Showing posts with label உலகசினிமா. Show all posts
Showing posts with label உலகசினிமா. Show all posts

October 24, 2008

கடைசி விடுமுறை


லாஸ்டு ஹாலிடே
50 ல் ஒரு முறை எடுக்கப்பட்ட கதை. அந்த திரைப்படத்தில் ஒரு ஆணைச்சுற்றிப் பின்னப்பட்டிருந்த கதையை கொஞ்சம் மாற்றி 2006 ல் வேறு மாதிரி எடுத்திருக்கிறார்களாம்.. வாய்விட்டு ரசித்து சிரித்து மகிழ்ந்த படம் இது. சாதரண விற்பனையாளரா வேலை பார்க்கிற ஜியார்ஜியாங்கறபெண். தான் என்னவெல்லாம் ஆசைப்படுகி்றாளோ அவையெல்லாவற்றையும் ஒரு புத்தகத்தில் புகைப்படங்களா சேமித்து வைத்திருக்கிறாள்.

தன்னுடன் வேலை செய்கிற நண்பரிடம் தோன்றுகின்ற காதலை சொல்லமுடியாமல் இருக்கும் நிலையில் மூன்று வாரத்தில் தான் சாகப்போகிறவள் என்று தெரிய வருகிறது. டாக்டராக வருகிறவர் ஒரு இந்தியர் . அவர் வருகிற காட்சி நல்ல நகைச்சுவை (கொஞ்சம் கிறுக்கு மாதிரி??)

அப்பறமென்ன அம்மணி கையிருப்பில் இருக்கும் சேமிப்பு எல்லாம் எடுத்துகொண்டு கிளம்பி ஹெலிக்காப்டர்ல போய்... இருக்கறதுல யேஏஏ பெரிய ஹோட்டல்.. வசதியான அறை, வாழ்க்கை, வீர தீர ஆபத்தான விளையாட்டுக்கள் என்று அடித்து தூள்பரத்துகிறார்..

விமானத்தில் சகபயணி இருக்கையை சாய்க்கவிடாமல் தடுப்பதும், பின்னர் சண்டை போட்டுக்கொண்டு அதிகம் பணம் கொடுத்து மேல்வகுப்பில் பயணம் செய்வதாகட்டும்.. "மேக் மி இண்டர்நேஷன்ல்" என்று துணிக்கடையில் கேட்பதாகட்டும் ஆஹா! கனவுலகம் போனமாதிரி தான் ..

கூழாங்கல் ஸ்பா, ஆவிக்குளியல் என்று என்ன என்ன வகையுண்டோ அத்தனை அழகு படுத்தும் முறைகளையும் செய்து கொள்கிறாள். ஸ்கேட்டிங் ஜ்ம்பிங் என்று விளையாடி தன் கடைசி விடுமுறையை அட்டகாசமா கொண்டாடுறாங்க..

அங்கே தங்கி இருக்கும் ஏனைய பெரிய பணக்காரர்கள் இவள் யார் யார் என்று மண்டையை பிய்த்துக்கொள்ளும் போது பெருமிதமாக சுற்றிவருகிறாள். வேலை செய்பவர்கள் எல்லாரிடம் கனிவு காரணமாகவும், பணக்காரர்களிடம் பேச்சுத்திறமையாலும் நட்பாகிறாள்.. ஒருவரைத்தவிர , எல்லாரிடமும் நட்பாகிவிடுகிறார்.. நாளையைப்பற்றியோ , என்ன நினைப்பார்கள் என்ற கவலையோ இப்போது அவளுக்குஇல்லையே..அவள் நினைப்பதை செய்கிறாள் நினைப்பதை பேசுகிறாள்.கடைசியில் அந்த ஒருவரும் ஜார்ஜியாவைப்புரிந்து கொள்கிறார். காதலரும் இவர் இருக்கும் இடம் தேடி வந்துவிடுகிறார்.

கடைசி காட்சியில் பெரிய கட்டிடத்திலிருந்து தற்கொலைக்கு முயல்கிற ஒருவரை மனம்மாறச்செய்யும் காட்சி எனக்கு மிகவும் பிடித்தது.

வழக்கமான சினிமா தானே... மருத்துவர் தவறாக நோய் என்று கணித்திருக்கிறார் என்று சொல்லி சுபமான முடிவு.. இன்னும் இரண்டு தடவை பார்த்து சிரிக்கனும் என்று தோண்றுகிறது.



Enjoy yourself . . . It's later than you think! இதைத்தான் படத்தில் சொல்லவர்ராங்க.. அப்படி நினைத்து செய்யும் போது நிஜம்மாவே நாம் நாமாக இருப்போம் என்றே தோன்றுகிறது. ஜார்ஜியா முதலில் இருந்த ஷை டைப்புக்கும் கடைசியில் பெற்ற வெற்றிக்கும் அவள் அவளாகவே இருந்தது தானே காரணம்.

August 22, 2008

பே இட் ஃபார்வேர்ட்

இன்றைக்கு மகனின் பள்ளியில் ஜென்மாஷ்டமி கொண்டாட்டம் . பதினொன்றரை மணிக்கே அழைத்து வந்தாயிற்று. இணையத்தில் உட்காரும் நேரம் குறையும் என்று தெரிந்ததும் முன்யோசனையாக HBO தளத்துக்கு போய் இன்று என்ன படங்கள்? என்று குறித்துக்கொண்டேன். ஒரு வரி கதை படித்ததில் , 2.30 மணிக்கு வரும் படம் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. "pay it forward."


அவசரமாக அடுக்களை வேலையை முடித்துக் கொண்டு உட்கார்ந்தேன். புதிர் கோர்க்கும் ஆர்வம் வர வர மகனுக்கு அதிகரிக்கிறது. அவனுக்கு உதவிக்கொண்டே சேனல்களை ஓட்டியதில் சிக்கியது காமெடிப்படம் ட்யூப்லக்ஸ்.. ஹிந்தியில் மொழிமாற்றம்செய்யப்பட்டது. நடுநடுவில் பார்ப்பதையும் " அம்மா மேரே ஸாத் கேலோன்னா... " வுக்கு பயந்து படத்தை வெறுமனே காதில் கேட்டுக்கொண்டுதானிருந்தேன்.

2.30 மணிக்கு பே இட் ஃபார்வேர்ட் தொடங்கியது. .. சின்னப்பையன் அழகாக நடித்தான். மற்ற நடிகர்களும் நன்றாகவே நடித்தார்கள்.ஏறக்குறைய நம்ம டேக் விளையாட்டு போலத்தான். தேர்ந்தெடுக்கும் ஆளை சரியாக தேர்ந்தெடுக்கவில்லை என்றால் ஆட்டம் பாதியில் நின்று போய்விடாதா? அது போலத்தான் .


ஆசிரியர் வகுப்பில் உள்ளவருக்கு தரும் செயல் முறை பாடம் ... "உலகத்தை மாற்ற ஒரு வழி கண்டுபிடியுங்கள் அதை செயல்படுத்திக்காட்டுங்கள்". அந்த பாடத்துக்காக படத்தின் நாயகன் சிறுவன் கண்டுபிடிக்கும் முறை தான் "பே இட் பார்வேட்" ஒருவர் தான் பெற்ற நன்மைக்கு நன்றியாக , நன்மை செய்தவருக்கு நன்றியை செலுத்தும் விதமாக, உதவி தேவைப்படும், வேறு மூன்று பேருக்கு உதவி செய்யவேண்டும்.
சிறுவன் தான் தேர்ந்தெடுத்த ஆட்கள் தவறு என்று நினைத்து கவலையாகிறான் ஆனால் அவனின் வழிமுறை வெற்றி பெறுகிறது.
சிறுவனின் இந்த வழிமுறை அவன் ஆசிரியரையும் அவன் அம்மாவையும் சேர்த்துவைக்கிறது..
அவன் அம்மாவையும் பாட்டியையும் சேர்த்துவைக்கிறது.
பலருக்கு அது இயக்கமாக மாறி உதவிகள் பன்மடங்காக உயர்கிறது.
கதையின் முடிவு பார்த்து கண் நிஜமாகவே கலங்கிவிட்டது.துக்கம் தொண்டையடைத்தது.
அந்த பாடல் காட்சி இங்கே இருக்கிறது. படம் பார்க்கும் முன் முடிவு தெரியக்கூடாது என நினைப்பவர்கள் காட்சியைப்பார்க்கவேண்டாம்.


எதையோ ஆரம்பித்து எதையோ முடித்து என்று ஆயில்யன் ஒரு டேக் போட்டு பதிவிட சொல்லி இருந்தார். இந்த பதிவை அதற்காகவும் என்று எடுத்துக்கொள்ளலாம்.
வேறு மூன்று பேரை ஆயில்யனைப்போலவே ரகசியமாக அழைத்துவிடுகிறேன்..:)

June 3, 2008

பேஸ்டு ஆன் ஒன் ஹெல் ஆஃப் ய ட்ரூ ஸ்டோரி

பலநேரம் சேனல்களை கடந்து போகும் போது சில நிமிட நேரப்பார்வையிலேயே.. .. அந்த காட்சிகள்
இது நல்ல படம் என்று சொல்லிவிடும்.. ஆரம்பத்தை இன்னொரு நாள் பார்த்துக்கொள்வோம் என்று மனதை சமாதானப்படுத்திவிட்டு பார்க்கத்தொடங்கிவிடுவது வழக்கம்.. அப்படித்தான் அன்று சேனல்களை பின்னுக்கு தள்ளியபடி ரிமோட் போய்க்கொண்டிருக்கும் போது இந்த படம் சிக்கியது..


ஒரு தாத்தா சிறுவன் ஒருவனிடம் உரையாடிக்கொண்டிருந்தார். அவர் ஒரு மோட்டார் பைக் ரேஸ்க்காரர் .. தன் அந்த வயதிலும் போட்டிஒன்றில் கலந்து கொள்வது பற்றியே கனவு கண்டுஇருக்கிறார். 25 வருடக்கனவு என்று சொல்லிக்கொள்ளும் அவர்.. தன் மோட்டார்சைக்கிளை பேக் செய்தபடி நியூஸிலாந்திலிருந்து கப்பலில் அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் நடைபெறும் போட்டிக்கு கிளம்புகிறார். அவருடைய இண்டியன் மோட்டார்சைக்கிள் என்னும் வண்டி உலகத்திலேயே அதிக பட்ச வேகமான வண்டி என்பது அவருடைய வாதம்.


அனைவரும் அவரை நம்பாத போதும் அந்த சிறுவன் அவரை நீங்கள் ரெக்கார்ட் செய்வீர்கள் நம்புகிறேன் என்று சொல்லி வழியனுப்புகிறான். அமெரிக்காவில் வந்து சேரும் அந்த வயதானவரின் அனுபவங்கள் தான் படத்தின் கதை.
இமிக்க்ரேஷன் பகுதியில் வரிசையில் கவுண்ட்டருக்கு அருகில் செல்ல முயற்சிப்பவரை மஞ்சள் கோட்டுக்கப்பறம் நிக்க சொல்லி மிரட்டுவதில் ஆரம்பிக்கறது அவர் அனுபவம்.. நீங்கள் அமெரிக்க விசா எடுத்தவர் என்றால் புரிந்து கொள்வீர்கள்... வாடகைக்கு டேக்ஸியில் ஏறியவர் வாடகையை கேட்டு நான் காரை விலை பேசவில்லையே என்று பதறுகிறார். :-)

ஹாரன் அடிக்கும் ஒரு காரின் மீது, முன்னால் இருக்கும் கார் வேண்டுமென்றே இடிப்பதைப் பார்த்து பதறும் அவரிடம்.. இப்படிப்பட்ட க்ரேஸி மக்கள் நிறைந்த ஊர் அய்யா நீங்கள் அமைதியா இருங்கள் என்னும் டேக்ஸி ட்ரைவரை விநோதமாக பார்த்தபடி நம்ம ஊர் கிராமத்தான் பட்டணம் வந்ததும் நடிகர்களை பார்க்க விழைவதைப்போல அவரும் ஹாலிவுட்டில் இறங்குகிறார்.

தங்குமிடத்தில் வரவேற்பில் வேலைசெய்யும் ஒரு திருநங்கையின் நட்பின் வழிகாட்டலில் ஒரு காரை பழய விலைக்கு வாங்கிக்கொள்கிறார். அந்த கார்கடைக்காரரிடம் உதவி கேட்டு இரவு நேரத்தில் வெல்டிங் வேலைகள் செய்து தன் மோட்டர் சைக்கிளை காரின் பின் இணைக்க வழி செய்துகொண்டு வரவேற்பாளினியின் உதவியுடன் மோட்டார் சைக்கிளை கப்பலிலிருந்து பெற்றுக் கொண்டு போட்டி நடக்கும் ஊருக்கு கிளம்புகிறார்..கார்கடைக்காரர் அவரின் திறமையைக்கண்டு அங்கே யே எப்போது வந்தாலும் வேலை தருவதாகவும் அழைக்கிறார். ஆனால் அவர் மறுக்கிறார்.

வழியில் மோட்டார்சைக்கிளை இழுத்து வரும் சக்கரங்களில் ஒன்று வீணாகப்போனதும் வழியில் ஒரு செவ்விந்தியரின் நட்பு.. வயதான அவர்களின் ப்ரச்சனைகளை பேசி நட்பாகி விடுகிறார்.
பிறகு ஒரு வயதான பெண்ணின் நட்பு ..
வழியில் ஒரு ஆர்மிக்கார இளைஞனின் நட்பு...

வழியில் கார் இல்லீகலாக பார்க் செய்திருக்கிறதே என்று பார்க்கவரும் போலிஸிடம் ஒன்றுமில்லை எனக்கு சின்னதா ஹார்ட் அட்டாக் வந்தது வண்டியில் தூங்கிவிட்டேன் என்று சாதாரணமாக சொல்கிறார்.

போட்டி நடக்கும் இடத்திற்கு வந்தபின் தான் அதற்கு ஒரு மாதம் முன்பே பதிவு செய்திருக்க வேண்டுமென்பதும் அவருக்கு தெரியவருகிறது... அவருக்காக சிலர் பேசிப்பார்த்தும் அவருடைய பழைய மோட்டார்சைக்கிளும் அதன் சேப்டி பற்றாக்குறையும் அவருடைய வயதும் என்று மறுப்புக்கு பல காரணங்களை அடுக்குகிறார்கள்..

பாதுகாப்பு அதிகாரிகளை மீறி அவர்

தன் வண்டியின் வேகத்தையும் தன்னுடைய திறமையையும் அவர் ஒரு முறை செய்து காட்டியபின் போட்டியில் அவரை சேர்த்துக்கொள்ளமுடிவெடுக்கிறார்கள்..
அதிக வேகம் செல்லும் போது வண்டி ஆடுவதும்... கால் வைக்கும் பகுதியில் ஏற்படும் அதிக சூடு அவர்காலை பதம் பார்ப்பதும் என்று அவருக்கே தெரியும் சில தவறுகளை சரி செய்ய அவர் முயற்சிகளை மேற்கொண்டாலும் சரிவராததால் முயற்சிகளை கைவிட்டு விட்டு முன்பு போலவே போட்டியில் கலந்து கொள்கிறார்.


அவருக்கு ஒரு மாத்திரையும் வண்டிக்கு ஒரு மாத்திரை குடுத்துவிட்டு வண்டியை ஓட்டும்
கடைசி காட்சிகளும் அவர் ரெக்கார்ட் ப்ரேக் செய்வதும் நமக்கும் உற்சாகமளிப்பதாக இருக்கிறது.. தொடர்ந்து முயன்றால் எல்லார் கனவும் ஒரு நாள் பலிக்கும் .

இது ஒரு உண்மையான மனிதனின் கதையாம்.. உண்மையான பர்ட் முன்ரோ 178.971 MPH வேகத்தில் ரெக்கார்ட் செய்திருக்கிறார்

"தி வேர்ல்ஸ்ட் ஃபாஸ்டஸ் இண்டியன்".. இது தான் படத்தின் பெயர். பர்ட்டாக நடித்தவர் அசாத்தியமான நடிப்பு ..ஆண்டனி காப்கின்ஸ். உறைந்த அந்த ஏரியின் மேல் நிகழும் அந்த போட்டியும் அதனைச்சார்ந்த அவருடைய ஏமாற்றமும் வெற்றியுமான நடிப்பும் அருமையானது..

January 31, 2008

kes - கெஸ்

சின்னப்பையன் கழுகு ஒன்றை வளர்க்கும் வித்தியாசமான காட்சியோடு அந்தப்படத்துக்கு விளம்பரம் பார்த்து கண்டிப்பா அந்த படம் வரும் அன்று
பார்க்கவேண்டும் என்று தோன்றியது. ஆனால் எதோ வீட்டுவேலைகளின் நியாபகத்தில் ஆரம்பத்தை விட்டுவிட்டேன்.. சில நிமிடங்களுக்கு பிறகுதான் பார்க்க ஆரம்பித்தேன்... ஆரம்பம் பார்க்காமல் பார்ப்பதா என்ற எண்ண ஓட்டத்தை படத்தின் காட்சிகள் ஓரம்கட்டி வைத்துவிட்டது. அந்த படம் "கெஸ்" kes. பிரிட்டிஷ் படத்துலயே நல்ல பத்து படத்துல ஒன்றாமே.

அப்பா வீட்டைவிட்டு போய்விட்ட ஒரு குடும்பம் . அம்மா அண்ணன் இருவராலும் எதற்கும் லாயக்கில்லாதவன் என்று உதாசீனப்படுத்தப்பட்டும், அண்ணனால் கெட்டவார்த்தையால் திட்டப்பட்டும் அடிஉதை என்று பாடாய்படுத்தப்படும் ஒரு சிறுவனின் கதை. அவனுக்கு கிடைக்கும் ஒரு புத்தகத்தை படித்து ஒரு கழுகைத்(கெஸ்ட்ரல் ) தேடி வளர்க்க ஆரம்பிக்கிறான்.
பள்ளியில் மற்ற பையன்களும் ஆசிரியர்களும் என்ன பாடுபடுத்தறாங்கன்னு பாத்தா அவன் பாடு ரொம்ப திண்டாட்டம் தான்.. உங்க வயசுப்பையங்க சொன்னா கேக்கறதே இல்லைன்னு கூப்பிட்டு வச்சு தினமும் ஒரு தடவை ஹெட்மாஸ்டர் கொஞ்சம் பசங்களைத் திட்டி பிரம்பால அடிச்சு அனுப்பறார். விளையாட்டு ஆசிரியர் கூட அவன் படற பாடு அய்யோ பாவம்.. பசங்க அடிக்கற லூட்டியும் கொஞ்ச நஞ்சமில்லை.

பள்ளிக்கூடத்தில் எதையும் கவனிக்காமல் கனவு கண்டு கொண்டு அதற்காக பிரின்ஸ்பாலிடம் திட்டும் பிரம்படியும் வாங்கிக்கொண்டு வகுப்பில் அனைவரும் ஏளனம் செய்யும் படியாக இருக்கும் அவனுக்கு அந்த கழுகை வளர்ப்பதுமட்டுமே இன்பமான பொழுதுபோக்காக இருக்கிறது. கெஸ் என்று அதற்கு பெயரிட்டு வளர்க்கிறான். கழுகை வளர்ப்பதைப்பற்றி வகுப்பின் நடுவில் அவன் திறமையாக பேசுவது மூலம் ஒரு ஆசிரியரின் கவனிப்பு அவன் பக்கம் நல்லவிதமாக திரும்புகிறது . எதோ தாரே ஜமீன்பர் பார்த்த மாதிரி இருக்கிறதா?

குழந்தைங்க என்ன வேலைக்கு நாளைக்கு போகலாம்ன்னு ஒரு இண்ட்ர்வியூ நடத்தறாங்க எனக்கு ஒரு நம்பிக்கையும் இல்லை உன்கிட்டன்னு அவர் திருப்பி அனுப்பறார். படிப்பு என்பது ஒரே மாதிரி இருப்பதுனால் எப்படி சில குழந்தைங்களோட தனித்தன்மை பாதிக்கப்படுதுங்கறதுக்கு இவன் உதாரணம். புத்தகத்தைப்பார்த்தே அவன் எப்படி எல்லாம் கழுகை பக்குவமா ஒரு வளர்க்கிற கலைய அழகா செய்யறான் ஆனால் அவன் எதுக்கும் உபயோகம் இல்லாத க்ரேட் வாங்கியிருக்கான்னு ஆசிரியர்கள் சொல்றாங்க..

சினிமாத்தனமாக அவன் கழுகை வளர்த்து பெரியாளாகி சுரங்கத்தொழிலாளியாகும் அந்த ஊரின் உழைக்கும் வர்க்கத்தின் ஒரே வழியிலிருந்து அவன் தப்பிப்பதாக எல்லாம் காண்பிக்கவில்லை. அவனுக்கும் அவன் அண்ணனுக்கும் நடக்கும் பிரச்சனையால் அவன் கழுகு இறப்பதாக காண்பித்து கதையை முடித்துவிடுகிறார்கள். அவங்க அண்ணன் கட்ட சொன்ன பந்தயத்தில் பணம் கட்டினா தோத்துப்போவான்னு இவனா முடிவு செய்து அந்த பணத்தை தன் கழுகுக்கு உணவு வாங்க உபயோகிக்கறதால அவங்கண்ணன் அந்த கழுகை கொன்னுடறான்.
இயல்பா நடக்கிற வகுப்பறை மற்றும் பள்ளிக்கூட காட்சிகளும் அவன் கழுகை பழக்கும் இடமும் உங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.
Kes is a British film from 1969 by director Ken Loach and producer Tony Garnett. The film is based on the novel, A Kestrel for a Knave written by Barry Hines in 1968.

January 8, 2008

லைஸ் மை ஃபாதர் டோல்ட் மீ

எல்லாரும் ரொம்ப பாராட்டின இஷானோட படம் பார்த்து என்னத்த கத்துக்கறது ... வேண்டாம் வேண்டாம்ன்னாலும் ரைம்ஸ் புக்கையும் மை ஃபர்ஸ்ட் டிக்ஸன்ரியும் வச்சிக்கிட்டு அப்பா வர வரை பதினொருமணியானாலும் ஆர்வமாய் படிச்சு நல்ல ஸ்கூலில் அவளாவே பேசி இடம் வாங்கிக்கிட்ட குழந்தை என் குழந்தை. ஆல்ரவுண்டர்ன்னு விளையாட்டா படிச்சே பேருவாங்கினவ தான்.. 4 வயசில் முத்திரைபிடிச்சு ஆடி ப்ளேஸ்கூல் ஆண்டுவிழாவில் என் கண்ணில் கண்ணீர் வரவைத்த குழந்தை.. நீங்க தான் அந்த் பொண்ணோட அம்மாவான்னு கேட்டு நாலு பேரு வந்து கை கொடுத்துட்டு போக வைத்த குழந்தை.



சொல்லிக்குடுத்த ஸ்டெப்பை அடுத்த நிமிசமே பிடிச்சிக்கிறா அவளுக்கு ஆர்வமிருக்கு நாட்டியம் கத்துக்குடுங்கன்னு ஆசிரியை சொன்னாங்கன்னும் டிவியை பாத்தாலோ இசை எங்கிருந்தோ கசிந்து வந்தாலும் கூட தானாக ஆடிய கால்களின் ஆர்வம் கண்டும் சேர்த்தாயிற்று..படிபடி என்று போட்டு பயமுறுத்தவில்லை.. 40 க்கு 39 வாங்கிய பெண் இப்போது படிக்க உக்காருவதே இல்லை 30 வாங்கினாலும் சரி அம்மா... பாத்துக்கோ ன்னு விட்டாச்சு.. சரி நாட்டியத்துக்கோ ஆசைப்பட்டு சேர்ந்த இசைவகுப்போ வீட்டில் பயிற்சி எடுத்தால் தானே ..அடிக்கக்கூடாது சரி திட்டக்கூடாது சரி... அம்மாதங்கமே கொஞ்ச்ம் ப்ளீஸ் கொஞ்சம் எதுலயாவது கவனம் வையேன்னு கெஞ்சும் நிலைமையா இருக்கு...


இதுல இந்த படம் பாத்து "இங்க பாரு என்ன வருமோ அதான் வரும் சும்மா நை நைன்னு எதாச்சும் என்னை சொல்லக்கூடாது ஆமாம்" ன்னு சொல்லாம ... ம்.. சரி சரி "ஹயால் கர்ன்னா ன்னா என்ன ..எந்த கஷ்டத்துலயும் . மெ ஹூன்னா " ன்னு சொல்றதுக்கு அமீர் சொல்ற மாதிரி நீயும் அப்பாவும் இருக்கீங்க.. ஒகே தேங்க்யூன்னு சொல்லும் குழந்தைக்கு அப்பாடா நல்லவேளை நம்மளை திட்டலன்னு சந்தோஷம் தான் பட்டுக்கனும்... என்னதான் குழந்தை தன் இஷ்டம் போல இருக்கறதுக்கு விடனும்ன்னாலும் சாக்கடையில் தலை பட ஒரு குழந்தை விளையாட எந்த அம்மா விடமுடியும்..

---------------------------------------

பொல்லாதவன் முதல் பாதி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது .. நடுத்தரவர்க்கத்து பையன் காதலிக்கறதும் அதை நண்பனிடம் திருப்பி திருப்பி .. சொல்வதும் இன்னைக்கு எத்தனாவது தடவைன்னு நண்பர்கள் கேட்டும் தொடர்வதும் அவள அங்க பாத்தேண்டா இங்க பாத்தேண்டா திரும்பி பாத்தாடான்னு ... அதை நண்பர்களூம் பாவமா கேக்கறதும் ... இயல்பா என்னவோ சிறுகதைமாதிரி இருந்தது முதல் பாதி பின்பாதி சினிமாத்தனம் ஒருத்தனே அத்தனைபேரை அடிக்கறது .. அது ஆரம்பிச்சிட்டோம் முடிவ பாத்துடலாம்ன்னு பாத்தேன்..

------------------------------------------

மிருகம் ம் நல்லா நடிக்கிறாரு ஹீரோ அதுவும் கடைசியில் உருக்கமா நடிச்சிருக்காரு.. பிச்சக்காரிக்கிட்ட போனதுக்கப்பறம் கீழே விழறானா பிச்சக்காரி கிட்ட இருந்து எயிட்ஸ் வந்துதுன்னு கிராமத்துமக்கள் நினைக்கக்கூடாது பாக்கும் போது இன்னும் விளக்கமா சொல்லி இருக்கலாம்ன்னா அப்பறம் டாக்குமெண்ட்ரி ஆகிடும்... மனைவியும் தாயும் அவனுக்கு செய்கிற சேவையில் அவன் திருந்துவது நல்லாத்தான் இருக்கு ... எந்த நோயுக்கும் அன்பு ஒன்று தானே மருந்து கூடக்கொஞ்சம் நாள் வாழ்வதற்கு.... என்னைக்காச்சும் உனக்காக உன் மகன் சண்டை போட்டிருக்கானா எனக்காகத் தான என் புருசன் ஒருத்தன் கிட்ட சண்டை போட்டான்னு முட்டாள் தனமா பேசும்போது மட்டும் சிரிப்பு வந்தது.. அது அவளுக்காக இல்லை அவனோட உடமையை ஒருத்தன் தப்பா பேசிட்டான்னு தான் தெரியலை அவளுக்கு. அய்யோ எங்க போனாலும் ஈயம் விடாது போலயே... கடைசியில் ஊருக்கே த்ண்ணி கிடைக்கசெய்து நல்லவனாகி மத்தவங்கள மனுசங்களா மிருகமான்னு யோசிக்க வச்சிட்டானாம். எப்படி வாழக்கூடாது எப்படி சாகனும்ன்னு சொல்லி இருக்கானாம்.

----------------------------------


எவனோஒருவன் பாவம் அவ்வளவுதான் நியாயத்துக்கு எல்லாம் மரியாதை.. எதோ படத்தை பார்த்தமோ நாம வாங்குகிற பொருளுக்கு பில் வாங்கினோமா நம்ம மட்டில என்னமுடியுமோ அப்படி ஒழுக்கமா இருக்க முயற்சிக்கனும்... அவன் மாத்ரி எல்லாரும் ஒழுக்கமா இல்லைன்னா சிலர் மட்டும் ஏண்டா ஒழுக்கமா வாழ்ந்து ஏமாளிபட்டம் வாங்கிக்கட்டிக்கனும்ன்னு கேட்டா இப்படித்தான் தியாகி ஆகி சாகனும்.

------------------------------------

லைஸ் மை பாதர் டோல்ட் மி ஒரு கனாடியன் படம்.. சின்னபையன் ஒருத்தன் அவன் தாத்தாக்கூடவே ஒட்டிக்கிட்டு அவர் சொல்லித்தர கடவுள் நம்பிக்கையை எல்லாம் கத்துக்கிறான்.. அவர் கூட குதிரை வண்டியில் போறது அவனுக்கு ரொம்ப பிடிக்குது." தாத்தா இந்த இலையெல்லாம் யார் பெயிண்ட் பண்ரா".. கடவுள் ன்னு சொல்ற தாத்தாகிட்ட "எந்த ப்ரஷ் வச்சு செய்யறாரு" ன்னு கேள்வி மேல கேள்வி கேட்பது அழகு.





அவரும் சலிக்காமல் கடவுள் பற்றி விதம்விதமான விசயங்களைச் சொல்லிக்கொடுக்கிறார். ஆனால் பையனோட அப்பா அதான் அந்த தாத்தா இருக்காரே அவரோட மருமகனுக்கு இது பிடிக்கலை.. தாத்தாக்கிட்ட இருந்து பிரிக்க முயற்சி செய்து தோத்து அந்தகோபத்துல இருக்கார். மழை உங்க தாத்தா சொல்ற மாதிரி கடவுள் அனுப்பறது இல்லை அது மேகத்திலிருந்து வருதுன்னு சொன்னா போங்கப்பா பொய் ன்னு ஓடரான். அந்த குட்டி பையனை யாரும் அடிக்கக்கூடாதுன்னு சட்டம் போட்டுருக்கார் தாத்தா.





குதிரை தான் அந்த தாத்தாக்கு ரொம்ப நண்பன் அதோட லாயம் நடுவில் இருக்கரதால பக்கத்துவீட்டம்மா ப்ரச்சனை செய்யரா... இன்னொரு குழந்தை பிறக்கிறது அவங்க வீட்டுல .அப்பறம் அவன் சந்தேகம் எப்படி குழந்தை பிறக்குது , இந்த வயசில் நமக்கு ஏன் அம்மா பால் கொடுப்பதில்லைன்னு..



அவன் வயதுத்தோழியோடு லாயத்தில் பேசிக்கொண்டிருக்க
தாத்தா மறைந்திருந்து அந்தகுழந்தைகள் பேசிக்கொள்வதை கேட்டு சிரிக்கும் காட்சியில் குழந்தை எப்படி எதுவழி பிறக்கும் என்று
சொல்ல ஆரம்பிக்கும் போது தாத்தா மிரண்டு போய் எட்டி பார்க்க அங்கே ஒரு ஆட்டுக்குட்டியை வைத்து அந்த பெண் சொல்லிக்கொடுப்பாள்.


தன் வயசுத்தோழி சொல்வதும் மற்றொரு நாள் ஒரு வீட்டில் பார்க்கிற தவறான ஒரு காட்சியும் அவனுக்கு பெரியவங்க எல்லாரும் பொய் சொல்றாங்கன்னு ஒரு எண்ணத்தை உருவாக்கி அவன் செய்யக்கூடாததுன்னு தாத்தா சொல்லி இருந்ததை செய்யத்தூண்டுகிறது.




குதிரை லாயத்தின் குப்பையெல்லாம் கொண்டுபோய் பக்கத்துவீட்டுக்கு முன் போட ப்ரச்சனை பெரியதாகி லாயத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார் தாத்தா.. ஆனால் அதற்கு வருகிற அதிகாரிகள் வயதாகிவிட்ட குதிரைக்கு ஏன் இத்தனை மதிப்பு என்கிற போது உங்கள் வீட்டு வயதாகி விட்ட பெரிவர்களுக்கு இதான் கதியா என் நண்பன் அந்தகுதிரை அது இறக்கும் வரை இங்கே தான் இருக்கும் நான் இருக்கும் வரையும் கூட என்று கூறுகிறார்.



தாத்தா உயிருக்கு போராடும் நிலையில் அவனை சொந்தக்காரர்கள் வீட்டில் கொண்டுவிடும்போது தாத்தா நான் அம்மா கிட்ட சொல்லி இருக்கிறேன் அவங்க குதிரையை பாத்துகறதா வாக்குறுதி குடுத்துருக்காங்க நான் போயிட்டுவரேன்னு சொல்லும் போது அந்த சின்னப்பையனுக்குத்தான்
தாத்தாமேல என்ன ஒரு அக்கறை....


திரும்பி வந்து குதிரையும் தாத்தாவும் இல்லாதது அவனுக்கு அதிர்ச்சியாகி தாத்தாவை அழைத்துக்கொண்டே பனிக்குள் ஓடுகிறான்.. வீட்டில் அவன் தந்தை இனி அவன் வரட்டும் என் மகனாய் வளர்க்கிரேன் என்று காத்திருக்கிறான்..

எப்பவாச்சும் இப்படி வித்தியாசமாய் ஒரு படம் பாத்தா நல்லாத்தான் இருக்கு இதுல இருந்து ஒன்னும் கத்துக்கவேண்டாம் பாருங்க..

April 18, 2007

வாழ்வென்பது வண்ணங்கள்

ரசித்த திரைப்படங்களின் வரிசையில் இன்னுமொரு இரானிய திரைப்படம். கப்பா..gabbeh . ஆரம்பத்திலிருந்தே படத்தின் வண்ணம் மனதை அள்ளிக்கொண்டு போனது. கதாநாயகியின் அந்த நீல உடை அவ்வளவு அழகு. கதையில் முதலில் வரும் முதிர்ந்த தம்பதியின் பேச்சுக்களும் , அந்த வயதான பெண்மணியின் உடையும் கதாநாயகியின் உடையும் ஒரே மாதிரி இருப்பது என்று எடுக்கப்பட்ட கதை. எடுக்கப்பட்ட விதம் வித்தியாசமானது.




இரானின் நாடோடிக் குடும்பத்தில் ஆடுகளை மேய்ப்பதும்
அதன் கம்பளியெடுத்து செய்யப்படும் ஒரு வகையான கப்பா எனப்படும் விரிப்பு செய்வதும் கதையின் ஓட்டத்தோடு ஓட்டமாய் நமக்கும் புரிகிறது. ஏதோ நாமும் அந்தக் கூட்டத்தில் இருப்பது போன்றதொரு உணர்வு . வண்ணங்களுக்காக மலர்களைத் தேடி அலைகிறார்கள். மலர்களை வெந்நீரில் போட்டு சாயமிட்டு விரிப்புகளை செய்கிறார்கள்.

கதாநாகியின் பெயரும் கப்பா தான் அவள் அந்த முதியவர்களின் விரிப்பிலிருந்து வெளிப்பட்டு அவளுடைய கதையைச் சொல்லுகிறாள். முதியவர்களோடு பேசும் இளம் கப்பா ஒரு கற்பனையே.முதியவரின் பேச்சு அடிக்கடி அப்பெண்ணை அழகாயிருக்கிறாய் உன்னைக் கல்யாணம் செய்யப்போகிறேன்.. உண்மையைச்சொல் என்னைக் காதலிக்கிறாய் இல்லையா? என்று போக வயதான பெண்மணியின் சின்ன ப் பொறாமைக்கோபம் என்று போகும் மிக மெல்லிய காதல் கதை.


கப்பா ஒரு குதிரை மேல் வருபவனை விரும்புகிறாள். அவன் இக்கூட்டத்தைத் தொடர்ந்து வந்து ஓநாயைப் போல சத்தமிடும் போதெல்லாம் கப்பா திரும்பிப் பார்த்து சிரிப்பது ஒரு கவிதையான காட்சி. அவள் தந்தை திருமணத்தை குடும்பத்தில் நிகழும் பிறப்பு இறப்பு திருமணம் என்ற காரணங்களால் தள்ளிப்போட்டிருப்பார். அவளாகச் சென்றால் துப்பாக்கியால்
சுட்டுவிடுவார் என்று காரணம் கூறுகிறாள். குதிரைமேல் அவளும் காதலனும் இருப்பது போன்றதொரு படம் வரைந்த விரிப்பை தோள் மேல் சுமந்தபடி அவள் ஒவ்வொரு இடமாக மாறும்போதும் அவன் பின் தொடர்ந்தவண்ணமிருப்பான்.

காலையில் பெண்களும் இரவில் ஆண்களும் காவல் காக்க குடும்பத்தின் மூத்தமகளாக பொறுப்புகளுக்கு நடுவில் தத்தளிக்கிறாள்.

அவளின் சித்தப்பாவாக வருபவர் நிறங்களைப்பற்றி நடமாடும் நாடோடிக் குழந்தைகளின் பள்ளி ஒன்றில் சொல்லிக்கொடுக்கும் காட்சியும் அருமையானது.
ஃப்ரேமுக்கு வெளியே கையைக் கொண்டு சென்று அவர் நிறங்களை வானத்திலிருந்து மலர் தோட்டத்தில் இருந்து எடுப்பதும் அவற்றின் சேர்க்கை அளிக்கும் நிறங்களைப்பற்றியும் விளக்குவதும் அழகு.

அவர் திருமணத்தைக் காரணம் காட்டி ஒருமுறை கப்பா தடுக்கப்படுகிறாள். அவர் ஒரு பாடகியைக் கல்யாணம் செய்யவேண்டும் என்கிறார். ஊரில் எல்லாரும் அழகாயிருக்கிறார்கள் ஆனால் அவர் நினைப்பது போல் யாரும் இல்லையாம். மற்றொரு ஊரில் அப்படி ஒரு பெண்ணைக் கண்டதும் அவர் கேட்கிறார் நீ பாடிய பாடல் நன்றாக இருக்கிறது . யாரை நினைத்து எழுதினாய் ? அவள் அப்படி யாரும் இல்லையென்றதும் சரி நான் சரியாக இருந்தால் என்னைத் திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்கிறார் .

அப்போது அவள் கோபமாக இருந்தால் என்னை என்ன செய்வாய் என்று ஒரு கேள்வி கேட்கிறாள் பாருங்கள் .
அந்த வயதான சித்தப்பாவுக்குள் இருக்கும் ரொமண்டிக் இளைஞன் ஒரு கவிதையைப்பாடி அவளை சம்மதிக்க வைக்கிறார் .




அதன் பிறகு அவள் தாயின் பிரசவம் காரணமாகி தடுக்கிறது.

கடைசியில் ஒரு தருணத்தில் தப்பித்து செல்லும் கப்பாவையும் குதிரைக்காரனையும் தந்தை பின் தொடர்ந்து செல்கிறார் . துப்பாக்கி இரண்டு முறை முழங்குகிறது. வரும்போது அவர் கப்பாவின் விரிப்பை எடுத்து வந்து கூட்டத்தின் முன் போடுகிறார்.

முதியபெண் சொல்கிறாள் நாங்கள் இறக்கவில்லை என் அப்பா என்னைச் சுடவும் இல்லை. அது மற்ற தங்கைகள் ஓடிப்போகாமல் இருக்க என் தந்தை சொன்ன பொய் என்று.
Screenwriter, Editor, Set Designer, Sound Designer & Director: Mohsen MakhmalbafDirector of Photography: Mahmoud KalariSound: Mojtaba MirtahmasbExecutive Manager and Still Photographer: Mohammad Ahmadi Music: Hossein AlizadehCast: Abbas SayyahiShaghayegh JowdatHossein MoharramiRoghayyeh MoharramiParvaneh Ghalandari1996, Color, 72 mins

February 26, 2007

கேள்விகளோடு ஒரு திரைப்படம்

கார்டூன் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம்
எப்போது முடியும் எப்போது முடியும் என்று கேட்டுக் கொண்டே இருந்தேன். "அப்படி என்ன படம் தான் பார்க்கப் போற. 9 மணிக்கு முடியும் தந்துடறேன் கண்டிப்பா" . எப்போவும் நல்ல படம் டிவில வருவதாக இருந்தால் ஒன்று நேரம் மறந்து வேறு வேலையில் மூழ்கிப் பார்க்க தவறிப் போய் விடும் , இல்லை அப்போது தான் யாராவது வீட்டிற்கு வந்து இருப்பார்கள்.


தி பியானிஸ்ட் படத்திற்காக வேலை எல்லாம் முடித்து விட்டு காத்திருக்கிறேனே அது தான் காரணம். ஆனந்த விகடனில் அதன் விமர்சனம் படித்தது தான் இப்போது மீண்டும் புத்தகத்தை தேடி எடுத்துப் படிக்க மனநிலை இல்லை. சரி இன்னமும் கார்டூன் திரைப்படம் முடியவில்லையே இணையத்தில் தேடலாம் . தமிழில் தேடி விட்டு கிடைக்கவில்லை என்றால் ஆங்கிலத்தில் தேடுவோம் என்று இருந்தேன்.

தமிழில் பாஸ்டன் பாலாவின் தளம் வந்து கூகிளில் விழுந்தது. அவருடைய விமர்சனத்தை படிக்க இங்கே கிளிக்கவும் படித்தேன் . கதையின் களஅடிப்படை புரிந்தது, நல்ல விமர்சனம் . 'உன் படம் ஆரம்பிக்கப்போகுது வா' பெண் அழைத்தாள். அவளுக்கும் ஆர்வம் என்னதான் அம்மா பார்க்கப் போகிறாள் என்று . கதையைப் பற்றி சின்னதாக விளக்கம் சொன்ன போதும் இத்தனைக் கஷ்டத்துக்கு நடுவில் கதாநாயகன் எப்படி சிறுவயதில் இருந்து இவ்வளவு வளர்ந்தான்? என்று பெண்ணின் கேள்வி. அவள் கோணத்தில் அவனுடைய சிறு வயதுகாலம் தான் கவலை தந்திருக்கிறது.



குண்டுகளுக்கு நடுவில் பியானோவைத் தொடர்ந்து வாசிக்கும்போதே கதாநாயகனுக்கு இசையில் எத்தனை ஈடுபாடு என்று புரிந்தது . மற்ற படங்களைப் போல சாகசங்கள் நிகழ்த்தாமல் ஓடி ஒளியும் கதாநாயகன். நம்மைப்போல ஒருத்தன் என்று தோன்றுகிறது.
"இவர்கள் வேறு நாட்டுக்கு ஓடிப்போக முடியவில்லையா?" அடுத்தக் கேள்வி.



தனி இடம் பிரித்து யூதர்களை வைத்த பின் அந்தபக்கத்துக்கு போய் வரும் ஒரு சிறுவனை சுவற்றின் துளைக்கு அந்த பக்கத்தில் இருந்து நாஜிக்களில் ஒருவன்
இழுக்க இந்தப்பக்கம் இவன் இழுக்க கடைசியில் அந்த சிறுவன் இறந்து இந்தபக்கம் வரும்போது தன்னால் முடியவில்லையே என்று அப்படியே அந்த உடலை விட்டுப் போகும் போது "அம்மா அவன் செத்து விட்டானா "- பெண். "ம்''.



எதிர் வீட்டிற்குள் நுழைந்து சாப்பாட்டு மேஜையில் இருக்கும் அனைவரையும் கைகளை மேலே தூக்கியபடி அழைத்து சென்று வெளியே ஓடவிட்டு கொல்வதும் , எழமுடியாத சக்கர நாற்காலி கிழவனை பால்கனி வழியே தூக்கி எறிவதும் "அம்மா இப்போ எதுக்கு இந்தப் படத்தைப் பார்க்கிறே" நல்லப்படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று அதனால் தான். நிஜத்தில் இன்னும் இது போல் உலகத்தில் நடக்கின்ற இடங்கள் இருக்கிறது . பாவமில்லையா ?அவர்கள்.



எங்கே அழைத்துப் போகிறார்கள் என்று கேட்டதற்கு நெற்றியில் சுடப்பட்டு இறக்கும் பெண் , கிளிக்கூண்டை கையில் வைத்துக் கொண்டு தனியே அழும் குழந்தை, கணவனைத் தேடும் வயதான கிழவி ஒரு மிட்டாயை கையிலிருக்கும் கடைசி டாலர் பணம் குடுத்து வாங்கி
நகவெட்டியின் கத்தியால் ஐந்தாக வெட்டி உண்பது ,
அவ்வப்போது குறிப்பிட்ட சிலரை மட்டும் சுட்டி அழைத்து கொல்லப்படும் மக்கள் ஒவ்வொன்றும் தாங்க முடியாமல் கேள்விகளாய் கேட்டுக் கொண்டிருந்தாள் பெண். குழந்தைகளும் இருக்கிறார்களே? போய் தூங்கு வேண்டாம் என்றாலும் அவள் மனம் கேட்கவில்லை. எனக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விட விருப்பமில்லை.




ஓடி குண்டடி பட்டு மடிந்து விழுந்து கிடக்கும் பெண்ணருகில் கடந்து போகும் படையினருக்கு அஞ்சி இறந்தவன் போல் படுத்துக்கிடக்கும் காட்சியில் என் மனதுக்கு தோன்றியதை மகள் வெளிப்படையாக சொன்னாள். "சொல்லமுடியாது செத்துப் போனவன் மேலேயும் சுட்டுவிட்டும் போகலாம் இவர்கள் இல்லையா அம்மா".




தனியாக ஒரு வீட்டில் ஒளிந்திருக்க நேரும் போது பியானோ அருகில் இருக்க [வாசித்தால் மாட்டிக்கொள்வானே ] வாசிக்க இயலாமல் போய்
அதன் மூடியை திறக்கும் காட்சியில் அம்மா வாசித்து விடுவானோ இத்தனை கஷ்டமும் பியானோ வாசிக்கத்தானே ? அதற்குத்தானே உயிரே வாழ்கிறான்.
ஒரு நல்ல நாஜிப் படை வீரன் வந்து உதவும் வரை அவளுக்கு மனதே இல்லை . இவன் நல்லவனோ காட்டி குடுக்க மாட்டானே? நான் தான் பியானிஸ்ட் கடைசி வரை உயிரோடு இருப்பான் கவலைப்படாதே என்று சமாதானம் சொல்லி வைத்திருந்தேன். நீ உயிர் பிழைத்து என்ன செய்வாய்?.

நாஜியின் கேள்விக்கு பியானோ வாசிப்பேன் - அவன் பதில் . வாசித்துக் காட்டும் பொழுது நாஜியின் முகமாற்றம் இசையின் அழுத்தத்தால் அவன் இளகும் மனநிலை அருமையான நிகழ்வு.
இசையினை கேட்டபடி படத்தைப் பற்றி அறிய படத்தின் தளம்.


இதுபோல் இன்னமும் இலங்கையில் இராக்கில் குண்டுகளுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு நம்மைப் போல நிம்மதி கிடைப்பது எப்போது ? என்று தெரியவில்லை.

February 19, 2007

NOT ONE LESS

நான் ரசித்த படங்களின் வரிசையில் இது சீனத்திரைப்படம். எத்தனையோ விருதுகளைப் பெற்ற படம். சீனாவின் ஒதுக்குபுறமான ஒரு மலைப்பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்
விடுமுறையில் செல்ல நினைக்கும்போது அதுவரை பள்ளியை நடத்த அவருக்கு ஒரு 13 வயது சிறுமிதான் கிடைக்கிறாள். வறுமையும் பணத்தேவையும் காரணமாக
வேலைக்கு வரும் அவளை ஒரு குழந்தை குறைந்தாலும் அவளுக்கு கிடைக்க இருக்கும் பணம் குறையும் என்று
சொல்லி விட்டு போகிறார்.

அவளும் தனக்கு தெரிந்தவற்றை வைத்து குழந்தைகளுடன் குழந்தையாக வகுப்பு நடத்துகிறாள்.
ஒரு மாணவன் வறுமையால் படிப்பை விட்டு வெளியூர் சென்று வேலை செய்யப் போய் விடுவான். அவனை திருப்பி எடுக்க அவள் செய்யும் முயற்சியே கதை.

பள்ளியில் பாடம் எடுப்பதை கவனிக்கும் ஒருவர் ஆகா முன்பிருந்த ஆசிரியரை விட இவள் நன்றாக எடுக்கிறாளே
என்று நினைத்துப் போவார். காரணம் என்னவென்றால் அவள் எப்போதும் கணிதமே எடுப்பாள். ஒவ்வொரு மாணவனும் எத்தனை கையிருப்பில் வைத்து இருக்கிறான் அதனை சேர்த்தால் எவ்வளவு வரும் மொத்தம்? நகரத்துக்கு செல்ல டிக்கெட் எவ்வளவு? அதற்கு இன்னும் எவ்வளவு தேவை.இப்படி.


அனைவருமே செல்லவேண்டுமானால் பஸ் டிக்கெட்டுக்கு ஆகும் செலவு என்ன? அதற்கு எப்படி சம்பாதிக்கலாம் ? என்று எப்போதும் கணிதம் தான் அதற்கப்புறம் வகுப்பில்.

அருகில் இருக்கும் ஒரு செங்கல் சூளையில் செங்கல் அடுக்கி பணம் சம்பாதிப்பார்கள்.எத்தனை அடுக்கினால் எத்தனை கிடைக்கும் என்று கணக்கிடுவார்கள். அவர்கள்
முயற்சித்ததில் உடைந்தவற்றுக்கு போக முதலாளி தருவது போதாது. மீண்டும் மீண்டும் பணம் சேர்ப்பார்கள்.


ஒரு முறை எல்லாரும் கடைக்கு சென்று கோலா வாங்குவார்கள். அவர்களிடம் இருப்பதில் ஒன்று தான் வாங்கலாம். வாங்கி அனைவரும் அந்த கேனை பகிர்ந்து குடிப்பார்கள் மிக அருமையான காட்சி. இதில் ஒன்றுமே இல்லையே இதற்கா இத்தனை என்று பேசிக்கொள்வார்கள்.

கடைசியில் அதிகம் பணம் சேர்க்க முடியாது ,அவள் மட்டும் போய் தேடுவதே சரி என்று தனியாக புறப்பட்டு தேடி அலைவாள்.கண்டுபிடித்தும் விடுகிறாள். அவளால் அந்த பள்ளிக்கும் நன்மை ஏற்படுகிறது.


யாருமே இதற்கு முன் நடிக்காதவர்களாம் அதனாலேயே நன்றாக இருக்கிறது போல் தெரிந்தது. இயல்பாக தோன்றியது. சீனாவின் இயற்கை , மக்களின் ஏழ்மையை காட்டும் விதம் ,குழந்தைகள் என்று படத்தை பார்க்கவைக்க நிறைய காரணிகள் .கதை மற்றும் படத்தைப் பற்றி இன்னும் விரிவாக இங்கே இருக்கிறது.

February 2, 2007

கணவனாக காதலியாக தோழனாக

yentl இது நான் ரசித்த ஒரு படத்தோட பேர். கதாநாயகி எல்லாருக்கும் தெரிஞ்ச பார்பரா. அப்பாகிட்ட யாருக்கும் தெரியாம பாடம் கத்துக்கிற, படிக்கணுங்கிற ஆர்வம் நிறைய இருக்கிற பொண்ணு. அவங்க இருந்தது பொண்ணுங்க படிக்கக் கூடாது இதெல்லாம்ன்னு சொல்லி வச்சிருந்த காலத்துல.
பெரிய பெரிய நைந்து போன எழுத்துக்களை எல்லாம் படித்து அப்பாகிட்ட விளக்கம் கேட்டு நச்சரிக்கும் அன்பு குழந்தையாவே காலத்தை ஓட்டிவிட்டவள். எனக்கு பின்னால் என்ன செய்வே என்று கேட்டு அங்கலாய்க்கும் தந்தைக்கு பதில் சொல்லத்தெரியாமல் படிப்பு ஒன்றையே நினைக்கும் பெண்.
அந்த ஒரே பிடிப்பான தந்தை இறந்தபோது, இனி தனக்கு படிப்புதான் எல்லாம் என்று ஆண் வேடமிட்டு ஊரைவிட்டு புறப்படுகிறாள்.வேடம் போடும் போது யாரும் நம்மை நம்புவார்களா என்ற எண்ணம் இருந்தாலும் , வேறு வழியில்லை...படிக்க வேண்டுமானால் ஆணாய் இருந்தால் தான் படிக்க முடியும் என்று முடிவெடுக்கிறாள்.
கல்லூரியில் கிடைக்கும் நண்பனுக்கு ஒரு இனிய தோழனையாய் மாறி கல்வியுடன் நட்பும் கிடைக்க மகிழ்ந்திருக்கிறாள். அவன் மேல் ஏற்படும் அன்பினைக்கூட படிப்பிற்காக அவள் புறந்தள்ளி விட்டுவிடுகிறாள்.
கதாநாயகனுக்கும் தோழனை பிரிந்தே இருக்கமுடியாத
அன்பு .
இடையில் கதாநாயகனுக்கு ஒரு பெண்ணை மணமுடிக்க ஆசையேற்படுகிறது.ஆனால் அவர்கள் மதக்காரணங்களால் அவன் மணக்க முடியாமல் ஆகிறது.
அப்போது அவன் தோழனிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறான். நீ அவளை மணந்து பின் பிரிந்து விட்டால் நாங்கள் மணந்து கொள்ள தடையிருக்காது.( என்ன வழக்கமோ) ...ஆனால் மறுத்தால் நட்பினை விலக்கிவிடுவானோ என்று yentl அந்தப் பெண்ணை ஆணாக இருந்து மணந்து கொள்கிறாள்.
சிறிது சிறிதாக தன்னை மணந்தவரிடம் அந்த பெண்ணும் ,எத்தனை தன்மையாக இருக்கிறார்..பெண்ணை படிக்க சொல்கிறாரே எத்தனை நல்லவர் என்று மனமாற்றம் கொள்வதை மென்மையான காட்சிகளில் காட்டுகிறார்கள். பிரியும் கட்டத்தில்" நீங்கள் வரும்முன் நான் நீங்கள் சொன்னது போல் படித்து உங்களுக்கு பிடித்தமான மனைவியாக மாறி இருப்பேன்" என்று yentl லிடம் சொல்லும்போது இவ்வளவு அன்பாக இருக்கிறாளே என்று வருந்தும் காட்சியும் அருமையாக இருக்கிறது.



தோழனிடம் அவள் என்னை விரும்பத் தொடங்குகிறாள் என்று தெரிகிறது என்னால் மேலும் நடிக்க இயலாது என்று சொல்லி yentl பிரிகிறாள். அப்போது நான் ஒரு பெண் , உன் மேல் எனக்கும் அன்பிருந்தது என்று சொல்லி ,அவர்கள் திருமணம் புரிந்து நன்றாக இருப்பதையே தான் விரும்புவதாக கூறி விடை பெறுகிறாள்.
ஒரே பெண் கணவனாக, தோழனாக ,காதலியாக .
படிப்பின் மேல் இருந்த காதலால் தன் பெண்மையை மறைக்க நேர்ந்ததையும், தன் அன்புக்குரியவனை இழக்க நேர்ந்ததையும் அவள் தனிமையில் அழுது தீர்க்கிறாள்.
அது என்னமோ உணர்வு பூர்வமான படங்கள் தான் அதிகம் பிடிக்கிறது . இதெல்லாம் ஒரு படமான்னு சிலருக்கு தோணலாம். ஆனா நெகிழ்ச்சியான ,மனதை தொடும் கதையாக எனக்கு பட்டது.பார்த்தது இந்தியாவிற்கு என்று தணிக்கை செய்யபட்ட பதிப்பு.
directed by Barbara stresisand அவங்களே கதாநாயகி பாடி நடித்து இருக்காங்க.papa , can u hear me கேட்க உருக்கும் பாட்டு.

January 23, 2007

THE LAND HAS EYES

நான் ரசித்த படங்களின் வரிசையில் இன்னொன்று THE LAND HAS EYES .ஒரு வகையில் போராடும்பெண்ணின் கதை என்பதால் மிகவும் பாதித்த கதையும்கூட. Fiji யின் ஒரு அழகுதீவின் மிக எளிமையான ஒரு பழங்குடி சிறுமியின் கதை.





கடலில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு பெண்ணை அவளின் சகோதரர்களில் ஒருவனே தவறுக்குட்படுத்தும் போது மற்ற சகோதரர்களும் அவளை வெறுத்து யாரும்இல்லா தீவில் விட்டுச் செல்ல , தூக்கியெறியப்பட்ட அந்தப் பெண் பின்னாளில் ரோட்டமென்களின் முதல் தலைமுறையாகவும் அவர்களின் வீரப்பெண்மணியாகவும் கருதப்படுகிறாள்.

THE LAND HAS EYES
THE LAND HAS TEETH
AND KNOWS THE TRUTH


இந்த கதையினை தந்தை சொல்லக்கேட்டு வளரும் சிறுமி விக்கி . அவள் தந்தையை திருட்டு குற்றம் சாற்றி ஏழ்மையின் கரங்களுக்கு பலி கொடுக்கும்போது தானும் தூக்கியெறியப்பட்ட அந்த வீரப்பெண்ணும் ஒன்றே என்று உணர்கிறாள்.



தானும் அவளைப்போல தன்னுள்ளிருக்கும் தைரியத்தை திரட்டி எதிர் வரும் துயரினை எதிர்த்து கடும் முயற்சியால் படிப்பதற்கு ஊக்கத்தொகையை பெற்று மேற்படிப்புக்காக fiji செல்கிறாள்.



பக்கத்து வீட்டு பணக்காரனால் தந்தை காவலர்களிடம் செய்யாத குற்றத்திற்காக தலைகுனியும் போது ஒளிந்து இருந்து மொழிபெயர்ப்பாளன் பணத்திற்கு விலைபோனதை தந்தைக்கு சொல்லுகிறாள்.தந்தை இந்நிலத்திற்கு கண் உண்டு உண்மை யை பார்த்துக் கொண்டிருக்கிறது கெட்டது செய்தவனை அது நிச்சயம் பார்த்துக்கொள்ளும். இதற்குதான் உன்னை படிபடி என்கிறேன். என் கனவை நிறைவேற்று என்ற தந்தைக்காக கைவினை பொருட்கள் தயாரித்து வீட்டையும் காப்பாற்றுகிறாள்.



அந்த பழய நம்பிக்கை உண்மை என்பது போல சில நாட்களிலேயே அந்த பணக்காரன் நண்பன் மொழிபெயர்ப்பாளனால் வெட்டுப்பட்டு இறக்கிறான்.

எல்லா நிலங்களுக்கும் கண் இருக்கிறதா?

January 22, 2007

ZOZO

zeestudio வில் zozo என்ற திரைப்படத்தை , ஆரம்பித்த சில நிமிடங்களுக்கு பிறகு, பார்க்க நேரிட்டது.இணையம் வேலை செய்யாதபோது ரிமோட்டால் தொலைக்காட்சியை ஒரு வலம் வந்தபோது ஆங்கில மொழியாக்கத்துடன் ஓடிக் கொண்டிருந்த அப்படம் இருநிமிடங்களிலேயே இது ஒரு நல்லபடம் என்பதை உணர்த்தி தொடர்ந்து பார்க்க வைத்தது.

zozo என்கிற 12 வயது பையன் லெபனனின் சிவில் போருக்கு நடுவில் ஒரு சாதாரண வாழ்வு வாழ்ந்து கொண்டு உறவுகளின் நட்புகளின் அணைப்பில் கனவுகள் காண்பவனாக இருக்கிறான். ஒரு நாள் அவன் குடும்பத்தில் எல்லோரையும் இழந்து தனியாகிறான். அவனுடைய
தாத்தா பாட்டி சில வருடங்களுக்கு முன்னமே நடுநிலை நாடான ஸ்வீடன் போய் குடியிருப்பதால், தாத்தாவின் ஸ்வீடன் பற்றிய வர்ணிப்புகளின் ஈர்ப்புடன் அவன்
ஸ்வீடன் செல்லுகிறான் .

ஸ்வீடன் செல்லும்முன் ஒரு சிறு பெண்ணுடன் அவனுக்கு
நட்பு கிடைக்கிறது. அவள் அவனுடன் வரத்தயாராகும் போது பெரியவர்களால் தடுக்கப்படுகிறாள். பெற்றோரை இழந்த அவனுக்கு அடுத்த பிடியாக கிடைத்த அப்பெண்ணையும் இழந்து ஒரு ஆபிசரின் கருணையால் தான் ஸ்வீடன் செல்கிறான்.

அவன் நினைத்தது போல் அந்த நாடு அவனுக்கு நிம்மதியளிக்கவில்லை . ஒரு நாட்டில் அகதியைப்போல் சென்றவனுக்கு ஏற்படும் அனைத்து துயர்களையும் அவன் படுகிறான்.நட்பு கிடைக்காமல் பள்ளியின் மற்ற மாணவர்களின் புறக்கணிப்பு மற்றும் தாக்குதலுக்கு ஆளாகிறான்.

அடிக்கடி பழைய நினைவுகளால் கனவில் மூழ்கி அம்மாவுக்கு ஏங்கி வாடுகிறான்.
தாத்தாவின் முயற்சியால் அவன் பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வருகிறான். ஒரு நட்பு கிடைத்து அவன் மீண்டும் ஒரு சிறுவனுக்குரிய மகிழ்ச்சியில் சிரிக்கிற காட்சியுடன் முடிகிறது.

குண்டுமழை பொழியும்போது அம்மாவின்கைப் பிடித்து
போவதும், அண்ணன் ஒளித்து வைத்து காப்பாற்றுவதும்,
ஒருவரும் இன்றி அவன் கோழிக்குஞ்சிடம் நட்பு கொள்வதும்,ஸ்வீடன் பள்ளியில் புறாவிடம் என்பெயர் zozo உன்பெயர் என்று நட்புக்கு ஏங்குவதுமாக
நெகிழ வைக்கும் அற்புதமான திரைப்படம்.

பள்ளியில் நட்பினை பெறுவதற்கு அவன் பென்சிலும் ரப்பரும் அழகாக இருக்கிறது என்று சொன்ன பையனுக்கு அதை பரிசாக தந்து விடுகிறான். உடனே மற்ற எல்லாரும் அவனை சூழ்ந்துகொண்டு எனக்கு எனக்கு என்பதும் இன்னும் என் அம்மாவுக்கு எனகேட்போருக்கெல்லாம்
அவன் தருவதாக சொல்வது அவன் நட்புக்கு ஏங்கு வதை
அழகாக சித்தரிக்கிற காட்சிகள்.

zozoவின் தாத்தா அவனை தைரியமாக்குவதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சியாக அவனை அடித்த மூன்று சிறுவர்களில் ஒருவன் வீட்டுக்கு சென்று மூன்றுபேர் எப்படி ஒருவனை அடிக்கலாம் வா இப்போது நேருக்குநேர் எனும்போது அவரின் அணுகுமுறை வித்தியாசமாக இருந்தாலும் அதுதான் அவனுக்கு தைரியமளிக்கும் என்கிறபடி எடுக்கப்பட்டிருக்கிறது.

தாத்தா பார்க் பெஞ்சில் அமர்ந்து, நான் சிறுவயதில்
இப்படி வீரமாக இதை செய்தேன் அதை செய்தேன் என்று
உற்சாகமாய் விவரிப்பதும் சரி, மருத்துவ மனையில்,
என்பையன் இறந்துவிட்டான் என்கால் உடைந்து விட்டது இருந்தாலும் நான் அழவில்லை. என்போல ஏன் நீ
இருக்ககூடாது என்று சொல்லும்போதும் சரி,
ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கிறார்.

நல்ல நடிகர்கள்,லெபனனிலிருந்து குடிபெயர்ந்த முதல்
தலைமுறையை சேர்ந்த இயக்குனர் josef fares.
2005ல் வெளியாகி பல திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதாக வலையில் இங்கு
புகைப்படம் இணைக்க தேடியபோது அறிந்து கொண்டேன்.