Showing posts with label தமிழ்ச்சங்கம். Show all posts
Showing posts with label தமிழ்ச்சங்கம். Show all posts

November 20, 2010

தமிழ் 2010 கருத்தரங்கம் - தில்லி


தமிழ்சங்கத்தின் இரண்டு நாள் கருத்தரங்கம் பற்றி என் தளத்தின் மேலே இருக்கின்ற அழைப்பினை  நீங்கள் பார்த்திருப்பீர்கள் . இங்கே அழைப்பிதழில் மேலும் விரிவான நிகழ்ச்சி நிரல் அறிவிப்பை அறியலாம்.
உங்கள் வரவை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளுங்கள். சங்கத்தினரையோ அல்லது அதன் முக்கிய உறுப்பினர்களையோ தொடர்பு கொண்டு வருவதனை பதிவு செய்து கொள்வது  பயனுள்ளதாக இருக்கும்.
அழைப்பிதழை க்ளிக் செய்து அளவில் பெரியதாக்கி பார்க்கலாம்.
நன்றி.

பின்னூட்டத்தில் எழுந்த கெள்விகளுக்கான பதிலை இங்கயும் பதிந்து வைக்கிறேன். கருத்தரங்கில் பங்கேற்பவர்கள் பதிவு செய்து கொள்ள
sangamtamil2010@gmail.com
என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
அஞ்சலின் பொருள் பகுதியில் - Registration for Participation - என்று குறிப்பிடுவது நல்லது..
பங்கேற்க விரும்புவோர் 
பெயர்
முகவரி
தொலைபேசி எண்
அவசியம் தர வேண்டும்.

ஆர்வமுள்ள துறை(கள்)
விவரங்களைத் தருவது எதிர்கால நிகழ்ச்சிகளுக்குப் பயன்தரும்.


கருத்தரங்கில் வாசிக்கப்படும் கட்டுரைகளின் தொகுப்பு,
 நூலாக வெளிவர உள்ளது. அதைத்தான் திரு கலாம்
 வெளியிட உள்ளார். இறுதிநாளின் நிகழ்ச்சியில் 
நூல் வெளியீட்டுக்குப்
 பிறகு அரங்கிலேயே நூல் விற்பனைக்குக் கிடைக்கும்.


--
--

 
--
----

October 13, 2010

சங்கச்சுடரில் அறிமுகம்





தில்லித் தமிழ்ச் சங்கத்தின் "சங்கச்சுடர்" ஆகஸ்ட் 2010 இதழில் என் சிறுமுயற்சி பற்றி ஒரு அறிமுகம். தலைநகர் வலைப்பூக்கள் என்கிற தலைப்பில் பெரியோர்களுடன் என் வலைப்பூவும் இடம்பெற்றுள்ளது.
சுடர் குழுவினருக்கு நன்றி.


May 12, 2008

இசை கொண்டு வாழியவே!

தியாகராஜர் உத்சவம் போல பாபநாசம் சிவன் பாடல்கள் பாடும் விழாவிற்கு எங்கள் பகுதியில் ஏற்பாடு ஆகி இருந்தது.. என் மகளுக்கு எப்பவும் எடுக்கும் போது சுதியில் படுத்தும். சின்ன வயதாக இருந்தபோது , டென்சன் என்பதற்கு அர்த்தம் தெரியாத வரை சரிதான். இப்போது எப்போதும் டென்சன் தான் .. எடுத்த சுதியில் கூடி இருந்த மாமிகள் முகம் கவலை ஆகிப்போனது.

உனக்காக பாடுகிறாய்.. உன் ஆசைக்காக பாடுகிறாய் .. அதற்கு தினம் சாதகம் செய்ய சொன்னால் என்னை எதிரியாகப் பார்க்கிறாய் என்று, கொஞ்சம் முன்னால் தான் அறிவுரை(அதிகம்) செய்திருந்தேன்.. கொஞ்சம் தாமதமாகவே இவளுக்கு பாட நேரம் கிடைத்தது என்பதால் அன்று தில்லித் தமிழ்ச்சங்கத்தில் நடக்கும் ஹைதரபாத் சிவாவின் தமிழிசை கேட்க செல்ல முடியாதே என்று கவலையாக இருந்தது.

எதற்கும் முயற்சிக்கலாமே.. என்று 6.30 கச்சேரிக்கு 7.15 க்கு சென்றால்.. அதற்கு முன் நடக்கவேண்டிய பத்ம விருது பெற்றவர்களுக்கான பாராட்டுவிழாவே முடியவில்லை.. எனக்கு கொஞ்சம் சுசீலாவை பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருந்தது.. ஆனால் 5 மணிக்கு மகளின் நிகழ்ச்சியை மாற்ற முடியாததால் அந்த ஆசையை சும்மா விட்டிருந்தேன். ஆனால் நிகழ்ச்சி முடிவடையாததால் மேடையில் சுசீலா அம்மாவைப் பார்க்க முடிந்தது. ஒரு தேவதையைப்போல் இருந்தார்கள்.. உள்ளே நுழைந்தபோது எல்லார் ராவ் பேசிக்கொண்டிருந்தார். ஒவ்வொருவர் பாராட்டும் போதும் சுசீலா அவர்கள் அதை பணிவோடு ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக கைகுவித்தபடியே இருந்தார்கள்..

கடைசியாக திருச்சி சிவா பேசினார். அவர் சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் சுசீலாவைப் பாராட்டிப் பேசியது என் மகளுக்கு அறிவுரை சொல்ல வசதியாக இருந்தது.."எங்களால் உங்களைப்போல பாட முடியாது .. எங்களுக்காகப் பாடியவர்கள் நீங்கள்.. உங்களைப்பாராட்டவேண்டியது எங்கள் கடமை . பெருமை ..உரிமை. அணுகுண்டு அழிக்க முடியாத இடம் ஒன்று, ரஷ்யாவில் ஏற்படுத்தி இருக்கிறார்கள் ..அதில் திருக்குறளும் உண்டு ..உலகம் அழிந்தபின் ஒரு மனிதன் தோன்றினாலும் அவனுக்கு சென்று சேரவேண்டிய பொருட்களில் இசையும் ஒன்று அதில் உங்கள் குரல் இருக்கவேண்டும் என்பது என்ன பேராசையா.. ? என்றார்"

பார் பாடுவது எல்லாருக்கும் வராது .. வருபவர்களை பாராட்டுவதற்குத்தான் நிறைய பேர் இருப்பார்கள். உனக்கு வருகிறது . ஆனால் முயற்சி எடுத்து அதனை சரியாகப் பழகிக்கொள்ள வேண்டும். நாளை என்னை சரியாக வழிகாட்டவில்லை என்று சொல்லக்கூடாது என்றுதான் ... ( தொடர்ந்து அறிவுரை தான் வேறென்ன) சீர்காழி சிவசிதம்பரத்துடன் மகள் ஆட்டோகிராப் வாங்குவது போன்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம்..

இரவு ரயிலுக்கு போகவேண்டிய ஹைதரபாத் சிவா அவர்கள் .. தாமதமான கச்சேரி என்று நினைக்காமல் கச்சேரி களை கட்ட பாடினார். அவரும் சரி அவருடைய குழுவினரும் சரி தில்லித்தமிழ்சங்கத்தைச் சேர்ந்த வயலின் சக்கரபாணி அவர்களும் சரி
ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஈடுகொடுத்தனர்..

சிரித்த முகத்துடன் துள்ளலான பாவத்துடன்.. தாளமிட்டு ரசிக்கும் படி முக்கியமாக தமிழிசை என்பதால் புரிந்து ரசிக்க முடியும்படி இருந்தது அவர் கச்சேரி..இதற்கு முன்பு பன்னிசை தமிழ்மன்ற மேடையில் அவரின் பாடல்கள் கேட்டதிலிருந்து எங்கள் குடும்பமே அவர் ரசிகர்களாகிவிட்டோம்.

மகனோ தாளத்துக்கு ஏற்றபடி அவ்வப்போது ஆடி பக்கத்தில் இருந்தோரை தன் கவனத்துக்கு கொண்டுவந்து கொண்டிருந்தான்.

முடிக்கும் போது
"எல்லாரும் இன்புற்றிருப்பதின்றி வேறொன்றும் அறியேன் பராபரமே..
எல்லாரும் வாழ்க..எல்லாரும் வாழ்க" என்று பாடினார்.. அவர் மகிழ்வுடன் பாடி அந்த மகிழ்வினை மற்றவருக்கும் தன் இசையினிமையால் பரப்புகிறார்.உண்மைதானே..


தமிழ்மொழி வாழ்த்துப்பாடினார்.
தான தனத்தன தான தனத்தன தான தந்தா னே
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே!
தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!
இனிதே பாடி முடித்தார்.

April 15, 2008

அவ்வை தமிழ்சங்கம்

தில்லியின் தமிழ்சங்கம் போலவே உத்திர பிரதேச மக்களுக்காக ஒரு தமிழ்சங்கம் தொடங்கப்பட்டிருக்கிறது.
தினம் ஒரு திருக்குறள் என்று திருக்குறளின் பொருளும் கூடவே தமிழில் ஒரு வார்த்தை மற்றும் பொன்மொழிகளூம் இணைய முகவரி தருபவர்களுக்கு மடலிட்டு வருகிறார்கள்.
.
அதன் சிறு சிறு அறிமுக நிகழ்ச்சிகளுக்கு பிறகு இந்த ஏப்ரல் 20 ம் தேதி அன்று நொய்டாவில் ஒரு கோடை விழா ஏற்பாடு]
செய்திருக்கிறார்கள்.

சங்கத்திற்கென ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து இருந்தார்கள். ஆனால் தற்போது கூகிள் பக்கம் ஆரம்பித்த பின் தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் அறிவிப்புகளை அந்த பக்கத்தில் உடனுக்குடன் புதுப்பித்து வருகிறார்கள். விரைவில் சங்கத்திற்கென கட்டிடம் மற்றும் நூலகவசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று குழுவினர் முனைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

February 18, 2008

தமிழிசை விருந்து

ஞாயிறு அன்று தில்லி தமிழ் சங்கத்தில் பொங்குதமிழ் பண்ணிசை மணிமன்றம் தமிழ்சங்கம் இணைந்து நடத்திய தமிழிசை நிகழ்ச்சி இருந்தது. சரி பத்து மணியிலிருந்து எட்டு மணிவரை இருக்கிறது . மகளை வகுப்பில் விட்டுவிட்டு பதினோறு மணியிலிருந்து கொஞ்சம் கேட்டுவரலாம் என்று சென்று இருந்தோம். பதினோரு மணிக்கு மன்றத்தலைவர் ராமதாஸ் அவர்கள் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு நாதஸ்வரம் மேளம் இசையுடன் அரங்கம் நுழைந்தார். தலைவர்களை எல்லாம் வாழ்த்தி வரவேற்று கலைஞர்களை மேடை ஏற்ற 12 மணியாகிவிட்டது.

இசை கேட்கத்தானே வந்தோம் கொஞ்சமாவது கேட்காமலே போவதா என்று மகளை திருப்பியும் வகுப்பு முடித்து அழைத்துக் கொண்டோம்.
வந்திருந்த கூட்டத்தில் இசையை கேட்க என்ற குறிக்கோளுடன் வந்தவர்கள் குறைவே.. பசுமைத்தாயகம் சௌம்யா பேசுகையில் இது போன்ற இசைக்கு தில்லியில் கூட்டம் கூடுவது குறைவே ஆனால் அரங்கம் நிறைந்திருக்கிறதே என்றார்.. கட்சிக்கரையை ராமதாஸ் அவர்கள் கண்டிப்பாக தடுத்திருந்தாராம்.. கட்சிக்காரர்கள் நடத்துவதான உணர்வு இல்லைதான்.

முதலில் திருத்தணி சுவாமிநாதன் அவர்களின் தேவார இசை.. பாடல்களின் பண் களையும் அதன் ராகப்பெயர்களையும் பாடலுக்கான ஒரு சிறு அறிமுகம் கொடுத்து சிறப்பாக பாடினார்.. ஆனால் மக்கள் இங்கும் அங்குமாக அலைந்தபடி இருந்தனர். காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்று அவர் உருகிப்பாடிக்கொண்டிருந்தார். பின்னால் ஒருவர் மணி எத்தனைங்க என்றார் அருகில் இருந்தவரிடம் , 3 மணிக்கு சாப்பாடு என்றார் பதிலுரைத்தவர். இன்னொரு கும்பல் "சனியனே நீ எல்லாம் ஏண்டி வந்தே" என்று சண்டையிட்டு கொண்டிருந்தனர். கீழே உணவு வழங்கப்பட ஆரம்பித்துவிட்டதா என்று அறிய ஆவலாக இருந்தனர் போலும். எனக்கு கோபம் வரவில்லை. வருத்தமாக இருந்தது. அவர்கள் கவலை அவர்களுக்கு.

பின்னால் ஹைத்ராபாத் சிவா காவடிசிந்து பாடினார். துள்ளலான அந்த தாளகதிப்பாடல்கள் மக்களை பிறகு கட்டிப்போட்டுவிட்டது போலும் அரங்கம் அமைதியானது. "வள்ளிக்கலாபமயில் " ரசித்துப்பாடினார். இப்போதெல்லாம் இயல்பான விசயங்கள் பலவற்றை நாம் பாராட்டும் நிலைமைக்கு வந்திருக்கிறோம். நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்துவிட்டு தலைமை தாங்க வந்த ராமதாஸ் அவர்கள் நகராமல் உட்கார்ந்து ரசித்து கேட்டார்.
(நான் இருந்து கேட்டது 3 மணிவரை)

அதற்கு பிறகு கோடிலிங்கம் வைத்தியலிங்கம் இவர்கள் சித்தர்பாடல்களும் வரிப்பாடல்களும் என்று ஆரம்பித்தார் . கொடுக்கபட்ட நேரத்தில், என்னால், அவைகள் என்ன என்று கோடி காட்டமட்டும் தான் முடியும்.. இவைகள் ஒவ்வொன்றும் விரிவாக செய்யவேண்டிய விசயங்கள் என்றார்.. வைத்தியலிங்கம் அவர்கள் தமிழ் பேராசிரியர் என்பதால்.. வரிப்பாடல்கள் என்றால் என்ன சிறிது தமிழ் வகுப்பும் நடத்தினார். என்ன என்று புரிந்தால் தாங்க நல்லா ரசிக்கமுடியும் என்றார்.

சிலப்பதிகாரத்திலிருந்து வரிப்பாடல்கள் பாடினார்.
"கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதிக் காமன்செயலெழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்!திங்களோ காணீர்! திமில்வாழ்நர் சீறூர்க்கேஅம்கண்ஏர் வானத்து அரவஞ்சி வாழ்வதுவே."
\\"கயல் எழுதி வில்லெழுதி கார் எழுதி " என்று ஆரம்பித்து ஒன்னுமில்லைங்க.. குப்பத்து காதல், ஒருத்தன் பலநாளா ஒரு பெண்ணை விரும்பரானாம் சொல்ல பயமாம்.. கண் மை இட்டு புருவம் எழுதி தலைசீவி ஒரு பெண் குனிந்து மீன் காயவைக்கிறாளாம் ..அவள் நிலவோன்னு அவனுக்கு சந்தேகம். நிலவு ஏன் மீன் காயவைக்க வரனும்னு யோசிச்சானாம் காதலன்.. வேற ஒன்னும் இல்ல வானத்தில் ராகு கேதுன்னு பாம்பு இருக்கு அதற்கு பயந்து தான் இங்க வந்துருக்கும்ன்னு யோசிச்சானாம்.. காதலர்களுக்குத்தான் இப்படி தோனும்ங்க..// விளக்கம் இவ்வாறு சொல்லிவிட்டு பாடலைப்பாடினார்கள். பிறகென்ன மக்கள் ரசித்து மகிழ்ந்தனர்.

''தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும் எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள் நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால். ''
மான் தேருன்னா குதிரைப்பூட்டிய ரதம் தான் ... வரேன்னு சொல்லிப்போன தலைவர் வரலையே தோழி அவர் மறந்தால் பரவாயில்லை அந்த் குதிரையுமா மறக்கும் என்று சொன்னாளாம்.

சித்தர் பாடல்களில் இரண்டு பாடினார் .மூன்று மணியாகிவிட்டது . உணவு இடைவேளை . வரிசையில்நின்று தயிர்சாதம் சாம்பார்சாதம். கொஞ்சம் வத்தல் . மூன்றரைக்கு அடுத்த அமர்வு . ஆனால் மகளுக்கு பரிட்சை அடுத்த நாள் கொஞ்சமாவது கடைசி நேர தயாரிப்புகள் வேண்டும் . பின்பொரு சமயம் இவை எல்லாம் தனித்தனியாக நடைபெற்று அப்போது நாமும் ரசிக்க நேரம் அமையவேண்டும் என்று ஆசையோடு கிளம்பியாயிற்று. முழுதும் ரசிக்க முடியாத வருத்தம் மனதின் ஓரத்தில்.

March 19, 2007

மதுரைத் தமிழில் நகைச்சுவை

முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் "இலக்கியமும் நகைச்சுவையும் " உரை கேட்டு வாய்விட்டு சிரித்து சனிக்கிழமை மாலையை ஒரு சந்தோஷ மாலையாக்கிக் கொண்டோம். சரளமாக துணுக்குத் தோரணங்களை உரையெங்கும் அள்ளித் தெளித்தார். நகைச்சுவை மன்றங்களைத் தொடர்ந்து பல இடங்களில் துவக்கி வைத்து வருவதாயும் நீங்களும் அப்படி செய்யுங்களேன் என்றார். நல்ல விஷயம் தான்.



மதுரைத் தூங்கா நகரம் என்று ஏன் பெயர்வந்ததாம்.. விடியவிடிய
பட்டிமன்றங்கள் நடக்குமாம். பத்துமணிக்கு ஆரம்பிப்பதால் பத்துமன்றம் என்றார். நகைச்சுவைகளில் அறுவை , கடி ,சீசன்
அனுபவ நகைச்சுவைகளை பட்டியலிட்டு உதாரணத்துடன் ஆரம்பித்தார். மேடையைத் தவிர மற்ற இடங்களில் இருளை வழக்கம்போல செய்த சங்கத்துக்கு உடனேயே ஒரு வேண்டுகோள் விடுத்தார். மக்கள் சிரிக்கிறார்களா பல்லை க்
கடித்துக் கொண்டிருக்கிரார்களா என்று எனக்கு தெரியவேண்டாமா? உடனே ஒளியூட்டப்பட்டது அரங்கம்.



கஷ்டத்தில் கூட ஒருத்தருக்கு வந்த நகைச்சுவையைப் பாருங்களேன். ஒருத்தர் பனியான நகரத்தில் நாயால் துரத்தப்பட்டு கீழே விழுந்தாராம் நாயை அடிக்கக் கல்லைத்தேட அது பனியால் தரையோடு ஒட்டிக்கொண்டு வரவில்லையாம்.
"என்னடா ஊரு இது தலைகீழா இருக்குது. கட்டிவைக்கவேண்டிய நாயை அவிழ்த்துவிட்டு கல்லைக் கட்டி வைத்திருக்கிறார்களே." என்றாராம்.



எல்லோரும் சிரிப்பை மறந்து அழுகைக்கு அடிமையாகி விட்டார்கள் மெகாசீரியலில் மூழ்கி இருக்கிறார்கள் . சைக்கிள் கத்துக்க ஆரம்பிக்கும் போது இறங்கத் தெரியாமால் போஸ்ட் கம்பி எதும் கிடைக்கும் வரை சுற்றுவது போல் இயக்குனர்கள் முடிக்கத் தெரியாமல் இருக்கிறார்களோ என்றார்.



இலக்கியத்தில் இருந்து சில நகைச்சுவைகள். சிலேடை , வஞ்சப்புகழ்ச்சி , உயர்வு நவிற்சி வகைக்கு உதாரணங்களுடன் விளக்கினார் . ஒளவை தொண்டைமானின் ஆயுதக்கிடங்குக்கு போய் "அதியமானிடம் எல்லாம் முனைமழுங்கிய கத்தி தான் இருக்கிறது நீ எத்தனை பளபளப்பாய் வைத்திருக்கிறாய் ..... ஆனால் அதியமான் அடிக்கடி போருக்கு போவான்" என்று வஞ்சப்புகழ்ச்சியில் உண்மையை உணர்த்தியதை குறிப்பிட்டார்.



ஒருமுறை அரசர் ஒருவர் வேம்பத்தூர் பிச்சுவயர் என்பவரை மன்றத்தில் "வேம்புக்கு இங்கு இடமில்லை" என்று சொன்னாராம். அந்தப் புலவரும் உடனே வேம்பு அரசோடு தான் இருக்கும் என்றாராம் . வேப்பமரம் அரசமரம் என்ற சிலேடையில்.
ஒரு அரசர் கடைமடையில் பிறந்த புலவரைப் பார்த்து வாருங்கள் "கடைமடையாரே" என்று கடைசியாக வந்த மடையரே என்று பொருள் படும்படி கூற அவர் மன்றத்தலைவரே எனப்பொருள் படும்படியும் மடையர்களுக்கு தலைவரே எனும்படியும் " மடத்தலைவரே" என்று கூறினாராம்.



பரத்தை வீட்டுக்கு போன கணவனை வாசலில் வைத்து மனைவி எங்கே போனாய் எனக்கேட்காமல் ...நேற்றுப் போனவீட்டில் பாடினாயோ என்று கேட்டாளாம். ஆம் என்றானாம். காட்டுல பேய் அழுகுது என்றாள் அன்னை நரி ஊளையிடுகிறது என்று சொன்னாள் தோழி 'நான் நீ என்றேன் போ , என்று சொன்னாளாம்.



வாரியார் பேச்சில் வரும் நகைச்சுவைகளைக் குறிப்பிட்டு சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது. அவருடைய பேச்சுக்களை சிறுவயதில் கேட்டிருந்தாலும் நினைவு இல்லை. காதல் கடவுளைக் காமன் என்று ஏன் சொல்லுகிறோமாம் அவர் common god என்பதாலாம் [கிரேக்கமதத்தில் கூட அம்புடன் இருக்கும்] காதல் கடவுள் போல் . குழந்தையைக் கூப்பிட்டு முருகனின் தந்தை யார் எனக்கேட்டால் சிவனாக நடித்த சிவாஜியைக் குறிப்பிட்டதாம் .சிவா ஜி அதாவது ஹிந்தி மரியாதை விகிதியான ஜி எனவே குழந்தை சரியான விடை தான் தந்தது என்றாராம் வாரியார்.




நடுவில் வெண்பா பாடுவதுபற்றியும் மற்றும் இடையிடையே சில கேள்விகள் கேட்டார் . பயப்படாதீர்கள் " வந்திருக்கக்கூடாதோ" என நினைக்க வைக்கமாட்டேன்.. கேள்விக்கு சிறு இடைவெளியில்
நானே விடையும் சொல்லிவிடுவேன். ஆனால் வெண்பா மற்றும்
இலக்கணங்கள் எல்லாம் 8 வகுப்பில் படித்தது என்பதை மட்டும்
மறக்காதீர்கள் என்றார்.




காளமேகப் புலவரின் வசைபாடும் பாடல்களில் கூட நகைச்சுவை மிகுந்திருப்பதை சுட்டினார். சுருக்க வேண்டும் குடுமியை எனும் பாட்டைக் கேட்டு எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தனர். சிரிப்பின் மகத்துவத்தை சிரித்துக் கொண்டு இருப்பதால் தான் மனிதன் என திருக்குறள் சொல்கிறது. வடிவேலு இன்று நகைச்சுவையில் கொடிகட்டி பறக்கும் காரணம் மதுரைத் தமிழ் என்றார் .மதுரையில் இன்னும் வழக்கத்தில் பல பழய தமிழ் சொற்கள் இருப்பதைக் குறிப்பிட்டு இன்று தமிழில் குழந்தைகளுக்கு தமிழில் வைப்பது அரிகி வருவதைக் கவலையாகக் குறிப்பிட்டார்.


ஒரு மதுரைக்காரர் சென்னை சென்றாராம் . பஸ்ஸில் மீதி சில்லறைக்கு "அண்ணே பையத் தாங்க" என்றாராம் .மதுரைக்காரர் பேசிய தமிழைப் புரியாமல் நடத்துனர் பயந்து போனாராம். என்னடா 50 பைசா சில்லறைக்கு இந்த ஆள் 500 ரு பை யைக்கேக்கறானே என்று.
மதுரைக்காரர் சொன்னது "பைய தாங்க " என்றால் மெதுவாகத் தாங்க என்று அர்த்தம்.



முடிவில் அவர் எழுதிய புத்தகங்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தார் .உடனடியாக பெட்டி காலியாகியது.
எங்களுக்கு கிடைத்தது பேசும் கலை எனும் அவருடைய புத்தகம் . அதில் அவருடைய கையொப்பம் வாங்கி வந்தோம். தமிழை வளர்க்கும் இன்னொரு வழி நகைச்சுவை என்று புது வழி கண்டிருக்கிறார் .