January 31, 2008

kes - கெஸ்

சின்னப்பையன் கழுகு ஒன்றை வளர்க்கும் வித்தியாசமான காட்சியோடு அந்தப்படத்துக்கு விளம்பரம் பார்த்து கண்டிப்பா அந்த படம் வரும் அன்று
பார்க்கவேண்டும் என்று தோன்றியது. ஆனால் எதோ வீட்டுவேலைகளின் நியாபகத்தில் ஆரம்பத்தை விட்டுவிட்டேன்.. சில நிமிடங்களுக்கு பிறகுதான் பார்க்க ஆரம்பித்தேன்... ஆரம்பம் பார்க்காமல் பார்ப்பதா என்ற எண்ண ஓட்டத்தை படத்தின் காட்சிகள் ஓரம்கட்டி வைத்துவிட்டது. அந்த படம் "கெஸ்" kes. பிரிட்டிஷ் படத்துலயே நல்ல பத்து படத்துல ஒன்றாமே.

அப்பா வீட்டைவிட்டு போய்விட்ட ஒரு குடும்பம் . அம்மா அண்ணன் இருவராலும் எதற்கும் லாயக்கில்லாதவன் என்று உதாசீனப்படுத்தப்பட்டும், அண்ணனால் கெட்டவார்த்தையால் திட்டப்பட்டும் அடிஉதை என்று பாடாய்படுத்தப்படும் ஒரு சிறுவனின் கதை. அவனுக்கு கிடைக்கும் ஒரு புத்தகத்தை படித்து ஒரு கழுகைத்(கெஸ்ட்ரல் ) தேடி வளர்க்க ஆரம்பிக்கிறான்.
பள்ளியில் மற்ற பையன்களும் ஆசிரியர்களும் என்ன பாடுபடுத்தறாங்கன்னு பாத்தா அவன் பாடு ரொம்ப திண்டாட்டம் தான்.. உங்க வயசுப்பையங்க சொன்னா கேக்கறதே இல்லைன்னு கூப்பிட்டு வச்சு தினமும் ஒரு தடவை ஹெட்மாஸ்டர் கொஞ்சம் பசங்களைத் திட்டி பிரம்பால அடிச்சு அனுப்பறார். விளையாட்டு ஆசிரியர் கூட அவன் படற பாடு அய்யோ பாவம்.. பசங்க அடிக்கற லூட்டியும் கொஞ்ச நஞ்சமில்லை.

பள்ளிக்கூடத்தில் எதையும் கவனிக்காமல் கனவு கண்டு கொண்டு அதற்காக பிரின்ஸ்பாலிடம் திட்டும் பிரம்படியும் வாங்கிக்கொண்டு வகுப்பில் அனைவரும் ஏளனம் செய்யும் படியாக இருக்கும் அவனுக்கு அந்த கழுகை வளர்ப்பதுமட்டுமே இன்பமான பொழுதுபோக்காக இருக்கிறது. கெஸ் என்று அதற்கு பெயரிட்டு வளர்க்கிறான். கழுகை வளர்ப்பதைப்பற்றி வகுப்பின் நடுவில் அவன் திறமையாக பேசுவது மூலம் ஒரு ஆசிரியரின் கவனிப்பு அவன் பக்கம் நல்லவிதமாக திரும்புகிறது . எதோ தாரே ஜமீன்பர் பார்த்த மாதிரி இருக்கிறதா?

குழந்தைங்க என்ன வேலைக்கு நாளைக்கு போகலாம்ன்னு ஒரு இண்ட்ர்வியூ நடத்தறாங்க எனக்கு ஒரு நம்பிக்கையும் இல்லை உன்கிட்டன்னு அவர் திருப்பி அனுப்பறார். படிப்பு என்பது ஒரே மாதிரி இருப்பதுனால் எப்படி சில குழந்தைங்களோட தனித்தன்மை பாதிக்கப்படுதுங்கறதுக்கு இவன் உதாரணம். புத்தகத்தைப்பார்த்தே அவன் எப்படி எல்லாம் கழுகை பக்குவமா ஒரு வளர்க்கிற கலைய அழகா செய்யறான் ஆனால் அவன் எதுக்கும் உபயோகம் இல்லாத க்ரேட் வாங்கியிருக்கான்னு ஆசிரியர்கள் சொல்றாங்க..

சினிமாத்தனமாக அவன் கழுகை வளர்த்து பெரியாளாகி சுரங்கத்தொழிலாளியாகும் அந்த ஊரின் உழைக்கும் வர்க்கத்தின் ஒரே வழியிலிருந்து அவன் தப்பிப்பதாக எல்லாம் காண்பிக்கவில்லை. அவனுக்கும் அவன் அண்ணனுக்கும் நடக்கும் பிரச்சனையால் அவன் கழுகு இறப்பதாக காண்பித்து கதையை முடித்துவிடுகிறார்கள். அவங்க அண்ணன் கட்ட சொன்ன பந்தயத்தில் பணம் கட்டினா தோத்துப்போவான்னு இவனா முடிவு செய்து அந்த பணத்தை தன் கழுகுக்கு உணவு வாங்க உபயோகிக்கறதால அவங்கண்ணன் அந்த கழுகை கொன்னுடறான்.
இயல்பா நடக்கிற வகுப்பறை மற்றும் பள்ளிக்கூட காட்சிகளும் அவன் கழுகை பழக்கும் இடமும் உங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.
Kes is a British film from 1969 by director Ken Loach and producer Tony Garnett. The film is based on the novel, A Kestrel for a Knave written by Barry Hines in 1968.

January 25, 2008

அறிமுகத்தேர்வாம்................

குழந்தைகளுக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு 11.45 மணிக்கு இருந்த அமரிக்க விசா அறிமுகத்தேர்வுக்கு முன்பாகவே சென்று பாதுகாப்பு சோதனைகள் முடித்துக்கொண்டு முதல் சன்னலில் பாஸ்போர்ட் மற்றும் தாள்களை தந்த போது குழந்தைகள் வேண்டாம் . பதின்நான்கு வயதுக்கு கீழே இருக்கும் குழந்தைகள் நேரில்வருவது அவசியம் இல்லை என்றும் , உங்களுக்கு தான் காத்திருக்கும் நேரத்தில் சிரமம் என்றும் சொன்ன பெண்மணிக்கு கோடிபுண்ணியம்.. உள்ளே நுழைந்து மீண்டும் பாதுகாப்பு சோதனை.. சோதனை செய்பவர்கள் , இத்தனை பாஸ்போர்ட்டா எங்கே மற்றவர்கள்? என்றார்கள் .. குழந்தைகள் உள்ளே வேண்டாம் என்று வெளியே சொன்னார்களே என்றதும்.. நாங்கள் எதுவும் சொல்லவில்லையே என்றார் . விட்டுவிட்டு வரசொன்னதை குறையாக சொல்வதாக நினைத்திருப்பார் போலும்.. மொபைல் இருந்தால் தந்துவிடுங்கள் என்றார் இல்லை என்றபடி குளிருக்கு பயந்து கோட்டுக்குள் கைவிட்டால் பையில் என்ன என்று கேட்டார் அய்யா ஒன்றுமில்லை ஆளைவிடுங்கள் என்றபடி உள்ளே சென்றேன்.

உள்ளே தண்ணீர் மற்றும் சிப்ஸ் இரண்டு மூன்று மடங்காக விற்கிறார்கள்.. குழந்தைகளைக் கையோடு அழைத்து வந்தவர்கள் பாடு திண்டாட்டம் தான்.. வீட்டிலேயே விட்டுவந்தாலும் பின் காண்பிக்கத்தான் வேண்டுமென்று கேள்வி எழுப்பினால் கஷ்டம் தான்..


கைவிரல் ரேகை பதியும் இடத்தில் உதவிக்கு இருப்பவள் நல்லது மிக நல்லது நீங்கள் குழந்தையை விட்டுவந்தது என்றாள்.. ஆனால் இப்படி எதுவும் முன்பே குறிப்பிட்டமாதிரி தெரியவில்லை . வரிசை மிக நீளமாக போய்க்கொண்டிருந்தது. இந்தி மொழிக்கென்று ஒரு சன்னலும் ஆங்கிலத்துக்கு என்று ஒரு சன்னலும் மட்டுமே திறந்திருந்தது.. இந்திமொழிக்கென்று எழுதி வந்தவர்கள் வரிசை வேக மாக நகர்ந்தது ஆகா நாமும் அப்படி செய்திருக்கலாமோ என்று சிலர் நினைக்கத்தொடங்கிய நேரம் தான் தெரிந்தது அந்த மனிதர் எல்லாரையும் திருப்பி மட்டுமே அனுப்பிக்கொண்டிருந்தார் என்ற விசயம்..


பொதுவாக இந்தி மொழி அறிமுகத்திற்கு வந்தவர்கள் எல்லாரும் வயதான தம்பதிகள் ..அவர்களுக்கு தங்கள் மகனோ மகளோ பற்றிய் எல்லா விவரங்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அப்படியே சொல்லிக்கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் நினைவுத்திறனும் சமயங்களில் கைகொடுப்பதில்லை.
ஒரு தாய் தனியே வந்திருக்கிறாள்.. உன் மகன் வேலை என்ன என்றால் அவன் சொந்த பிசினஸ் என்கிறாளே தவிர அது என்ன என்று சொல்லத்தெரியவில்லை . எல்லா தாள்களையும் திருப்பி தந்துவிட்டபின் அந்த தாய் எங்கே செல்லவேண்டும் அடுத்து என்கிறாள் . இல்லை நீங்கள் காத்திருக்க அவசியமில்லை என்று விளக்கி அனுப்பியபோது அந்த முகத்தில் எத்தனை கவலை..


வரிசையில் நிற்கும் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு விதமாய் .. புதியதாய் திருமணம் ஆன பெண்கள் வளையல்களும் நெற்றி குங்குமமுமாய் கையில் வெல்வெட் பெட்டியில் திருமணப்புகைப்படத்துடன் காத்திருக்கிறார்கள். நான் பார்த்தவரையில் நாம் கொண்டு செல்வது கட்டாயம் ஆனால் அவர்கள் அதை பார்க்கிறார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது.


என் தாள்களில் எல்லாவற்றையும் எழுதி நிரப்பியவர் கணவர் என்று அதிலேயே குறிப்பிட்டிருந்தும் என் முறை வந்தபோது அவள் உங்கள் கணவரின் கடிதம் வேண்டுமே என்கிறாள்.. அம்மணி அவர்தானே எழுதி நிரப்பியிருக்கிறார் அவர்தானே பணம் போடுவேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் .. கேட்டாலும் அவர்கள் சொல்வதே சட்டம்.. சரி வெளியில் மீண்டும் வந்து கணவர் குழந்தை என்று எல்லாருமாய் மீண்டும் சோதனைகள் செய்துகொண்டு உள்ளே சென்றோம். கணவரின் பாஸ்போர்ட் வேலை விவரங்கள் கேட்டறிந்து உங்களை அனுமதிக்கிறோம் என்று பதிலளித்தாள்.

வயதானவர்களுக்கு விசா அறிமுகத்தேர்வு வெற்றிகரமாக அமைவதில்லை என்று பார்த்தும் கேட்டும் அறிகிறேன்.. என்ன பேசலாம் எப்படி பேசலாம்.. என்னென்ன தாள்கள் அவசியம் என்பவை
அவர்களுக்கு வலையில் குறிப்புகளாக யாராவது எழுதி வைத்தால் நல்லது..

January 14, 2008

கவிதையும் மலைச்சாரலும்

படித்ததில் பிடித்ததாமே ...பதிவுகள் வரிசையாக வந்து நின்று கொண்டிருக்கின்றன. என்னை என்னை என்று அவை கெஞ்சியும் கொஞ்சியும் அழைக்கிறது. கவிதைகள் தான் அடித்து பிடித்து முதலில் வந்து நிற்கின்றது. ஒன்று மயக்கம் தருகிறது இன்னொன்று யோசிக்கவைக்கிறது. சரி உங்கள் பின்னால் யார் கொஞ்சம் தள்ளுங்கள் என்றால் வெட்கப்பட்டபடி இரண்டு மூன்று சிறுகதைகள் கூடவே ஒரு அனுபவக்கதையும்.

குப்பையெல்லாம் ஒழுங்காப்போடனும் என்று எழுதிய
நட்சத்திரவாரப்பதிவு என்னவோ தான் பெரிய நட்சத்திரமானதாக நினைத்துக்கொண்டு நின்றது. இருந்தும் யோசித்ததில் கவிதையில் ஒன்றைத்தான் குறிப்பிடவேண்டும் என்று தோன்றியது
என்று நிகழ்தகவின்விதிப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கவிதை சிறகு பெற்ற மனது கவிதையும் இந்த நிகழ்தகவின்படி.. கவிதையும் அதன் மென்மைகாரணமாய் பிடிக்கின்றது.


சுற்றுலாப்பதிவுகளில் நானித்தால் பற்றி எழுதிய பதிவு கொஞ்சம் மனதுக்கு குளுமையானது என்பதாலும் இன்றும் அந்த மலைச்சாரலில் சென்று வந்ததை அடிக்கடி நினைவுக்கு கொண்டுவர அடிக்கடி எடுத்து படிக்கத்தூண்டும் பதிவு ...அதை கூப்பிட்டு உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் . இரண்டு பதிவுகள் மட்டும் என்பதால் மற்றவர்களை தேற்றி அனுப்பிவிட்டு வருகிறேன்.

கண்மணி அழைப்புக்கு நன்றி...

நான் அழைப்பது ... கோபி..
காயத்ரி..
சென்ஷி.

January 10, 2008

புதியவானம் ...வானம்...வானம்...

எம்ஜிஆர் படம்ன்னா நினைவுக்கு வருவது உடனே அன்பேவா தான். ஏன்னா அதோடவசனக் கேசட் பக்கத்துவீட்டுல வச்சிருந்தாங்க.. கேட்டு கேட்டு மனப்பாடம் ஆகிப்போச்சு.. அந்த சாருக்கு (அவர் எனக்கு கெமிஸ்ட்ரி ட்யூசன் எடுத்தாரு கொஞ்சநாள் ) எம்ஜிஆருன்னா ரொம்ப பிடிக்கும். எப்பவும் வீட்டுல கேசட் எடுத்து படம் போட்டா கண்டிப்பா எம்ஜிஆர் படம் இருக்கும்.


அவர் படத்துல் பாட்டு எல்லாமே அருமையா இருக்கும் அவர் பாட்டுன்னா எனக்கு உடனே நினைவுக்கு வருவது ... புதிய வானம் புதிய பூமி தான்.. பிள்ளைக்கூட்டங்களைப்பார்க்கையிலே பிஞ்சுமொழிகளை கேட்கயிலே நல்லவர் எல்லாம் நலம் காண்பார் எனும் நம்பிக்கை பிறக்கிறது .....
.பழயபடம்ன்னா எங்க ஊருல கிருஷ்ணா தியேட்டர். மன்னாதி மன்னன் மாதிரி எம் ஜி ஆர் படம்ன்னா புதுப்படம் போற ஆசையோட போய் பார்ப்போம்.


மார்கழி மாசம் கோலம் போடறது திருவிழா அப்போதெல்லாம்.. இப்பவெல்லாம் இல்லை . இங்க தில்லியில் ஒரு 6 க்கு 6 புள்ளி வச்சி கோலம் போட்டாலே அதிசயம். அப்படி கிருஸ்துமஸ் கோலம் போட்டிட்டுருக்கும் போது தான் பக்கத்துவீட்டு சார் சைக்கிளில் வந்து இறங்கி எம்ஜிஆர் இறந்து போயிட்டாருன்னு சொன்னாங்க.. அந்த கிருஸ்துமஸ்ல சார் சந்தோஷமா வே இருக்கலை.

எங்கவீட்டுல எம்ஜிஆர் ரசிகர்கள் தான் அதிகம். சிவாஜின்னா அழுமூஞ்சின்னு வச்சிக்கிட்டோம். பாக்காம இல்ல பாகப்பிரிவினை
தில்லானா மோகனாம்பாள் இதெல்லாம் கூட மனப்பாடமா இருக்கும் தான். ஆனா கேசட் எடுத்தா சிவாஜி படம் எடுத்து பாக்கறதுமட்டும் இல்ல.
சினிமா தியேட்டர் இல்லாட்டி டிவி தான் சிவாஜிக்கு.
அவர் படத்துலயும் பாட்டெல்லாம் அருமைதான். உடனே நினைவுக்கு வருவது ..""எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் ""


எங்க சித்தி வீட்டு சித்தப்பாக்கு சிவாஜி தான் பிடிக்கும் . சிவாஜி பத்தி சொன்னா கோபம் வரும் . போங்கடி உங்க எம்ஜிஆருக்கு அழத்தெரியுமா உடனே செவுத்தப்பாக்க திரும்பிக்குவார் இல்லாட்டி முகத்தை மூடிப்பார்.எங்க சிவாஜி மாதிரி நடிக்கத்தெரியுமான்னு கேப்பாங்க. ஆமா ஓவரா நடிப்பாரு சித்தப்பா.. ஒரு வார்த்தையை சொல்லனும்னா கூட புருவத்தை அசக்கி உதட்டை மடித்துன்னு அய்யோ போங்க சித்தப்பான்னு வம்பு வளப்போம்.


ஜெமினின்னா மிஸியம்மா தான் நினைவுக்கு வரும். டிரிம்மா வந்து வெடுக்குவெடுக்குன்னு பேசற சாவித்திரி கூட வம்பு செய்யற ஜெமினி. இல்லாட்டி யார் பையன் ஜெமினி. அய்யோ பாவமா உன் அப்பா பேரென்னடா என்றதும் என்அப்பா பேரா என் அப்பா பேரு மகாகனம் பொருந்திய ஸ்ரீமான் சுந்தராஜனு சொல்லும்போது
அந்த குட்டி பையன் வாயை அடைக்கமுடியாம திண்டாடுவாரே.. கொஞ்ச வருசம் முன்ன மைக் மோகன் முழிப்பாரே அதே மாதிரி இருக்கும் .
பாட்டுன்னா அவ்ரோடது நினைவுக்கு வருவது "சின்ன சின்ன கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ "


இதென்ன திடீர்ன்னு இதெல்லாம் ஒரு அலசலும் கொசுவத்தியும்ன்னு கேட்டீங்கன்னா... மொக்கை டேக்காமே அதுக்கு காட்டாறு கூப்பிட்டுருக்காங்க..
யோசிக்காம போட்டாதான் மொக்கையாமே.. அட நேத்துக்கூட யோசிக்காமதான் லைஸ் மை பாதர் டோல்ட்மீன்னு எழுதினேன் அந்த பதிவு அப்ப மொக்கையில்லையான்னு கேட்டா... அருட்பெருங்கோ சொல்றாரு.."" அக்கா நீங்க எழுதுங்க வந்து படிச்சிட்டு மத்தவங்க சொல்லுவாங்க .அதுமொக்கையா? இல்லையான்னு ""
இது மொக்கதானே சொல்லுங்கப்பா..

சரி யாரைக்கூப்பிடுவது .... மங்கை நேத்து தான் ஒரு பதிவு போட்டாங்க இருந்தாலும் எனக்காக ஒன்று போடட்டுமே
தீபா படமெல்லாம் பாத்து கண்ணு சரியாகிடுச்சாப்பா வாங்க வந்து எனக்காக ஒரு பதிவு.
பதிவு போடறதுன்னா யோசிக்கறதுக்கு ஒரு நிமிசம் கூட வேணாம் எங்கள் தங்கம் சென்ஷீக்கு அவர் ஒரு பதிவு போடட்டும். எழுதிடுங்கப்பா எல்லாரும் .

January 8, 2008

லைஸ் மை ஃபாதர் டோல்ட் மீ

எல்லாரும் ரொம்ப பாராட்டின இஷானோட படம் பார்த்து என்னத்த கத்துக்கறது ... வேண்டாம் வேண்டாம்ன்னாலும் ரைம்ஸ் புக்கையும் மை ஃபர்ஸ்ட் டிக்ஸன்ரியும் வச்சிக்கிட்டு அப்பா வர வரை பதினொருமணியானாலும் ஆர்வமாய் படிச்சு நல்ல ஸ்கூலில் அவளாவே பேசி இடம் வாங்கிக்கிட்ட குழந்தை என் குழந்தை. ஆல்ரவுண்டர்ன்னு விளையாட்டா படிச்சே பேருவாங்கினவ தான்.. 4 வயசில் முத்திரைபிடிச்சு ஆடி ப்ளேஸ்கூல் ஆண்டுவிழாவில் என் கண்ணில் கண்ணீர் வரவைத்த குழந்தை.. நீங்க தான் அந்த் பொண்ணோட அம்மாவான்னு கேட்டு நாலு பேரு வந்து கை கொடுத்துட்டு போக வைத்த குழந்தை.



சொல்லிக்குடுத்த ஸ்டெப்பை அடுத்த நிமிசமே பிடிச்சிக்கிறா அவளுக்கு ஆர்வமிருக்கு நாட்டியம் கத்துக்குடுங்கன்னு ஆசிரியை சொன்னாங்கன்னும் டிவியை பாத்தாலோ இசை எங்கிருந்தோ கசிந்து வந்தாலும் கூட தானாக ஆடிய கால்களின் ஆர்வம் கண்டும் சேர்த்தாயிற்று..படிபடி என்று போட்டு பயமுறுத்தவில்லை.. 40 க்கு 39 வாங்கிய பெண் இப்போது படிக்க உக்காருவதே இல்லை 30 வாங்கினாலும் சரி அம்மா... பாத்துக்கோ ன்னு விட்டாச்சு.. சரி நாட்டியத்துக்கோ ஆசைப்பட்டு சேர்ந்த இசைவகுப்போ வீட்டில் பயிற்சி எடுத்தால் தானே ..அடிக்கக்கூடாது சரி திட்டக்கூடாது சரி... அம்மாதங்கமே கொஞ்ச்ம் ப்ளீஸ் கொஞ்சம் எதுலயாவது கவனம் வையேன்னு கெஞ்சும் நிலைமையா இருக்கு...


இதுல இந்த படம் பாத்து "இங்க பாரு என்ன வருமோ அதான் வரும் சும்மா நை நைன்னு எதாச்சும் என்னை சொல்லக்கூடாது ஆமாம்" ன்னு சொல்லாம ... ம்.. சரி சரி "ஹயால் கர்ன்னா ன்னா என்ன ..எந்த கஷ்டத்துலயும் . மெ ஹூன்னா " ன்னு சொல்றதுக்கு அமீர் சொல்ற மாதிரி நீயும் அப்பாவும் இருக்கீங்க.. ஒகே தேங்க்யூன்னு சொல்லும் குழந்தைக்கு அப்பாடா நல்லவேளை நம்மளை திட்டலன்னு சந்தோஷம் தான் பட்டுக்கனும்... என்னதான் குழந்தை தன் இஷ்டம் போல இருக்கறதுக்கு விடனும்ன்னாலும் சாக்கடையில் தலை பட ஒரு குழந்தை விளையாட எந்த அம்மா விடமுடியும்..

---------------------------------------

பொல்லாதவன் முதல் பாதி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது .. நடுத்தரவர்க்கத்து பையன் காதலிக்கறதும் அதை நண்பனிடம் திருப்பி திருப்பி .. சொல்வதும் இன்னைக்கு எத்தனாவது தடவைன்னு நண்பர்கள் கேட்டும் தொடர்வதும் அவள அங்க பாத்தேண்டா இங்க பாத்தேண்டா திரும்பி பாத்தாடான்னு ... அதை நண்பர்களூம் பாவமா கேக்கறதும் ... இயல்பா என்னவோ சிறுகதைமாதிரி இருந்தது முதல் பாதி பின்பாதி சினிமாத்தனம் ஒருத்தனே அத்தனைபேரை அடிக்கறது .. அது ஆரம்பிச்சிட்டோம் முடிவ பாத்துடலாம்ன்னு பாத்தேன்..

------------------------------------------

மிருகம் ம் நல்லா நடிக்கிறாரு ஹீரோ அதுவும் கடைசியில் உருக்கமா நடிச்சிருக்காரு.. பிச்சக்காரிக்கிட்ட போனதுக்கப்பறம் கீழே விழறானா பிச்சக்காரி கிட்ட இருந்து எயிட்ஸ் வந்துதுன்னு கிராமத்துமக்கள் நினைக்கக்கூடாது பாக்கும் போது இன்னும் விளக்கமா சொல்லி இருக்கலாம்ன்னா அப்பறம் டாக்குமெண்ட்ரி ஆகிடும்... மனைவியும் தாயும் அவனுக்கு செய்கிற சேவையில் அவன் திருந்துவது நல்லாத்தான் இருக்கு ... எந்த நோயுக்கும் அன்பு ஒன்று தானே மருந்து கூடக்கொஞ்சம் நாள் வாழ்வதற்கு.... என்னைக்காச்சும் உனக்காக உன் மகன் சண்டை போட்டிருக்கானா எனக்காகத் தான என் புருசன் ஒருத்தன் கிட்ட சண்டை போட்டான்னு முட்டாள் தனமா பேசும்போது மட்டும் சிரிப்பு வந்தது.. அது அவளுக்காக இல்லை அவனோட உடமையை ஒருத்தன் தப்பா பேசிட்டான்னு தான் தெரியலை அவளுக்கு. அய்யோ எங்க போனாலும் ஈயம் விடாது போலயே... கடைசியில் ஊருக்கே த்ண்ணி கிடைக்கசெய்து நல்லவனாகி மத்தவங்கள மனுசங்களா மிருகமான்னு யோசிக்க வச்சிட்டானாம். எப்படி வாழக்கூடாது எப்படி சாகனும்ன்னு சொல்லி இருக்கானாம்.

----------------------------------


எவனோஒருவன் பாவம் அவ்வளவுதான் நியாயத்துக்கு எல்லாம் மரியாதை.. எதோ படத்தை பார்த்தமோ நாம வாங்குகிற பொருளுக்கு பில் வாங்கினோமா நம்ம மட்டில என்னமுடியுமோ அப்படி ஒழுக்கமா இருக்க முயற்சிக்கனும்... அவன் மாத்ரி எல்லாரும் ஒழுக்கமா இல்லைன்னா சிலர் மட்டும் ஏண்டா ஒழுக்கமா வாழ்ந்து ஏமாளிபட்டம் வாங்கிக்கட்டிக்கனும்ன்னு கேட்டா இப்படித்தான் தியாகி ஆகி சாகனும்.

------------------------------------

லைஸ் மை பாதர் டோல்ட் மி ஒரு கனாடியன் படம்.. சின்னபையன் ஒருத்தன் அவன் தாத்தாக்கூடவே ஒட்டிக்கிட்டு அவர் சொல்லித்தர கடவுள் நம்பிக்கையை எல்லாம் கத்துக்கிறான்.. அவர் கூட குதிரை வண்டியில் போறது அவனுக்கு ரொம்ப பிடிக்குது." தாத்தா இந்த இலையெல்லாம் யார் பெயிண்ட் பண்ரா".. கடவுள் ன்னு சொல்ற தாத்தாகிட்ட "எந்த ப்ரஷ் வச்சு செய்யறாரு" ன்னு கேள்வி மேல கேள்வி கேட்பது அழகு.





அவரும் சலிக்காமல் கடவுள் பற்றி விதம்விதமான விசயங்களைச் சொல்லிக்கொடுக்கிறார். ஆனால் பையனோட அப்பா அதான் அந்த தாத்தா இருக்காரே அவரோட மருமகனுக்கு இது பிடிக்கலை.. தாத்தாக்கிட்ட இருந்து பிரிக்க முயற்சி செய்து தோத்து அந்தகோபத்துல இருக்கார். மழை உங்க தாத்தா சொல்ற மாதிரி கடவுள் அனுப்பறது இல்லை அது மேகத்திலிருந்து வருதுன்னு சொன்னா போங்கப்பா பொய் ன்னு ஓடரான். அந்த குட்டி பையனை யாரும் அடிக்கக்கூடாதுன்னு சட்டம் போட்டுருக்கார் தாத்தா.





குதிரை தான் அந்த தாத்தாக்கு ரொம்ப நண்பன் அதோட லாயம் நடுவில் இருக்கரதால பக்கத்துவீட்டம்மா ப்ரச்சனை செய்யரா... இன்னொரு குழந்தை பிறக்கிறது அவங்க வீட்டுல .அப்பறம் அவன் சந்தேகம் எப்படி குழந்தை பிறக்குது , இந்த வயசில் நமக்கு ஏன் அம்மா பால் கொடுப்பதில்லைன்னு..



அவன் வயதுத்தோழியோடு லாயத்தில் பேசிக்கொண்டிருக்க
தாத்தா மறைந்திருந்து அந்தகுழந்தைகள் பேசிக்கொள்வதை கேட்டு சிரிக்கும் காட்சியில் குழந்தை எப்படி எதுவழி பிறக்கும் என்று
சொல்ல ஆரம்பிக்கும் போது தாத்தா மிரண்டு போய் எட்டி பார்க்க அங்கே ஒரு ஆட்டுக்குட்டியை வைத்து அந்த பெண் சொல்லிக்கொடுப்பாள்.


தன் வயசுத்தோழி சொல்வதும் மற்றொரு நாள் ஒரு வீட்டில் பார்க்கிற தவறான ஒரு காட்சியும் அவனுக்கு பெரியவங்க எல்லாரும் பொய் சொல்றாங்கன்னு ஒரு எண்ணத்தை உருவாக்கி அவன் செய்யக்கூடாததுன்னு தாத்தா சொல்லி இருந்ததை செய்யத்தூண்டுகிறது.




குதிரை லாயத்தின் குப்பையெல்லாம் கொண்டுபோய் பக்கத்துவீட்டுக்கு முன் போட ப்ரச்சனை பெரியதாகி லாயத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார் தாத்தா.. ஆனால் அதற்கு வருகிற அதிகாரிகள் வயதாகிவிட்ட குதிரைக்கு ஏன் இத்தனை மதிப்பு என்கிற போது உங்கள் வீட்டு வயதாகி விட்ட பெரிவர்களுக்கு இதான் கதியா என் நண்பன் அந்தகுதிரை அது இறக்கும் வரை இங்கே தான் இருக்கும் நான் இருக்கும் வரையும் கூட என்று கூறுகிறார்.



தாத்தா உயிருக்கு போராடும் நிலையில் அவனை சொந்தக்காரர்கள் வீட்டில் கொண்டுவிடும்போது தாத்தா நான் அம்மா கிட்ட சொல்லி இருக்கிறேன் அவங்க குதிரையை பாத்துகறதா வாக்குறுதி குடுத்துருக்காங்க நான் போயிட்டுவரேன்னு சொல்லும் போது அந்த சின்னப்பையனுக்குத்தான்
தாத்தாமேல என்ன ஒரு அக்கறை....


திரும்பி வந்து குதிரையும் தாத்தாவும் இல்லாதது அவனுக்கு அதிர்ச்சியாகி தாத்தாவை அழைத்துக்கொண்டே பனிக்குள் ஓடுகிறான்.. வீட்டில் அவன் தந்தை இனி அவன் வரட்டும் என் மகனாய் வளர்க்கிரேன் என்று காத்திருக்கிறான்..

எப்பவாச்சும் இப்படி வித்தியாசமாய் ஒரு படம் பாத்தா நல்லாத்தான் இருக்கு இதுல இருந்து ஒன்னும் கத்துக்கவேண்டாம் பாருங்க..