பொங்கல் அன்று தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கவில்லை என்றால் சாமி குத்தம் . அதனால் நானும் நாலைந்து நிகழ்ச்சிகளைப் பார்த்துவைத்தேன். எஸ் எஸ் டிவியில் மதுமிதா பேட்டி.. அழகான பாடல்கள் , கனாக்கானும் காலங்கள் பாடலை காலை ஒலிபரப்பிலும் மாலை ஒலிபரப்பிலும் இரண்டு முறையும் கேட்டேன். விழாநேரங்களில் கூட எஸ் எஸ் டிவிக்காரங்க அனுமாரும் சாமியாருமாக வியாபாரங்களுக்கு நேரம் ஒதுக்கும் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை..
நீயாநானாவைக்கூட பாக்கவச்சிட்டாங்கன்னா பார்த்துகோங்க..சூர்யாவாச்சே..கல்விகடன்களுக்கு பேங்க்குக்கு அடுத்தபடியாக அகரமும் இருக்கிறதாம்.(இருக்கின்ற சிஸ்டத்தையே தொடர்ந்து வளர்க்கிறது எப்படி சரியாகும்? ) பார்க்கும் போது கலங்க வைப்பது என்பது இதிலும் தொடர்ந்தது. பல மாணவர்களைப் பற்றிக் கேள்விபட்டபோது வயிறு பகீரென்றது. 19 வருடங்களாக ஃபேஸ் மேக்கர் வைத்திருக்கும் ப்ரபசர் தனக்கு ஆபரேசனுக்கு முன்பாக சுத்தம் செய்யவந்த இளைஞன் எம்.ஏ படித்த கதையைக் கேட்டு கலங்கியதைச் சொன்னபோது நம்மையும் துக்கம் தொண்டையடைக்கச் செய்தார்.
நவநீதகிருஷ்ணன் கிராமப்புறப் பாடல் நிகழ்ச்சியும் அருமை. குழந்தைக்காக பிறந்ததலிருந்து அம்மா பாடும் பாடல்களை அவர் வரிசையாக விவரித்துக்கொண்டே பாடிய விதம் ரசிக்கும்படி இருந்தது.
”தமிழ்படம்” குழுவினரின் கலந்துரையாடல் பார்த்தேன். அசந்துவிட்டேன். அடுத்த ரயிலைப் பிடித்து தமிழ்நாடு சென்று முதல் ஷோ பார்க்கலாம் போன்ற ஆசையை உண்டாக்கிவிட்டார்கள். சிரிக்காமல் அவர்கள் பேசியது எனக்கு மிக ஆச்சரியம். அதும் ஒஹமசீயோ வைப் பற்றியும் ரெட் கேமிராவைப்பற்றியும் அவர்கள் பேசிக்கொண்டது எனக்கு வயிறுவலிக்க சிரிக்க உதவியா இருந்தது. ஒஹமசியோவின் வரிகளை வரலாற்று பொக்கிஷத்தை யாரும் பாட சிரமம் இல்லாம தேன்கிண்ணத்தில் வலையேற்றிய மைப்ரண்டின் கடமை உணர்ச்சியை , ஈடுபாட்டைச் சொல்லி சொல்லி வியந்து கொண்டிருந்தேன்.
இதற்குமுன் வந்த படத்தில் எல்லாம் எனக்கு உதட்டசைவு க்ளோசப்பில் இல்லை எனவே இந்த படத்திலாவது சரியாக செய்யவேண்டுமென்று கவனமெடுத்து செய்ததாகச் சொன்னார் ஹீரோ மிர்ச்சி சிவா .அதுவும் ஒஹம்சியா நாக்கமுக்க இடங்களில் எல்லாம் “நீயில்லாம நானில்லை ..நானில்லாம நீயில்லைனு ‘ அர்த்தம் இருக்கிறதா நினைத்துக்கொண்டு உருகி உருகி நடித்தார்களாம்.
’பச்சை பிங்க் தமிழன்’ பாட்டில் அவர் வெறுமே நடந்து தான் வந்தாராம். பில்டப்ங்கறது அவங்கவங்களா குடுத்துகிறது இல்லை சுத்தி இருக்கவங்க குடுக்கறதுதாங்கற தத்துவத்தை எளிமையாக விளக்கினார். ஹீரோயின் கடைசியாக நான் நடித்த பட ஹீரோக்களிலேயே இவர் தான் மிகச் சிறந்த கோ ஸ்டார் என்றார். ஹீரோ இதுவரை நீங்க எத்தனை படம் நடிச்சிருக்கீங்க என்று திருப்பி கேட்டால் இது தான் அவருக்கு முதல் படமாம், நல்லாத்தான் கிளம்பி இருக்காங்கப்பா..