|
பெரியம்மா தேவார சிடி ஒன்றை கொடுத்திருந்தார்கள்.அதனைப் பாடி
பயிற்சி செய்து வீட்டில் நிகழ இருக்கும் விழாவில் என் மகளைப்
பாடச் சொல்லி இருந்தார்கள்.. இரண்டு நாட்களாக அவள் அதனை
பயிற்சிக்காகப் பாடிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டே இருந்த
மகனுக்கு அதன் தாக்கம் வந்திருக்கிறது. முதல் இரண்டு வார்த்தைகளை
மீண்டும் மீண்டும் ராகமிட்டு பாடிக்கொண்டிருந்தவனைப் பார்த்து நாங்கள் சிரித்துக்கொண்டிருந்தோம்.
மகள் அதனை சொல்லச்சொல்ல பாடுகிறாயா என்று கேட்க தம்பியாரும்
சரி என்று பாடத்தொடங்கி இருந்தார்கள்.’ தோடுடைய செவியென்
விடையேறியோர் தூவெண் மதிசூடி’ சத்தம் கேட்டு நான் அங்கே
சென்றால் எங்கே பயிற்சி கெடுமோ என்ற பயத்தால் அடுத்த
அறையிலிருந்தபடியே போனில் பதிவு செய்யத்தொடங்கினேன்.
சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு கார்டூன் பார்த்துக்கொண்டிருந்த
மகனுக்கு விளம்பர இடைவேளையில் தேவார வகுப்பு நடந்து கொண்டிருந்தது. பின்புறமிருந்து மெதுவாக மிக மெதுவாக நான் சென்றபோது கைகளை
வீசி வீசி ‘ஏஏஏஎ’ க்கள் இழுத்துக்கொண்டிருந்தவனை வீடியோவும் எடுத்தேன்.
ஆனால் அதனை இணைக்க இயலவில்லை. விடுமுறைக்கு வந்த இடத்தில்
கணினிக்கு மாற்றும் இணைப்பு வயரை எடுத்து வரவில்லை.
மிக அழகாக சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக அவன் பாடியது கேட்கும் போது நெகிழ்ச்சியாக இருந்தது..