Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

August 22, 2012

இயல்

ஆர்க்கும் கரையிலிருந்து
தொலைவில்
வெகுதொலைவில்
பழக்கமான மௌனத்தில்
விழுந்து மிதக்கிறது
ஆழிமழை

மின்னி மறைந்து கொண்டிருந்தது
இருளின் பரப்பை 
பழகவிடாத ஒளிக்கத்திகள்

இயல்பாய் இருப்பதென்பதாய்த்தான்
சற்றே கவனங்கள் சிதறுவதை
கவனிப்பதுவும்

---------------------------------------------------
வருடங்கள் மிகுத்து
கிளை பரந்தும்
வேர்பரவா மரமதென்று
உறங்காதென்று
வணங்கி நிமிர்ந்து பின் 
புழுவாகி பாம்பாகி
மரமாகியோ
சாபம் தீரவோ 
காத்திருந்த மரத்தின்
நினைவுக்கென்று 
பட்டை உரித்தார் 
உய்விக்க வந்த
கடவுளோ இவர்?

May 30, 2012

நற்குறிகள்

தோகை நீண்ட மயில்
இரட்டை மைனாக்கள்
இன்றைக்கும்
நற்குறியோடு விடிந்தது
இருந்தும்
என்னோடு
காத்திருப்பை விட்டுச் செல்வதும்
உன்னோடு
பிரிவைக் கொணர்வதும் 
என்றும் மாறுவதில்லை


-----------------------------------



நிதானமாய் 
காத்திருக்கிறேன்
நொடிகள் தெரிகிறது
இதயம் துடிப்பதைக்கொண்டு 
நேரம் சொல்லமுடிகிறது

நாழிகை தெரிவதில்லை
நாளும் தெரிவதில்லை

கடிகாரப்படியும்
நாட்காட்டிப்படியும் பேசி 
பதட்டம் நிறைக்கிறார்கள்
சுற்றிலும் நகர்பவர்கள்

May 29, 2012

இறக்கை தொலைத்தது தேவதை

விரல்களுக்குள் அடங்கிவிடும்
ஓசைகள் தான்
வரிகளை உடைத்து
ஆயிரமாயிரமாய் 
அர்த்தப்படுத்தியபின் 
களிம்பென்றும்
காயமென்றும்
பிரித்தது போக 
மீதி இறக்கை விரித்து 
பறந்து மறைந்தது

ஆண்டாண்டுகளாய் 
உறங்கி 
விழித்தெழுந்து 
தானாய் பூத்தது தாமரை

உடைத்தது நான்
அறிந்தது நான்
எல்லாம் தந்ததாய் தேவதைக்கு
படைப்பதற்கு எதுவும் அவசியமில்லை 
இறக்கை தொலைத்து
கூட இருக்க சம்மதிக்கிறது
தேவதை

May 16, 2012

வாசப்புகைப்படம்


மண்கிளறி களையூறி
பார்த்துப்பார்த்து
உயிராக்கினாலும்
பூக்கும்போதெல்லாம்
களைந்தெறிந்த
கோபமின்றி
பூகிள்ளிய கரங்களை
தோட்டத்துக் காற்றை
வாசத்தால் நிறைக்கிறாய்
.
ஈரமும் உடைதலுமாய்
கிளைத்த
என்னுயிரை
மனதை
எனை
அறியாதவற்கு தர
வாசப்புகைப்படமாய்.

May 1, 2012

ஒற்றைக் கூழாங்கல்


கவனமாய் கோத்த
முத்தாரத்தில்
எல்லாமுமாய் கூடி
கவனம் ஈர்த்தபடி
இருக்க
ஒற்றைக் கூழாங்கல்
அமைதியாய் அங்கே
பொருந்திவிட்டிருந்தது

-----------------------------------------------------

நிலா பார்த்து
நட்சத்திரங்கள் எண்ணிமுடித்து
என்றொருநாள் பாலைக்கனவு

மலையேறி முகடெட்டி
பள்ளத்தாக்கில் கரைந்து
என்றொருநாள் பனிமலைக்கனவு

எங்கேயும் போகப்போவதில்லை
என்பதைத்தான்
கனவில் வந்த கனவு
சொல்லிக்கொண்டிருக்கிறது




March 19, 2012

தேவைகள்

மதிப்பீடு

புரிகின்ற கேள்விகளுக்கு
அடித்தல் அழித்தல் போக
இருப்பதும்
கணக்குகளை சிதறடிக்க
தயாரிக்கப்பட்ட
சில புரியாத பதில்கள்
அவற்றிலும்
எழுதாத பதில்களுக்கே
முதலிடம்

--------------------------------------------

தேவைகள்


அந்தரத்தில்
இழுத்துக்கட்டப்பட்ட கயிற்றில்
முன்னேறவும்
நிலைப்படுத்திக் கொள்வதற்காகவும்
சில சாய்வுகள்

சிக்கலில் முடிச்சுகள்
தேடியவேகத்தில்
இறுகிக்கொண்டிருக்கிறது
என்றானபின்
சில நிதானங்கள்

தற்செயலாக நடந்துவிடும்
தவறுகளுக்கு
சில மன்னிப்புகள்.

March 16, 2012

உன் நியாயம்

உன் நியாயம் 
---------------------

சாய்ந்தமர்ந்து 
புன்சிரிப்புடன் உலகாள்கிறாய்
நானல்ல 
துன்பத்திற்கு காரணம்
அவரவரே என்கிறாய்
கவனங்களை ஒருமுகமாக்கி
பின் சிதறடிக்கிறாய்
தேடுபவன் கண்டுகொள்வான் 
என்றபடி 
ஒளிந்துகொள்ளாமல் 
விண்ணுக்கு வளர்ந்து நிற்கிறாய்
கீதை சொல்லி
உணர் என்கிறாய்
கீழ்படிதலை வெறுக்கிறாய்
இருக்கிறாயா? இல்லையா?
ஆராய்ந்து கொண்டிருப்பவனின் 
கண்களுக்குள் 
முரண்படுகிறாய்.
-----------------------------------------------------------------------
                                                 முன் தடயமற்ற பாதை
                                                      ------------------------------
                                                 பனி வெடித்து சரிந்து
                                                 துடைத்தாற்போல்
                                                 சீராகிறது 
                                                 நினைவுகளற்ற வெளியாய்
                                                 நடக்கத்தூண்டியபடியே இருந்தது
                                                 நிச்சயமற்ற ஒரு நொடியில்
                                                 மீள் நிகழ்த்துகிறது 

March 13, 2012

நேரிட்டே சொல்லித் தீர்




உண்டி சுருக்கி
உணர்வு சுருக்கியும்
போதாமல்
பேயுரு பெற
அம்மையில்லை
அழுந்திய மனத்தால்
ஆடித்தீர்க்க 
இன்று பேயுமில்லை
நேரிட்டே சொல்லித் தீர்
------------------------------   






காற்றை கிழித்து
சரியான நோக்கில்
வீச வீச 
திசைகள் பழக்கப்பட்டு 
மீண்டும் வாகாக
திரும்பிக்கொண்டிருந்தவரை
விளையாட்டு

திரும்பாமல் தாக்கிய
தினத்தில்
தொடங்குகிறது போர்

--------------------------




நிறுவிக்கொள்ளவென்று
முகமூடியிட்டபின்
முயன்றாலும் 
முடியப்போவதில்லை
இளைப்பாறுதல்
-----------------------------------

December 21, 2011

எண்ணப்பின்னல்கள்


எண்ணப்பின்னல்கள்
பின்னலும் பிரித்தலும்
பிரித்தலும் பின்னலுமாய்

பின்னிக்கொண்ட மகிழ்ச்சிகள்
மகிழ்விழை இழைந்தோர் நிலையும் - நீ
நிலைத்த நெஞ்சில் ஈரமுமாய்

ஈரவிழிச் சொற்கள்
சொல்லிழந்தோர்ப் புள்ளியில் மலரவும்
மலர்மனதில் எண்ணப்பின்னல்கள்
முதல்முறையாக பின்னல்கோலாட்டம் கண்டபோது தோன்றியது முதல் மூன்றுவரிகள்

December 11, 2011

உள்வெளி


கோணங்களை மாற்றிவைத்தாலும்
அக எதிரொளிப்பில்
ஒளியிழைகளைப் பற்றி
மேலேறி நிற்கிறது
குறுக்குவெட்டிலும் நோக்கி
பிழைகளைப் பட்டியலாக்கி
முடிவுகளை மேலேற்றி
வடிவம் செய்கிறது

சத்தமின்றி சில உயிர்களை
அச்சட்டகத்திலாக்கி
பார்வைக்கு மறைவாய்
அலையத்தொடங்குகிறேன்.

வின்மீண் தொலைவில்
வேறொரு உலகம் சமைத்தும்
பருவங்களில்
நீர் வற்றாத ஓவிய ஆறாக
உள்ளே தான் உறைந்திருக்கிறதது

உள்ளோடும் ஈர்ப்பில்
சுருங்கி சுருங்கி
அளவில்லாததும்
உருவில்லாததும் ஆனபின்னும்
நிரம்பாத வெற்றிடமும் கொண்டு..

இம்மாத வடக்குவாசலில் வெளிவந்திருக்கும் என் கவிதை

November 30, 2011

பேரருள்

காணிக்கை என்பதும் கையூட்டாய்
கடவுள் கூட அவர் கூட்டாய்
பால்வெண்மையில் கரையுமோ
சிவப்பு நிறப்பாவங்கள்
கண்கள் மூடிய அரையிருட்டில்
தள்ளுமுள்ளு இல்லாத
தரிசனத்தில்
தள்ளுபடியானதோ கணக்குகள்?
மனமிரங்கக் கேட்டோர் குரல்
மலை எதிரொலிக்க பட்டு
திரும்புவதோ
வாழ்வின் திருப்பம்?
நீளும் உயிரும்
நெருக்கிய இருளுமாய்
தவித்த இரைச்சல்களை
கடந்த கால்கள்
இன்று யாத்திரையோ?
குற்றம்சுட்டிய விரல்கள்
நெஞ்சு துளைக்க
இன்றவர் கூப்பியகரங்களோ?
இல்லையென்றார்
இருக்கின்றாரென்றார்
நிலையானவர் என்றார்
நிலையுயர்த்துவார் என்றார்
நிலையாக நிற்பவரே
உம்நிலை தான் என்ன?

டிசம்பர் 2009 - ஈழநேசன் தளத்தில் வெளிவந்த எனது கவிதை

November 27, 2011

கூட்டம்


வண்ணக்குழம்புகள் பூசிய முகங்கள்
ஒன்றேபோல உடைகள்
புடைத்த நரம்புகள்
கனத்த குரல்கள்
குறிக்கோள் தாங்கிய கண்மணிகள்
வீசி உதறி குதித்து
ஓரோர் பக்கமாய் நிமிர்ந்து நின்றனர்.

பறவையைப்போல்
சிறகுவிரித்துப் பறந்தான் ஒருவன்
மஞ்சள் வண்ணம் ஒளிரும் முகம்
சிரிக்கக் கண்டார்கள்.

நிமிட இடைவெளியில்
புகுந்தான் ஒருவன்
திரண்ட தோளுக்குரியவனாய்
கருமையும் செம்மையுமாய்
வண்ணக்கலவை மிரட்ட
உரக்கக்கூவினான்
யார் நீ? யார் நீ?

நான் நீ! நான் நீ!
குழம்பி உரைத்தான் இவன்.
மறுத்துச் சாய்த்தான் ஒருவன்..
மடங்கி சரிந்தான் இவன்..
இதயம் கனத்தது என்றது கூட்டம்.
எதையோ இழந்தோம் என்றது கூட்டம்.
பேசிக் கலைந்தது கூட்டம்.
கூட்டம் விட்டுச்சென்ற
முகமூடிகளைப்
பொறுக்கிச் சேர்த்தான் ஒருவன்.

நன்றி:
 22 ஜூலை 2009 ல் ஈழநேசன் முல்லை இணைய இதழில்  வெளிவந்த என் கவிதை. 

October 20, 2011

அன்றொரு காலத்தில்,..



இடுப்பொடிய சுடாதேயம்மா
அடுக்கு நிறைய மட்டும் வேண்டுமெனக்கு
குளிக்கமறுப்பவன் முன்னால் எழுப்பச்சொல்லி
முறையிடுவான்

காசைக்கரியாக்க ஆசையோடு
அட்டவணையில் குறிப்பெடுப்போம்
வாழ்வினிமைக்கு வாழ்த்தி
மருந்தோடு வருவாள் ஆச்சி
உனக்கெத்தனை எனக்கெத்தனை
பங்கிட்டோம் பட்டாசுகளை
சேர்ந்தே குதூகலிக்க

வரிசை வரிசையாய் ஆசைகள்
கொளுத்தி வைத்து
பூக்கிண்ணமாய் சிதறிக்கொண்டிருந்தன

இன்று
பக்கத்திற்கொன்றாய்
தெறித்த பட்டாஸாய்
வாழ்வைப்போன்ற இரட்டை நாக்கு
எவருக்குமில்லை..

வல்லமை இதழுக்காக எழுதிய அந்தக்கால தீபாவளிய மிஸ் செய்யும் என் கவிதை

October 17, 2011

பனிஊழிக்காலங்கள்

தோல்வி

சிறுமிகட்டிய
சின்னச் சின்ன மணற்கோபுரங்கள்
நான் ஒளித்த ஈர்க்குச்சியை
ஒவ்வொருமுறையும்
கண்டுகொண்டாய்.
ஒருமுறைகூட விளையாட்டாய்
தோற்கத்தெரியாதா?

சில வார்த்தை ஒளிக்கிறேன்
பெரியவள்
ஒருமுறை கூட நீ அதன் பொருள்
அறிந்துகொள்ளவில்லை

-------------------------------------------------------


முடிவு

நூற்றாண்டுகளாய்
உறைந்துகொண்டிருந்த பனி
உருகிக்கொண்டிருந்தது
வெளிகாட்டும் படிமங்கள்
நிகழ்ந்த
பிறப்பும் இறப்பும்
காட்டிக்கொண்டிருக்க
னி ஊழிக்கு காத்திருக்கும்
குளிர் தேடியலையும்
உயிர் ஒன்றின் காலடியில்
எங்கோ
நீர் உயர்ந்துகொண்டிருந்தது

------------------------------------------------
 வழி

காரணங்கள் உருவாக்க
அவசியமிருக்கவில்லை
இல்லாத ஒன்றை
இருக்கின்றதென்றும் சொல்லவில்லை
இல்லாததற்காக
ஆகாத்தியமும் தேவையில்லை
நினைத்துக்கொண்டாற்போல
மறந்துகொள்வதற்கு
கோபத்திற்கான காரணங்களாவது வேண்டும்
பெரியவிசயமில்லை
வரிகளுக்கிடையில் படிக்கலாம்
கிடைக்காமலா போகும்
-----------------------------------------------------------

நாடகம்

பாடப்புத்தகத்தின் பக்கங்களில்
கிரீடம் வைத்த அரசனுக்கு
ஒரு கண்ணைக் கருப்படித்தாள்
சிலபல தலைகளை வரைந்தாள்
பயங்கரனைப் போல
ஆக்கிவிட்டோமா என்று
தூரநிறுத்திப் பார்த்துக்கொண்டாள்
முடிந்தவரை
அவனே வந்தாலும்
தன்னையறிய முடியாதபடிக்காய்
அதை
ருமாற்றிக்கொண்டிருந்தாள்

October 2, 2011

திருத்தம்




திருத்தம் 



உணவாக்க விழையாத இழைகளை
வட்டத்துக்குள் சிக்காமல்
குறுக்கில் நடந்து கடக்கிறாய்
இழைகளை
உண்டு செரிக்கத் தயாராகிறேன்
--------------------------------------------



எல்லாம் அறிவாய்
வேண்டி நிற்பதும் அறிவாய்
காட்சி எப்போது?
அல்லது யாருக்கு?
கர்வம் மிக்கது எது?
கசிந்துருகுவது எது?
கடமைக்காய் இருப்பது எது?
கடந்து போவது எது?
கல்லாய் நினைப்பது எது?
துல்லியமாய் அறிவாய்
அறியாதது
நீ யாரென்பது மட்டும்.
-----------------------------
காதல் எழுதுபவர்கள்
காதலில் இருக்கிறார்கள்
மரணம் எழுதுபவர்கள்
மரணித்துக்கொண்டும்
கருணை எழுதுபவர்கள்
கசிந்துருகிக் கொண்டும்
இவ்வாறெனில்
எவ்வளவு எளிது
இவ்வுலகம்.

-------------------------------

கூகிள் பஸ் பற்றி அறிந்தும் ரொம்ப நாள் அந்தப்பக்கம் எட்டிப்பார்க்கவில்லை.. டிவிட்டர் அளவுக்கு யோசிக்கவைக்காமல்.எவ்வளவும் தட்டச்சலாம்.. என்பதால் அங்கே அவ்வப்போது தோன்றியதை எழுதி வந்தேன். அதனை இங்கே சேமித்து வைக்கிறேன்.

-----------------------------

August 31, 2011

தூரத்து வெளிச்சம்

இறக்கை இழந்த
சிறுநெல்மணிக்கான
பறவைக் குறுநடையோடு
தேடித்தேடி
களைத்திருந்தான்

எவனுக்கோ இவனுக்கோ
உருவங்கள் சாயங்கள் மறையும் வரை
சீட்டுக்கள் என்றும் ஏமாற்றுவதில்லை

கதைகளைப் புனைந்து
வாக்குகளை உரைக்கும்
ஆருடக்காரனின்
அடுக்கு மொழிகள்
தன் வசீகரங்களை இழந்திருந்தது

சொன்ன சொற்களுக்கான
உரைகள்
திருத்தப்பட்டன
சொல்லாத சொற்கள்
அரங்கேறி
வாழ்க்கை கலைத்தது

ஆருடங்கள் மாறுகிறதாயில்லை
ஆருடக்காரன்
மாறிக்கொண்டே இருக்கிறான்
வேதனை உதறி
எட்டி இட்ட நடையின் வழியில்
கோர்த்த கரங்களால்
உடைபடும் வேலிகள்
---------------------------------
(புதன்கிழமை, 14 அக்டோபர் 2009 )முல்லை( ஈழநேசன்)

----------------------------------

August 12, 2011

யாவரும் நலம்




தரைமுழுதும் உதிர்ந்திருக்கும்
பின்கட்டு முருங்கைப்பூ,
செலவழிக்க விரும்பாத
சிறுவாடாய் ,
சின்னப்பிள்ளைகள் சிரிப்பினில் மகிழ்ந்திருந்த
மல்லிகை மணம் வீசும்
முற்றமிருக்கும்.
இல்லாதவர் பெயர்தாங்கிய
பலகைகள் தொங்கும்
இலக்கமிட்ட வாயில்
அனைவருக்குமாய் தவமிருக்கும்.
முகவரிகள் தொலைத்தபின்
நலமில்லா விவரம் தாங்கி
இருபக்கமும் கடிதமில்லை.
சோறிட்ட காகங்கள்
நன்றியோடு
நினைவில் நிறுத்தி
கரைகின்ற ஒரு பொழுதில்
யார் காலடியாவது
புழுதி கலைத்து நுழையுமெனில்
மீண்டும் ஒருநாள்
கடிதங்கள் வரக்கூடும்.
பேனாக்கள் உயிர்த்தெழுந்து
நலங்கள் விசாரிக்கப்படலாம்.
நலங்களை நினைப்பதில்
எங்கிருக்கிறது பிழை?
யாவரும் நலமென
எதற்கும் நாம் கையெழுத்திட்டுப்
பழகிக்கொள்வோம்.

February 23, 2011

கற்பக விருட்சம்

ஒரு நாள் சுழன்று மறுநாள் ஆவதன்
இடைப்பட்ட பொழுதில்
நீள்கனவு
மூழ்கியவனை மீள்காட்டும்
கனவில் நீளும் கடற்கரைகள்

சுவடுகள் அழித்து அழித்து
அலையெழுதும் கதைகளில்
விதிகளின் வழிப்படியும்
வலியுடனும்
விட்டெறிந்த கல்லாக
ஆசைகள் மீள்வதைக் காணும்
அலையோசைக் கனவுகள்

பச்சையம் சமைக்கும் சருகுகள்
இயலாததில்லையென்று
முட்டி மோதி கிளைத்தெழுதலை
இட்டு நிரப்பும்
வளர்விருட்சக் கனவுகள்

இயல்பை மறந்த எதிராளியும்
குழப்ப முடிச்சின் நுனியும்
தோன்றுமொரு நாளின் கனவை
நனவாக்கும்
மந்திரக்கோல் தேடுதல்
மற்றொரு கனவின் தொடக்கமாகக் கூடும்.

ஈழநேசனில் 2009 ல் வெளிவந்த கவிதை

June 11, 2010

சிதல் அரிக்கும் நாட்கள்

பாதிவழியில் திரும்புவதே
வழக்கமாகி விடுகிறது
ஒவ்வொரு முறையும்
பிழைகள் எதிர்கொண்டு
பின்னங்களில் வெற்றியாய்
திருப்பி அனுப்பும்
முடிவில்லா
வாழ்க்கைக்கணக்குகள்

சென்று மீண்ட வழிகளின்
பள்ளங்கள் மேடுகள்
பழகியென்ன?
தடைகளாய் முளைக்கிறது
உதவிக்காய் கொணர்ந்தவைகள்

கண்ணாடிச் சுவர் மீது
சப்தமெழுப்பும் வழி தேடல்
முடிச்சவிழ்க்க அவிழ்க்க
வளரும் ரகசியங்கள்
மாதங்களை வருடங்களை
இரக்கமில்லாமல்
உறிஞ்சியபடி
நாட்களில் புயற்கண் அமைதி




*சிதல் - கரையான்





நன்றி :ஈழநேசன்