
மஞ்சள் பை புகைப்படம் பதிவுக்கு வேண்டுமென தேடினேன். அட ஏற்றி விட்ட ஏணிய மறந்துட்டாங்களே.. :( எனக்கும் மேற்கொண்டு தேட பொறுமை இல்லை. வீட்டில் வெண்டைக்காய் போட்டு வச்சிருந்த மஞ்சைப்பையை ப்ரிட்ஜிலிருந்து எடுத்து சுடச்சுட( ஆனா அது ஜில்ன்னு இருந்தது ) எடுத்த போட்டோ..
சீமாட்டியில் துணி எடுத்தா 4 துணி எடுத்தோ நாலு பை தாங்கன்னு கேட்டு வாங்குவது அப்போது. கடைக்குப்போனா பேப்பரில் மளிகை சாமான் கட்டித்தருவாங்க நாம நம்ம பையில் வாங்கிக் கொண்டுவருவோம்..இப்ப நாம கைவீசிப்போகிறோம் .. பெரிய பெரிய பாலிதீன் தராங்க.. ரொம்ப கொடுமை. பெரிய பெரிய கடைகளில் கையில் கொண்டுபோகிற பையை வெளியே வச்சிடனும்.
தில்லியில் எல்லா பழக்கடை காய்கறி கடையில் .. எடையில் நிறுத்துக்கொண்டிருக்கும் போதே இன்னொரு கை தன்னிச்சையாக பாலிதீன் பைகளை பிரித்து வைத்திருக்கும் உடனே பொருள் உள்ளே கொட்டி ஒரு முடிச்சிட்டு கொடுத்துவிடுவார்கள். இது மின்னல் வேகத்தில் நடக்கும். நான் பத்துவருடத்துக்கு முன் இங்கே வரும் போது அது எனக்கு புதிய விசயம் தான். அப்பொழுது வரைக்கும் கூட எங்க ஊரில் இந்த அளவு புழக்கத்தில் வரவில்லை.ஆனால் இப்பொழுது ஊரிலும் இதே கதை தான்.
நான் சிறிது காலமாகவே காய்கறி சந்தைக்குப் போனால் (கட்டைபை எனும் ஆர் எம் கேவி பையோடு).. எடைபோடும்போதே பையா (அண்ணா) அந்த பை வேணாம் வேணாம்ன்னு கத்துவேன். சரியாக காதில் வாங்காத அவர்கள் என்ன எடை சரியாத்தானே இருக்கு.. என்ன வேண்டாமா என்றெல்லாம் அதிர்ந்து விட்டு பின் புரிந்து கொள்வார்கள். ஒரே கடையில் வெண்டைக்காயும் பீன்சும் வாங்கினால் இரண்டையும் ஒன்றாகவே வா என்று ஒரு கேள்வி கேட்பார்கள். ஆமாய்யா ஆமாம் என்று வாங்கிவருவேன். இதில் பல நன்மை இருக்கிறது.
மகனுக்கு இந்த வயசில் காய்கறி பெயர் சொல்லித்தரனும்.. ஒரே மாதிரியான பொருட்களை தேடி பிரிக்கக் கத்துக்குடுக்கனும் இதெல்லாம் கூடப் பாடத்திட்டத்தில் வருவது தான். அவன் எனக்கு உதவியும் செய்யனும்.அழகா உட்கார்ந்து ஒவ்வொன்னா பிரிச்சு தனி தனி காய்கறிப்பைகளில் போடுவான். பெயர் சொல்லிக்கொண்டே.. அம்மா உனக்கு ஹெல்ப் செய்தேனேனு அவனுக்கும் குஷி.. இத்தனைக்கும் மேலே சுற்றுப்புற சூழலுக்கு கேடு குறைவு .
ஆனால் மஞ்சப்பை கூட இப்பொழுது முன்பு போல் வருவதில்லை. எங்க தாத்தா எப்பவும் ஒரு மஞ்சள் பை வைத்திருப்பாங்க.. அது இல்லாம நீங்க அவங்களைப்பார்ப்பது அபூர்வம்.. அதுல பர்ஸ் அப்பறம் ஒரு விபூதிப்பை இருக்கும். அது அழகா மடிச்சு மடிச்சு இருக்கும். தன்னோட தலைகாணி பக்கத்துலயே தூங்கும் போதும் வைத்திருப்பாங்க. இப்ப பழைய பை வேணாம் புதுசா ஒரு மஞ்சப்பை கொடுன்னு கேட்டா ஒரு துணிக்கடை பை கூட முழு காட்டனில் வருவது இல்லை. எதோ கலந்து செய்யறாங்க அது அப்படியே மொடமொடன்னு நிக்குதே தவிர மடங்குவது இல்லை..:( தாத்தா கேட்ட மஞ்சப்பைய குடுக்கமுடியலயேன்னு எனக்கு ரொம்ப வருத்தம்.
தில்லியில் இப்போது சட்டம்( அட அடிக்கடி போடுவாங்க எடுப்பாங்க) வந்திருக்கு பாலிதீன் பயன்படுத்தக்கூடாது என்று ,.. ஆனாலும் இன்னமும் நடக்கிறது . உங்கள் உங்கள் பிள்ளை பேரன் பேத்திக்கு சொத்து சேர்த்து வைக்கும் நேரத்தில் கொஞ்சம் நல்ல சுற்று சூழலையும் தந்துவிட்டு போவோம் என்று நினையுங்கள்.
