December 15, 2008

ஞானக்கண்ணால் கடவுள் தரிசனம்.

கண்ணாடியை லவட்டிய குரங்கின் உபயம்.. ஏறக்குறைய ஊர்சுத்திக்காமிக்கிற கைட் ஆக மாறி ரொம்பநாளச்சுங்க. ஒருமுறை கோவர்த்தனம் போகலாம்ன்னு கிளம்பினோம். போறவழியில் பிருந்தாவனத்தில் நம்ம ஊரு பெருமாள் கோயில் இருக்கே அதையும் காமிச்சிட்டு அங்க இருக்கும் அய்யரிடம் கோவர்த்தனம் பத்தி எதும் தகவல் கிடைக்குமா கேட்டுப்போகலாம்ன்னு திட்டம். 11 மணிக்குள் போனால் திறந்திருக்கும் இப்ப மூடி இருப்பாங்களே என்று பேசிக்கொண்டே உள்ளே சென்றோம். வெளிப்பிரகாரம் சுற்றித்தான் அந்த கோயில் வாசலுக்குக் போகலாம்.. அதற்குள் கோயில் மூடிய சேதியும் தெரிந்தது. சுற்று பிரகாரத்தில் சில தமிழ் அய்யர்கள் வீடு இருப்பதால் கேட்கலாமே என்று ஒரு வீட்டின் வாசலில் கால் எடுத்துவைக்க இருந்த நேரம். எனக்கு கண் தெரியவில்லை. ஆமாங்க எனக்கு கண் தெரியவில்லை. இத்தனை நேரம் தெள்ளத்தெளிவாக் தெரிந்த கண் கலங்கலாக மேகமூட்டமாக இருக்கிறது.

பொதுவாக கண்ணாடி போடவில்லை என்றால் தான் எனக்கு அப்படி இருக்கும். ஆனால் நடந்து கொண்டிருக்கும் போது நான் கண்ணாடியை கழட்டவும் இல்லையே.. என் கை தானா கண் பக்கத்தில் போனால் என் கண்ணாடி இல்லை. எல்லாரும் அய்யோ குரங்கு என்று கத்துகிறார்கள். உற்றுப்பார்த்தால் ஒரு குரங்கு அதன் கையில் என் கண்ணாடி. என் கண்ணாடியை அத்தனை லாவகமாக அது லவட்டி இருக்கிறது. என் மேல் துளி கூட நகம் படாமல்.

உடனே அது வீட்டின் மேல் ஏறி ஓடவும் ஆரம்பித்துவிட்டது. சட்டென்று இரு சாந்துபொட்டிட்ட ஹிந்திபேசும் இளைஞர்கள் எங்கள் முன்னால் வந்தார்கள். அதற்கு பிஸ்கெட் போட்டால் குடுத்துவிடும் பிஸ்கட் இருக்கா என்றார்கள். நாங்களோ எல்லாமே காரில் வைத்துவிட்டு ஹாயாக வந்திருக்கிறோம். பிஸ்கட் வாங்கசென்றவர் திரும்ப வருவதற்குள் குரங்கைப் பிடிக்க மேலே ஏறிய அந்த இளைஞர்கள் சிறிது நேரத்திற்கு பின் வந்து தனித்தனியாக காதை கடித்து துப்பிய கண்ணாடியைக்கொடுத்துவிட்டு அதற்கு பணம் கேட்டார்கள். பிஞ்சு போன கண்ணாடிக்கு என்ன தருவது என்று பேரம் பேசி லென்ஸ்க்காக 50 ரூ குடுத்தோம்.

பிறகு தான் தெரிந்தது குரங்கை இதற்காகவே அந்த இளைஞர்கள் பழக்கிவைத்திருக்கிறார்கள் என்று அதற்கு பிறகு கோவர்த்தன கிரியை அடைந்த போது எல்லா கோயில்களிலும் கடவுள் இப்படித்தான் இருப்பார் என்று என் ஞானக்கண்ணாலே வணங்கிக்கொண்டிருந்தேனே தவிர என் ஊனக்கண்ணால் வணங்க இயலவில்லை.

ராதாராணி பாதம் என்று ஒரு இடம் இருக்கிறது. அதனருகில் ஒரு சிறு ஆசிரமம் . அங்கே மரத்தின் அடியில் ஒரு கல் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது அதனைக்காட்டி, ஒரு சாது ,"இங்கே பாருங்கள் இந்த கல்லில் உங்களுக்கு என்ன தெரிகிறது" என்று கேட்டார். அவருக்காக உற்றுப்பார்த்ததில் எதோ தெரிகிறார்போலத்தான் இருந்தது.. ஆனால் ஞானக்கண் அப்போது சரியாக வேலை செய்யவில்லை. அவரே சொன்னார். ஒரு ஹனுமான் கல்லின் இயற்கை கலரிலேயே சுயம்புவாக இருக்கிறது என்று.. க்ரீடம் வால் போன்ற இடங்களெல்லாம் மட்டும் தெரிந்தது. மேலும் சில அந்த சிறு குடிலுக்குள் உள்ளது என்றார். உள்ளே செல்ல பயந்து நான் பின்வாங்கிவிட்டேன்.

அடுத்தமுறையும் கோவர்த்தனம் சென்றோம். அதே இடம்.. போன முறையை விட அந்த பாதம் இருந்த இடத்தில் எக்கச்சக்கமான குரங்குகள்.. அதனால் யாரும் காரைவிட்டே இறங்க மறுத்துவிட்டார்கள். நாத்தனார் கணவர் ம்ட்டும் நீங்கள் எனக்கு காண்பியுங்கள் என்று கேட்டதால் கண்ணாடியை பேண்ட் பாக்கெட்டில் ஒளித்துவைத்துக்கொண்டு இறங்கிவிட்டேன். குடிலுக்குள் நடு நாயகமாக இருந்த ஒரு கண்ணாடி போட்ட மேடையில் பல விதமான கற்கள் இருந்தது . அவை எல்லாம் ஒரு குரு வின் கலெக்ஷனாம்..

ஒவ்வொரு கல்லிலும் விதவிதமான உருவங்கள் இயற்கையாகவே வந்த உருவங்கள். ஓவியங்களைப்போல நிழலாக இருந்தன. ஹனுமான் க்ரீடத்தோட முட்டிக்காலில் சிவனை வணங்கும் போஸ்... கிருஷ்ணனை கைபிடித்த யசோதையைப்போல ( ஓவியங்களில் அதிகம் பார்ப்பீர்கள்) கண்ணன் வெண்ணை உண்ணும் காட்சி...புலி, இப்படி... முதலில் அவர் சொல்லும் போது தெரியாது உங்கள் மனக்கண்ணில் அதை உருவகப்படுத்தி ஒப்பிட்டுப் பார்க்கும் போது அது தெரியும்.. ஆச்சரியமாக இருந்தது..

December 11, 2008

கோல்டன் டிக்கெட்..சாக்லேட் ஆறு , சாக்லேட் அருவி

நேற்று இரவு நானும் மகனும் சார்லி இன் த சாக்லேட் பேக்டரி படம் பார்த்தோம். பன்னிரண்டு மணிக்கு மேல் எனக்குத்தான் தூக்கம் வந்தது. ஆனால் அவனோ இன்னும் கொஞ்சம் தான் இருக்கு தூங்காதே அம்மா என் கூட பாரு என்று என்னைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தியபடி இருந்தான். அப்படியும் ஒரு காட்சியில் என்னை அறியாமல் தூங்கிவிட்டேன். பிறகு அவனே அந்த கதையை எனக்குச் சொன்னான்.

சாக்லேட் சாப்பிடக்கூடாது என்று பல்டாக்டரான தந்தையால் மிகவும் கண்டித்து வளர்க்கப்பட்ட ஒரு சிறுவன் பெரியவனாகி சாக்லேட் தொழிற்சாலையே ஆரம்பிக்கிறான். அவனுடைய ரகசிய செய்முறைகளை யாரோ கடத்தி வெளியே விற்றுவிட்டார்கள் என்ற கோபத்தில் அவன் எல்லா தொழிலாளர்களையும் விரட்டி விடுகிறான். அதே ஊரில் ஏழையாக இருக்கின்ற சார்லியின் தாத்தா அதில் வேலை செய்தவர்களில் ஒருவர். அவர் அந்த தொழிற்சாலையின் முதலாளியான வில்லி வோன்காவைப்பற்றி தன் பேரனிடம் ஒரு மேதையென்று சொல்லிவைக்கிறார்.

அந்த தொழிற்சாலை ஊராருக்கு ஒரு அதிசயம். யாருமே அங்கே வேலைக்குச் செல்வதில்லை ஆனால் சாக்லேட்கள் உற்பத்தியாகி வெளியே அழகாக டப்பாக்களில் அடைக்கப்பட்டு வெளியே வருகிறது. ஒரு நாள் அறிவிப்பு ஒன்று எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டுக் காண்கிறார்கள். வோன்காவின் சாக்லேட்களில் ஐந்து சாக்லேட்களில் மட்டும் "தங்க அனுமதி சீட்டு" (கோல்டன் டிக்கெட்) வைக்கப்பட்டிருக்கிறது. யாருக்கு கிடைக்கிறதோ அந்த ஐந்து குழந்தைகள் தொழிற்சாலையை சுற்றிப்பார்க்க ஒரு நாள் அனுமதிக்கப்படுவார்கள்.அவர்களில் ஒருவருக்கு நினைத்துப்பார்க்கமுடியாத ஒரு பரிசு கிடைக்கும்.

சார்லிக்கும் அதனைப் பெற ஆசை . அவன் குடும்பமோ ஏழை. அப்பா அம்மா இரண்டு தாத்தா இரண்டு பாட்டி என்று பெரிய குடும்பம். அப்பாவுக்கோ வேலை போய்விட்டது. சிரமங்களுக்கிடையில் அவன் பிறந்தநாளுக்காக வாங்கிய சாக்லேட் பட்டையில் சீட்டு கிடைக்கவில்லை. ஆனால் அவன் அதை பெரிதாக நினைக்காமல் அதனை குடும்பத்திலிருப்போர் அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறான்.தாத்தாவின் சேமிப்பில் வாங்கிய பட்டையிலும் கிடைக்கவில்லை. அதற்குள் ஒவ்வொரு அனுமதிச்சீட்டாக பெற்றவர்கள் தொலைகாட்சியில் பேட்டிக்கொடுக்கிறார்கள்..இன்னும் இருப்பது ஒரே ஒரு சீட்டுத்தான்.

அதிர்ஷ்டவசமாக சாலையில் கண்டெடுத்த பணத்தில் சார்லி வாங்கிய சாக்லேட் பட்டையில் அந்த சீட்டு கிடைத்துவிடுகிறது. அதை விலைக்குக்கொடுக்க சொல்லி எல்லாரும் கேட்க, கடைக்காரர் மட்டும் வீட்டுக்கு எடுத்து செல்லப் பணிக்கிறார். வீட்டிற்கு வந்த பிறகு தங்கள் ஏழ்மை நிலை போக அதனை விற்கலாம் என்று முடிவெடுப்பதாக சொல்கிறான். அதுவரை அந்த குடும்பத்தில் எதிர்பதமாக பேசிவந்த இன்னொரு தாத்தா இந்த முறை நம் குடும்பத்தில் என்ன குறை.. பணம் பெரிய விசயமே இல்லை. நீ பலபேருக்கு கிடைக்காத இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்துவது தான் சிறப்பு என்று சொல்கிறார். ஒவ்வொரு குழந்தையும் தன்னோடு ஒரு பெரியவர்களை அழைத்துச் செல்லலாம் என்பதால் அவன் அவனுடைய தாத்தாவையே கூட்டி செல்கிறான்.

அங்கே வருகின்ற குழந்தைகளில் சார்லியைத் தவிர மற்றக்குழந்தைகள் அனைவருமே சரியாக வளர்க்கப்பட்டவர்கள் இல்லை. ஒரு குழந்தை பணக்காரர் மகள். நினைப்பதெல்லாம் அடைய வேண்டும் என்றிருப்பவள். அவளுக்காக அப்பாவின் கம்பெனியில் வேலை செய்பவர்கள் அனைவரும் வேலைகளை விட்டு சாக்லேட் களை பிரித்து தேடிக்கிடைக்கிறது. சார்லி தன் தாத்தாவிடம் .. "இது எப்படி சரியாகும் தாத்தா? அவளாக தேடவில்லையே."
தாத்தா- "அப்படித்தான் எல்லாம் நடக்கிறது சார்லி ."

ஒரு குழந்தை எந்நேரமும் சாக்லேட் சாப்பிடுபவன்.
ஒரு குழந்தை எந்நேரமும் வீடியோகேம்ஸில் அடிஉதை என்று வாழ்பவன். ( சாக்லேட் பிடிக்காதவன் வேறு)
ஒரு குழந்தை ட்ராபிகள் வாங்கிக்குவிக்கும் ஜீனியஸ்.. பபிள்கம் அதிக நேரம் சுவைப்பதில் கின்னஸ் ரெக்கார்ட் செய்தவள்.

உள்ளே குள்ளமனிதர்களும் இந்தியப்படங்களைப்போல அடிக்கடி வரும் பாடல்களும் செட்டிங்களும் பிரமாதம்.குள்ளமனிதர்கள் உதவியுடன் வோன்காவின் தொழிற்சாலை நடக்கிறது.

உள்ளே போனதும் வருகின்ற உலகம் தான் என் மகனுக்கு மிகவும் பிடித்தது. சாக்லேட் ஆறு சாக்லேட் அருவி.. சாக்லேட் மரங்கள் அங்கங்கே ஐஸ்கிரீம்..இதே போல் நம் வீட்டிலும் இருந்தால் அள்ளி அள்ளிச்சாப்பிடுவேன் என்று சொல்லிக்கொண்டான்.. கனவுக்கு போயிருப்பான் .எந்நேரமும் சாக்லேட் சாப்பிடும் பையன் சாக்லேட்டை அள்ளிக்குடிக்கமுயன்று அதற்குள் விழுந்துவிடுவான்.அதனால் அவனும் அவன் அம்மாவும் வெளியேற்றப்படுவார்கள்.அவன் பைப் ஒன்றால் உறிஞ்சப்படும் போது ..என் மகன் சிறியவன் என்பதால் அவனுக்கு அவன் நல்லபடி வெளியே அனுப்பபடுவார்கள் என்று பலமுறை சொல்லவேண்டி இருந்தது.

பபிள்கம் மெல்பவள் வோன்கா சொல்வதைக்கேட்காமல் சோதனை செய்யப்படாத ப்ளூபெர்ரி பபிள்கம் சாப்பிட்டதால் நீல நிறமாக மாறி பந்து போல உருண்டு வெளியேற்றப்படுவாள். அப்போதும் அவனுக்கு பயப்படாமல் இருக்க விவரிக்கவேண்டி இருந்தது. அதிகம் பபிள்கம் சாப்பிடக்கூடாது என்று சொல்ல நல்ல ஐடியா...:) ஜூஸறில் போட்டு பெர்ரியின் ஜூஸ் எடுக்க அவளும் அவள் அம்மாவும் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

டிவியே அதிகம் பார்ப்பவன் டீவிக்குள் சென்று சின்னவனாகிவிடுவான். ஆட்டம் க்ளோஸ்.

நட்களை( nut) பிரித்தெடுக்க இருக்கும் அணில் குட்டிகளைப்பார்த்து இப்போதே அணில் குட்டி ஒன்று தனக்கு வளர்ப்பு ப்ராணியாக வேண்டும் என்று கேட்டசிறுமிக்காக அவள் தந்தை வோன்காவிடம் பேரம் பேசிப்பார்க்கிறார். வோன்காவின் மறுப்பை கண்ட சிறுமி அணிலைப்பிடிக்க செல்ல.. அணில்கள் கோபம் கொண்டு அவளை சூழ்ந்துகொள்ள... ( இந்த இடமும் பயம் தான் குட்டிப்பையனுக்கு) ஒரு அணில் மிக அருகில் அவள் முகத்துக்கு சென்று நெற்றியில் "டொக் டொக்" இது நல்ல நட் இல்லை..(மகனுக்கு ஒரே சிரிப்பு பேட் கேர்ள் பேட் நட்)


தந்தை பதற.. இப்பொழுது என்ன ஆகும்.. நல்ல நட் இல்லையென்றால் குப்பைக்கூடைக்குப்போவார்கள். மகள் குப்பைக்கூடைக்குள் விழ அப்பாவும் விழ.. ஆட்டம் க்ளோஸ்..

மீதி இருப்பவன் சார்லி என்பதால் அவர்களை வீட்டிற்கு சென்று இனி எல்லாரிடமும் சொல்லிக்கொள் உனக்கான பரிசு நீ என் தொழிற்சாலைக்கு முதலாளி. எனக்கு வாரிசு என அறிவிக்கிறான். குடும்பத்தினரைப் பிரிந்து அந்த தொழிற்சாலையை தனதாக்கிக்கொள்ள விரும்பாத சார்லி வோன்காவுக்கு ஆச்சரியம் தருகிறான்.குடும்பத்தினரை அழைத்துச் செல்ல மறுக்கும் வோன்கா.. திரும்பி செல்கிறான்.

கடைசியில் மற்ற குழந்தைகள் வெளியேறுவடு காட்டப்படுகிறுது.. இல்லாவிட்டால் நம்ம குழந்தைகள் பயந்துவிடுவார்களே... :)

மீண்டும் வரும் வோன்கா சார்லியின் அறிவுரைப்படி தன் தந்தையைக்காண செல்கிறான். அங்கே அவன் தந்தை அவன் பற்களை சோதனையிட்டு ஆச்சரியப்படுகிறார்.
-"வில்லி வோன்கா ? !!!!!
-ஆமாம்...
-நீ இதுவரை சாக்லேட் சாப்பிடவே இல்லயா..?

-இல்லை அப்பா எப்போதுமே"

சார்லியின் குடும்பமும் அதே போல ஒரு வீடும் சாக்லேட் பேக்டரியிலேயே அமைக்கப்பட்டும் குடும்பமாய் ஜாலியாய் ..... கடைசியில் சுபம்.

December 7, 2008

நீ வளர்ந்ததும் பெரிய மந்திரியா வரணும் !!

நமக்குத்தேவை நல்ல தலைவர்கள் என்று அவந்தி பதிவு போட்டிருக்கிறாள். ( தொடர்பதிவுக்கும் அழைத்திருக்கிறாள் ) உண்மை தான் ஆனால் எந்த வீட்டிலும் தலைவர்களை வளர்ப்பதில்லை. யாராவது என் குழந்தை அரசியலில் பெரிய மந்திரியா வரணும் என்று ஆசைப்படுகிறோமா என்ன? அரசியல் பாரம்பரியம் ஒரு ராஜ பாரம்பரியமாக குடும்பம் குடும்பமாக மட்டுமே வளர்கிறது. படிக்கின்ற வயசில் அரசியல் தேவையில்லை என்பதால் அரசியலா அதில் எல்லாம் ஒன்னும் கவனம் வைக்காதே என்று சொல்லி முடிப்பதற்குள் அவர்களுக்கு ஓட்டு போடும் வயசும் வந்துவிடுகிறது. நம்ம தமிழ்நாட்டிலிருந்து நடிகைகள் வருவதில்லை என்பது போல படித்தவர்கள் அரசியலுக்கு வருவது (அரசியல்குடும்பத்தினைத்தவிர) குறைவு.

மகளின் பள்ளியின் சேர்மென் (வய்து 87 ) இந்த காலத்தில் கல்வியும் அறிவும் மட்டும் முக்கியம்ன்னு நினைச்சு பெரியாளான பல அறிவாளிகளால் தான் பணவீக்கம் ,பொருளாதார பின்னடைவு எல்லாம் வருகின்றது. எதிலும் எதிக்ஸ் முக்கியமில்லை என்ற எண்ணம் . கல்வியோடு எதிக்ஸும் அவசியமென்று அவர்களை பழக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நாம் ஒவ்வொருவரும் சுயநலமாக நம் வீடு , நம் படிப்பு நம் வாழ்க்கை என்று வாழும் வரை சுயநல வியாபாரிகள் தான் அரசியலுக்கு வருவார்கள். அவர்கள் தங்களுக்கு போக மீதியைத்தான் தருவார்கள்.. அந்தகாலத்துத் தலைவர்கள் கொள்கையில் வேறுபட்டாலும் அடுத்தவர்களை எதிரியாகக் கருதியதில்லை. இப்போது நிலைமையே வேறு.

குறுக்குவழியில் பெரியவர்களாக ஆகவேண்டும் என்று கற்றுக்கொடுக்கும் நிலையில் , அடுத்த தலைமுறை நல்லமுறையில் வர வாய்ப்பே இல்லை. தன்னலமில்லா தலைவர்கள் வந்தாலும் கீழே இருப்பவர்கள் வரை நல்ல செயல்களை கொண்டு சேர்க்க தடையாக இருப்பது மக்கள் தானே..

எனக்குத் தோன்றுவதெல்லாம் .. உலகத்தில் நீ கொண்டுவர வைக்கவேண்டிய மாற்றத்தின் முதல் படியாக நீயே இரு என்ற காந்தியின் வார்த்தைகள் தான்.

---------------
தீவிரவாதத்துக்கு எதிராக என்னத்த சொல்வது வறுமை குறைந்தால் அதுவும் குறையும். காசு தான் கடவுள். காசு இல்லையா குடுப்பவன் கடவுள். இறப்பை வேறு எவரும் துச்சமாக மதிப்பதில்லை. காசில்லாதவன் தான் வாழ்ந்து என்னத்தைக்கண்டோம் என்று முதலில் நுழைகிறான்.

மதம் காரணம் என்கிறீர்களா? சகிப்புத்தன்மை இல்லாத, அன்பு இல்லாத எந்த மதமும் பின்பற்றி முக்திக்கு உதவபோவதில்லை.

சிலர் தாங்கள் போகும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சோதனைகளில் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கிறார்களா? அதற்கு சலிப்பும் கோபமும்.. எத்தனை பேர் குறுக்குவழிகள் ஓடுகிறார்கள். என்றாவது எதாவது தவறாக நடந்தால் சோதனை சரி இல்லைங்க என்று குறை சொல்வார்கள்.

வரிசையில் நிற்க சங்கடம் , சோதனைக்கு ஒத்துழைக்க சங்கடம், தவறைக்கண்டால் தகவல் அளிக்க சங்கடம்.. நேர்மையாக இருக்க சங்கடம்.. மொத்தத்தில் வரும் சங்கடங்கள் எல்லாவற்றிற்கும் நாமே காரணம்.

இன்னும் புலம்புவதற்கு ,
நான் அழைக்கவிரும்புவது
ஆயில்யன்
தமிழ்பிரியன்
சென்ஷி
புதுகைத்தென்றல்
சந்தனமுல்லை
ராப்
விருப்பமானவங்க எழுதுங்க.. முடியாதவங்க சாய்ஸில் விட்டிருங்க...

December 5, 2008

ரசம் பூசிய கண்ணாடியென வாழ்க்கை...

எதுவும் தனியே கிடைப்பதில்லை.
நான் எனும் தனிமைச்சொல்
கொண்டிருப்பதோ இரண்டெழுத்து.
இன்பமிருக்கும் இடத்தில் துன்பமிருக்கும்
துன்பமிருக்கும் இடத்தில் இன்பமிருக்கும்
பிரிக்க இயலா உறவு அது
உறவின் பொருளி்லிலும் இவையடங்கியே இருக்கும்.
ரசம் பூசிய கண்ணாடியென
பின்மறைவில் மற்றொன்றை வைத்து
விளையாடும் வாழ்க்கை.
அனுபவதினங்கள் தேய்த்து தேய்த்து
ரசம் நீங்கிய கண்ணாடி வழி
இன்பமும் துன்பமும்
உண்மையும் பொய்யும்
அருகருகில் இரட்டைபிறவியென .
தனிமை தனிமை என்ற ஒளி
பட்டு திரும்பிய கதிரெல்லாம்
இன்று ஊடுருவிச் சென்ற பக்கம்
காணக்கிடைக்கும் பல புன்னகை முகங்கள்.





photo .. thanks Leslie marr


சென்ஷியின் நான் எனும் தனிமைச் சொல் கவிதைக்கு எதிர் கவிதை. மேலே இருக்கும் குழந்தை அந்த பக்கம் அறியா இன்பத்திலிருக்கிறது. :))

December 4, 2008

நான் தான் ஹீரோ ஓகேய்?

"டேய் ட்ராகன் டேல்ஸ் ல வர்ர அக்கா உன் அக்காவாம்.. நீ தான் அந்த தம்பியாம்.. "
ம்..... அம்மா நான் தான் ஹீரோ ஓகேய்"
-----------------------------------------------------------------
மகளின் பள்ளி விழாவுக்கு போய் இறங்குகிறோம்.
" அம்மா இந்த ஸ்கூலா ... அப்ப ஏன் அக்கா ஸ்கூலுன்னு சொன்ன...
யே மேரா பி ஸ்கூல் ஹேன்னா? ( இது என்னோட ஸ்கூலும் தானே?) "

அவனுக்குத்தான் அட்மிசன் ஆகிடுச்சே..
-----------------------------------------------------
தினம் எழுந்ததும்,
" அம்மா இன்னைக்கு கோன்ஸா( எந்த) ஸ்கூல் போகனும்?"
ப்ளே ஸ்கூலா பெரிய ஸ்கூலான்னு கேக்கரான்.
" அது ஏப்ரல் மந்த்டா"
" அது எப்ப வரும்"
".... ம் ..... வரும் இன்னும் கொஞ்சம் நாளில்"
"யூனிபார்ம் ஏன் வாங்கமாட்டேங்க்ற நான் எப்பத்த்தான் பஸ்ல போறது"
"இன்னும் கொஞ்சம் பெரிசாகனும் நீ"
" மே படா ஹூம் அம்மா" ( நான் பெரியவன் தான் அம்மா)


----------------------------------
என்னோட கம்ப்யூட்டர் ல கேம் விளையாண்டா ஏன் சத்தம் வரலை..
டேய் அது ம்யூட்ல போட்டிருக்குடா.. அப்பா நெட் மீட்டிங்க் செய்யராங்கள்ள

அப்பா ப்ளீஸ் அந்த லேப்டாப் பந்த் கரோன்னா ( மூடிவைங்களேன்)

"அதுல வேல செய்தாதாண்டா பண ம் கிடைக்கும் ..நீ மெக்டோனால்ட்ஸ் போலாம்.. குக்கும்பர் வாங்கலாம்.. பனானா வாங்கலாம்.. "

அக்கா வந்ததும் ,
"அக்கா அப்பா கம்ப்யூட்டர் மே வேலை கர்ரஹாஹை...( செய்யறாங்க) ..உஷ்...
அப்பறம் பணம் கிடைக்கும், ஹம் டோனால்ட்ஸ் சலேங்கே ( நாம மெக்டோனல்ட்ஸ் போவோம்) , பனானா, குக்கும்பர், சாக்லேட் எல்லாம் அப்பத்தான் வாங்கலாம். "

"நீ நல்லபடிப்பயாடா?"
'எதுக்கு?"
"வேலை செய்யனும்ல ?"
"ம் வேலை மிலேகா ன்னா ( கிடைக்குமில்ல) அப்ப செய்வேன்..
அப்பா கார்ல போவேன்."

December 2, 2008

தொடர்பவர்கள் எல்லாம் தொடர்பவர்கள் இல்லை தொடராதவர்கள் எல்லாம் தொடராதவர்கள் இல்லை

கொஞ்சம் போரடிக்குதேன்னு ப்ளாக்கர் டேஷ்போர்டை கவனிச்சிட்டிருந்தேன்.. ப்ளாக் ஆஃப் நோட்ல புகுந்து புறப்பட்டுட்டு இருந்தபோது ஒருத்தருக்கு 1330 க்கும் மேல ஃபாலோவர்ஸ் இருக்காங்களாம்.. வியூ ஆல் போட்டாலும் கூட ஒரு பக்கத்துக்கு பத்து என்று தான் ப்ளாக்கர் காட்டும் அவரே கூட எப்படி பார்ப்பார் எல்லாரையும் கஷ்டம் தான்.. :(

ஒரு நாள் பின் தொடருபவர்கள் கணக்கு ஒன்று குறைந்து பின்னர் மூன்று கூடியது. குறைந்த அந்த ஒருவர் யாரென்று சரியாகத்தெரியவில்லை.. தப்பித்தவர் யாரோ? ஆனால் பின் தொடர்பவதாக ஃபாலோவரில் போட்டிருக்கும் எல்லாருமே பின் தொடர்வதும் இல்லையென்று நேற்று புரிந்து கொண்டேன். புதியதாக யாரோ இணைய அரட்டையில் இணைந்திருந்தார்கள். யாரென்று கேட்டு அறிந்து அவர்களின் பதிவு இணைப்பைக்கேட்டேன்.அவர்களும் என்னிடம் என் பதிவு இணைப்பைக்கேட்டார்கள். அய்யகோ கடைசியில் அவர்கள் என்னை ஏற்கனவே தொடர்பவர்கள் தான். இதிலிருந்து என்ன தெரிகிறது. தொடர்பவர்கள் எல்லாம் தொடர்பவர்கள் இல்லை.. தொடராதவர்கள் எல்லாம் தொடராதவர்கள் இல்லை.

இது ஏறக்குறைய முன்பே எல்லாரும் பின்னூட்டுபவர்கள் படிப்பவர்கள் கணக்கீடுக்கு சொன்னது போலவே தான்.
-----------------------------
ப்ளாக்கர் buzzல் பார்த்தபோது போஸ்ட் கமெண்ட் அதே பதிவின் கீழ் எம்பெட் செய்யும் வசதி பற்றி அறிந்தேன். ஆனால் அது அதிகம் வேலை செய்யப்படாத டெம்ளேட்டில் வேலை செய்கிறது ஏற்கனவே உள்ள பதிவில் வேலை செய்வதில்லை. அதற்கு ஏதும் வழி இருக்கிறதா? இதற்காக இன்னொரு பக்கத்தை திறக்கவேண்டாம் என்பதும் நன்றாகவே இருக்கிறது.. ரியக்ஷ்னும் அது போலவே தான்.. தெரிந்தவர்கள் பதிவிடுங்கள்.
--------------------------
பலநாட்களாக ப்ளாக்கர் என் சிறுமுயற்சி பதிவிற்கு வரும் பின்னூட்டங்களை மட்டும் டேஷ்போர்டில் எண்ணிக்கையாக காட்ட மறுக்கிறது. மாடரேட் கமெண்ட்ஸ் போய் தான் பார்க்கவேண்டி இருக்கிறது. :( எத்தனை எத்தனை சோதனைகள்.

November 26, 2008

அலகாபாத் திரிவேணி-காசித்தொடர்(6)

அலகாபாத்துக்கு காசியிலிருந்து ஏறிய ரயில் வழக்கமான ரயில்களைப்போலவே தாமதமாக எங்களைக்கொண்டு சேர்த்தது. ஒரு ஆட்டோ (100ரூ) பிடித்து நாட்டுக்கோட்டை சத்திரம் என்று சொன்னொம். நல்லத்தெரியும்ன்னு சொல்லறார் ஆனா நாகர்சத்திரம்ன்னு சொல்றார். சரி காசியில் நாட் கோட் இங்க நாகரோ என்று தப்பா நினைத்துவிட்டோம். அவர் தெலுகு சத்திரத்தில் கொண்டுவிட்டுவிட்டார். பிறகு அந்த தெலுங்கரே ஒரு ஆட்டோ வைத்து மீண்டும் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் கொண்டு விட்டார்.

காசி அளவு இல்லை என்றாலும் பெரிய ஹால் இருக்கிறது. அறைகள் மிக சிறியது தான்.அதிக கூட்டமில்லாததால் எங்கள் உடமைகளை அங்கே வைத்துவிட்டு , அங்கிருந்த மேனேஜர் ஏற்பாடு செய்தபடி எல்லாம் சுத்திப்பார்க்க ஆரம்பித்தோம். மேனேஜர் அங்கே வந்து 3 வருடம் ஆகிறதாம்.. ஹிந்தி புரியுமாம் ஆனா பேசவராது. அந்த ஊர் ஆளுங்களுமே இவர்களுடன் பல வருட பிசினஸ் என்பதால் தமிழ் புரிந்து கொண்டார்களாம். இவர் பாட்டுக்கு போனில் எங்கடா இருக்கே? போட் வேணும்ங்கறார். அங்கே இருந்து சரியான் பதில் ஹிந்தியில் வருகிறது. சரிதான் நானும் என் பையனும் பேசுவது போலயே இருக்கே என்று நினைத்துக்கொண்டேன். என்னதான் நான் தமிழில் கேட்டாலும் அவன் போனமாதம் வரை ஹிந்தியிலேயே தான் பதில் சொல்வான்.மாற்றி மாற்றி தமிழும் ஹிந்தியும் சளைக்காமல் பேசிக்கொள்வோம்.

ஆட்டோக்காரர் வந்தவுடன் நேராக திரிவேணி சங்கமத்தில் இறக்கிவிட்டார். அங்கே கார்த்திகேய் என்னும் படகுப்பையன் (சின்னப்பையன் தானே அப்பறம் என்ன படகுக்காரர்) பொறுப்பேற்றுக்கொண்டார்.
"யஹாங் கங்கா யமுனா சரஸ்வதி நதி தீன் நதி ஹை. யமுனா நதி .. பச்சே கலர் (அட பச்சை கூட தெரிஞ்சு வச்சிருக்கார்ப்பா..) கங்கா நதி வெள்ளே கலர். "
அட ஆமாம் ரெண்டும் சேரும் இடத்தில் அழகா நிறத்தின் பிரிவு தெரியுதே.சரஸ்வதி கண்ணுக்குத்தெரியாதது. புழுபூச்சி வராத தண்ணி திரிவேணியிலும் இருக்காம் கங்கை வருதே..

சின்னச் சின்ன மேடை போட்டு ஆற்றின் நடுவில் மரமேடைகள். அங்கே இறங்கி முங்கிக்குளிக்கலாம். வழக்கம்போல பெரியவர்கள் இறங்கிக்குளித்தார்கள். ஸீகல் பறவைகள் எக்கச்சக்கமா இருந்தன. அதற்கு உணவு தருவதற்கு ஆசைப்பட்டால் அதற்கும் ஒரு படகுப்பையன் உணவு விற்கிறான் .

டிப்ஸ் ஆக கொஞ்சம் பணம் கொடுத்த பின்னும் இவங்க யாரு உங்க மாமனார் மாமியாரா இவங்க தலைய சுத்தி ஆசிர்வாதம் செய்து உங்க இஷ்டம் தேதோன்னு கொஞ்சம் வாங்கிக்கிட்டான்.

திரிவேணிக்கு அருகிலேயே ஹனுமான் கோயில் .. நாங்கள் சென்ற நேரம் ஆரத்தி நடந்துகொண்டிருந்தது. ஹனுமான் ஓவியம் தரையில் வரைவது போல தரையில் ஹனுமான் சிலை இருந்தது.சுற்றிலும் கம்பியிட்ட இடத்திலிருந்து குனிந்து வணங்கி வழிபட்டோம்.

அதற்குள் இருட்டி விட்டது. ஹனுமான் கோயிலுக்கு பின்புறம் சிறிது தூரத்தில் காஞ்சி மடத்தின் அடுக்குமாடி கோயில் .ஒவ்வொரு மாடியிலும் வேவ்வேறு ஓவியக்கதைகள. ஒவ்வொரு மாடியிலும் ஒரு சன்னிதி ,சிவன், திருமால் இன்னும் என்ன என்ன சாமி் என்று மறந்து விட்டேன்..:(

நாக வாசுகி கோயில் இரவில் அந்த கோயில் மிக அழகாக இருந்தது. புராணங்களில் கூட இந்த கோயில் வருகிறதாமே.. கஜகரணம் அடித்தாயே என்ன ஆயிற்று என்று சொல்வோமே அந்த கோயில் இங்கே இருக்கிறது.கஜகர்ணன் ஒரு முறை இந்தமூன்று நதிகளையும் குடித்துவிட்டானாம். அவன் பாடு பொறுக்காமல் அவனை வேணி மாதவ் அழித்த இடம் என்று எழுதி இருந்தது. வேணிமாதவ் கோயில்.

சித்தபீட் கோயில் ஆலுப்பி தேவி..கோயிலுக்குள்ள போனோமா .. ஒன்னுமே புரியலை. சாமியே இல்லை.. மூணு பக்கம் கதவு இருக்கு அந்த பக்கமா நுழைஞ்சா இருக்குமோ என்று நுழைஞ்சுநுழைஞ்சு வரோம் .. அட ஒன்னுமே இல்லைங்க .. ஒரு சதுரமேடை நடுவில் சின்ன பள்ளம் அதில் கொஞ்சம் தண்ணீர். அதற்குமேலே ஒரு மரத்தொட்டில் .எப்படிகும்பிடுவதுன்னு தெரியாமல் முழிச்சிட்டிருந்தோம். வேறு சிலர் தொட்டிலை இழுத்து அதில் தலை யை வைத்துக்கும்பிடவும் அது தான் முறை என்று தெரிந்து கொண்டோம். விக்கிபீடியா சொல்லும் கதை என்னவென்றால்...

ஒரு காட்டு வழியில் கல்யாண ஊர்வலம் போய்க்கொண்டு இருந்ததாம் திருடர்கள் வந்து கொள்ளையடித்து ஆட்களை கொன்று போட்டுவிட்டு மணமகளை வைத்திருந்த பல்லாக்கு (டோலி)திரையை நீக்கிப் பார்த்தால் அவள் மறைந்துவிட்டாளாம். அந்த கன்னிதேவி தான் .அதனால் தான் இந்த ஜூலா வழிபாடாம.

ஜவஹர்லால் நேரு பிறந்த வீடு ஆனந்தபவன் 5 மணியோடு மூடிவிடுவதால் எங்களால் பார்க்கமுடியவில்லை. இன்னும் எவ்வளவோ இடங்கள் இருந்தாலும் தில்லி ரயிலுக்கு நேரமாகியதால் மீண்டும் சத்திரத்துக்கு சென்று இட்லியை உள்ளே தள்ளிவிட்டு ரயிலேறினோம். காசி தொடர் முடிவுற்றது.

பரிசாக முட்டையும் ரசகுல்லாவும்- ஈன்ற பொழுதினும்...

சின்ன வயசில் பிறந்தநாள்ன்னா புது ட்ரஸ் , கோயில்ல ஒரு அர்ச்சனை, கொஞ்சம் சாக்லேட்...அதையும் சின்ன சின்ன கிண்ணத்துல போட்டு பக்கத்துல ப்ரண்ட்ஸுக்குன்னு பகிர்ந்துக்கிறதும்,அப்பா இண்டோ சிலோன் பேக்கரி இல்லன்னா ஜாய் பேக்கரில இருந்து சின்னச்சின்ன செவ்வக கேக்களும்.அந்த கேக்கை அப்பா வும் அம்மாவும் சர்ப்ரைஸாத்தான் கிச்சன்ல பாட்டில்களுக்கு மேல மறைவா வச்சிருப்பாங்க..

இந்த வருசம் என் பிறந்த நாளையும் அவங்கப்பா பிறந்தநாளையும் என் மகள் கொண்டாடினாள். அப்பா பிறந்தநாளுக்கு என்ன வாங்கலாம்ன்னு ஒரு வாரமா தொளைச்சு எடுத்துட்டா.. எல்லாருமா சேர்ந்து மார்க்கெட் போனாலும் யாருக்கும் தெரியாம அவ சேமிப்பில் இருந்து கொண்டுவந்த பணத்துல ஒரு டீசர்ட் வாங்கிக்குடுத்தேன். சாயாங்காலம் பாட்டுகிளாஸ் முடிஞ்சு வரும்போது இந்த கடையில் கேக் வாங்கித்தா..இந்த கடையில் கேண்டில் வாங்கனும் எத்தனை வயசுன்னு எல்லாம் கேட்டு அவளே பணமும் குடுத்தாள்.

சர்ப்பரைஸ் பார்ட்டி கொண்டாடியாச்சு. எல்லாரிடமும் மகள் டீசர்ட் வாங்கினான்னு சொன்னப்ப நானும் நானும்ன்னு குதிச்சான் மகன்.. அடே குட்டிப்பையா நீயும் தானே கடைக்கு வந்தே வாங்கும் போதுன்னு அவனையும் சேத்து சொல்ல ஆரம்பிச்சேன்.

அடுத்து என் பிறந்தநாள் போது பாட்டு க்ளாஸ் கிளம்பரோம் நானும் மகளும்.. வந்தவுடன் அதே மாதிரி செட்டப் நடக்கிறது , கிச்சனுக்கு ஒரு ஆள் ...மோடாவை இழுத்து நடுவில் ஒரு ஆள்.. ஆகா சர்ப்ப்ரைஸ் பார்ட்டி :)அப்பாகிட்ட சொல்லி இந்தமுறை ஏற்பாடுகள் நடந்திருக்கு..

கேக் வெட்டும்போது ஸ்பெஷல் அம்மா ன்னு குட்டிப்பையன் ஒரு குரல் விடறான்.அப்பா வருத்தப்படக்கூடாதேன்னு ஸ்பெஷல் அப்பான்னு ஒரு குரல்..

கேக் வெட்டியபின்னர் இன்னும் இருக்கு அம்மான்னு சொல்லிக்கிட்டே மகள் ஒரு சின்ன பாலிதீன் கவரில் இருந்த பெரிய பெரிய ரஸகுல்லா இரண்டு ..அம்மா உனக்குப் பிடிக்குமே..
இரு இரு இன்னும் ஒன்னு இருக்கு.. நட்ஸ் போட்ட கேட்பரிஸ் ட்ரை செய்தேன் ..ஆனா கிடைக்கல ஸாரி.. ன்னு சொல்லிக்கிட்டே ஒரு கேட்பரீஸ்.. நான் எப்பவோ இதெல்லாம் பிடிக்கும்ன்னு சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சு.. ஹ்ம்..


இத்தனைக்கு நடுவில் குட்டிப்பையன் ப்ரிட்ஜ்க்குள் தலைவிட்டுட்டு இருக்கான். டேய் என்னடா அங்க செய்யற சேட்டை பையா.. வெளியே வாடா! ..

"அம்மா வெயிட் ஆப்கோ ப்ரைஸ் தேனாஹேன்னா"..( அம்மா உனக்கு பரிசு தரனும்ல)
அப்பன்னு பார்த்து ஃப்ரிட்ஜ் காலியா இருக்கு மேலே ஒரே ஒரு முட்டை.
"அம்மா இந்தா இந்த egg தா ன் உன் ப்ரைஸ் ஒக்கே"..
அக்கா குடுத்த கிப்டெல்லாம் ரொம்ப ஃபீலா பாத்துட்டு இருந்திருப்பான் போல..

ஓ ஒ தேங்க்காட் கண்ணுல தண்ணி வருதே..

"அட 'லூசு அம்மா' அழறா பாரு"
இந்த கதையை போஸ்டா போடலையான்னு ராப் பின்னூட்டமே போட்டுக் கேட்டப்புறம் போடாம இருக்கலாமா போட்டாச்சு..

November 24, 2008

பிடிச்சிருக்கு.. வாரணம் ஆயிரம்

படம் பார்க்கும் முன் விமர்சனம் படிக்கவேண்டாம் என்று நானே தடை விதித்துக்கொண்டேன் நல்லதாகப்போயிற்று. ஆனால் உள்ளே போய் உட்கார்ந்ததும் முதல் காட்சியில் சூர்யா வயசான கேரக்டரில் மூச்சை சிரமப்பட்டு விட்டுக்கொண்டு நடந்த காட்சி கமலை நினைவுப்படுத்தியது போலிருந்ததால் கொஞ்சம் கடுப்பாகிவிட்டது.ஆனால் பிற காட்சிகளில் சூர்யா தனித்து தெரிய ஆரம்பித்ததும் நல்லாவே இருந்தது. சிம்ரன் வயதாகிவிட்டது என்று நம்ப முடியவில்லை. சூர்யாவுக்கு போலவே போட்ட வயசான மேக்கப் தானா இருக்கனும்..

பழய காலத்துல போகும் போது மேக்கப் ட்ரஸ் எல்லாம் ஹிந்தி படம் மாதிரி இருந்தது ஏன்னு தெரியல. அப்பாவை ஹீரோவா எடுத்துகிற பையன் தீம் நல்லாவே இருந்தது.. இதுமாதிரி அம்மாவை மாடலா எடுத்துக்கிற படம் எதும் வந்திருக்கா? படம் பார்க்க வந்திருந்த சின்ன பசங்க எல்லாம் சீரியஸாவே இல்லாம கமெண்ட் அடிச்சிட்டிருந்தாங்க. ஆனா வீட்டில் போய் தான் யோசிப்பாங்க அங்கேயே சீரியஸானா.. கூட வந்த பசங்க கமெண்ட் பண்ணுவாங்கன்னு இருக்கலாமோன்னு நண்பர் சொல்றாங்க .

ஆனா படத்துல கூட சூர்யா மிடில் ஏஜ்ல தான் பழசெல்லாம் நினைச்சுப்பார்க்கிறார். பாட்டெல்லாம் தாமரை அருமையா எழுதி இருக்காங்க.எல்லா பாட்டையும் தாமரைக்கு கொடுத்ததுக்கு கவுதமுக்கு நன்றி சொல்லனும். நெஞ்சுக்குள் மாமழை, அனல் மேலே ரெண்டும் எனக்கு ரொம்ப பிடிச்சது. ஒரு காட்சியில் காதலுக்கு சம்மதம் கிடைத்ததும் .. அந்த கணம் ஒரு இளையராஜா பாட்டு மாதிரி இருந்ததுன்னு சொல்லிட்டு ...கிடார் சவுண்ட் அதிரடியா வந்ததும் கோபமாகிடுச்சு.பாட்டு நல்ல பாட்டு தான்... இளையராஜா பேரை சொல்லிட்டு அடுத்த நிமிசம் அந்த இசை என்னவோ போல இருந்தது.



அவுர் ஆகிஸ்தா கீஜியே பாத்தேங் " பாட்டு பாத்திருக்கீங்களா..? சமீரா என்ன அழகு? இந்தபாட்டு வந்த புதிதில் மந்திரம் மாதிரி ஓடிக்கிட்டே இருக்கும் வீட்டில்.. ஆனா அதுக்கப்பறம் சமீரா நடிச்ச படமெல்லாம் ..எப்படி இருந்த சமீரா இப்படி ஆகிட்டான்னு தோணும்.. ஏன் தமிழில் ஒரு அழகான பாத்திரம் தரலைன்னு வருத்தமா இருக்கும்.. இப்பத்தான் அந்த அழகான வாய்ப்பு வந்திருக்கு.. கவுதம்க்கு நன்றி.

கொஞ்சம் நீளம் அதை விட்டுருக்கலாம் இதைவிட்டுருக்கலாம்ன்னா.. ஆசிப் சொன்னமாதிரி ஒரு மனுசனோட வாழ்க்கையில் எல்லாமே சுவாரசியமாவா இருக்கும். படத்துல தமிழ் கொஞ்சமே கொஞ்சம் தான் பேசறாங்க.. பேசாம தமிழில் சப் டைட்டில் போட்டிருக்கலாம். விசா குடுக்கும் போது மட்டும் கீழ சப் டைட்டில் போட்டங்களே அது மாதிரி.. :)

பள்ளிக்கூடப்பையனா நீலக்கலர் யூனிபார்ம் போட்ட சூர்யா நம்பவே முடியலை.. ஆச்சரியம்..ரயில் காட்சிகள் அசத்தல். அப்பா உங்களை மறக்கமாட்டேன்னு அடிக்கடி சொல்றதை வேணா விட்டுருக்கலாம்.. யாரு தான் அப்பாவை மறப்பாங்க.. இன்னும் எவ்வளவோ எழுதலாம் படத்தைப்பற்றி..

ரோல் மாடல் பற்றி ராப் கேட்ட பின்னூட்டத்திற்கு பிறகு சேர்த்தவை: சூர்யாவோட சின்ன வயசில் தான் சிகரெட் பிடித்தாலும் காதலிச்சிருந்தாலும் தன்மகன் சிகரெட் பிடிக்கக்கூடாது மற்றும் பெண்களுடன் சாலையில் நின்று பேசக்கூடாது என்று சொல்லும் அப்பா.வளர்ந்ததும் தன் நிழல் வேண்டாம் இனி சுயமாய் முடிவெடுக்கலாம் நீயும் நானும் வளர்ந்த ஆளுன்னு சொல்லிவிட்டு போவதும், அதற்குபிறகு எல்லாவிசயத்தையும் பகிர்ந்துக்கற ஒரு நண்பனா இருப்பதும் தான் அப்பாவின் மேல் சூர்யாவுக்கு மதிப்பு ஏற்படக்காரணம்.

குர்காவுன் வரை போய் இந்த படத்தைப் பார்த்ததுக்கு நிச்சயம் மதிப்பிருக்கு..

November 22, 2008

சாரநாத் புத்தர் , பாரத்மாதா கோயில் - காசிதொடர்-5


காசியில் உள்ளூர் கோயில்களுக்கு பின்னர் சற்றே தூரமாக பிரயாணித்து சாரநாத். கபகப பசிக்கு "ஹாலிடே இன் இருக்கு சாப்பிடுங்க" என்றார் ஆட்டோக்காரர்..அதிகமா இருக்குமே என்று எட்டிப்பார்த்தால் , டூப்ளிகேட் தான். ரொட்டி சப்ஜி சாப்பிட்டுவிட்டு மூல்காந்த் குடிர் விஹார் புத்தர் கோயில். அழகான தங்க நிற புத்தர்.சிறிதே தியானத்தில் அமர்ந்தோம்.

இந்த கோயிலில் ஒரு வித்தியாசமான அறிவிப்பு என்னைக் கவர்ந்தது. புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள் . ஆனால் அதற்கான பணம் 20 ரூபாயை உண்டியலில் நன்கொடையாக நீங்களே சேர்ப்பியுங்கள் என்பது தான் அந்த அறிவுப்பு. கேட்கவே நல்லா இருக்கு இல்லையா.நான் போட்டுட்டேன்ப்பா 20 ரூபாய்.

வெளியே வந்தால் கோயிலுக்கு இடதுபுறத்தில்
புத்தர் தன் சீடர்களுக்கு அறிவுரை செய்கிறார்போன்ற மிகப்பெரிய சிலைகள்...சிங்கள எழுத்துக்களால் ஆன பெரிய பெரிய கல்வெட்டுக்கள் இருந்தன. சிறு சிறு துணிகளில் வேண்டுதல்கள் போல எழுதி சிலைகளை சுற்றிய கம்பி வேலியில் கட்டி இருந்தார்கள்.

சாரநாத் ஸ்தூபி .மற்றும் அதனருகிலான புத்தர்கோயில் பழமையின் மிச்சங்கள். சென்னையில் இருக்கும் ஏதோ ஒரு சொசைட்டி என்று பெயரிட்ட அடையாள அட்டையுடன் சிங்கள மக்கள் கூட்டம் வரிசை வரிசையாக வந்து இறங்கினர். தலை மொட்டை அடித்த ஒரு பெண்மணி ஒலிபெருக்கி சகிதம் பாடல் பாட மக்கள் அனைவரும் சென்று சிதிலமான இடங்களில் முட்டியிட்டு வணங்கி பாடலை பின் தொடர்ந்தனர்.

செங்கல் பாவிய இடங்களிலேல்லாம் அமரக்கூடாது. அது தான் கோயிலின் மிச்சம். வந்து இறங்கியதும் சிலர் அதில் சாமான்களை வைப்பதும் அமர்வதும் என்று இருந்தனர். பிறகு ஒரு காவி அணிந்த சிங்களவர் வந்து அனைவரையும் புல்வெளியில் அமரச்செய்தார்.

ஜப்பானியர் புத்தர் கோயில்.

மீண்டும் காசிக்குள் நுழைந்ததும் மங்கி டெம்பிள் போவோமா என்று ஆரம்பித்த ஆட்டோக்காரருக்கு நோஓஓஓஓஓ என்ற ஒற்றுமையாக பதில் கொடுத்தோம். மீண்டும் குரங்குக் கூட்டத்தில் மாட்டிக்கொள்ள பயம் தான்.

துளசி மானஸ் கோயில் . ஏறக்குறைய பிர்லா மந்திரைப்போலவே தான்.

பாரத் மாதா கோயில் செல்லவேண்டும் என்ற போது ஆட்டோக்காரர் அங்கே ஒன்னுமில்லைங்க என்று மறுத்தார் . இல்லை எங்களுக்கு பார்க்கவேண்டும் என்று வற்புறுத்திய பின் ஒரு பனாரஸ் சேலை கடை இருக்கிறது . நெய்யும் இடமும் பார்த்துவிட்டு சேலை எடுங்கள். அருகில் தான் பாரத் மாதா கோயில் அழைத்துச் செல்கிறேன் என்றார். சேலை எல்லாம் 4000, 5000 .. வாங்கித்தரவேண்டிய ஆட்கள் வாய் திறக்காததால் நடையைக்கட்டினோம்.

பாரத் மாதாகோயிலில் மிக அற்புதமாக 3D இந்தியா மேப் தரையில் இருந்தது.

மலைகள் எல்லாம் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டு பயணிகள் கூட்டத்திற்கு ஒருவர் அழகாக விளக்கமளித்துக்கொண்டிருந்தார். கையில் இருந்த சிவப்புநிற ஒளி உமிழும் உபகரணத்தால் எந்த எந்த இடம் என்று குறிப்பிட்டுக்கொண்டிருந்தார்.

ம்யூசியம் ஒன்றும் சாரநாத்தில் இருக்கிறது . ஆனால் அதற்கு மேல் பொறுமையில்லாத குழந்தைகளுக்காக அறைக்குத்திரும்பினோம்.

November 17, 2008

இரண்டு வருடம் ஓடிப்போச்சு....

வலைப்பதிவை தமிழ்மணத்தில் இணைத்து இத்தோடு 2 வருடங்கள் ஆகிறது. தமிழ்மணத்திற்கு நன்றி.

பதிவின் பிறந்தநாளை எப்படி கொண்டடலாம்ன்னு யோசிச்சேன். புதுகைத்தென்றல் தன்னுடைய பதிவில் பிடித்தது எது என்று எல்லாரிடமும் கேட்டார்கள். சென்ஷி தந்த ஐடியா ,ஸ்ரீதரன் என்பவர் தன்னுடைய பதிவில் சிலவற்றையே எடுத்து அலசி ஆராய்ந்த மாதிரி நீங்களு ம்... (ஏன் ஏன்.. எல்லாரும் ஓடிப்போகறதுக்கா..) சரி என்ன செய்யலாம் ... எப்போதும் போல ஒத்திப்போட்டாச்சு.
வழக்கமான பாணியில்.. காலையில் கை போன போக்கிலே தட்டியாச்சு. சரி பழய பதிவுகளை நாமே படிச்சுப்பார்ப்போம்ன்னு பின்னோக்கிப்போனால்...........

வர்சானா , கோவர்த்தன ஆன்மீகச்சுற்றுலா,மணாலிச்சுற்றுலா பதிவுகளுக்கு கூட்டமே இல்லை காத்துவாங்குது ... அப்ப நான் வேற புது பதிவரா, அதனால இருக்குமோ.. ஆரம்பத்துல எழுதின கவிதைகளுக்கும் வரவேற்பு கம்மி தான் இருந்தும் தொடர்ந்து எல்லாரையும் கவிதை எழுதி சோதனைக்குள்ளாக்கி இருக்கிறேன்.

சிறுகதைகள் வகை கொஞ்சமாத்தான் எழுதி இருக்கேன். கதையை ஆரம்பிக்க விவரிக்கத் தெரிந்த அளவுக்கு முடிக்கத்தெரியவில்லை. முதலில் கதையோட ஒன்லைன் சரியாகக்கிடைத்தால் தானே கதை எழுதலாம். சரி அடுத்து... பாருங்க சமையல் வகையில் ஒன்னுமே இல்லை.. ஏன்னா அது கைக்கு வந்ததைப்போட்டு சமைப்பது .. நோ ஸ்பெசிஃபிக் ரெசிபி..

செய்திவிமர்சனங்கற பேரில் 4 போஸ்ட் போட்டிருக்கேன். ஆனால் இப்பொழுதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை. காரணம் ஒரு விசயத்தைப் பார்த்த உடனோ கேட்ட உடனேயோ எதாவது தோன்றுகிறது. கொஞ்சம் விட்டு அதன் பிண்ணனி வெளியே வந்ததும் பார்த்தால் அது வேற மாதிரி இருக்கிறது. இது ஒன்றும் புதிதில்லை. எப்போதும் பட்டிமன்றம் போலவே.. இந்த பக்கம் பேசுபவர்கள் பேசும் போது கேட்டால் அட இது சரியா இருக்கே.. அந்த பக்கம் பேசுபவர்கள் பேசும் போது இது கூட சரிதானேப்பா..

நேற்று டிடி பொதிகையில் "அந்த நாள்" திரைப்படத்தின் சில பகுதிகள். ( இது ரொம்ப வசதி கொஞ்சம் கொஞ்சமா பிரித்துப்போடுவதால் முழுபடம் பார்க்க போரடிக்காது) முதலில் சிவாஜி வந்து மாணவர்களுக்கு படிப்புத்தான் முக்கியம் என்று பேசியபோது ஆகா ன்னு எதிரில் இருந்தவர்களைப்போலவே கைதட்ட ஆசையா இருந்தது. பின்னாலே எழுந்த பண்டரிபாயின் வீரா வேசப் பேச்சைக்கேட்டதும் .. நமக்கும் போராட்ட உணர்ச்சி வந்துவிட்டதே.. பேசாம நடுநிலை யா இருக்கலாமே என்று எப்பவும் நடுநிலை .. அதாவது பேசாமல் பார்க்கிற கூட்டத்தில் சேர்ந்தே இருந்துகொண்டு.. (அடிவிழுந்தால் முதலில் நடுநிலைக்குத்தான் விழும் அது தெரியுமா?) அந்த வீடியோவைப்பாருங்களேன்..


நினைவலைகள் .. அதான் கொசுவத்திப்பா...அது கைகொடுக்கும் கை.. எழுத ஒன்றுமில்லையென்றால் இதை எழுதலாம். சரிக்கு சமமாக தொடர்விளையாட்டுக்களில் இதே அலை வேறுவிதமாக அடித்திருக்கிறது.

கவிதைக்கு??(22) அடுத்த அளவில் குழந்தைகள்(15) வகை தான் நிறைய எழுதி இருக்கிறேன்..அம்மா ஆச்சே.. இவை திருப்தி தந்த பதிவுகள் ..ஆனால் தொடர்ந்து குழந்தைகளைப்பற்றி எழுத தனித்தனியாக அவர்கள் பெயரில் பதிவு ஆரம்பித்துவிட்டதால் இங்கே குறைந்துவிட்டது.

200 பதிவு எழுதி இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.
"அளவில் என்ன இருக்கிறது .. க்ளிக்க்ளிக்கில் 20 பதிவு இருக்கே அதை நாங்களே கூட்டிப்பார்த்துக்கறோம் கவலை வேண்டாமென்று துளசி ஆறுதல் சொன்னார்கள்.

வழக்கப்போல விழா மேடையில் எல்லாரையும் வாழ்த்துவது போல இதுவரை படித்து , படித்து பின்னூட்டி, பாராட்டி, அறிவுறுத்தி, உடன் வருகிற நட்புணர்வை பாராட்டி அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

November 14, 2008

காசி தொடர்(4) - படித்துறைகள், உள்ளூர் கோயில்கள்

கங்கா மாதா (படகிலிருந்து காட்சி)

காசியில் இரண்டாவது நாள்.. காலை 6.30 மணிக்கு படகுக்காரர் சத்திரத்திற்கே வந்து அழைத்துச் சென்றார். முதலில் முக்கியமான படித்துறைகளை பார்க்க ஏற்பாடு. தலைக்கு 40 ரூ . தாஸ்வமேத காட் லிருந்து புறப்பட்டு மணிக்கரன் காட், ராணா காட், அரிச்சந்திரா காட்( படித்துறை) . கங்கையின் மறுகரையில் கொஞ்சம் அழுக்கு கம்மியாக இருக்குமென்று அங்கே ஒரு குளியல் திட்டம்.
போன ஒர் இடத்திலும் கங்கையில் நாங்கள் குளிக்கவில்லை. பெரியவர்கள் மட்டுமே முங்கி எழுந்தார்கள்.. நாங்கள் தலையில் தெளித்துக்கொண்டதோடு சரி. மறுகரையில் நன்றாகத்தான் இருந்தது. சிறுவர்களும் சிறுமிகளும் கூட குளிரில் முதலில் நடுங்கிவிட்டு பின்னர் குளிர்விட்டதும் ஜாலியாக குளித்துக்கொண்டிருந்தார்கள்.எதிர்கரையில் ஆடைமாற்ற என்று சிறுதடுப்புகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். எனவே ஒரு ஆளுக்கு குளிக்க 1 ரூ வாங்குகிறார்கள்.


அரிச்சந்திரா மற்றும் மணிகரணில் மட்டுமே இப்போதும் பிணங்களை எரிக்கும் வழக்கம் தொடர்கிறது. கேதார்காட் டில் இருந்த கேதார நாதர் கோயில் நம் ஊர் கோயில் என்று பார்த்த உடனே தெரிந்தது. நேபாள மன்னர் கட்டிய நேபாள கோயில் எல்லாம் படகிலிருந்தே பார்த்துவிட்டோம். படித்துறைகளை படகிலிருந்து பார்க்கும் போது தான் காசி என்றாலே நாம் பார்க்கின்ற படங்களின் தோற்றம் தெரிகிறது.
ராணாகாட்
மீண்டும் தாஸ்வமேத காட். ஆங்காங்கே குடைகளின் கீழே அமர்ந்த பண்டாக்கள் சிரார்த்தம் பூஜைகள் செய்விக்கிறார்கள். எங்களுக்காக ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் அய்யர் வந்தார். அங்கேயே பிறந்து வளர்ந்திருப்பார் போலும் தமிழைக் கடித்துத் துப்பினார். அம்மா இருக்கா? அண்ணா அக்கா இருக்கா? கங்கா யமுனா சொல்லு என்று மிரட்டி மிரட்டியே மாமனாரை மந்திரங்கள் சொல்லவைத்தார். பிண்டம் இங்கே கரையில் கரைக்காதீங்கோ மெம்பர்ஸ் குளிப்பாங்கோ.. பத்துரூபாய் தான் படகில் கொஞ்சமாய் போய் போட்டுட்டு குளிங்கோ என்று அதற்காகவே காத்திருந்த தாத்தா ஒருவரிடம் அனுப்பிவிட்டார்.

பின் நேராக சத்திரம் காலை உணவு . பிறகு பேசிவைத்திருந்த படி ஆட்டோக்காரர் வந்தார். ரயிலிலிருந்து இறங்கி சத்திரம் வரும்போதே அவரிடம் நாங்கள் பேசி வைத்திருந்தோம். 500 ரூ க்கு சில உள்ளூர் கோயில்கள் மற்றும் சாரநாத் .

நியூ காசி விஸ்வநாத் கோயில்( பிர்லா மந்திர்) நாங்கள் 11 மணிக்கு புறப்பட்டதால் கோயில் அடைக்கப்படும் நேரம் ஓடி ஓடி பார்த்தோம். வழக்கமான பிர்லா கோயிலைப்போலவே அழகான கட்டமைப்பு. இது பனாரஸ் ஹிந்து யுனிவர்ஸிட்டிக்குள் இருக்கிறது . காற்றோட்டமான அந்த கோயில் அமைப்பும் அமைதியும் படிக்க நல்ல இடம் தான். ஆங்காங்கே மாணவர்கள் படித்துக்கொண்டிருந்தார்கள்.

மங்கி டெம்பிள்( சங்கட் மோச்சன் அனுமான் கோயில்) இங்கே லாக்கர் ஒன்று தந்து கேமிரா மற்றும் போன் எல்லாவற்றையும் வைத்துப்போகும் படி சொல்லிவிட்டார்கள். தண்ணீர் பாட்டில் மட்டும் அத்தையின் கையில் இருந்தது. எங்கே பார்த்தாலும் குரங்குகளாக தெரிந்த சிறுபாதை. ஏற்கனவே குரங்கு கண்ணாடியை லவட்டிக்கொண்டு போய் கண் தெரியாம கோவர்த்தனம் பார்த்த அனுபவம் இருக்கிறது என்பதால் கண்ணாடியை கழட்டி வைத்துக்கொண்டு நடை போட்டேன்.

பம்மியபடி நடந்த எங்களைக்கண்டதும் அருகே வந்த குரங்கு ஒன்று முதலில் எதாவது வைத்திருக்கிறாயா என்று கேட்பது போல சுடிதார் நுனியைப்புடித்துக்கேட்டது. அடுத்து அத்தையின் சேலையை பிடித்துக்கேட்டது பயந்து பாட்டிலைக் கீழே போட்டதும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டது. பயந்தபடியே கோயிலுக்கு சென்று சேர்ந்தோம். அதற்குள் திரை மூடப்பட்டு விட்டது. சாலிஸா புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. யார் வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம். வெளியே ஆர்ப்பாட்டம் செய்யௌம் குரங்குகள் ஒன்றுமே கோயிலுக்குள் வரவில்லை.மீண்டும் கோயில் 3 மணிக்குத்தான் திறக்கும் சரி என்று கிளம்பிவிட்டோம்.

வழக்கமாக கோயில்கடையில் எதயாவது வாங்காவிட்டால் சாமிகோச்சுக்கும் என்பது குழந்தைகள் எண்ணம். அதேபோல் கேட்ட பையனுக்கு , வாங்கினாலும் வெளியே குரங்கு பிடிங்கிக்கும்டா என்று சமாதானம் செய்திருந்தேன். உண்மையும் அது தான். ஆனால் எங்களுக்கு முன்னால் நடந்து கொண்டிருந்த குடும்பத்தில் ஒரு குழந்தை கையில் பேட் பால் பாக்கெட் ஒன்று இருந்தது. அம்மா பாரேன் அவங்க மட்டும் என்று சபரி ஆரம்பிக்கவும் பாக்கெட்டிலிருந்து பால் கீழே விழவும் சரியாக இருந்தது. பச்சைக்கலர் பால். கொய்யாவைப்போல இருந்தது. குரங்கு வந்து எடுத்துக்கொண்டு போய்விட்டது. அப்பாடா அம்மா கெட்டவ இல்லை..
photo-mang (thanks)
துர்கா கோயில்

பிறகு கால பைரவ் கோயில் , சனி பகவான் கோயில் . அப்போது தான் அங்கேயும் நடை சாத்தி இருக்கிறார்கள் போல ,,மீண்டும் 2 மணிக்குத்தான் . வெளியே இருந்த புகைப்பட சாமியை கும்பிட்டுவிட்டு வலம் வந்தோம். வாங்கோ மயில் பீலி அடிவாங்கிக்கோ என்று அழைத்த சாமியாரைப் புறக்கணித்துவிட்டு வெளியே வந்தோம்.முதுகைக்காட்டினால் பாவம் போக மயில்பீலி அடி விழும்.பின் தட்சனை தான் வேறென்ன...

அடுத்து சாரநாத்...............

November 12, 2008

காசி விஸ்வநாதர் ஆரத்தி - (இருகுரல் பதிவு)

இரவு எட்டரை மணிக்கு நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்திலேயே இருக்கும் சிவன் கோயிலின் வாசலில் காத்திருந்தோம். சில காவி வேஷ்டி சாதுக்கள் அங்கே பெரிய பெரிய பாத்திரங்களும் ட்ரங்க் பெட்டிகளுடனும் அமர்ந்திருந்தனர். எல்லாரையும் ஓரமாக நிற்க சொல்லிவிட்டு ஒரு சாது மட்டும் ஒரு சாம்பிராணி தூபங்களுடன் சிவனை தொழுது சுற்றி கிளம்பினார். வேகமென்றால் வேகம் விடுவிடுவென்று அவர் முன்னே நடக்க.. பின்னே மற்ற சாதுக்கள் தலையில் பாத்திரங்களும் பெட்டியுமாக " சம்போ மகாதேவ சம்போ மகாதேவ சம்போ" என்ற கோஷத்துடன் சந்துக்களில் புகுந்து புறப்பட்டார்கள் . போகும் வழியெங்கும் கடைக்காரர்களும் மக்களும் பணிவாக வழிவிட்டு செல்வதும் சப்பரத்தில் வரும் கடவுளை வணங்குவது போல வணங்கிச் சென்றார்கள். செருப்பில்லா கால்களோடு நாங்களும் பின்னால் ஓட்டமான நடையிட்டோம்.

துண்டி விநாயகர் அருகில் வந்ததும் அவர்களைத்தவிர மற்றவர்களை சோதனையிட்டு அனுப்பினார்கள். பதறி பின்பற்றியபோது கோயிலில் சென்று ஒரு ஓரமாக அமர்ந்து பெட்டிகளைத் திறந்து அவற்றிலிருந்து நன்றாக பளபளப்பாக தேய்த்து வைக்கப்பட்ட விளக்குகளை எடுத்துத் திரியிட்டு எண்ணெயிட்டு தயார் படுத்திக்கொண்டிருந்தார்கள். பாத்திரங்களில் அபிஷேக சாமான்கள். இங்கே ஏன் அமர்கிறீர்கள் என்று விரட்டிய கோயில் பணியாளரின் வார்த்தைக்கு குழம்பிய எங்களை , ஒரு சாது , நீங்க பாஸ் வச்சிருக்கவங்க தானே சும்மா உக்காருங்க என்று அமரச்செய்தார்.

கூட வந்திருந்த ஒரு பெண்மணி சாமியைத் தொட்டுவணங்கனும்ன்னா இப்போது ஒருமுறை பார்த்துக்கோங்க என்று சொன்னபோது சரி என்று உள்ளே நுழைந்தோம். மதியம் இருந்த கம்பி தடுப்பு அப்போது இல்லை.. குழந்தைகளூம் தொட்டு வணங்க வகையாக இருந்தது. இன்னோர் தமிழ் குடும்பமும் எங்களுடன் இணைந்து கொண்டனர். அந்த குடும்பம் சத்திரத்திலிருந்து வந்தவர்கள் இல்லை. அவர்கள் ஆரத்திக்கு காத்திருந்த எங்களுடன் சிநேக பாவம் காட்டாததில் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. பின்னால் அது சரியாக இருந்தது.

உங்களுக்கு இங்கே அந்த கோயிலின் சன்னதி அமைப்பை சொல்லிவிடுகிறேன்.சதுரமான சிறு அறை தான். அதன் நான்கு புறமும் வாசல் . உள்ளே ஒரு ஓரமாக(சதுரத்தின் ஒரு கார்னரில்) சிவன் தரையில் சிறிது பள்ளத்தில் இருக்கிறார். நான்கு வாயிலில் ஒரு வாயிலின் அருகில் எங்களை கூட்டி சென்ற கோயில் பணியாளர் சிறிது காத்திருங்கள் என்றார். அங்கே இருந்த கூட்டத்தினர் நகர்ந்ததும் எங்களை ,வாயிலின் நிலைப்படி சற்றே அகலமானது அதில் அமரச்செய்தார். நேரெதிரே அந்த சிநேக பாவம் காட்டாத குடும்பத்தினர் மற்றொரு வாயிலில் . அங்கே நிலைப்படியில் ஒருவர் தான் அமரவைக்கப்பட்டிருந்தார் மற்றவர்கள் சிறிதே பின்பக்கமாக ஆனால் மேடை அமைத்து உட்காரவைக்கப்பட்டிருந்தனர். ஏனென்றால் சாமி பள்ளத்தில் இருக்கிறாரே.

சிவனுக்கு அபிஷேகம் செய்யவிருந்த அய்யர் எங்களுக்கு முதுகு காண்பித்து அமர்ந்தார் பாதி அவரே மறைத்துவிட்டார். எதிர்கோஷ்டிக்கு நல்ல தரிசனம் . எங்களூக்கு எட்டி எட்டாமல் தெரிந்தார். மனதுக்குள் கோபம் எழுந்தது. அவர்கள் சரியாக பணம் கொடுத்து பேசி வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது. "கோயிலுக்குள் அமர்ந்து ஒருவர் மேலே இத்தனை கோபம் வரலாமா மனதின் இன்னொரு குரல். அவர்கள் அதிக புண்ணியம் செய்திருப்பார்களோ. அட சே காசு கொடுத்து சாமர்த்தியமாய் நடந்து கொண்டார்கள் என்று சொல் இன்னொரு குரல்.
எனக்கு சரியாக பார்க்க முடியலையே.. ஹ்ம்.. இது என்ன கோயில் ஜோதிர் லிங்கத்தில் ஒன்று . அடிமுடி காணமுடியாத ஒளிகடவுள் அவரை முழுசா பார்க்க முடியலையேன்னு உனக்கு வருத்தமாக்கும் .
பால் தயிர் என அபிஷேகம் நடந்தது. என் மடியில் மகள் கனத்தாள். இடுக்கி அமர்ந்ததில் கால்களில் வலி. கோயிலின் உள் அமைப்பை நோட்டம் விட்டேன். மார்பிள் தளம் மார்பில் சுவர். மார்பிள் சிலைகள். ராம் லக்ஷ்மன் சீதா , பன்னிரண்டு கரங்களுடன் விநாயகர், லக்ஷ்மி நாராயன் என பல சிலைகள். வேதம்(?) ஓதி அவர்கள் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்கள். கால்களை அந்த சன்னதிக்குள் விடாமல் நிலைப்படி மேடையில் அமரச் சொல்லி இருந்தார்கள். சற்றே கால்களை தளர்த்தி மாற்றி அமர முற்படும் போதெல்லாம் மந்திரம் சொல்லிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் ( அப்பரண்டிஸ்?) பதறி திரும்பிப் பார்த்தான். அத்தனைக்கு ஆகாதா காலையில் இதே இடத்தில் எல்லாரும் முண்டி அடித்து கும்பிட்டோமே.

அபிஷேகம் முடிந்ததும் ஒரு வெள்ளி கட்டில் வந்தது. அதன் மேலே அழகாகவிரிப்பிட்டு , தலையணையிட்டு வைத்தனர்.ஒரு வெள்ளி சிவன் தோள்வரையிலான உருவம் அதனையும் ஒரு சின்ன வெள்ளி முக்காலியில் வைத்து மாலையிட்டு வைத்தனர். இவையெல்லாம் சத்திரக்கட்டளையோடவைகளாம். சிவனுக்கு அலங்காரம் ஆரம்ப்மானது. மந்திரங்களுக்கு நடுவே வந்திருந்த மலர் மாலைகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தி பூக்களை நெருக்கி அமைத்து, நறுக்கி கோர்த்து, ஒருவர் வழங்கியபடியே இருக்க , தலைமை பண்டா அதனை சிவனின் மேல் வரிசையாக வட்டமாக அடுக்கியபடியே வந்தார். பின்னர் வெள்ளி நாகம் குடை போன்றவற்றை அடுக்கி .. மேலே இருந்த கொக்கியில் இருந்து நாற்புரமும் தொங்கும்படி அலங்காரமாக பூக்களை வடிவமைத்தனர். மிக அழகான் வேலை . அந்த நேரம் அதை கவனிப்பது ஒரு வித தியானம் போல இருந்தது.

இந்த இணைப்பில் இருக்கும் இடத்துக்கு சென்று நீங்களும் சிவனை நேரிலேயே தரிசிக்கலாம். (வீடியோ)

அலங்காரமான சிவன்(வீடியோ)

ஆரத்தி(வீடியோ) (மூன்று பேரே மறைத்துக்கொண்டார்கள்
நல்ல வேளை நாங்கள் சென்ற அன்று இத்தனை பேர் பூஜை செய்யவில்லை )

ஜிகினா வேலைப்பாடான சிகப்பு திரையிட்டு சிறிது நேரம் பூஜையானது. திறந்த பொழுது பலமணிகளின் ஓசையோடு ஆரத்தி பூஜை நடந்தது. சம்போ மகாதேவா என்று கோஷமிட்டனர் அனைவரும். அந்த சில நொடிகள் பக்திபூர்வமாக தோன்றியது. அடுத்த நொடி அந்த பூஜைத்தட்டை நம்மிடம் கொண்டுவந்த நபர் தட்சனை தட்சனை என்று கையை தட்டை நோக்கி காட்டியபோது சட்டென்று இறங்கிய ஜுரவேகம்போல தணிந்தது பக்தி. என் மாமனாருக்கு விபூதி யை பூசிவிட்டு மாலை ஒன்றையும் இட்ட பண்டா(அய்யர்)... சிறப்பு பூஜைக்கு வந்திருக்கும் நீர் 200 ரூபாயாவது தட்சிணையாக தரவேண்டும் என்றார். கூட்டத்தில் பணத்தை எடுக்க முடியாமல் திணறியவரை ஒருவர் மறுத்து,முன்பே நீங்களிட்ட தட்சணை போதுமானது வாருங்கள் என்று பின்னால் இழுத்துக்கொண்டார். தொடர்ந்த அவர்களின் தட்சணை மந்திரம் காதுகளில் ஒலித்தபடி இருந்தது.


கடவுள் உண்மையா? இப்படி இவர்கள் மந்திரத்தை சொல்லிவிட்டு நம்மை ஏன் பணம் பணமென படுத்தவேண்டும்.நாம் காலையில் தொட்டுவணங்கிய கடவுளுக்கு நாம் திடீரென தீண்டாதவர்களாகிப்போன மர்மம் என்ன ? என நாத்திகமும் ஆத்திகமும் மனசுக்குள் விவாதமேடை நடத்திய அந்நேரத்தில் பின்வரிசையில் பெஞ்சில் அமர்ந்திருந்த கணவரின் மேல் என் மகன் இருமுறை வாந்தி எடுத்திருக்கிறான். வெளியே வந்ததும் ஒருவேளை நம் விவாதபுத்திக்கு கிடைத்த தண்டனையாக இருக்குமோ.. அடச்சே உடனே எதாகிலும் கடவுள் மேலே பழியைத்தூக்கிபோடாதே கங்கா ஆரத்தி சமயத்தில் தின்ற குர்குரியும் ஜூஸும் ஆட்டமும் பாட்டமும் பின் அணிந்த ஸ்வெட்டரின் சூடும் கூட்டமும் தூக்கமும் என பிள்ளைக்கு ஏற்கனவே இருக்கும் சளி படுத்தி இருக்கும். அட இந்த இன்னொரு குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறதே.



ஒரு குரலுக்கே பதிவு நீளும் இருகுரல் பதிவாச்சே கொஞ்சம் நீளமோ நீளம்.. :)

November 7, 2008

காசி பயணத்தொடர்(2) - கங்கா ஆரத்தி






கங்கா ஆரத்தி சாயங்காலம் 6.45 மணிக்கு ஆரம்பிப்பார்கள் . ஆனால் நாங்கள் ஐந்து மணிக்கே கங்கைக்கரைக்கு சென்றுவிட்டோம். நல்லது தான். வெளிச்சத்தில் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். வெளிநாட்டினர் அமர மேலே இடம் செய்திருந்தார்கள்.

ஏழு கட்டம் கட்டமான மேடை அமைக்கப்பட்டு அதில் பூஜைக்கானப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. விளக்குக்களை பளபளப்பேற்றி துடைத்து திரியிட்டுக் கொண்டிருந்தார் ஒருவர்.

தாஸ்வமேத் கட் என்னும் படித்துறையில் தான் இந்த ஆரத்தி நடக்கிறது. போட்காரர்கள் பாய்ந்து வந்து அழைக்கிறார்கள். வாருங்கள் தலைக்கு அறுபது ரூபாய் தான். உங்களை எல்லா படித்துறையையும் காட்டிவிட்டு பின்னர் சரியாக ஆரத்தி சமயத்தில் ஆரத்தி நடக்கும் இடத்திற்கே கொண்டுவந்து நிறுத்துவோம். நீங்கள் படகிலிருந்து பார்க்கும் போது நன்றாக இருக்கும் என்றும் கழுத்தில் தொங்கிய கேமிராவைப் பார்த்ததும் காட்சியை சரியாக வீடியோ செய்ய அங்கே தான் வசதி என்றும் அழுத்தமாய் சொன்னார்கள்.

எங்களுக்கோ கங்கை படித்துறைகளைப் பார்க்கும் திட்டம் திரு.பனப்பன் சொன்னது போல காலை தான் . அதில் மாற்றம் செய்ய விருப்பமில்லை என்று சொன்னதும் அந்த படகுக்காரர் சரி நீங்கள் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. இந்த மேடைகளி ல் அமர்ந்து பாருங்கள் . இன்னும் சிறிது நேரத்தில் மக்கள் கூட்டம் வந்துவிட்டால் அமர இடம் கிடைக்காது என்று அறிவுறுத்தினார்.
நன்றி சொல்லிவிட்டுப்பார்த்தால் மேடைகளில் விரிப்புகளும் திண்டுகளும் கிடக்கிறதே இது யாருக்காகவேனும் செய்திருக்கப்போய் நாம் அமர்ந்து எழுப்பப்பட்டு விடக்கூடாதே என்று ஒரு தயக்கம். பெங்காலி குடும்பம் அமர்ந்திருந்த இடத்தில் சென்று யார் வேண்டுமானாலும் அமரலாமா என்று கேட்டுக்கொண்டோம்.

செருப்புக்களை அருகிலேயே வைத்துக்கொள்ள வசதியாக ஒருவர் பின் ஒருவரகா சதுரமேடையின் ஓரங்களிலேயே அமர்ந்து கொண்டோம். எங்களுக்கு முன்னால் ஒரு ஜெர்மனி பெண்மணி அந்த குடும்பத்தினரை மிரட்டி இடம் வாங்கிக்கொண்டார். அப்போதிலிருந்தே அந்த குடும்பத்துக்கும் அந்த பெண்மணிக்கும் ஒரே சண்டை. அவர்கள் என்ன செய்தாலும் இந்த பெண்மணி செய்யக்கூடாது என்று தடுத்தார். குழந்தையை ஏன் நடுவில் படுக்கப்போட்டிருக்கிறீர்கள் . மணியை அடிக்க கயிறை எடுக்காதீர்கள் அவர்கள் தான் அடிக்கனும். நான் இங்கே மூன்று இரவாக வருகிறேன் எனக்குத்தெரியும் என்று மிரட்டத்தொடங்கினார்.

ஆனால் சிறிது நேரத்திலேயே ஒருவர் வந்து ஒவ்வொரு மேடையிலும் ஒரு ஆளுக்கு கயிற்றைக் கொடுத்து அடிக்க சொல்லும்போது மணிஅடிக்கலாம் என்றார். அந்த குடும்பம் மொத்தமும் அந்த பெண்மணியை முறைத்தார்கள். சிறு அகல் விளக்கில் மெழுகு இட்டது வரிசையாக அடுக்கி அதையும் ஒருஒரு மேடையில் இருந்தும் ஒரு ஆளைத்தேர்ந்தெடுத்து மெழுகுவத்திக் கொண்டு ஏற்றச்சொன்னார்கள்.

பிறகு ஒன்றே போல் ஆடையணிந்து ஏழு இளைஞர்கள் வந்தார்கள். முதலில் ஊதுபத்தி , பின் தீப தூப ,விசிறி , வெண்சாமரம் மற்றும் பூ கொண்டு ஆரத்தியை நடத்தினார்கள். பின்னால் லைவாக ஒருவர் பாடிக்கொண்டிருந்தார். மக்கள் கூட்டம் கரையிலும் கங்கையில் படகிலும் கூட்டமாக கூட இணைந்தே பாடவும் செய்தனர். ஒன்று போலவே அவர்கள் செய்யும்போது பார்க்க அழகாக இருந்தது.

கங்கையில் விட என்று காகித தொண்ணையில் பூ மெழுகு விளக்கு விற்கின்றனர் குழந்தைகள். ஒரு பெண் அழகாக இருந்தாள் நான் புகைப்படமெடுப்பதை கவனித்ததும் பெருமையாக ஒரு பார்வை பார்த்தாள். அவளுக்கு இது வழக்கமாகிவிட்டிருக்க வேண்டும். வருகின்ற அனைத்து வெளிநாட்டினரும் கங்கைக்கரையில் சவரம் செய்பவனிலிருந்து பாசி விற்கிறவர் வரை ஒருவரை விடாமல் எடுத்துத்தள்ளுகிறார்களே...

ஏழரை மணிக்கு ஆரத்தி முடிந்தது.. சத்திரத்திற்கு சென்று இரவு உணவு சாப்பிடசெல்லவேண்டும் விடுவிடுவென்று நடைபோட்டோம். இரவு உணவு இட்லி , கோதுமை உப்புமா. காலையில் பெண்களும் இரவில் ஆண்களும் பரிமாறினார்கள். வடநாட்டினர் தான் இருந்தாலும் நம் பாணியில் அம்மா அய்யா சாம்பார் என்று அழைத்து நன்றாகப் பரிமாறினார்கள். நாட்டுக்கோட்டை சத்திரத்தின் முகவரி கேட்டிருந்தார் சின்ன அம்மிணி . இதோ நீங்கள் எல்லாருமே எடுத்துக்கொள்ளுங்கள்.
Varanasi
sri kasi nattukoottai nagara satram
Godowlia
Varanasi
221001
(UP) India
0542-2451804

Alahabhad
149, Mori-Daraganj
Allahabad
211 006
UP India
0532 2501275

இதுவும் தவிர பல மடங்கள் உண்டு. அங்கேயும் தங்கும் வசதி உண்டு. கேதார் கட் மற்றும் இந்த சத்திரங்கள் பகுதியில் ரோடுகளிலெல்லாம் இட்லி தோசை விற்கிறார்கள். தோசையை தொப்பியாக்கிவைத்திருக்கிறார்கள். நம்மவர்களுக்குத்தான் எங்கே போனாலும் தோசை இட்லி வேண்டுமே..

வாழை இலை போன்ற வடிவத்தில் கொஞ்சமே கனமான காகிதம் அதன் மேல் தான் சாப்பாடு.. அழைகாக மடித்துக் கொண்டு போட்டுவிடலாம்.

November 6, 2008

காசி பயணத்தொடர்

சுமார் ஐந்து வயதிருக்கும் போதே காசிக்கு சென்றிருக்கிறேன். இது மூன்றாவது முறை. தில்லியிலிருந்து சிவகங்கா எக்ஸ்ப்ரஸ். இரவு கிளம்பி காலை வாரனாசி. தீபாவளி சமயத்தில் விசேஷமாக இருக்குமே தீபாவளிக்கு பிறகு கிளம்புகிறீர்களே என்று தான் எல்லோருமே கேட்டுக்கொண்டிருந்தார்கள். கூட்டம் என்றால் எங்க குடும்பத்துக்கு கொஞ்சம் அலர்ஜி.

வாரனாசியில் இறங்கியதும் ப்ரீபெய்டு ஆட்டோ ஒன்றை பிடித்து நாட் கோட் சத்தர் போய் இறங்கினோம். என்ன பார்க்கிறீர்கள்? அதாங்க நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம். ஊரில் நல்ல ப்ரசித்தம். போனமுறைக்கு இந்த முறை சத்திரம் நல்ல மாற்றம். லிப்ட் வசதி வந்திருக்கிறது. அறைகளும் புது முறைப்படி டைல்ஸ் வைத்து பெரிய கட்டிலிட்டு இருந்தது. பாத்ரூம்களும் வசதியாக ஹோட்டல் அறைகளைப்போல நல்ல முறையில் டைல்ஸ் வசதிகளோடு செய்திருந்தார்கள். முக்கியமாக சத்திரத்தை நாடுவதன் காரணம் ( ராப் கவனிச்சுக்கோ) தென்னிந்திய உணவு தான்.


நேராக அலுவலக அறையில் திரு. பனப்பனை சந்தித்தோம்.
என்னவெல்லாம் வசதி வேண்டுமோ நான் செய்துதருவேன் உங்கள் தேவை என்ன சொல்லுங்கள் என்று அமைதியாக விசாரித்தார்.

" சும்மா சாமி கும்பிடவா வேறு எதுவும் வேலை இருக்கிறதா ? "என்றார்.
" சாமி கும்பிடத்தாங்க ஆனா ஒரு சிரார்த்தம் கூட கொடுக்கனும்" என்றதும்
"அதாங்க வேற வேலைன்னு கேட்டேன். சரி எத்தனை நாள் தங்குவீர்கள்?"
" அது இரண்டு நாளுங்க.. "
"அப்ப சொல்றதைக் கேளுங்க போய் குளிச்சி கிளிச்சி ரெடியாகி ரெஸ்டு எடுங்க.. மதியம் ப்ரீ சாப்பாடு தான் சாப்பிடுங்க.. 2 அரை மணிக்கா வாங்க ,ஒரு பையனை அனுப்பறேன் நடந்தே போகக்கூடிய நாலு கோயில் பார்த்துட்டு வாங்க. பின்ன சாயங்காலம் கங்கா ஆரத்திப்பார்த்துடுங்க."

"சரிங்க அப்படியே ராத்திரி கோயிலிருந்து புறப்படும் நகரத்தார் கட்டளைக்கு பாஸ் வேணுங்களே! .. "

அதுக்கென்னா ராத்திரி சாப்பாட்டுக்கு 20 ரூ டோக்கன் இப்பவே வாங்கிக்கோங்க சாப்பிடவரும் போது பாஸ் வாங்கிக்கோங்க நாளை காலையில் வாங்க போட்க்கும் அய்யருக்கும் ஏற்பாடு செய்துடலாம் பின்ன சாரநாத் மற்ற இடங்களுக்கும் வண்டி வேண்டுமென்றால் ஏற்பாடு செய்வேன்.."

கடகட என நமக்கான திட்டத்தை அவரே சொல்லிமுடித்துவிட்டார். குறுக்கே கேட்க அவசியமே இல்லை.

மதியம் சாப்பாடு சாம்பார் ரசம் காய் என்று வீட்டில் சாப்பிடுவது போல நிம்மதியாக சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஒரு ரெஸ்ட். இரண்டரை மணிக்கு கிளம்பினோம்.

கேமிரா , போன் ஏன் பேனாவுக்குக்கூட அனுமதி இல்லை. என்பதால் மனதே இல்லாமல் கேமிரா இல்லாமல் கிளம்பினேன்.
முதலில் துண்டி விநாயகர். பின்னர் அன்னபூரணி, பின்னர் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி கோயில்.
photo by simona ( google தந்த படம் தான் அவருக்கு ஒரு நன்றி சொல்லிக்கலாம்)
தெருக்கள் மதுரை மீனாட்சி கோயில் மேல மாசி வீதி சந்துக்களையும் விட சிறியது. சாந்தினிசவுக் சந்துக்களையும் விட சிறியது.பெரிய டவுன் கடைத்தெருவில் கூட கார்கள் நிறுத்த அனுமதி இல்லை. இருசக்கரவாகனங்களை நிறுத்தி ரோட்டி ன் நடுவில் டிவைடராகவும் பார்க்கிங்க் ப்ளேசாகவும் இருமாதிரியும் பயன்படுத்துகிறார்கள். துண்டி விநாயகர் அருகிலுருந்தே போலீஸ் காவல் தான்.


நுழைவு வாயில்



தங்க கோபுரம்


சுயம்பு லிங்கம் சுற்றிலும் வெள்ளியால் கட்டப்பட்ட தடுப்பு.

நம் தென்னிந்தியா போலல்லாமல் இங்கே சிவனை தொட்டு வணங்க அனுமதி உண்டு என்பது தான் வட இந்தியாவில் சிறப்பு. நாம் 5 ரூபாய்க்கு பால் ( பாதி தண்ணீர்) மண் குடுவையில் வாங்கிக்கொண்டு கூட்டத்தின் இடிகளுக்கிடையில் சிந்தாமல் அபிஷேகம் செய்வது என்பது திறமைதான். மதியத்தில் சாமியை சுற்றிலும் பெரிய கம்பி தடுப்பைப்போட்டு சுவாமி மேலேயே மக்கள் விழுந்துவிடாமல் தடுத்திருந்தார்கள்.கம்பித்தடுப்பை தாண்டி தொட்டு வணங்கலாம். மலர்களும் வில்வமும் பாலுமாக நிறைந்திருந்தது. அவ்வப்போது மேலே கொஞ்சமாக நீக்கி தரிசிக்க செய்கிறார்கள்.ஜரகண்டி போலவே வெளியே துரத்திவிடுவார்கள்.


காசி விஸ்வநாதர் கோயிலில் பின்னால் மசூதி டூம் இருப்பதாக அறிந்திருந்தேன் . அதைப்பார்க்க சென்றபோது அங்கே பெரிய நந்தி ஒன்று .. அது பழய சிவன் கோயிலின் நந்தியாம். நந்தியின் முன்னால் வேலியிட்டு பாழடைந்த ஒரு கோயிலின் பாகம்.. அதன் பின் ஒரு மசூதி. பாதுகாப்பு மிக பலம். துப்பாக்கி ஏந்திய போலீஸ்களின் நடமாட்டம்.

காசிவிசாலாட்சி கோயில் நம் ஊர் கோயில். அங்கே பெண்கள் குங்கும அர்ச்சனை செய்வது ஒரு பழக்கம் இருக்கிறதாம். சிகப்புவளையல்களோடு வந்த சில தெலுங்குபெண்கள் செய்துகொண்டிருந்தார்கள். சாமிக்கு சார்த்திய சேலைகளை வாங்கிக்கொள்ளச் சொல்லும்படி அழைத்து வந்தப்பையனிடம் ஹிந்தியில் அந்த அய்யர் சொல்லிக்கொண்டிருந்தார்.. காசிக்குப்போனால் என்ன என்ன செய்யவேண்டும் என்று பாபா கூட ஒரு பதிவு போட்டிருந்தார் தேடி இணைப்பு செய்து வைக்கவேண்டும். நெற்றியைக்காட்டினால் காசு. நின்று கும்பிட்டால் தட்சனை. முதுகில் அடித்தால் காசு. கவனம் தேவை.

ப்ரசாதம் எடுக்காமல் சாமியை கண்ணால் கண்டு வரும்போது அது ஆன்மிகச்சுற்றுலா போலவே இல்லை. ஏதோ ம்யூசியம் இன்பச் சுற்றுலா போலத்தோன்றுவதை தடுக்க இயலவில்லை. காரணம் காசு பிடுங்கும் பண்டாக்கள் தான்.
காசியில் எடுத்த சில படங்களை அவ்வப்போது க்ளிக் க்ளிக் கேமிராக் கவிதைகள் பதிவிலும் வலையேத்துக்கிறேன்.
கங்கா ஆரத்தி , காசி விஸ்வநாதர் ராக்கால பூஜை அடுத்த அடுத்த பதிவில்......

October 24, 2008

கடைசி விடுமுறை


லாஸ்டு ஹாலிடே
50 ல் ஒரு முறை எடுக்கப்பட்ட கதை. அந்த திரைப்படத்தில் ஒரு ஆணைச்சுற்றிப் பின்னப்பட்டிருந்த கதையை கொஞ்சம் மாற்றி 2006 ல் வேறு மாதிரி எடுத்திருக்கிறார்களாம்.. வாய்விட்டு ரசித்து சிரித்து மகிழ்ந்த படம் இது. சாதரண விற்பனையாளரா வேலை பார்க்கிற ஜியார்ஜியாங்கறபெண். தான் என்னவெல்லாம் ஆசைப்படுகி்றாளோ அவையெல்லாவற்றையும் ஒரு புத்தகத்தில் புகைப்படங்களா சேமித்து வைத்திருக்கிறாள்.

தன்னுடன் வேலை செய்கிற நண்பரிடம் தோன்றுகின்ற காதலை சொல்லமுடியாமல் இருக்கும் நிலையில் மூன்று வாரத்தில் தான் சாகப்போகிறவள் என்று தெரிய வருகிறது. டாக்டராக வருகிறவர் ஒரு இந்தியர் . அவர் வருகிற காட்சி நல்ல நகைச்சுவை (கொஞ்சம் கிறுக்கு மாதிரி??)

அப்பறமென்ன அம்மணி கையிருப்பில் இருக்கும் சேமிப்பு எல்லாம் எடுத்துகொண்டு கிளம்பி ஹெலிக்காப்டர்ல போய்... இருக்கறதுல யேஏஏ பெரிய ஹோட்டல்.. வசதியான அறை, வாழ்க்கை, வீர தீர ஆபத்தான விளையாட்டுக்கள் என்று அடித்து தூள்பரத்துகிறார்..

விமானத்தில் சகபயணி இருக்கையை சாய்க்கவிடாமல் தடுப்பதும், பின்னர் சண்டை போட்டுக்கொண்டு அதிகம் பணம் கொடுத்து மேல்வகுப்பில் பயணம் செய்வதாகட்டும்.. "மேக் மி இண்டர்நேஷன்ல்" என்று துணிக்கடையில் கேட்பதாகட்டும் ஆஹா! கனவுலகம் போனமாதிரி தான் ..

கூழாங்கல் ஸ்பா, ஆவிக்குளியல் என்று என்ன என்ன வகையுண்டோ அத்தனை அழகு படுத்தும் முறைகளையும் செய்து கொள்கிறாள். ஸ்கேட்டிங் ஜ்ம்பிங் என்று விளையாடி தன் கடைசி விடுமுறையை அட்டகாசமா கொண்டாடுறாங்க..

அங்கே தங்கி இருக்கும் ஏனைய பெரிய பணக்காரர்கள் இவள் யார் யார் என்று மண்டையை பிய்த்துக்கொள்ளும் போது பெருமிதமாக சுற்றிவருகிறாள். வேலை செய்பவர்கள் எல்லாரிடம் கனிவு காரணமாகவும், பணக்காரர்களிடம் பேச்சுத்திறமையாலும் நட்பாகிறாள்.. ஒருவரைத்தவிர , எல்லாரிடமும் நட்பாகிவிடுகிறார்.. நாளையைப்பற்றியோ , என்ன நினைப்பார்கள் என்ற கவலையோ இப்போது அவளுக்குஇல்லையே..அவள் நினைப்பதை செய்கிறாள் நினைப்பதை பேசுகிறாள்.கடைசியில் அந்த ஒருவரும் ஜார்ஜியாவைப்புரிந்து கொள்கிறார். காதலரும் இவர் இருக்கும் இடம் தேடி வந்துவிடுகிறார்.

கடைசி காட்சியில் பெரிய கட்டிடத்திலிருந்து தற்கொலைக்கு முயல்கிற ஒருவரை மனம்மாறச்செய்யும் காட்சி எனக்கு மிகவும் பிடித்தது.

வழக்கமான சினிமா தானே... மருத்துவர் தவறாக நோய் என்று கணித்திருக்கிறார் என்று சொல்லி சுபமான முடிவு.. இன்னும் இரண்டு தடவை பார்த்து சிரிக்கனும் என்று தோண்றுகிறது.



Enjoy yourself . . . It's later than you think! இதைத்தான் படத்தில் சொல்லவர்ராங்க.. அப்படி நினைத்து செய்யும் போது நிஜம்மாவே நாம் நாமாக இருப்போம் என்றே தோன்றுகிறது. ஜார்ஜியா முதலில் இருந்த ஷை டைப்புக்கும் கடைசியில் பெற்ற வெற்றிக்கும் அவள் அவளாகவே இருந்தது தானே காரணம்.

October 20, 2008

வாழ்வெனும் பாதை


வெயிலால் நீண்டுகொண்டிருக்கும்
சாலையைப்போன்ற
தகிக்கும்
நெடியநினைவுகள்...
ஒரு மரநிழலுக்கும் மற்றொன்றுக்குமான
தூரவித்தியாசமென
பிரிதலும் சேர்தலுமான காட்சிகள்
வெம்மையும் இளைப்பாரலுமென
கடக்கின்ற நாட்கள்...

வளைவுகளில் நிதானிக்கையிலோ
வந்தவழி புலப்படாத மனமயக்கம்..
நேர்க்கோட்டு நேர்ப்பார்வையிலோ
கானல் நீர் கலங்கலாக
போகும்வழி குழப்பும் கண்மயக்கம்.

பிரிவுகளில் தேர்ந்திடத் தடுமாற்றம்
ஏற்றங்களில் இறக்கங்களில்
சுமையென விழிப்பென ,
கடந்த, எதிர்-காலங்கள்.
எதிர்படும் அறிந்த அறியாத
முகம்தெரிந்த தெரியாத பயணிகள்
முற்றுப்பெறாத பயணங்கள்.

சும்மா சமாளிபிகேஷன் போஸ்ட்...

தோழி ஒருத்தங்க வீட்டில் புதுமனைபுகுவிழா. எங்கு திரும்பினாலும் கட்டிடங்கள் எழும்பி நிற்கும் ஒரு உலகம். எத்தனை விதம் விதமாக வந்தாலும் எல்லாவற்றிலும் குடியிருக்க ஆட்கள் வந்தவண்ணமே இருக்கிறார்கள். முடிவுறா சாலைகள். முடிவுறா கட்டிடங்கள். காற்று நுழைந்து செல்லும் போது ராஜ கோபுரத்தை நினைவுப்படுத்துகிற கட்டிடங்கள். ஒரு ஊருக்கும் இன்னொரு ஊருக்கும் இடையில் முன்பெல்லாம் கொஞ்சமேனும் வெற்று நிலங்களும் , விவசாய நிலங்களும் பார்த்திருப்போம். இனி அப்படி பார்ப்பது சிரமம் என்று நினைக்கும் படி முடிவுறாமல் குடியிருப்புகள். ஹைவேக்களின் ஓரங்களெல்லாம் பளபளப்பான குடியிருப்பு வளாகங்கள்.


சிறிதே தாமதமாக வந்தவர்கள் , பூஜையில் தோழியும் அவள் மாமியாரும் அமர்ந்திருந்ததைப்பார்த்து , இது புதுவழக்கமா இருக்கிறதே. எங்கள் வீடுகளில் கணவனும் மனைவியும் தானே அமர்வது வழக்கம் என்றார்கள். வழக்கம்போல கணவன் மனைவி தான் பூஜை செய்தார்கள் . அதன்பின் தான் பூஜை செய்பவர் லக்ஷ்மி பூஜை ஒன்று செய்யவேண்டும் என்று சொல்லி பெண்களை அமர்த்தினார். இதில் இரண்டு பயன். லக்ஷ்மி வருகிறாள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.
மாமியாருக்கு முக்கியத்துவம் கொடுத்து வைத்ததாய் ஆகும்.



வெகுநேரமாக ஹோமப்புகை அதிகப்பட்டு தீ அணைந்துவிட்டது போலவெ ஆனதும் எல்லாருக்கும் உள்ளூரக்கவலை . அய்யா அது என்றதும் அவர் அதெல்லாம் கவலைப்படாதீங்க தானாவே அந்நேரம் சரியாகிடும் என்றார். இது என்ன நம்மைப்போலவே கவனிக்காமல் விட்டுவிட்டு சப்பை கட்டு கட்டுகிறாரோ என்று எனக்குத்தோன்றியது. ஆனால் அவர் சொல்லி வாய் மூடவில்லை சடாரென்று தீ நாக்கு ஒன்று புகைக்கு நடுவில் எழுந்தது. ( நான் எதாவது வேலையை பாதியில் விட்டுட்டு சமாளிபிகேஷன் செய்யும்போதெல்லாம் இப்படி எதும் நடக்க மாட்டேங்கிறதே)

------------------------------------------------------------
டெஸ்க்டாப் ல என்ன படமா? ஏம்ப்பா ஆயில்யன் இதெல்லாம் டேக்கா... நானெல்லாம் அடிக்கடி மாத்தறது இல்லை.. எப்பவோ கொஞ்ச நாள் முன்ன ஒரு சாமிப்படம் வைத்திருந்தேன். அப்பறம் இந்த புல்வெளியும் வானமும் வச்சது தான் மாத்தவே இல்லை.

நடுவில் ஒரு சொந்தக்காரப் பையன் வந்தான். சரி எதோ மெயில் பார்க்கனும் என்றதால் கொடுத்தேன். அப்பறம் ஊருக்கு கிளம்பிப் போனதும் கணினியைத் திறந்தால் .. எப்போதோ ஒரு நண்பர் அனுப்பிய படத்தை டைல் செய்து டெஸ்க் டாப்பில் வைத்துவிட்டு போயிருக்கிறார். இதெல்லாம் என்ன வேண்டாத வேலை என்று ஒரு பக்கம் கோபமாக வந்தது. படத்தை மாற்றும் முறையையே மறந்திருந்தேன் . மீண்டும் தேடி மாற்றி வைத்தேன். என் மொபைலில் தான் பெண்ணின் போட்டோ இருக்கும். பையனின் குரலில் அழைக்கும்.
யாரு இந்த டேக்கை தொடர விரும்புறீங்க ..?
எப்படியோ சமாளிச்சு ஒரு போஸ்ட் இன்றைக்கு போட்டுவிட்டேன்.

October 15, 2008

குணமென்னும் குன்றேறி

வளவனுக்கு அய்யாசாமி ஐயாவைப்பார்த்து கடும்கோபம் வந்தது. வளவன் இந்த பள்ளியில் சேர்ந்த ஓரு வருடத்தில் அய்யாசாமியின் மதிப்பு அவனுக்கு தெரிந்திருந்திருந்தது.
'இந்த பள்ளிக்காக எத்தனை செய்திருப்பார் ஐயா' என்று வாயார ஒவ்வொருவரும் சொல்லும்போது அவரை தனக்கு ஒரு முன் மாதிரியாக கொள்ளவேண்டும் என்று தோன்றும்.

இந்த பள்ளியில் படித்து பேரும் புகழுமாய் இருப்பவர்கள் எல்லாமே ஐயாவின் அறிவுரையால் மேலே போனவர்கள் தான். இத்தனை ஏன் வருடா வருடம் பத்திரிகையில் பேர் வரும்படியாக பள்ளி மாணவர்கள் தேர்ச்சி இருப்பதற்கும் ஓரிருவர் மாநில அளவில் பதக்கம் வாங்குவதும் கூட ஐயாவால் தான். இருந்தும் அவரை ஒருவர் மதிக்காமல் கத்திவிட்டு போகிறார் வளவனுக்கு ரத்தம் கொதித்தது.

ஆனால் அய்யாசாமி முகமோ எப்போதும் போலவே பளபளப்பாய் இருந்தது. உடல் நிறத்தின் காரணமாய் சிறிதே சிரித்தாலும் பற்கள் பளிச்சிட்டது. அவரென்னவோ அவரை ஒருவர் நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரை செய்வதாய் சொல்லிப்போனது போல் மகிழ்ச்சியாய் இருப்பதாகத் தோன்றியது வளவனுக்கு.

அவனும் பொறுத்துப் பொறுத்துப்பார்த்தான். அவர் ஒரு முறை கூட வளவனிடம் வந்து போன ஆளைப்பற்றி குறையும் சொல்லவில்லை அதுபற்றி வருத்தம் இருந்ததாய் கோடும் காட்டவில்லை. இப்படியும் மனிதர் இருப்பாரா? இல்லை இவருக்கு அந்த நேரம் காது தான் கேட்காமல் போய்விட்டதா? அவன் மனம் ஆறவே இல்லை.

மெதுவாக அவர் இருந்த மேஜை பக்கம் சென்று வந்தான். இது ஒன்றும் முதல் முறையில்லை. காலையில் இருந்தே ஆறேழு முறை அவனும் அவரும் ஒருசேர எப்போதெல்லாம் வகுப்பு முடித்து ஆசிரியர் அறைக்கு வந்தார்களோ அப்போதெல்லாம் இப்படி ஒரு நடை நடப்பான். அய்யாசாமி ஒரு முறை நிமிர்ந்து பார்ப்பார் . எதையோ எடுக்க வந்ததாக போக்கு காட்டி திரும்பிவிடுவான்.

மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டு தைரியம் வரவழைத்தான். இம்முறை எப்படியும் கேட்டுவிடவேண்டும் , கேள்வி எல்லாம் தயார்.

"என்னதான் தவறு செய்தீங்க ? எதற்கு அமைதியாக இருக்கிறீங்க?
அடுத்தவர் தான் தவறுன்னு தெரிஞ்சப்பறம் கோபம் வருவது கூட தவறு என்று எந்த புத்தகத்தில் படிச்சீங்க? "
அவரரகில் சென்றதும் எல்லாம் மறந்து போய், "ஐயா! எனக்கு மனசே சரியில்லை வீட்டிற்கு கிளம்புகிறேன்" என்று முடித்தான்.

வளவா! என்ன அவசரம் பேசவேண்டும் உட்காரேன். நீ மனோகருடைய அப்பா வந்து கத்தியதை நினைச்சு வருத்தப்படறேன்னு நினைக்கிறேன். நான் ஏன் கோபப்படலேன்னும் கூட உனக்கு கேள்வி குடையுது சரியா?
"தெரிஞ்சு என்ன ஐயா புண்ணியம் .. அப்ப பேசாம விட்டுட்டீங்களே"

மனோகர் நல்லா படிக்கற பையன் தான்ப்பா .. முயற்சி எடுத்தா படிக்கலாம் அதற்குத்தான் அவனை நான் தனிமைப்படுத்தி வச்சேன் . அவனும் படிக்காம நாலு பேரை படிக்கவும் விடாம தடுத்தான்னு செய்தவிசயத்துக்கு இவர் வந்து கத்திட்டு போறார். வேற எதோ காரணமா நான் தண்டிக்கறதா நினைச்சுக்கிட்டார். போனவாரத்துக்கு இந்த வாரமே அவன் வீட்டுல செய்யவேண்டிய வேலையெல்லாம் நோட்டில் சரியா செய்திருக்கிறான். பாரேன் இவனே நாளை முதல் மதிப்பெண் எடுத்தாலும் ஆச்சரியமில்லை. என் கோபமெல்லாம் அவனை வழிப்படுத்த மட்டுமே..என்ன சரிதானே!

நீத்தார் பெருமை
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது.

* அறிவில் முழுமைப் பெற்ற குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஓரு கணம் கூட நிலைத்து நிற்காது.

அழைத்த புதுகைத்தென்றல் ... ஆரம்பிக்க காரணமான ஜீவ்ஸ் இருவருக்கும் நன்றிகள்.

நான் அழைப்பவர்கள்..

1. புகழன்
2. புதுவண்டு
3. செல்விஷங்கர்

விதிமுறை: திருக்குறளின் கருத்தும் கதையின் கருத்தும் ஒன்றாக இருக்கவேண்டும்.
இன்னும் மூன்று பேரையாவது அழைத்து எழுத வைக்க வேண்டும்.


( யாரங்கே இது என்ன 1973 ல் வந்த கதை மாதிரியே இருக்குன்னு சொல்வது ? அப்ப நானே பிறக்கலைப்பா..அந்த ட்ரெண்ட்ல இருக்கு கதை ஓட்டம் அவ்வளவு தான் )

October 14, 2008

சினிமா சினிமா .. ஆன்ஸர் ஷீட்

இதுவரை வந்த சினிமா கேள்விபதில் பதிவுகளைப்பார்க்கும் போது எனக்கு பிரமிப்பா இருக்கிறது. வெட்டி ஒரு படி மேலே போய் 6 மாசத்துலயே சினிமா தியேட்டரில் கல்யாணம் பேசி முடிச்சிருக்கறதெல்லாம் நினைவுப்படுத்திச் சொல்கிறார்.. எனக்கு ஞாபகமறதி நிறைய. அதனால் என்னால் நினைவுப்படுத்தி சொல்லமுடிவது மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.. அழைத்த ஆயில்யன் மற்றும் மை ப்ரண்டுக்கு நன்றி.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

ரொம்ப சின்ன வயதிலும் படம் பார்த்திருப்பேன் . எனக்கு நினைவுக்கு வருவது பாலும் பழமும்(ரீலீஸ் ஆன காலமில்லங்க பழய படம் தியேட்டருக்கு திரும்ப வருமில்ல ) படத்தைப் ரயிலடி ஆச்சியைக் கூட்டிக்கிட்டுப்போனதா ஞாபகம். சுந்தரம் தியேட்டரில் எனக்கு உட்கார இடமில்லாம , சின்னப்பிள்ளைதானே நின்னுக்கிட்டேப்பார்த்தமாதிரி கலங்கலாத் தெரியுது . பெரிய திரையில் படம் பார்ப்பது சிறுவயதில் பெரிய பிரமிப்பு தான். வீட்டிலும் வேறு சின்னத்திரை கிடையாது. ஒரு முறை எங்க பெரியப்பா என்னை தாய்வீடு படத்துக்கு கூட்டிச் சென்றார்களாம். எனக்கு ரஜினின்னா ரொம்ப பிடிக்கும். அதனால் எழுந்து சீட் மேல நின்னு கை தட்டினேனாம் .. ( என்ன கொடுமை இது மீரா ஜாஸ்மின் மாதிரி இருந்திருக்கேனே) வீட்டுக்கு வந்து ரஜினி மாதிரியே " புட்டு புட்டு வச்சிடுவேன்னு" ஆக்சனோட எல்லாரையும் மிரட்டினேனாம் . இன்னமும் எல்லாரும் அதை சொல்லி சிரிப்பது வழக்கம்.


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தில்லியில் தமிழ்ப்படங்கள் தமிழ்ச்சங்கத்தில் தான் பார்க்கவேண்டும் என்ற நிலை மாறி இப்போதெல்லாம் திரையரங்கிலும் வருகிறது. சமீபத்தில் பார்த்தது சிவாஜி ,தசாவதாரம்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
ஜெயங்கொண்டான் சிடியில் பார்த்தேன். படம் நல்லா இருந்தது. போன படத்தை விட ஹீரோ இந்த படத்துல நல்லா நடிச்சிருந்தார்ன்னு தோண்றியது. இயல்பான படமா இருந்தது போல இருந்தது. ஹீரோ எல்லாரையும் நல்லா அடிக்கிறார். ஆனா அதுல ரஜினி விஜய் மாதிரி அடிச்சா பறக்குறாங்கன்னு முதல்ல ஒரு இண்ட்ரோ காட்சி வராததால் .. இயல்பாவே அவன் கொஞ்சம் அடிக்கக்கூடிய ஆளுன்னு தோணும்படி இருந்தது என்று நினைக்கிறேன். தங்கச்சியா வந்த பெண் நல்லா நடிச்சிருக்கான்னு நினைச்சேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

கருத்தம்மா ... அந்த படத்தை கல்லூரித்தோழிகளுடன் பார்த்தேன். கருத்தம்மா அவள் அப்பாவை குளிப்பாட்டி விடும் காட்சியில் அவர் மனசில் பழசை நினைப்பதும் .. கருத்தம்மாவின் அக்கறையும் கண்ணீர் சிந்த வைத்தது. தாக்கிய என்பதற்கு, மனசில் இடம் பிடித்த படம் என்றால்.. மணல் கயிறு , தில்லு முல்லு , இன்று போய் நாளை வா..இப்பவும் இந்த படங்களெல்லாம் சின்னத்திரையில் எப்பொழுது வந்தாலும் உட்கார்ந்து ரசித்து சிரிப்பேன்.. கூடவே மனப்பாடமாய் எல்லா வசனமும் சொல்லிக்கொண்டே ..:)

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
தமிழ் சினிமா- அரசியலா? அப்படின்னா?

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?


6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
நிச்சயமாக .
புத்தகம் , நியூஸ் பேப்பரில் வரும் செய்திகளை படிப்பதுண்டு. ஆயில்யன் சொன்னதுபோல கிசுகிசுக்கள் யாரைக்குறிப்பிடுகிறது என்று மண்டை உடைய யோசிப்பது வழக்கம்.


7.தமிழ்ச்சினிமா இசை?
இந்த இசையைக் கேட்காமல் இப்பொழுதெல்லாம் ஒரு குழந்தை கூட வளருவதில்லை. முக்கியமாக இதான் முதல் இசை பயிற்சி. எப்பொழுதும் சினிமா இசையைக் கேட்பது என்பது ந்ம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து போயிருக்கிறதே.இன்னார் என்று இல்லாமல் எல்லா இசையமைப்பாளர் இசையும் ரசிப்பேன்.


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தொலைகாட்சி பெட்டி வாங்கிய காலத்திலிருந்தே பிறமொழி படம் பார்ப்பது என்பது பழக்கமாகிவிட்டது. பெங்காலி படங்கள் அந்த காலத்துப்படங்கள் பிடிக்கும். சத்யஜித்ரேயின் பதேர் பாஞ்சாலி பற்றிய "நிதர்சனத்தின் பதிவுகள் " என்கிற எஸ். ராமகிருஷ்ணனி ன் புத்தகத்தை அன்புடன் காட்சிக்கவிதைப்போட்டியின் போது பரிசாகக்கேட்டிருந்தேன். அது திரைப்படத்தைப்பற்றிய இன்னொரு கோணத்தை காட்டியது.
ரேபிட் ஃப்ரூப் பென்ஸ்,
பே இட் ஃபார்வேர்ட்,
நாட் ஒன் லெஸ் மனதை பாதித்த படங்கள்.
இது போல படங்கள் பார்க்க நேரிட்டால் அவ்வப்போது பதிவில் பகிர்ந்து கொள்வேன்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

எங்கம்மாவோட மாமா அந்த காலத்துல( ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்துல) கதை வசனகர்த்தாவா இருந்தாங்க.. எங்கமாமா சத்யராஜோட ப்ரண்ட் . பள்ளிக்கூடக்காலத்துல அவங்க சேர்ந்து சுத்தியிருப்பதா சொல்லி இருக்காங்க. அவர் கூடப்போய் போட்டோ எடுத்துட்டுவந்தாங்க. இப்பத்தான் நம்ம ப்ளாக்கர்ஸ் பலரும் சினிமாத்துறைக்குப்போறாங்க.. சினிமாத்துறை ஆளுங்க ப்ளாக்கர்ஸ் ஆகிறாங்க. :) தமிழ் சினிமாவுக்கு சினிமாவை பார்ப்பது தான் உதவின்னு நினைச்சு செய்துட்டுவரேன்.



10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எதிர்காலம் பற்றி சொல்ல நான் காலக்கடிகாரமா வச்சிருக்கேன். இருந்தாலும் நல்லா ப்ரகாசமா இருக்கும்ன்னு தான் நினைக்கிறேன். சினிமா வந்த காலத்திலிருந்து இப்ப வரைக்கும் வளர்ந்து கிட்டேயும் தான் இருக்கிறது. எங்கயாவது சறுக்கினா எங்கயாவது உயர்ந்து கிட்டு பேலன்ஸ்டா கொஞ்சமா வளர்ந்துகிட்டு இருக்கு.


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

இனிமே எப்பவுமே வராது என்ற நிலைதான் கவலைப்பட வைக்கும். ஓராண்டு என்பது பெரிய விசயம் இல்லை . இதுவரை வந்த எத்தனையோ படங்கள் பார்க்காமல் விட்டிருப்போம். ஆனால் தியேட்டர் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களைப் பொறுத்தவரையில் அது மிகக்கொடுமையானதாக இருக்கும்.

பின்.நவீனத்துவ கதாசிரியர் சென்ஷி
ஆங்கிலப்பேராசிரியை ராப்
என் குரு துளசி


இவர்களை கேள்விபதிலை தொடரும் படி கேட்டுக்கொள்கிறேன்.

October 9, 2008

கஞ்ஜக் தேவிகள்

நவராத்திரியின் அஷ்டமி தினத்தில் வடநாட்டில் பொதுவாக கஞ்ஜக் என்று கன்னிப்பெண்களை அழைத்து பூஜை செய்வது வழக்கம். வருடா வருடம் என் மகளும் அதற்கு செல்வது வழக்கம்.. இப்போது தான் ப்ளாக்கராகிவிட்டோமே அதைப்பற்றி பதிவிடவில்லை என்றால் அழகில்லையே? அதனால் தான் இந்த பதிவு. போனவருடமே ஏன் போடவில்லை என்று யாரங்கே முந்திரிக்கொட்டையாக கேட்பது? அதுக்கும் காரணம் இருக்கிறது. போனவருடம் புதுப்பதிவராகையால் பதிவுக்கு விசயப்பஞ்சமெல்லாம் வரலையே..

சிலர் நவமியிலும் செய்வாங்க சிலர் அடுத்த நாள் அஷ்டமிலயும் செய்வாங்க... அந்த நாட்களில் காலையில் வேகமாய் எழுந்து அழகா தயாராகி சின்னப்பெண்கள் எல்லாம் கலகலப்பாய் இருப்பாங்க. ஒவ்வொரு வீட்டிலும் 9 கன்னிப்பெண்களை அழைத்து பூஜை செய்யவேண்டும் என்பதால் முன்பே புக் செய்துவிடுவார்கள்.


நான் நேரில் பார்த்ததில்லை ஆனால் என் மகள் சொன்னதை வைத்து எழுதுகிறேன். முதலில் பெண்களை உட்காரவைத்து கால்களை அவ்வீட்டுப்பெண்கள் கழுவி விடுவார்கள். பிறகு குங்குமத்தில் தண்ணீர் விட்டு கலந்த கரைசலில் அரிசி யை தொட்டு நெற்றியில் பொட்டு வைத்து இக்கன்னிப்பெண்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொள்வார்கள். கைகளில் சிகப்பு கயிறு கட்டி விடுவார்கள். கன்னிப்பெண்கள் காலில் விழுந்தவர்களுக்கு அவ்வாறே குங்குமம் வைத்துவிடுவார்கள்.


பூரி அல்வா, கருப்பு கொண்டைக்கடலை சுண்டல் வகைகளை ஒரு தட்டில் வைத்து பிரசாதமாக தருவார்கள். ( அன்னைக்கெல்லாம் நான் சமைக்கவே மாட்டேன் ஏன்னா இதே தான் அதிகம் சேர்ந்துடுமே) சிலர் அந்த தட்டும் புதிதாக தருவார்கள். சிலர் புது தோடு ..காதணி .. கர்சீப் பத்து ரூபாய் அதோடு வைப்பார்கள்.

என் வீட்டுவேலைக்காரம்மா ஒரு படம் பார்த்தாங்களாமா.. அதில் ஒரு பெண்ணுக்கு குழந்தை இல்லாத குறை தீர கன்னிப்பெண்களை அழைத்து பூஜை செய்யும்படி பரிகாரம் சொல்கிறார்கள். ஆனால் குழந்தை இல்லாத பெண் வீட்டிற்கு யாரும் குழந்தைகளை அனுப்பவில்லையாம். இதனால் மாதா தன் சகோதரிகளான மற்ற மாதாக்களை அழைத்துக்கொண்டு வந்ததாக ஐதீகம் . எனவே தான் கன்னிப்பெண்களை அழைத்து பூஜை என்றார்.

கீழ் வீட்டு ஆண்ட்டியிடம் இதற்கு கதை எதுவும் இருக்கிறதா ? என்றேன். இத்தனை நாள் இல்லாத சந்தேகம் ஏனடா வந்தது இவளுக்கு என்று சந்தேகமாய்ப்பார்த்தார்கள். அப்படி இல்லை ஆண்ட்டி நான் ஒரு ப்ளாக்கராக்கும் இணையத்தில் தேடியும் வி்வரமாய் கதை ஒன்றும் தெரியவில்லை என்றேன்.

எனக்குத்தெரிந்து கதையெல்லாம் இல்லை. நவராத்திரி நாயகிகள் தான் அந்த ஒன்பது கன்னியரும் அவர்களை கடைசி நாள் அழைத்து நவராத்திரி விரதத்தை முடிப்பது வழக்கம் என்றார். இங்கே நவராத்திரி முழுவது வெங்காயம் பூண்டு இல்லாமல் சாப்பிடுவது எல்லாருடைய வழக்கம். உணவகங்களில் கூட இதற்க்காக தனியாக வகைகள் செய்வார்கள்.
முழு நேரமும் சிலர் உருளைக்கிழங்கை வேக வைத்து அதை மட்டுமே உணவாகக் கொள்பவரும் உண்டு.இன்னமும் சிலரிடம் பேட்டி கண்டு அடுத்த வருடம் இன்னும் விவரமா பதிவு போடலாமென்று தோண்றுகிறது.

இங்கே குழந்தைகள் பெரியவர்களைக் கண்டால் காலில் விழும் பழக்கம் உண்டு என்று சொல்லி இருக்கிறேன் அல்லவா? ( வளைந்து காலைத்தொடுவது போல் முட்டிவரை கை கொண்டுபோவது தான்) அதைப்போல பழக்க தோஷத்தில் குழந்தைகள் செய்தால் பெரியவர்கள் .. பயந்து ஒதுங்கி இன்று நீ கஞ்சக் தேவி நீ காலில் விழக்கூடாது நாங்கள் தான் விழ வேண்டும் என்று சொல்லி வணங்கி செல்வார்கள்.

ஆனால் இதில் பெரிய சோகம் என்னவென்றால் கஞ்சக் தேவி என்று பெண் குழந்தைகளை வணங்கும் வட இந்தியாவில் தான் பெண் குழந்தையா என்று பார்த்து அழிக்கும் வழக்கமும் வரதட்சிணை கொலைகளும் அதிக அளவில் இருக்கிறது.

October 8, 2008

எங்கள் வீட்டு கொலு -2008



ப்ளாக்கர் படத்தை ஏற்ற சோதித்துவிட்டது அதனால் தாமதமாக கொலுபடங்கள்..புத்தக அலமாரியில் இருந்த புத்தகங்களை எல்லாம் படிகளாக்கி கொலுப்படிகள். (புத்தக அலமாரி காலியாக இருப்பதை கவனிக்கவும்.)


இது முதல் படி திருச்செந்தூர் முருகனின் வேலும் சேவல்கொடியும் .. இரண்டு பக்கமும் சாய்ந்து உட்கார்ந்த ஒய்யார பிள்ளையார்.. ஒன்றில் படகில் அமர்ந்திருக்கிறார். வெளிச்சம் போதவில்லை. கிருஷ்ணர் மற்றும் துர்க்கை. நடுவில் கதகளி பொம்மை. ( குருவாயூர்)


இரண்டாம் படியும் மூன்றாம் படியும் முழுக்க முழுக்க விநாயகர் கொலு . வெட்டிவேர் பிள்ளையார் , ப்ளாஸ்டிக் பிள்ளையார் , கண்ணாடி பிள்ளையார் , வெள்ளிப்பிள்ளையார், மண், மெட்டல், சைனா களிமண் எல்லா வகையிலும் .




நான்காம் படி சைனா களிமண் பொம்மைகள், ஒரு நியூயார்க் ஒளிரும் கண்ணாடி
சதுரம், ஒன்றுக்குள் ஒன்று போடும் யானை பொம்மை . (முதல் நாள் 5 யானையாக இருந்தது .. சபரி எல்லாவற்றையும் ஒன்றுக்குள் ஒன்று போட்டு வைத்துவிட்டான் அடுத்த நாள் )

5 படி தக்ஷிண சித்ராவில் வாங்கிய திரிகை , அம்மி, ஆட்டுக்கல், உரல், முறம்.. ஒரு ஜெய்ப்பூர் பித்தளை அடிபம்ப், மரப்பாச்சி , சின்ன ஜெயிண்ட் வீல்
DSC00096
இது அவசர செட்டப்... தில்லியின் ஒரு பகுதியின் மாடல்..
யமுனா ( நீலக்கலர் பேப்பர்) மேல மெட்ரோ போகுது பார்த்துக்குங்க
DSC00093

சபரி'ஸ் ஃ பேஷன்


ஒரு மால்.. குழந்தைகளுக்கு பிடித்த படங்கள் ஓடுகிறது. மை ஃப்ரண்ட் கணேஷா, ஓம் சாந்தி ஓம். செக்யூரிட்டி நிக்கிறார் வாசலில்.
DSC00092

மேக்ஸ் ஹாஸ்பிட்டல்..ஆம்புலன்ஸ்
DSC00095

மலைமந்திர்


கானா கேட்டப்பறம் தான் சுண்டலை விட்டது ஞாபகம் வந்தது ப்ளாக்கர் சொதப்பியதுல இந்த படம் எப்படியோ விட்டுப்போச்சு.. இந்தா வாங்கிக்குங்க எல்லாரும் .. அங்க யாரு அது இந்த பக்கம் ஒரு கை அந்த பக்கம் ஒரு கை நீட்டறது ? :)