தி்ல்லியில் இதற்கு முன்பு தேசிய சந்திப்பு என்று மூன்று பேர் கொண்ட மாநாடு நடத்தி இருக்கிறோம். சந்தித்த மற்ற இருவரும் (மங்கை மற்றும் சென்ஷி) தில்லியை விட்டு சென்றுவிட்டார்கள்(நான் காரணமில்லப்பா). அயன் கார்த்தி மீண்டும் வருவதாக தைரியமாக சொல்லி இருக்கிறார். பிப்ரவரிக்கு மேல் மீண்டும் தில்லி பதிவராவார் என்று நினைக்கிறேன் . புதிதாக சிலர் எழுதுகிறார்கள். விக்னேஷ்வரி, லாவண்யா போன்றவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்திருந்தாலும் மற்றவர்களையும் இணைத்து ஒரு சந்திப்பு நடத்த எல்லாருக்குமே ஆசை என்று தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.
எங்கே சந்திப்பது என்று யோசித்துக்கொண்டிருந்த போது பதிவரும் வடக்குவாசல் பத்திரிக்கையாசிரியருமான திரு. பென்னேஸ்வரன் தன்னுடைய அலுவலகத்திலேயே நடத்தலாமே என்று கூறினார். குளிர் வாட்டிக்கொண்டிருந்தபடியால் ஒரு பாதுகாப்பான இடம் என்று உடனேயே ஒத்துக்கொண்டோம். அனைவருமே ஆர்வமாக கலந்து கொண்ட ஒரு அறிமுகக்கூட்டம் இது.
சரியான நேரத்திற்கு முன்பே வந்து விட்டார் வெங்கட் நாகராஜ் . நான் எப்போதோ கூகிள் செய்து எதையோ தேடியபோது இவருடைய பதிவு கிடைத்தது. தமிழீஸ்ல் மட்டுமே இணைந்திருக்கிறார் என்பதால் தவற விட்டிருக்கிறேன். எளிமையான அவர் வலைப்பூ தொடர்ந்து படிக்கத்தூண்டியது.
எம். ஏ.சுசீலா அவர்கள் பழக எளிமையானவர்கள் கூட இளமையானவருமாக இருக்கிறார். ஓய்வு பெற்ற விரிவுரையாளர் மற்றும் எழுத்தாளர். தொலைவிலிருந்து கூட்டத்திற்காக வந்து கலந்துகொண்டு இனிமையாக எங்களுடன் கலந்து பேசினார்.
உயிரோடை லாவண்யா தன்னைப்பற்றிய அறிமுகத்தை அழகாக முன்வைத்தார். கூடவே அகநாழிகை மற்றும் அவருடைய கவிதை புத்தகத்தின் கடையும் வைத்தார். நல்லவேளையாக புத்தகக்கண்காட்சி போலவே தள்ளுபடியும் வழங்கினார்.
விக்னேஷ்வரியின் கணவர் யோகி மொழி புரியாவிட்டாலும் ஒரு யோகியைப்போல அந்நேரம் அமைதியாக அமர்ந்து ரசித்தார். விக்னேஷ்வரி புதியதாக ஆரம்பித்திருக்கும் துறை சார்ந்த தொடரில் மேலும் பல விசயங்களைப் பகிர்வார் என்று நினைக்கிறேன்.
மோகன்குமார் போட்டோகிராபி இன் தமிழ் பதிவு நடத்தும் போட்டியின் மூலம் தெரியவந்தார். அவர் மனைவி விஜயலக்ஷ்மியும் கலந்து கொண்டார்கள்.
மற்றும் ச.வீரமணி என்னும் பதிவரையும் தொடர்பு கொண்டிருந்தோம். அவர் தாம் தமிழ்நாட்டிற்கு சென்று இருப்பதால் வர இயலாதென்று தெரிவித்திருந்தார்.
வடக்குவாசல் பென்னேஸ்வரன் அவர்களின் விருந்தோம்பல் சொல்லி முடியாது. இருக்க இடமும் தந்து செவிக்குணவு நேரத்தில் வயிற்றுக்கு தேநீரும் மற்றும் பலவகையான பிஸ்கட்டுகளும் தரும்படி தம் அலுவலகத்து பணியாளர்களிடம் பணித்திருந்தார்.
தன் அனுபவங்களையும் அவர் எங்களோடு பகிர்ந்து கொண்டார். எழுத்துலகும் இன்றைய இலக்கியமும் கொண்டிருக்கும் அபாயங்களைப் பற்றி உரையாடினார்.
ப்ளாக் எழுதுவதும் பின்னூட்டம் பெறுவதிலும் உள்ள நன்மை தீமைகளைப் பற்றிய ஒருவருக்கொருவருடய கருத்துக்களைப் பரிமாறி ஐயம் தீர்த்துக்கொண்டோம் என்று நினைக்கிறேன்.
இன்னும் சில பதிவர்கள் எங்களுக்கு தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களையும் அடுத்த முறை ஒன்றிணைக்க உதவுவதாக பென்னேஸ்வரன் கூறினார். எல்லாருக்கும் ஜுகல்பந்தி என்கிற இசையை அடிப்படையாகக் கொண்ட சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு மற்றும் வடக்குவாசலின் இலக்கியமலரைப் பரிசளித்திருந்தார்.அவருக்கு நன்றி.