதை இதனைக்கொண்டு நான் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். 

முன்பெல்லாம் நானும் அம்மாவும் மட்டர் உரித்துக்கொண்டோ மேத்தியை ஆய்ந்துகொண்டோ வீட்டின் முன்பக்கத்தில் அமர்ந்திருப்போம். சூரியவெப்பம் எங்கள் முதுகில் படும்படி நாங்கள் அமர்ந்தபடி அவ்வேலையைச் செய்யும்போது இதமான ஒரு அனுபவமாக அது இருந்தது நினைவிருக்கிறது. 

ரெமி எங்களைவிட்டுச் சென்ற அடுத்த வாரத்தில் நாங்கள் யமுனைக்கடந்து வெகுதொலைவில் அழைத்து வரப்பட்டோம். வழி நெடுக புதிதாக முளைத்த உயர்ந்த கட்டிடங்களைத்தவிர எதுவுமே இல்லாத ஒரு புறநகர்பகுதியில் ஆள் அரவமற்ற இந்த குடியிருப்பில் வந்து இறங்கினோம். இந்த வீட்டிற்குள் நுழைந்த அந்த முதல் நாளைத்தவிர நானோ அம்மாவோ வெளியுலகைப் பின் கண்டதே இல்லை. 

எழுந்தபின் அறையின் உள் நடந்துகொண்டு மட்டுமிருப்பேன். கால்களுக்கான பயிற்சி அது.
அம்மா சமையலறையிலிருந்து என்னறைக்குள் எட்டிப்பார்த்தால் அவள் காபி தயாரித்துவிட்டாள் என்பதாகும். அவள் பேச்சை இழந்துவிட்டாள். நினைத்தால் அவளால் பேசமுடியும் ஆனால் பழக்கம் விட்டுப்போய்விட்டது. சொல்லப்போனால் வீட்டில் யாருமே பேசிக்கொள்வதில்லை. நான் அவ்வப்போது கிசுகிசுப்பாக எனக்குள்ளே பேசிக்கொள்வேன்.

ரெமியும் நானும் சிறுவயதாக இருக்கும்போதே அப்பா மிகவும் கண்டிப்பாகத்தான் இருப்பார். பள்ளிக்குச் செல்லும் முன் பலவகையான சட்டத்திட்டங்களை அவர் வாய் ஜெபித்தபடியே இருக்கும். அது எங்கள் பாதையில் பள்ளி வரை ஒலித்துக்கொண்டே இருக்கும். ரெமி மட்டும் சட்டங்களை எல்லாம் அவளுடைய நண்பர்களைக் கண்டதுமோ தெருமுனை தாண்டியதுமோ மறந்துவிட்டு அவர்களுடன் கலந்துவிடுவாள். 

அவளின் அந்த மறக்கும் குணம் தான் அவளை இந்நரகத்திலிருந்து காப்பாற்றிவிட்டது. இந்நேரம் அவள் எங்கேயோ சுகமாக இருப்பாள் என்ற நம்பிக்கையில் அவள் வந்து அழைக்கின்ற தினத்தில் நான் அவளை ஓடிச்சென்று அணைத்துக்கொள்வதற்காகவே நடைப்பயிற்சியை செய்கிறேன். ஆனால் என்னால் அவளை ஏறெடுத்துப் பார்க்க முடியாது. 

வெளியுலக நரகத்திலிருந்து என் இரண்டு பெண்குழந்தைகளைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பார் அப்பா. அவரால் பணமும் சம்பாதிக்கமுடியவில்லை , எங்களுக்கென்று குடும்பம் என்பதை அவரால் ஏற்படுத்திக்கொடுக்கவும் முடியவில்லை. ரெமியின் இரண்டே வார்த்தை அவரை அத்தனை மூர்க்கமாக்கிவிட்டது. “நான் போகிறேன்” .நான் அப்பாவின் பேச்சைக் கேட்கச்சொல்லி ரெமியை மிகவும் கெஞ்சினேன். என்னால் அவளை ஏறெடுத்துப்பார்க்கமுடியாது.

அவளின் அனுமானம் சரியாகிப்போனது. அவளை நான் நம்ப மறுத்ததற்கு அவளிடம் நான் மன்னிப்புக் கேட்கவேண்டும். வெளியுலகத்தில் பெண்ணை போகமாய் நினைப்பவர்க்கும் வீட்டில் இவர் தன் உடமையாய் நினைப்பதற்கும் எந்த வேறுபாடுமில்லை என்று அவள் எனக்கு புரியவைக்க முயற்சித்தாள். நான் பாசத்தில் கட்டுப்பட்டிருந்தேன். முட்டாள் என்றாள். போராடுவதற்கு நீ பாசத்தை அறுக்கவேண்டுமென்றாள்..

கதவுகள் உடைபடும் ஓசை. அம்மா ஓரத்தில் ஒடுங்கி நின்றாள். வெளியே பூட்டியிருக்கும் கதவை யாரோ உடைக்கிறார்கள். குரல்கள் அதிகம் பேர் சூழ்ந்திருப்பதாகக் காட்டுகிறது. வெளிச்சம் வெளிச்சம் கண் கூசுகிறதே! நான் என்படுக்கையில் ஓடி தலைகணைகளால் முகம் மூடிக்கொண்டேன். நுழைந்தவர்களின் குரல்களில் அனுதாபமும் அருவருப்பும் ஆத்திரமும் மாறிமாறிவெளிப்பட்டது. வெளிச்சமும் காற்றுமற்ற அந்த சூழல் .யாரோ குமட்டலும் வாந்தியுமாகி ஓடுகிறார்கள். யாரோ எங்களை வெளிச்சப்பள்ளத்தாக்கில் கொண்டு நிறுத்தினார்கள்.

ரெமியின் தீதீ* என்ற குரல் ..என்னால் நிமிர்த்து பார்க்கமுடியாது.
”தீதீ தீதீ” ..என்னைப் பார் .. என்னைப்பார் நான் ரெமி வந்திருக்கிறேன். சமூக சேவகிகளுடனும் போலீஸ் துணையுடனும் தேடிக்கண்டுபிடித்து வந்த கதைகளும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை குற்றப்படுத்தும் பேச்சுக்களுமான இரைச்சலின் நடுவில் அம்மாவின் நெகிழ்வான குரல் தனித்துக் கேட்டது. ”ரெமி அவளால் நிமிரமுடியாது உனக்காக பரிந்து பேசிய தினத்தில் அவள் கழுத்து முறிபட்டுவிட்டது’ 
மீதமிருந்த என் உயிருக்கான அவளின் மௌனவிரதம் புரிந்தது. 

எங்கோ முறிகின்ற கழுத்துகளுக்கு நாமும் காரணமென்று சுற்றி இருந்தவர்க்கு புரியுமா தெரியவில்லை.

( ஒரு உண்மைக்கதையைக் கொண்டு எழுதியது) தீதீ*-அக்கா

February 28, 2012

உலகபுத்தகக்கண்காட்சி- எஸ்.ரா

உலகபுத்தகக் கண்காட்சியின் முதல் ஞாயிறன்று பதிவர்கள் புத்தகம் வாங்கும் சாக்கிலாவது சந்திக்கலாம் என்று இருந்தோம். சிலரால் வர இயலவில்லை. ஆதி ,வெங்கட்,ரோஷிணி, ஆச்சி, கலாநேசன், லாவண்யா அனைவரும் சந்தித்துக்கொண்டோம்..எங்களுக்கு முன்பு இராணுவத்தினர் சிலர் புத்தகங்களை முற்றுகையிட்டிருந்தார்கள். சந்தியா, பாரதி,கிழக்கு மற்றும் காலச்சுவடு பதிப்பகத்தார் வந்திருந்தார்கள்.

 நண்பர்கள் சேர்ந்தால் பேச்சுக்கு குறையில்லை கிண்டல் கேலியோடு புத்தகங்கள் தேர்வு செய்து வாங்கினோம். மாலையில் எஸ்.ரா அவர்களின் உரை தமிழ்சங்கத்தில் இருந்தது. வீடு சென்று திரும்புவதைக்காட்டிலும் அங்கிருந்தே சங்கம் செல்லலாமே என்று ஷாஜகான் மனைவி குடுத்த யோசனைக்கு அடுத்து ஆதி வெங்கட் அவர்கள் வீட்டுக்குஅழைத்தார்கள்.. ரோஷ்ணி அதற்கு பின் மிகுந்த மகிழ்ச்சியோடு என் கையைப்பிடித்தபடி பேசத்தொடங்கிவிட்டாள். அப்பாவும் அம்மாவும் என்னிடம் பேசுவதை அவள் கவனித்ததாகவேக் காட்டிக்கொள்ளவில்லை. நானும் அஷ்டாவதானி போல அவர்கள் பேச்சையும் காதில் வாங்கி ஆனால் இவளுக்குமட்டும் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். வீட்டிலும் தனக்கு வாங்கிய புது பல்துலக்கும் ப்ரஷிலிருந்து தான் வரைந்த ஓவியங்கள் வரைக் காண்பித்துக் கொண்டிருந்தாள்.

ஆதியின் சுவையான தேநீரொடு ஒரு அரட்டை கச்சேரிக்கு பின் தமிழ்சங்கம் சென்றோம். சுசீலாம்மாவும் தேவராஜ் விட்டலனும் அங்கே இருந்தார்கள். சுசீலாம்மா உள்ளே நுழையும்போதெ முத்து! முன்பே வந்திருக்கலாமே நாங்கள் நல்ல ஒரு கலந்துரையாடல் செய்தோம் என்று சொன்னவுடன் எனக்குள் இதுவரை பேசிக்கொண்டிருந்த மகிழ்ச்சி குறைந்தது போல ஒரு உணர்வு.

சிறிய அரங்கில் பேசி இருந்தால் அதிக நேரம் பேசி இருப்பாரா இருக்கலாம். பெரிய அரங்கில் அன்று மௌனகுரு திரைப்படம் மூன்று காட்சி இருந்தது எனவே அதற்கு இடைபட்ட நேரத்தில் நிகழ்வு அமைந்தது. அது ஒரு வகையில் நல்லது தான். புதிய சிலருக்கு அவருடைய பேச்சைக்கேட்க வாய்ப்பாக இருந்திருக்கும். சினிமாவிற்கு தாமதமானாலும் அதிக சலசலப்பை ஏற்படுத்தாமல் கவனித்துக்கேட்டார்கள். எளிமையாக அடுத்தவீட்டு குழந்தையிடம் கதைக்கேட்டதிலிருந்து தான் வாசித்த கதை வரை ஒரு கதை சொல்லியாக எல்லாரும் ரசிக்கும் படி பேசினார். ஒவ்வொருவரும் பல கதைகளை வைத்திருக்கிறோம் பகிராமல் விட்டுவிடாதீர்கள் என்றும் நம்மைச்சுற்றி இருப்பவர்களின் அருமை , வார்த்தைகளின் முக்கியத்துவம் என்பதாக அவருடைய பேச்சு அமைந்திருந்தது.

அன்று தமிழ்சங்கத்தில் இன்னொரு புதிய தில்லி பதிவரை சந்திக்க முடிந்தது.. அவருடைய தளம் http://hemgan.wordpress.com/author/hemgan/

திங்கள் மாலை எஸ்.ரா அவர்கள் புத்தகக் கண்காட்சியில் இருக்கும் நேரத்தில் ஷாஜகான் அவர்களுடன் சென்று சந்திக்க முடிந்தது. அவருடன் சில இளைஞர்கள் உணவுக்கூடத்தில் இருந்தார்கள். இணையத்தில் அவருடைய தளத்தின் மூலம் பகிர்ந்துகொள்வது பற்றி முதலில் பேசிக்கொண்டிருந்தோம். எல்லா எழுத்துக்களையும் பதிப்பகத்தார் மூலம் புத்தகமாக்க வேண்டும் என்று இல்லாமல் இணையத்திலேயே நேராக சிலவற்றை பகிர்வது விருப்பம் என்றார் அது தானே எங்களுக்கும் வேண்டும். பெருமிதமான ஒரு தந்தையாக அவருடைய குழந்தைகள் இருவரைப்பற்றியும் அதிகம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய நேரமேலாண்மைப் பற்றியும், எழுத்து முறைகள் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டோம்.

அதிகாலைப்பனி நலம்விசாரித்ததாகச் சொல்லச்சொன்னார்கள். எஸ்.ரா அவர்களிடம் அச்செய்தியைத் தெரிவித்தேன். அவர் ஒரு கதை சொல்லியாச்சே கதை இல்லாமலா . தான் ஏறும் பஸ் எண் மட்டும் தன் தெருவில் தன் வீடு மட்டும் தெரியும் ஒரு வித்தியாசமான பழக்கம் உள்ளவ ஒருவனின் கதையைக் கேட்டோம். சுசீலாம்மா போன்றவர்களுடன் நேற்று நடந்த கலந்துரையாடல் சமயத்தில் இருக்கமுடியாமல் போனாலும் அவரே சொன்னது போல ரோஷ்ணியோடு பேசிக்கொண்டிருந்ததும் வெகு நாட்களாக அவர்கள் வீட்டுக்கு அழைத்துக்கொண்டிருந்த நண்பர்களுடனும் தான் பொழுதுபோனது என்பது உரைக்குபின் தோன்றியதாகச்சொன்னேன். நேற்றைய பேச்சின் சாரத்தை வாழ்க்கையில் செய்திருக்கிறீர்கள் சரிதானே என்று அவரும் ஆமோதித்தார். நேற்று ப்ளாக்கர்ஸ் மீட் நடந்ததைக் கேள்விப்பட்டேன், தெரிந்திருந்தால் கலந்துகொண்டிருப்பேன் என்றார்.

வாங்கிய புத்தகங்கள் லிஸ்ட் இங்கே பகிரவில்லை.. படித்து முடித்தபின் அதைப்பற்றி பகிர்ந்துகொள்கிறேன்..


January 17, 2012

ஆல் இஸ் வெல்

ஈழநேசனுக்காக எழுதிய த்ரீ இடியட்ஸ் படம்பற்றிய பதிவு.

அனைவருமே வெற்றிக்கான பாதையில் தான் செல்ல விரும்புகிறோம். ஆனால் வெற்றியை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிற போது போட்டி, பொறாமைகள், பிரச்சனைகள், தோல்விகள், மனக்கசப்புகள் என்று படிப்படியாக பல தடைகளும் துன்பங்களும் நேரிடுகிறது. வெற்றியின் பின்னால் ஓடாமல் ஒரு நல்ல செயலை எடுத்துக்கொண்டு நல்ல திட்டமிடுதலும் அதை சரியான வழியில் செயல்படுத்தலும் வெற்றியை தன் பின்னால் ஓடிவரச் செய்யக்கூடியதாக மாற்றுவதும் ஒரு புத்திசாலியின் வழியாகும்.

’உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்’ என்பது போல பல சொற்றொடர்களைக் கேள்விப்பட்டிருப்போம் நேர்மறை எண்ணங்களின் அலைவரிசை நமக்கு வெற்றியைப் பெற்றுத்தரவல்லது. அதையே ‘ஆல் இஸ் வெல்’ என்று சொல்லிக்கொண்டு முட்டாள் பட்டம் கட்டப்பட்ட மூவர் வெற்றிபெற்ற கதை 3 இடியட்ஸ்- ஹிந்தி திரைப்படம்.

சேத்தன் பகத்தின் ’5 பாயிண்ட் சம் ஒன்’ என்கிற நாவலைத் தழுவி அமைக்கப்பட்ட கதை. ’முன்னாபாய் ’எம் பிபி எஸ்’ மற்றும் ’லகே ரஹோ முன்னாபாய்’ போன்ற வெற்றிப்படங்களை அளித்த ராஜ்குமார் ஹிரானி மற்றும் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ராவின் கூட்டணியில் மூன்றாவது படம் 3 இடியட்ஸ். படம் வெளிவந்த வேகத்தில் வசூலை கொட்டிக்கொண்டிருக்கிறது.

 படத்தின் மையக்கருத்தைப் போலவே அமீர்கான் மற்றும் ராஹ்குமார் ஹிரானியின் வெற்றியைச் சென்றடையும் வழி சிறப்பானது. தேர்ந்தெடுக்கின்ற கதையை நேர்மறையாகவும் ( பாஸிட்டிவ்) திரைக்கதையை அமைக்கும் வகை சிறப்பானதாகவும் இருந்தால் மற்ற படங்களிலிருந்து வேறுபட்டு நின்று விடுகிறது. வெற்றி அவர்கள் பக்கம் தானே இருந்தாக வேண்டும். அமீர்கான் தன்னை ரசிகர்களின் அடிமை என்று உருவகப்படுத்திக்கொள்கிறாராம். அடிமை உங்களை மகிழ்ச்சியூட்ட வருகிறார். ஹிரானியால் எதிர்மறையான கதாபாத்திரங்களைக்கூட மிக கொடூரமாக சித்தரிக்கமுடியாது என்கிறார் அமீர். உண்மையில் வாழ்க்கையும் அது தானே. நியாயங்கள் வேறுபடலாம் ஆனால் அவர்களும் மனிதர்கள் தானே.


நம் நாடுகளின் கல்வி முறைகள் இன்னமும் ஒரு அலுவலக குமஸ்தாவை உருவாக்கும் வண்ணமே இருந்துகொண்டிருக்கிறது. மதிப்பெண்களுக்கான முக்கியத்துவத்தின் அழுத்தத்தால் தற்கொலைகள் அதிகரிக்கும் இக்காலகட்டத்தில் சரியான ஒரு கருத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். மிகச்சிறந்த கல்லூரியில் இஞ்சினியர் படிப்புக்காக இணைந்திருக்கும் இளைஞர்கள் மூவரைப் பற்றிய கதை. அமீர்கான் ( ராஞ்சோ) மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவராக வருகிறார் . அவருக்கு கல்வி ஒரு பிடித்தமான விசயம். மாதவன் மற்றும் ஷர்மானுக்கு சராசரிக் குடும்பத்தின் உயர்வை அவர்களின் படிப்பு நிர்ணயிக்கப்போகும் அழுத்தம். எதையும் ஆல் இஸ் வெல் என்றபடி தன் என்ணத்துக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளும் அமிர்கானின் வழிமுறையைப் பின்பற்றி நண்பர்கள் வாழ்வில் ஜெயிக்கிறார்கள்.

பொமன் இராணி (வீரு சகஸ்ரபூதே) மிகச்சிறந்த நடிகர் என்பதை இன்னொருமுறை நிரூபித்திருக்கிறார். தன் மகனை தன் இஞ்சினியர் வாரிசாக நினைத்து ஏற்படுத்திய அழுத்தத்தால் பறிகொடுத்துவிடும் பொமன் இரானி கல்லூரியின் டைரக்டர். முதல் நாள் கல்லூரியில் சேர்ந்தவர்களுக்கு அவர்கள் எத்தனை பேரின் கல்லூரிக் கனவினை பின் தள்ளி இங்கே இணைந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார். அமீர்கானின் துடுக்கான புத்திசாலித்தனமான கேள்விகளால் கோபமுற்று அவரையும் அவர் நண்பர்களையும் முட்டாள்கள் என்றும் அவர்கள் வாழ்வில் செயிக்கப்போவதில்லை என்றும் சொல்லி வருகிறார். அவரை வைரஸ் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள் நண்பர்கள். அமீர்கானுக்கும் அவருக்குமான காட்சிகளில் பொறி பறக்கிறது.


சதூர் ராமலிங்கமாக வருகின்ற ஓமி வைத்யா அமெரிக்காவில் வளர்ந்தவர் எனினும் ஒரு ஹிந்தி தெரியாத பாகத்து இந்தியனின் அனைத்து குணாதிசயங்களையும் மிகச்சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் முக்கியமானதும் கதையோட்டத்துக்கு தூண் போன்றதும் கூட . மனப்பாடம் செய்து வெற்றி பெறுபவர்களின் உதாரணமாக வருகிறார். படம் முடிந்த பின்னும் ‘சதூர்’ நினைவில் நிற்கிறார்.

ஷர்மானின் (ராஜூ) குடும்பம் ஒரு சினிமாத்தனமான குடும்பம் என்கிற அறிமுகம் அருமையானது. கருப்பு வெள்ளையில் இருமிக்கொண்டிருக்கும் அம்மா , கைகால் விளங்காத அப்பா, கல்யாணம் செய்யவேண்டிய தங்கை என அவருக்கு வாழ்க்கையில் பயத்தையும் அழுத்தத்தையும் உண்டு பண்ணக்கூடிய பிண்ணனி. ஷர்மான் கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார்.

கதாநாயகி கரீனாவுக்கான வேடம் மிகச்சிறியதே. ஆனால் அமீர்கானுக்கும் அவருக்குமான ஜோடிப்பொருத்தம் மனதை அள்ளுகிறது. அவருடைய கல்யாணத்தை உடைக்கும் விதமான அமீரின் அத்தனை காட்சிகளும் யதார்த்த நகைச்சுவைகள். சின்னத்திரை நடிகை மோனாசிங்கின் (கரீனாவின் அக்கா) முதல் திரைப்படம். ஒவ்வொரு சிறு பாத்திரமும் கண்களில் நிற்கிறார்கள். பள்ளிப்படிப்பை படிக்க ஏழைச்சிறுவனுக்கு அமீர் கூறும் வழிமுறை முதலிலேயே சிறுகுறிப்பாகச் சுட்டப்படுகிறது.


மாதவன் படத்தின் தொடக்கத்திலிருந்தே கலக்குகிறார். ஃபரான் (மாதவன்) க்கு அவருடைய படிப்பைக்காட்டிலும் வனவிலங்குகளின் புகைப்படக்காரராக வரவேண்டும் என்கிற ஆசை. அவரை தன் அப்பாவை சம்மதிக்க வைத்து வாழ்வில் சரியான பாதையைத் தேர்தெடுக்கவைப்பது ராஞ்சூ. ஷர்மான் பொமன் இராணியின் சதிக்கு உடன்படாமல் தற்கொலைக்கு முயன்று நண்பனைக் காப்பாற்றுகிறான். அதற்கு பின் வாழ்வில் ராஞ்சூவின் வழிமுறையான எதையும் நேர்மறையாக , தைரியமாக செய்கின்றவனாக மாறுகிறான். அவனுடைய தைரியமான , நேர்மையான வழிமுறை அவனுக்கு நேர்முகத்தேர்வில் வேலைப் பெற்றுத்தருகிறது.

சதுர் தான் வாழ்க்கையில் ஜெயிக்க மற்றவர்களைத் தோற்கடிக்கவேண்டும் என்கிற போக்கு கொண்டவராக வருகிறார். அமீரின் பதில் தாக்குதலால் அதுவும் ஹிந்தி பாஷையை புரியாமல் மனப்பாடம் செய்து மேடையில் பேசி அவமானம் அடைவதால் ஒரு சபதம் செய்கிறார். இன்ன தேதியில் நாம் நால்வரும் இதே இடத்திற்கு வருவோம் அப்போது உங்கள் எல்லாரைக்காட்டிலும் நானே சிறந்தவனாய் வளர்ந்திருப்பேன் என்கிறார். அன்றைய தேதியில் நல்ல வேலையும் காசுமாக அவர் வரவும் செய்கிறார். ஆனால் ராஞ்சோ அமீர் மட்டும் திரும்பவில்லை. நிஜமான அறிவாளி என்ன செய்கிறான் என்பதைக் காண நண்பர்கள் அவரைத்தேடிச் செல்கிறார்கள்.

ஜாவீத் ஜாஃப்ரியை சந்திக்கிறார்கள். அவரிடமிருந்து அமீர்கானின் இருப்பிடம் அறிந்து கொண்டு கரீனாவையும் அழைத்துக்கொண்டு பயணப்படுகிறார்கள். இக்காலகட்டத்தில் ராஞ்சோவின் வழிமுறையிலேயே அவர்கள் எல்லா விசயத்தையும் கையிலெடுத்து ஜெயிப்பது அவர்களுக்கு நண்பனின் தாக்கம் எந்த அளவுக்கு என்று துல்லியமாகக் காட்டுகிறது.


3 இடியட்ஸ் உடன் எதாவது ஒரு நல்ல தமிழ் திரைப்படத்தை ஒப்பிட நினைத்தால் ‘பசங்க’ படத்தை ஒப்பிடலாம். இருந்தாலும் தமிழில் மறுஆக்கம் வர இருக்கிறது. இக்கூட்டணியின் முதல் இரு படங்களைப்போலவே இதிலும் மிக அதிக உருக்கமான காட்சிகள் வருகிறது. மழை நாளில் மோனாவுக்கு அமீரே குழந்தை பிரசவிக்கச் செய்வது போன்ற காட்சிகள். மற்ற கமர்சியல் படங்களில் வரும் பத்து பேரை அடித்து ஒடுக்கும் ஒரு ஹீரோவின் இன்னோரு அற்புதமே. சினிமாத்தனங்கள் இணையாத கமர்சியல் படமாக இருப்பது இயலாத காரணமாக இருக்கலாம். சொல்ல வந்த விசயம் காரணமாக மக்கள் மனதில் இடம்பிடித்து வசூலில் குவிப்பதில் சாதனைப் படைத்திருக்கிறது 3 இடியட்ஸ்.

 இன்று ஆல் இஸ் வெல் என்பது அனைவரின் வாயிலிருந்து அன்றாடம் வெளிப்படுவது படத்தை சரியாக விளம்பரம் செய்கிறது.
அபீஜீத் மற்றும் ராஜ்குமார் ஹிரானியின் வசனங்களின் கச்சிதம் வெகுவாக பாராட்டப்பட்டிருக்கிறது. லடாக் வரை கண்களை கொள்ளை கொள்ளச்செய்யும் காட்சிகளை விரித்திருக்கிறார் . c.k.முரளீதரன் இசை துள்ளல். ஷூபி தூபி ரபப்பா..

ரசியுங்கள் , சிரியுங்கள் , உருகுங்கள். ஆல் இஸ் வெல். எல்லாம் நன்மை பயக்கட்டும். -கயல் லக்ஷ்மி