November 27, 2013

அணுக்கநடை பயணம்

எண்கள்
பொறுமையுடன் 
தலைகீழாய்
இறங்கிக்கொண்டிருக்க
புறந்தள்ளியபடி 
பரபரத்து 
மேலேறுகின்றன எண்ணங்கள்

--------------------------------------------------------


வண்ணக்குறியீடுகளால் 

வரவேற்பெழுதிய அறையின் வாசலில்
வண்ணங்கூட்டுகையில் உச்சரிக்கப்படாத 
பெயரைத் தாங்கியதற்காய்
காத்திருக்க நேர்கையில்
நேரம் நீள்வதாய் இல்லாமல்
ஒவ்வொரு நொடியிலிருந்தும்
மீண்டும்
துவங்குகிறேன்


----------------

நூல் இற்றுக் கொண்டிருக்கும்
புத்தகத்தின் 
தொலைந்துகொண்டிருக்கும்
துவக்கமும் முடிவும்
சுருக்கிக்கொண்டிருக்கிறது
சிறுநிகழ்வென நெடியவாழ்வை

-------------------------

குறையல்ல

அறிந்தும் அறியாதவராய்
அணுக்கநடை பயணம்
எனையறியா நானும்
உனையறியா நீயும்

October 23, 2013

காற்றினிலே வரும் தண்ணென்ற தென்றல் - உதய்பூர்

ஊரைப்பற்றிய குறிப்புகள் எதையுமே நான் படிக்கவில்லை. முன்பே திட்டமிட்ட விடுதியில் அறையில் சேர்ந்ததும் ஆச்சரியம் இணைய இணைப்பு கிடைத்தது. வந்து சேர்ந்ததை கூகிள் ப்ளஸில் தெரிவித்தேன். வெளிநாட்டவர்களின் வருகையால் இணைய இணைப்பு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. எல்லாம் விடுதிகளிலும் பெயர்பலகையிலேயே இலவச இணைய இணைப்பு எனக்குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஊரெங்கும் வெளிநாட்டவர்கள். யாரையாவது நிறுத்தி இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டுவிடும் ஆர்வம் கடைசி நிமிடம் வரை இருந்தது. தனியாக செல்லும் சிலர் பலகாலமாக இங்கேயே இருக்கும் மண்ணின் மைந்தர்களைப்போல நடமாடுகிறார்கள்.
காலை உணவுக்கு ரோட்டோரக்கடைகளைத் தேடினோம். பொதுவாக வடநாட்டு சுற்றுலாவில் காலை உணவாக கிடைக்கும் ஆலு பராத்தா அன்று கிடைக்கவில்லை. அன்று உணவு ப்ரட் பக்கோரா கொரித்து வைத்துக்கொண்டோம்.


 பிறகு ஆட்டோ ஓட்டுனரே சில ஏரிகள் , பூங்காக்களுக்கு அழைத்துச் சென்றார். வெயில் அடித்தாலும் தண்ணென்று ஒரு தென்றல். மேலே இருப்பது ஃபதெ சாகர் ஏரி. சிறிது படகு சவாரி செய்து ஏரியின் நடுவில் ஒரு சிறு தோட்டம். அங்கே சென்றதும் அமைதியும்  அங்கேயே இருந்துவிடத்தோன்ற வைக்கும் குளுமையும் வரவேற்றது.




 சஹேலியோன்கி பாரி - தோழியரின் தோட்டம் 18 நூற்றாண்டில் ஒரு ராணி கல்யாணமாகி வரும்போதே 40 தோழிமாருடன் வந்தாளென்று தனக்காக செய்த தோட்டத்தை ராணிக்கும் தோழியருக்கும் ராஜா பரிசளித்துவிட்டாராம். ஏரியெல்லாம் ஊரில் அழகா கட்டி இருக்காரே என்று  பார்த்தேன். இந்த தோட்டத்திலோ அத்தனையத்தனை நீரூற்றுக்கள். எப்படி அந்தகாலத்தில் நீரூற்றுகள் வேலைசெய்திருக்கும் என்று நானும் மகளும் யோசித்துக்கொண்டிருந்தோம். ஏரியிலிருந்து தான் நீரூற்றுகளுக்கு தண்ணீர் வந்திருக்கிறது. வாழ்ந்திருக்காங்க. இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்டு இருக்கின்றன நீரூற்றுகள்.





மழையைப்போல தோன்றவேண்டுமென்று  சுழலும் பறவையின் வாயிலிருந்து நீர் தெளிக்கிறது. தோழியரின் நடனத்தின் தாளத்திற்கேற்ப நீரூற்றுகளிலிருந்து இசையும் இருந்ததாம். இந்த இடத்தை எங்கோயோ போன ஜென்மத்தில் பார்த்திருக்கோமோ என்று தோன்றிக்கொண்டே இருந்தது.



பேஸ்புக்கில் படம் பகிர்ந்த பொழுது கல்யாணி சங்கர் நினைவுப்படுத்தினார்கள். காற்றினிலே வரும் கீதம் என்று பாடியபடியே எம். எஸ் இந்த தோட்டத்தின் நீரூற்றுக்களுக்கு மத்தியில் தான் நடந்திருக்கிறார்கள்.


 

காலையுணவு கொரித்த அளவுக்கு நேர் மாறாக மதியம் நட்ராஜ் உணவகத்தில் 160 ரூ அன்லிமிடட் தாலி. பையனுக்கு குலோப்ஜாமூன் கூட கூடுதலாக நாலு கிடைத்தது. நடராஜருக்கு பின் கூட ஒரு நீரூற்று.  ட்ராவல் ட்ரெண்ட் டீவியில் நட்ராஜில் தாப்பூ தாழம்பூ என்றால் சாதம் கொடுப்பார்கள் என்றும் எல் மாதிரி காட்டினால் ரொட்டி என்றும் ரோகன் சொன்னதாக  மாற்றி நினைவு வைத்திருந்தோம் போலும்
 அங்கே போனால் வெயிட்டர் அது ரொட்டிங்க மாற்றி சொல்லுறீங்க என்றார் . நம்ம ஊரைப்போல அங்கே சாதம் போடப்பா இங்கே ரொட்டி கொண்டுவா என்று சத்தமில்லை. எப்போதும் எல்லாரும் கவனமாக இருக்கிறார்கள். சைகையைக் கொண்டே மேலாளர் தெரிவிக்கிறார்.





 .

August 24, 2013

ஆயுதங்களற்ற உன் தேசம்




மீள் ஒலிகள் 
வரைய வரைய 

உருபெற்றுக் கொண்டிருந்தபோது
’உம்’ கொட்டியபடி
பதிவாக்கிய சொற்களில்
விடையறியா - உன்
வியூகம் உடைத்தேன்
ஆயுதங்களற்ற உன் தேசத்தில் 
மேற்கொண்டு என்ன செய்ய?




-----------------------------------
அன்றொரு 
சின்ன சொல்லில் தடங்கலாகி 
இடைவிடாது
நேற்றிலிருந்தும் நாளையிலிருந்தும் 
அம்பாரமாய் சொற்கள் 

உயர வளர்ந்த 
மணற்குன்றெங்கும்
சீரான காற்றின் தழுவலில் 
அலையலையாய் 
அழகிய பதிவுகள்


இன்றது 
அமைதியில் இசைக்கவும் 
தொடங்கியது

August 15, 2013

உயரத்தின் ஈர்ப்பு

நீண்ட
மிக நீண்ட
படிவரிசைகளை
ஒன்று ஒன்றாகக்
கடந்து கொண்டிருக்க
விசையோடு ஈர்க்கிறது
முதல்படி
முற்றிலும் விளங்காதது
உயரத்தின் ஈர்ப்பு
-----------------------------------------------------------------------------------------------


இடையறாது 
நகர்கின்ற உலகத்தின்
அசைவற்ற புள்ளியிலும்
அமைதியின்  ஆழத்தில்
நின்றுவிட்ட‌ உலகின்
துவக்க விசையிலும்
ஒரே நேரத்தில்
தன்னைப்
பிணைத்துக்கொண்டிருக்கிறது
ஒவ்வொரு நொடியும்

June 22, 2013

ரிஷிகேஷ் ராஃப்டிங்

River Water Grade
Grade 1: Easy, small waves. No obstacles, 
Grade 2: Moderate difficulty with clear passages, 
Grade 3: Difficult, high irregular waves, narrow passages- require precise maneuvering, 
Grade 4: Difficult, powerful waves. Very precise maneuvering required, 
Grade 5: Extremely difficult, violent, highly congested. 

Water Grade 2/3 in BrahmpuriShivpuri Water Grade 2/3 Plus, Marine Drive 3/4 Plus and Kaudiyala 4 Plus.

நாங்கள் சென்ற ப்ரம்மபுரியிலிருந்து வரும் பகுதியில் 2மற்றும் 3 க்ரேட் களில் அலை இருக்கும் .அந்தப் பகுதி மட்டும் தான் நாங்கள் சென்றபோது ராஃப்டிங் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும். மற்ற பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சொல்லியிருந்தார்கள்.
View My Saved Places in a larger map

கைஸ் முன்னேறுங்கள் என்றதும் எல்லாரும் ஒரே நேரத்தில் துடுப்பிடுகிறோமா என்று பார்த்து தாமதித்து செய்பவர்கள்,  ஒப்புக்குச் செய்கிறவர்களுக்கு பின்னாலிருந்து சளேர் சளேர் என்று தண்ணீரை அடித்து கமாண்டரின் மிரட்டல் வரும். வளைவுகளில் எங்கெங்கே தண்ணீர் வேகம் எந்த பக்கம் நோக்கி இருக்கிறதோ அதற்கேற்ப முன்னேறுகள் என்றோ பின்னோக்கி என்றோ அவர் சொல்ல , நாங்கள் துடுப்பிட,கங்கையின் வேகத்தோடு செல்கின்ற படகுக்கு சரியான பாதையில் செல்ல சிறு உதவியைத்தான் நாங்கள் செய்துகொண்டிருந்தோம். 


இருந்தாலும் நாம் துடுப்பிடுவதாலா இந்த படகு செல்கிறது என்பதில் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. எங்களிடமிருந்து மொபைல் , கேமிரா மற்று பர்ஸ் போன்ற பொருட்களை ட்ரை பேக் என்ற ஒன்றில் பத்திரப்படுத்தி இருந்ததால் நாங்கள் நிறைய படமெடுக்க இயலவில்லை.

சரி இப்போ ரேப்பிட் இல்ல நீங்கள் யாரல்லாம் தண்ணியில் குதிக்க விரும்புறீங்களோ குதித்துவிட்டு இந்த கயிற்றை பிடித்துக்கொள்ளுங்கள் என்று படகின் முனையில் இருந்த ப்ளூ ரோப்பை குறிப்பிட்டார். முதலில் குதித்த பையன் கயிற்றை பிடிக்கற தூரத்தில் இல்லாமல் குதித்ததும் நீரோடு செல்ல ஆரம்பித்தான். கல்யாண்சிங்கை நாங்களெல்லாம் பதட்டத்தோடு பார்த்தோம். அந்தப்பையன் முன்பே சொன்னது போல பயமாக இருந்தால் செய்யவேண்டிய சைகைகளை செய்யவில்லை மற்றும் எப்படியும் காப்பாத்திடுவார் என்கிற தைரியத்தோடு நீரோடு படகையே பார்த்தபடி சென்று கொண்டு இருந்தான். கவசத்தின் துணையால் அவன் மிதந்து கொண்டிருந்தான். கல்யாண் சிங் எங்களுக்கு படகு அவனுக்கருகில் செல்ல வேண்டிய அளவுக்கான துடுப்பு போடும் கட்டளைகளைக் கொடுத்துக்கொண்டே நீரில் குதித்து கயிறை அவன் கையில் கொடுத்துப் பிடித்துக்கொள்ளச் சொன்னார்.

பின் மற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராக நீரில் குதித்து பக்கவாட்டில் இருந்த கயிற்றை பிடித்தபடி படகோடு பயணித்தனர். படகு கங்கையின் ஓட்டத்தில் தன்னைப்போல சென்று கொண்டிருந்தது. நான் மட்டும் படகில் இருந்தபடி படமெடுத்துக்கொண்டிருந்தேன். ரேப்பிட் வரப்போகிறது உடனே அனைவரும் படகில் ஏறுங்கள்   படகில் ஏறுங்கள் என்றபடி ஒவ்வொருவரையாக உள்ளே இழுத்துப்போட்டு விட்டு மீண்டும் கட்டளைகள். பாறைகளுக்கு நடுவில் வளைந்து செல்லும்போது மகனுக்கு டைட்டானிக் நினைவுக்கு வந்துவிட்டது. நீரின் போக்கிற்காக சிறிது தூரம் பாறையை நோக்கி சென்று பின் தான் திசை திருப்ப வேண்டி இருக்கிறது. நீங்கள் அப்பாறையில் மோதப்போகிறீர்களா என்று அவன் பின்னால் திரும்பி சிரித்தான்.

அவன் படகின் முனையில் கயிற்றைப்பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான். நீங்கள் எல்லாம் என் அடிமைகள் . எனக்காக படகு செலுத்துப்பவர்கள் என்று என்னிடம் அவன்  ரகசியமாகச் சொன்னதை நான் கல்யாண்சிங்கிடம் சொல்லிவிட்டேன். அடேய் அப்படியா சொன்னே என்று அவன் மேல் தண்ணீரைத்தெளித்ததும் அவன் நான் சொல்லவே இல்லை என்று பல்டி அடித்துவிட்டான். பயத்தில் தான்..:)

வண்டி  பத்து நிமிசம் நிற்கும் . எதாவது வாங்கிக்குடிக்கறவங்க குடிங்க.. நூடுல்ஸ் செய்து தருவாங்க  சாப்பிடுங்க. என்றபடி ட்ரைவரும் கண்டக்டரும் இறங்கிப்போனாங்க.. பஸ் ஸா படகா..? தொடர்ந்து துடுப்பு போட்டதில் எல்லாரும் சோர்வடைந்ததுதான் ஆனால் சாப்பிடவும்  பயம். சரி ஒரு லெமன் ஜூஸ் குடிக்கலாம் என்று கேட்டால் 12 ரூ பாட்டில் 40 ரூ . சரி வாங்கறோம் என்றதும் நீருக்குள் இருந்து ஒரு கயிற்றைப் பிடித்து இழுத்து அதன் முனையில் இருந்த மூட்டையிலிருந்து பாட்டில்களை எடுக்கிறார்கள். இயற்கையான குளிர்ப்பெட்டி. அதான் கங்கை ஐஸ்கட்டியாக குளிர்கிறதே.

என்ன மேடம் நீங்கள் மட்டும் குதிக்கலையே என்று கல்யாண் கேட்டதும் நான் படமெடுத்துவிட்டு குதிக்கலாம் என்று நினைத்தேன் என்றேன். சரி கேமிரா உமன் என்று எல்லாரும் கேலிசெய்தார்கள். அடுத்த இடத்தில் நீங்கள் தான் முதலில் ..என்றார்.  முதலில் எங்கள் கேமிராவில் எங்கள் குடும்பத்தை எடுத்தேன் மாணவர்களுக்காக அவர்கள் கேமிராவில் அவர்களையும் படமெடுத்துக்கொடுத்துவிட்டுப் பார்க்கும்போது ரேப்பிட் வந்துவிட்டது என்று எல்லாரையும் திரும்ப ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அதற்கு உதவச்சென்று விட்டேன்.

அடுத்த அமைதியான இடம் வந்ததும் நானும் நீரில் குதித்து பக்கக்கயிற்றை பிடித்தபடி பயணித்தேன்.  8 பயணிகளும் ஒரே சமயத்தில் நீரில் இருந்தோம். பிறகு மீண்டும் ராஃப்டிங் பயணம் . இந்தமுறை அதிக அலைகள் நிறைந்த இடம் வந்த போது (குறைந்த பட்சம் கோணம் 50 - 60 இருக்கலாம் என்று நினைக்கிறேன்) படகை அலைகள் உயரத்தூக்கித் தூக்கிப்போட்டது. நாங்கள் தொடர்ந்து கல்யாண்சிங்கின் கட்டளைகளுக்கு ஏற்ப துடுப்பை செலுத்திக்கொண்டிருந்தோம்.

என் கவனம் கட்டளைகளுக்கு மத்தியில்  நீரின் வேகத்தையும் படகின் ஆட்டத்தையும் கவனித்துக்கொண்டே  முன் வரிசையி கயிற்றைப்பிடித்திருக்கிறக் குட்டிப்பையன்  இதை எப்படி அனுபவிக்கிறான் என்று பார்க்கமுடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தது. கார்டூன் மற்றும் சினிமா பார்க்கும் போது அவற்றைவிட குழந்தைகளின் முகபாவங்களைக் கவனிப்பது எனக்கு மிகவும் பிடித்த விசயம். மகளின் முகம் தெரிகின்ற தூரத்தில் இருந்ததால் அவள் ரசித்துப் பயணிப்பதை நான் அறிந்துகொண்டேன்.

ராம்ஜூலாவைத்தாண்டி ரிஷிகேஷ் டேக்ஸி ஸ்டாண்ட் அருகில் இருந்த படிக்கட்டுகளிடம் எங்கள் பயணம் நிறைவுற்றது.  கல்யாண்சிங் எல்லாரும் மீண்டும் ஒருமுறை கண்டிப்பாக வருவீர்கள் எனக்குத்தெரியும். நம்பர் எழுதிக்கொள்ளுங்கள் என்று தன் எண்ணை எல்லாருக்கும் கொடுத்தார். எதிர்பாராமல் அமைந்த திரில்லிங் பயணம்.

இப்போது பதிவு எழுத ராஃப்டிங் க்ரேட் காப்பி பேஸ்ட் செய்வதற்காக கூகிள் செய்தபோது. அடுத்த இரண்டு நாட்களில் இதே போல பயணித்த ஒரு படகு கவிழ்ந்து விட்ட செய்தி. குர்க்காவுனைச் சேர்ந்த 30 வயது பெண்மணி இறந்துபோய்விட்டாராம். அடுத்தபடகின் கைடும் வந்து ஒவ்வொருவராய் காப்பாற்றியும் இந்தப்பெண்மணி அதிக நீரைக்குடித்திருக்கிறார்.

இன்று செய்திகளில் காணும் , தான்  பயணித்த அதே கங்கையின் சீற்றத்தைக் கண்டு குட்டிப்பையனுக்கு  தூங்கச்செல்லும் முன் கலக்கம் என்றாலும் அன்று அவன் காட்டிய தைரியம் எனக்கு என்றும் மறக்காது.  நீச்சல்  கற்றுக்கொள்ள பயந்த அவனை மிகவும் கட்டாயப்படுத்தி சேர்த்திருந்தேன். இன்று எங்களனைவரையும் விட அதிகமாக கற்றுக்கொண்டவனும் அவனே. நீச்சல் தெரிந்ததால் இது போன்ற நீர் விளையாட்டுகளில் பயமின்றி இருப்பார்கள் என்பது உண்மையாகிவிட்டது.

முந்தையபதிவு - 







June 21, 2013

வெள்ளத்திற்கு முன்பு வள்ளம் தள்ளுதல்

சென்ற பதிவு
பழைய பரமசிவம் - புதிய பரமசிவன்  எழுதிய தினத்தில் புதிய பரமசிவனையும் கங்கை அன்போடு தன்னுடன்  தனக்கே தனக்கென்று அழைத்துச் சென்றுவிட்டாள். விடாது பரமார்த் ஆசிரமத்தலைவர் மீண்டும் சிவன் செய்து வைப்போம் என்று பேட்டியளித்திருக்கிறார்.

நாங்கள் சென்றபோது ( 6 ம் தேதி) வெள்ளம் 17 ம் தேதி
அல்மோரா பயணத்திலும் பின்சர் பயணத்திலும் தொடர்ந்து புதிய புதிய கட்டிடங்கள் மலையின் பக்கவாட்டில் தூணெழுப்பி கட்டும் முறை திகிலையே கொடுத்தது.  இயற்கையை முழுவதுமாக குறைத்து மதிப்பிட்டுவிட்டு வருத்தப்படுவது வழக்கமாகிவிட்டது.

கங்கையில் தினம் காலையில் குளிக்கவரும் அக்கம்பக்கத்தவர்கள் நீரையும் சூரியனையும் வணங்கிவிட்டு வீடு செல்லும் போது ஒரு தூக்குச்சட்டியில் நீருடன் செல்கிறார்கள். வீட்டில் சென்று அந்நீரை தெளிப்பது வழக்கம் என்றும் சொல்கிறார்கள். குளிக்க இறங்கும் முன் நீரை வணங்கிக்குளிக்க செல்வதை சிறு குழந்தைகள் கூட செய்கின்றனர். 

நாங்கள் ராஃப்டிங் செல்ல பணம் கட்டிவிட்டு காத்திருந்தோம். படகோடு ஒரு ஜீப் வந்து அழைத்துச்சென்றது. அதில் படகோட்டியும் கைடு ஒருவரும் நம்முடன் வருவார்கள். சில கிமீ தொலைவில் உள்ள ப்ரம்மபுரி என்ற இடத்திற்கு செல்வதற்குள் அந்த வாகனஓட்டி என்னைத் திகிலடையவைத்தார். ஒரு கோட்டினை சிறிதாக்க அருகில் பெரியக்கோட்டினை வரைவது போல  கங்கையில் படகோட்டப் (படகை ஓட்டறது எப்படின்னு முன்னப்பின்ன தெரியாது வேற)போகிற பயத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார் ஜீப்பை ஓட்டியவர். அப்பாடா வரும் வழியில் படகில் தானே வரப்போகிறோம் என்கிற அளவுக்கு. 
போகும் வழியெல்லாம் பக்கவாட்டில் பள்ளத்தாக்கில் கங்கையின் வேகமும் அதில் படகோட்டுபவர்களும் கண்களுக்கு தென்பட்டுக்கொண்டே இருந்தார்கள். த்ரில்லிங்காக இருந்தது. ப்ரம்மபுரி வந்ததும் எல்லாருக்கும் அவரவர்க்கு ஒரு துடுப்பும் காற்றடைத்த உயிர்காப்பு கவசமும் கிடைத்தது..


வழிகாட்டியின் பெயர் கல்யாண்சிங். இருக்கக்கட்டிக்கொள்ளவில்லை என்றால்  உயிர்காக்கும் கவசங்கள்  தனியாக மிதக்கும் நீங்கள் தண்ணீரில் நழுவிப்போய்விடுவீர்கள் பரவாயில்லையா என்றபடி சிரித்துக்கொண்டே குழந்தைகளுக்கும் இறுக்கி அணிவித்தார்.











   















பாதையில் இறங்கிப்போகும் போது கவனமாக செல்லுங்கள். போகும் வரும் மக்களுக்கு வழிவிட்டபடி என்று சொல்லும்போது புரியவில்லை எதற்கு இந்தக்கட்டளை என்று. . பாதிவழிக்கு மேல் இறங்கும் போது எங்கள் எதிரில் ஏறிவந்துகொண்டிருந்த குழந்தைகளை அவர்களின் பெற்றோர் கீழிருந்து திட்டிக்கொண்டிருந்தார்கள். பின்னால் திரும்பியபோது  படகை தூக்கிக்கொண்டு இறங்குபவர்கள் . அவரவர் இடத்தில் குனிந்தபடி இருங்கள் நாங்கள் கடந்துவிடுவோம் என்று சொல்லியபடி படகைத்தலையில் கவிழ்த்துக்கொண்டு அவர்கள் கீழிறங்கினார்கள்.


படகில் ஏறுவதற்கு முன்பு ஒரு ராணுவத்தளபதியைப்போல கைஸ்( guys) என்ன கட்டளை வருகிறதோ அதை காது கொடுத்துக் கேட்க வேண்டும் சொல்லும்போதே அருகில் இருக்கும் மற்றொரு குழுவை வேடிக்கைப்பார்த்த எங்கள் குழுப்பையன் ஒருவன் மீது துடுப்பினால் நீர் அள்ளி வீசி மிரட்டினார். யாருக்கெல்லாம் நீச்சல் தெரியும்? என்ற கேள்விக்கு நாங்கள் பெருமையாக தெரியும் என்றொம். ஆனால் நீச்சல் குள நீச்சல் என்று பம்மிக்கொண்டே சொன்னதும். பெரிய சிரிப்போடு அது என்னத்துக்கு உதவும் சரி நீரிடம் பயமில்லை. நல்லது. என்றார்.






நீச்சல் தெரிந்தவர்கள் என்று சொன்னால் காப்பாத்தப்படும்போது முன்னுரிமை குறையுமா என்ற போது கல்யாண் திட்டவட்டமாக எனக்கு எல்லாரும் சமம் தான் என்று கம்பீரமாகச் சொன்னார். முன்னேறு என்று சொல்லும்போது துடுப்பை பின்னோக்கி செலுத்தவேண்டும். பின்னோக்கி என்று சொல்லும்போது துடுப்பு எதிர்ப்புறமாக.. நிறுத்துங்கள் என்று சொன்னால் துடுப்பு உங்கள் துடைகள் மேல் இருக்கவேண்டும். துடுப்புகளை இறுகப்பற்றுவதற்கான முறைகள்  மற்றும் கட்டளைகள் .


பிறகு நீரில் விழுந்தால் அவர்களை எப்படி படகில் இருப்பவர்கள் காப்பாற்ற முயலவேண்டும் என்று ஒரு பயிற்சி . நாங்கள் - நான்குபேர் . மற்றும் நான்கு கல்லூரிமாணவர்கள். கங்கா மாதா க்கு ஜெய் என்றபடி நீரில் இறங்கியது படகு. எனக்கு ஒரே பயம் துடுப்பை இரண்டு கைகளால் பிடித்திருக்கிறோம். படகின் பக்கச்சுவரோ காற்றடைத்த பலூனாக வழுக்கென்றிருக்கிறது அதில் உட்பக்கமாகவும் உட்காராமல் நன்றாக வெளிப்பக்கமாக உட்காரவேண்டும் . அடிப்பாகத்திற்கும் பக்கச்சுவருக்கும் இடைப்பட்ட வெளியில் காலை வாகற்ற ஒரு முறையில் நுழைத்துக்கொண்டால் கிடைக்கின்ற பிடிமானம் மட்டும் தான் துணை.














June 17, 2013

பழைய பரமசிவம் - புதிய பரமசிவன் ( ரிஷிகேஷ் -1 )

ஹரித்வார் ரிஷிகேஷ் என்று போனமுறை தொடர்பதிவில் ஏனோ ( வழக்கமே அதானே ..என்ன ஏனோ) ரிஷிகேஷில் பாதியில் நிறுத்திவிட்டேன். ஆனால் அதற்கு காரணம் இருந்திருக்கிறது. மீண்டும் அதிக தூரம் காரில் பயணிக்க ஒரு ஊர் தேர்ந்தெடுக்கலாம் என்று யோசித்தப்போது ரிஷிகேஷ் போகலாம். போனமுறையே குளிரில் நடுங்கிக்கொண்டு கங்கையை தலையில் தெளித்துவிட்டு வந்தோமே..வெயில் நேரத்தில் முங்கி எழுந்துவிடவேண்டும் என்று திட்டம். குளிர் காலத்தில் கோவிலூர் மடம் அருகில் இருந்த கங்கைக்கரையில் சிறிது தூரம் ( அதாவது பாதி கங்கையை காங்கிரீட் பாதையில் கடந்து) நடந்தால் தான்  கொஞ்சம் கங்கை ஓடிக்கொண்டிருந்தது . 
வெயில் நேரத்தில் கங்கை இரண்டு கரையையும் தொட்டபடி ஓடிக்கொண்டிருந்தது.  காலையில் கிளம்பி தாபாக்களில் உணவு உண்டு ஹரித்வார் நெருங்க நெருங்க வாகனநெரிசலில் 3 மணிக்கு சென்று சேர்ந்தோம். மாலையில்  அடித்த வெயிலுக்கு தைரியமாக கங்கைக்குள் இறங்கினால் அது  பனிக்கட்டியாக குளிர்ந்திருந்தது. 
கால்களாவது சிறிது நேரத்தில் பழகிக்கொண்டது. கைகளில் தண்ணீரை அளைந்தால் வலி. ரத்தம் கட்டியது போன்ற தோற்றம்.  
அறைக்குத் திரும்பிய போது நல்ல மழை. கங்கை எங்களைக் குளிர்வித்திருக்க.. மழை ஊரைக் குளிர்வித்தது. அறை ஜன்னலில் மழைக்கு ஒதுங்கிய குரங்கார். 
(பழைய பரமசிவம்)

சிறுது நேரத்தில் ஷேர் ஆட்டோவில் ராம் ஜூலா போய் இறங்கி அங்கிருந்து  கங்கையைக் கடந்து பரமார்த் ஆசிரம கங்கை ஆரத்தி. முன்பு பார்த்த சிவனை  கங்கை அன்பு வெள்ளமாக வந்து அழைத்து சென்று விட்டாள்.
  
.


 புதிய பரமசிவன் 
போனமுறை மிகச்சிறியவன் மகன். இந்தமுறை கொஞ்சம் பெரியவன். அதனால் ராம்ஜூலாவில் கங்கையைக் கடந்தது அவனுக்கு பயமும் ஆச்சரியமும் கலந்த உணர்வாக இருந்தது. திரும்பும் வழியில் Rafting  செல்வது பற்றிய பேச்சு எழுந்தது. ஆமா என் தோழிகள் கூட ரிஷிகேஷுக்கு போறியா? ராஃப்டிங் செய்யவா?  என்று கேட்டதாகப் பேச்சோடு வந்தது. மறுநாள் எழுந்து விசாரிக்கலாம் என்று முடிவு எடுத்துக்கொண்டோம். 

முதலில் மகனுடைய வயது போதாதென்றால் அப்பாவும் மகளும் செல்லலாம் என்று பேசிக்கொண்டிருந்தபோது மகன் நானில்லாமல் யாருமே போகக்கூடாது என்றான். ஆனால் அடுத்தநாள் அவன் வயதுக்கும் வரலாம் என்றதும் நெஞ்சு தடதட அவருக்கு. பணம் கொடுக்கும் முன் நாங்கள் மதிய உணவுக்கு செல்லவேண்டி இருந்ததால். மனதைத் தயார்படுத்த நேரம் கொடுங்கள் என்று நெஞ்சைத்தடவிக்கொண்டிருந்தார். ( தொடரும்)

 






April 18, 2013

காட்மண்டு – A mirror in the sky


Kathmandu a mirror in the sky
இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் அதிகவித்தியாசமில்லையென்பதால் இக்கதையை இந்தியத்தன்மையோடு நாம் உணர்ந்துகொள்ளலாம். திரைப்படத்தை இசியார் பொலைன் என்னும் ஸ்பானிய பெண் இயக்குனர் இயக்கி இருக்கிறார். தன்னார்வ ஆசிரியப்பணி செய்ய காட்மண்டுவிற்கு வந்தவர், கல்வியாளர் விக்டோரியா சுபரைனா. .ஆசிரியப்பயிற்சி மற்றும் கல்விமுறைகளைப்பற்றி ஆய்வுகள், உடல்மொழி பற்றிய பாடங்கள் எனப்பலவற்றை பயின்ற Victoria Subirana தன் வாழ்வின் 25 ஆண்டுகளை நேபாளத்தில் எளியமக்களுக்காக செலவிட்டிருக்கிறார். Vicki Sherpa, a teacher in Kathmandu” என்கிற அவருடைய சுயசரிதையை அடிப்படையாக்கொண்டு அமைக்கப்பட்ட கதை.ஸ்பானிய மற்றும் ஆங்கில மொழிகளில் 2011 ல் வெளிவந்த திரைப்படம்.

நேபாளத்தில் பள்ளிக்கல்வியின் மோசமான நிலை மற்றும் தண்டனை அளிக்கும் விதங்களைத் தவிர்த்து மாண்டிசோரி முறை போன்ற குழந்தை மையக் கல்வித் திட்டங்களைக் கொண்டுவரவிரும்பும் ஆசிரியை லயா. கல்வி மறுக்கப்பட்ட ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட பகுதி மக்களுக்காக பள்ளி தொடங்கும் முயற்சியில் ஆசிரியைக்கு நேரும் பல இடர்பாடுகளின் நடுவில் நமது நாடுகளின் ஏற்றத்தாழ்வுகளையும், ஊழல்களையும் ,பெண்ணடிமைத்தனத்தையும் கூடவே  அவருக்கு எதிர்பாரதவிதத்தில் அமையும் அன்பான வாழ்க்கையையும் அவ்வாழ்க்கைக்கும் குறிக்கோளுக்கும் இடையிலான போராட்டத்தையும் சொல்லும் கதை. ஒருபக்கம் நேபாளத்தின் நகரவாழ்க்கையின் வேறுபாடுகளும் மறுபக்கத்தில் அமைதியும் அழகும் அன்பும் மிகு மலைக்கிராமமும் பள்ளத்தாக்குகளும் கதைப்பயணத்தில் உண்டு.
“I wanted to tell the learning process of a woman, her journey by another culture, how it comes to arrogance, bump into this new society, but eventually learns to understand and respect rather than prejudge “says Bollaín .
லையாவாக வெரோனிகா செகுயி , (ஷர்மிளா) சௌம்யதா பட்டாரை, (நொப்ரு ஷிரிங்) ஷிரிங்
மற்றும் முனா தமி சங்கீதா தமங்க்
தனக்கென சில மாணவர்களையும் ஒரு உதவியாளராக ஷர்மிளாவையும் பெற்றுக்கொண்டு தான் வேலை செய்த பள்ளியிலேயே ஒருவகுப்பை தன் வழிமுறையில் நடத்த துவங்குகிறார் லயா.. வழக்கமாக குடிசைப்பகுதிகளில் களமிறங்கி வேலைசெய்வதென்றால் குளிப்பாட்டுதலில் இருந்து துவங்குவது போலவே, ஒரு சிறுவனின் தலையில் பேன் நிறைந்திருப்பதாகக் கூறி முடிதிருத்துபவரை அழைக்கிறார். அதை கவனிக்கும் ஷர்மிளா கோவத்தில் உன் நாட்டில் இருப்பவரிடமும் இதே போல நடப்பாயா? என்று கேட்கும்போது லயா தானும் கற்றுக்கொள்ளும் பாதையில் தான் இருக்கிறோம் என்று உணரத்தொடங்குகிறாள். சில கிழமைகளில் பிறந்தகுழந்தைகளுக்கு முடிநேர்ச்சைகள் இருந்ததால் அவர்களின் மதநம்பிக்கையை மதிக்காததாகக் கூறி சில பெற்றோர் பள்ளியில் வந்து பிரச்சனைசெய்கிறார்கள். லயாவின் சார்பாக பெற்றோர்களிடம் ஷர்மிளாவே அவர்களின் நம்பிக்கைக்காக பரிகாரம் செய்கிறோம் என்று பேசி சமாதானம் செய்துவைக்கிறாள்.
பரிகாரம் செய்கிற நாளில் ஷர்மிளா தான் திருமணமான நாளிலிருந்து நான்குவருடங்களாக சிவனுக்கு அபிஷேகம் செய்து குழந்தைவரம் வேண்டுதலைக் கூறுகிறாள். கோயில் வாயிலில் காத்திருக்கநேர்கையில் அங்கே பிச்சை எடுக்கும் சிறுவர்களைக் கண்டு லயா வேதனைப்படுகிறாள். அவர்களின் குடியிருப்புக்கு நேரில் சென்று வந்த பின் அவர்கள் ஏன் பள்ளிக்கு செல்லவில்லை ? அவர்களின் நிலை பல நூறுவருடங்களாக இப்படித்தான் என்பதை எப்படி ஒரு ஆசிரியையாக இருந்துகொண்டு நீ சொல்லமுடிகிறது? கல்வி கற்றுக்கொடுப்பது பற்றிய உனது கருத்து என்ன? கல்வியளிப்பது என்பது ஒருவர் சுதந்திரமாக அவர்கள் என்னவாகவேண்டுமென்று முடிவெடுக்க வாய்ப்பளிக்கும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் இப்படியே இருக்கவேண்டும் என்று மதம் அல்லது ஜாதி எதுவாயினும் எப்படி கட்டாயப்படுத்தமுடியும் ? என ஷர்மிளாவிடம் கேட்கிறாள்.
ஷர்மிளாவுக்கு தன் மதத்தின் சில பழக்கவழக்கங்கள் மாறுபாடாக இருந்தாலும் தன் குடும்பத்தின் பார்வையிலிருந்து தன் வளர்ப்பின் வழியிலிருந்து முழுவதுமாக அதை வெறுக்கமுடியாத நிலையில் இருப்பதைத்தான் அவளுடைய வெற்றுவாதங்கள் தெரிவிக்கின்றது.
தொடர்ந்து நேபாளத்தில் வசிக்கவும் வேலை செய்யவும் இயலாமல் விசா முடியும் நிலையேற்படும்போது தன் குறிக்கோளுக்காக மட்டுமே ஒரு திருமணத்தையும் செய்துகொள்கிறாள். யாரென்று அறியாமலே திருமணம் மற்றும் வசதிக்கென்று அமைத்துக்கொள்ளும் திருமணத்தில் அவளுக்கு விருப்பமில்லை. துறவி ஒருவரின் வழிகாட்டுதலில் ஒரு நல்ல மனிதன் ஷிரிங் திருமணத்திற்கு ஒப்புதல் தெரிவிக்கிறான். எதற்காக என்னைத்திருமணம் செய்கிறாய் ? என அவள் கேட்கும் பொழுது நீ செய்கின்ற வேலை நிறைவு பெற என் உதவி உனக்கு தேவைப்படுகிறது. அந்தக்குழந்தைகளைப்போலத்தான் நான். நீ அவர்களுக்கு செய்கிற சேவையைத் தொடர என்னாலான உதவி என்று சொல்கிற அன்பானவன். தோழமையுடன் துவங்குகிறது அவர்கள் வாழ்வு. அந்தத்தோழமை ஒரு காதலாகவும் மலர்கிறது.
அந்த வாழ்க்கைத்தோழனுடைய சொந்த கிராமத்துக்கு நீண்ட தூர நடைப் பயணம் மேற்கொள்ளும் போது ஷிரிங் ”என்னுடைய தாத்தா அடிக்கடி என் வாழ்வு அந்த வானத்தில் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.. (மை மிரர் இன் த ஸ்கை) வாழ்வில் உன் இடம் எது? ”எனக்கேட்கிறான் அவளால் சரியாக பதில் சொல்லமுடியவில்லை. பணத்திற்காக கஷ்டப்படும்போதும் இந்த வேலைகளை நீ உன் மதத்துக்கிற்காகவா அல்லது அரசியல் காரணத்திற்காகவா ஏன் செய்கிறாய் என்றக் கேள்விக்கும் அவளால் சரியாகச் சொல்லமுடியவில்லை..
பள்ளியில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு புதிய பள்ளி தொடங்குகிறாள். பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப மறுக்கும் தாய்மார்களிடம் குழந்தைகளுக்கு இலவச உணவு அளிப்பதாக ஷர்மிளா வாக்குறுதி கொடுத்து அழைத்துவருகிறாள். அந்தப்பள்ளிக்கு வருகின்ற ஒரு சிறுமி தன் பெயரைத்தொலைத்துவிட்டு தன் தம்பியைச்சுமப்பவள் என்றே தன் பெயரைக்கூறுகிறாள். கண்ணாடி முன் அமர்ந்து தொலைந்த தன்னைத்தேடும் அந்தச்சிறுமிக்கு மீண்டும் விமலா என்கிற அவளைக் கண்டடைய உதவுகிறாள்.
தொடர்ந்து குழந்தைகள் பள்ளிக்கு வருவதில் இருக்கின்ற பின்னடைவுகளுக்கு குடும்பத்தின் பொருளாதார பிரச்சனைகளேக் காரணம் என்று அறிகின்ற லயா குழந்தைகளின் தாய்மார்களுக்கு வேலை வாய்ப்புக்கு வழி செய்ய நினைக்கிறாள். கணவனோ உன்னால் எல்லாவற்றையும் எப்படி செய்யமுடியும் என்று மலைக்கிறான். அவன் ஒரு நல்ல மனிதனாக இருந்தாலும் அவனுக்கு அவளுடைய குறிக்கோளின் தீவிரம் புரிபடவில்லை. மேலும் தன் தந்தையின் உடல்நிலை மோசமடைவதால் தன் கிராமம் நோக்கி பயணிக்கிறான்.
ஷர்மிளாவின் நிலையோ குழந்தை இல்லாததோடு இதுபோன்ற தாழ்த்தப்பட்ட குழந்தைகளுடன் இருப்பதால் அவர்களின் குடும்பத்துக்கு கெடுதியை துர்சகுனத்தை மேலும் கூட்டுவதாக இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறாள். ஷர்மிளா ஜோசியம் பார்ப்பவரிடம் இருவருடைய எதிர்காலத்தை கணிக்க முயல்கிறாள். ஷர்மிளாவுக்கு ஆண்குழந்தையும் லயாவிற்கு தன் முயற்சியில் வெற்றியும் உறுதி என்ற அவரின் நம்பிக்கை வார்த்தை கிடைக்கிறது.
பணம் ஏற்பாடு செய்ய தன் நாட்டிற்கு திரும்பச்செல்லும் போது லயா தன் துணையை அழைக்கிறாள். அவனோ தந்தையின் உடல்நிலை மற்றும் தன் ஊர் இதுதான், தன் வாழ்வு இங்குதான் என்று குறிப்பிட்டு தன் மனநிலைக்கு அவளையும் கொண்டுவர முயல்கிறான். உனக்கு குடும்பம் முக்கியமில்லையா.. உனக்கு இந்தப்பள்ளி மட்டும் தான் வேண்டுமா.. நம் வாழ்க்கை என்ன ஆவது ?நீ திரும்ப ஊர் செல்வதையும் நான் விரும்பவில்லை எனச்சொல்லும் ஷிரிங்கின் முன் , பள்ளியும் நம் வாழ்க்கை இல்லையா? என்று அவர்களின் வாழ்வின் பேதம் அவளைக் குழப்புகிறது.
தன் ஊர் சென்று அங்கிருந்து ஷிரிங் க்கு கடிதங்கள் எழுதும் போது அவள் அவனுடைய கேள்விக்கான பதிலை எழுதுகிறாள் இவ்வாறு..” என் வாழ்வு காட்மண்டுவில் அந்தக் குழந்தைகள், ஷர்மிளா மற்றும் உன்னுடன் இருக்கிறது. ” ஒரு தன்னார்வத்தொண்டு நிறுவனத்திற்கான முழு ஏற்பாட்டுடன் அவள் திரும்ப வந்து பள்ளியின் ஒவ்வொரு நிகழ்விலும் தன் வாழ்வின் மகிழ்ச்சியை உணர்கிறாள்.
பிரியமாணவியான குசிலா குழந்தைக்கடத்தல் முறையில் இந்தியாவிற்கு சென்று பாதிக்கப்பட்டு திரும்பிவந்ததும் அவளை அவள் குடும்பத்தினர் ஏற்காதபோது அவளைத் தன் பள்ளியில் தன்னுடனே அழைத்து வந்து அவளுடைய முழுகவனத்தையும் கொடுக்கிறாள். ஷிரிங் தனிமையை உணர்கிறான் .அவளை விட்டுப்பிரிந்து தன் மலைக்கிராமத்திற்கே செல்ல முடிவெடுக்கிறான்.
ஷர்மிளா தன் குடும்பத்தினரின் பேச்சுக்களை எல்லாம் மீறி வேறு திருமணம் செய்யாமல் தனக்கு பலவிதத்தில் துணையாக நின்ற கணவனுக்கு பெண்குழந்தையைக் கொடுப்பது சரியில்லை என்றும் அதனால் அவள் வாழ்வு இன்னும் போராட்டத்துக்குள்ளாகும் என்றும் நினைத்து அதனை அழிக்க நினைத்து தன் வாழ்வையே அழித்துக்கொள்கிறாள்.
கதையின் தொடக்கத்தில் பெண்களை மதத்தின் பெயரில் தூய்மையாக்க என்று இருட்டறையில் வைத்திருப்பதைக் குறிப்பிடுகிறாள் ஷர்மிளா. ஷர்மிளாவின் மூலம் லயாவிற்கு ஒரு பாடம் சொல்கிறது வாழ்வு. ஷர்மிளாவை பிடித்து வைத்திருக்கின்றவை அவளால் உடைக்கமுடியாத அறியாமைச் சங்கிலிகள் . அவள் தன் முடிவை அறிந்தவளாக எழுதிய கடிதத்தில். அறியாமையிலிருந்தும் வறுமையிலிருந்தும் வெளியே வர உதவும் சாவியை அளிப்பதே கல்வி. வெளியேற உதவுவது போலவே உள்ளே செல்லவும் ..நான் இருட்டறையில் நுழைந்துவிட்டேனோ அல்லது ஒரு போதும் வெளியேறாமலே வாழ்க்கையைத்தொலைத்தவளோ.. ஆனால் நீ வெளியில் இருக்கிறாய். இன்னும் பலரை இருட்டறையிலிருந்து வெளியேற்ற நீ உன் வாழ்வை சரியான பாதையில் தொடரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறாள்.





நன்றி பண்புடன் இணைய இதழ்

January 25, 2013

சிஷுக்கா யாரோட அக்கா?

பள்ளி வீட்டுப்பாடத்தில் எழுதிவைக்க
எதிர்பாராத திருப்பம் கொண்ட 
கதை வேண்டுமாம்

இடம்: மிருகக்காட்சி சாலை
பாத்திரங்கள் : அம்மா யானை
அப்பா யானை
குழந்தை யானை 
மற்றும் இவன்

யானை களித்து குளிக்கும் கதையில்
அக்காவும் வருகிறாள்
இவன் மேல் 
பாட்டில் தண்ணீரைத்தெளித்து
அக்கா 
திருப்பம் சேர்க்கிறாள்

-----------------------------------------------------

அப்பா -
”டேய் தினம் இந்த கார்டூன்ல பார்த்ததையே பாக்கறயே.... இந்த சிஷுக்கா சிஷூக்கா ந்னு சொல்றாங்களே சிஷுக்கா யாரோட
அக்காடா ? ’“

(அதிர்ந்து போய் ...மகன்)
அப்பா கார்டூன் பாக்க விடுங்கப்பா.. 

( மேலே டத்துல இருக்க பொண்ணு பேரு தான் சிஷூக்கா.. கார்டூன் ஹீரோ நோபித்தாவோட கேர்ள்ப்ரண்ட்...மகள் சொல்றா கேர்ள்ப்ரண்ட்னு சொல்லமுடியாது அவ அவனோட க்ரஷ் அவ்ளோதான் ..
அவ்வ்)
----------------------------
மகிழ்ச்சியாய் 
20 க்கு 17 மார்க் .. ம்மா -

ஓ எப்படி மார்க் கம்மியாப் போச்சுடா.. 

ஓ ..ஓஹொ... இது உங்களுக்கு கம்மியா.. 17 கம்மியா.. 
நோ நான் உங்க கிட்ட பேசமாட்டேன்.. நான் உங்க கிட்ட பேசவே மாட்டேன்.. 

பவ்யமாய் அம்மா -
இல்லடா எப்படி கம்மியாச்சு ..அதை திரும்ப பேப்பர்குடுக்கும்போது செக் செய்திருப்பாங்களே ..அதை கவனிச்சியா.. என்னன்னு தான் கேக்கவந்தேன்
--------------------------------------
கொஞ்சமா ஜுரம் அடிச்சது ஒரு  நாள் லீவ் போட்டாச்சு
அடுத்த நாள் சரி தூங்கட்டுமேன்னு விட்டுட்டேன். காலையில் அக்கா ஸ்கூல் போனதுக்கப்பறம் லேசா முழிச்சு 5 தும்மல் தும்மிட்டு
 ’அம்மா நான் பஹொத் புகார் ஹூ “ அந்த தெர்மாமீட்டரை மாத்து அது சத்தம் போடரதில்ல அதனால் அது சரியா காண்பிக்கலன்னு நினைக்கிறேன்’னு தெளிவா டயலாக்.

ஸ்கூல் போகாம இருக்க என்ன ஒரு டெக்னிக். அல்ரெடி எல்லாரும் கிளம்பிப்போயாச்சு நல்லாத்தூங்குன்னதும் நிம்மதியா போர்வைய இழுத்து தூங்கியாச்சு.

இன்றைக்கு ஸ்கூல் போகும் முன்ன சோகமா உக்காந்திருக்கான். என்னடா விசயம்ன்னா
எனக்கு தூக்கம் தூக்கமா வருது .. போர் அடிக்குது டீவி பார்க்கனும்போல இருக்கு..

இருக்கிறது 5 நிமிசம் அதுக்கு எதுக்கு டீவியப்பாக்கனும்..
பஸ் ல வைக்க சொல்லலாம் டீவி..

ஏற்கனவே 3 சீட்ல நாலு பேரு உக்காந்திருக்கோம் அதுல எப்படி வைப்பாங்க ?

ஓ உனக்கு ப்ளைட் மாதிரி ஒவ்வொரு சீட்டுக்கும் டீவி வேணுமோ நான் சொன்னது ஒரே ஒரு டீவி முழு பஸ் க்கு

அது சரியா வராதே கஷ்டமே யாரு கையில் இருக்கும் ரிமோட் ..:)

January 22, 2013

நூற்றி நாற்பதாவது வழி

நூற்றி நாற்பதாவது வழி

சொல்லப்பட சொல்லப்பட
வலுவிழந்து கொண்டிருக்கும்
வார்த்தைகள்
எதிர்தரப்பில் 
புரியக்கூடிய மொழியாகிலும்
வாசித்தறியப்படாமல்
நிரம்பிக்கொண்டிருக்குமானால் 
பக்கங்களை கிழித்து
கத்திக்கப்பல் செய்

-------------------------------------------




வழியெங்கும்
அழகான 
நான் வேண்டாத பொருட்களின் 
கடைகள்
முன் தள்ளிக்கொண்டிருக்கும்
கூட்டம்
எதிர்படும் முகங்களில்
ஒன்றும் 
அறிந்ததில்லை
தொலைந்து கொண்டிருப்பதாகவோ
இலக்கென்று ஒன்று 
இல்லையெனவோச் சொல்ல
திரும்பும் வழி ஒன்றும் 
மறக்கவில்லை