February 13, 2008

சூரஜ்குண்ட் மேளா -கைவினைப்பொருள் கண்காட்சி

தில்லி வந்து வருடம் பத்தாகப்போகிறது இருந்தும் இந்த சூரஜ்குண்ட் மேளாவை பார்த்ததில்லையா என்று யாரும் கேட்டுவிடக்கூடாதே இந்த வருடம் எப்படியும் செல்வது

என்று சபதம் எடுத்திருந்தேன். தில்லியில் இருந்து 25 கிமீ தொலைவில் ஃபரிதாபாத் அருகில் இருக்கும் சூரஜ்குண்ட் என்னும் இடத்தில் வருடா வருடம் கைவினைக்கலைஞர்கள் தங்கள் கலைப்பொருட்களை கண்காட்சி விற்பனைக்கு வைக்கும் மேளா நடைபெறுகிறது. குளிர்காலம் முடியும் போது அதாவது பிப்ரவரி மாதம் முதல் பதினைந்து நாள் நடைபெறுவதால் இதமான காலநிலை . அழகான வண்ணமயமான மேளா மைதானம் ஒரு வித்தியாசமான இன்பச்சுற்றுலா . ஆனால் பணப்பைக்கு மட்டும் பயச்சுற்றுலா.
போகும் வழியில் ஆரவல்லி மலைத்தொடர்.. லாரிகள் அணிவகுத்து மலையை உடைத்து சமதளத்துக்கு அதிகமாகவே மடுவாக்கியபடி இருந்தார்கள். இன்னும் சிறிது காலத்திற்கு பிறகு அப்படி ஒன்று இருந்ததே ஒருவரும் நம்ப முடியாது என்பதாக.. இவ்வளவிற்கும் அது காட்டிலாகா காரர்களுடையதாம் மாபியா கும்பலை தடுக்கமுடியவில்லை என்று செய்தித்தாள் சொல்கிறது.


வோடாபோன் காரர்கள் விளம்பர நாடகம் ஒன்றை வாயிலில் பாதி பார்க்க நேரிட்டது .. நல்லவேளை முழுதும் பார்க்கவில்லை என்று சந்தோஷப்படும் அளவுக்கு இருந்தது.


தில்லி ஹட்டில் கிடைப்பது போன்றே தான் கைவினைக்கலைஞர்களின் கண்காட்சி விற்பனை என்ற போதும் இதன் அமைப்பு கொஞ்சம் மனதைக்கவர்கிறது.
முன்னூநூற்று அம்பது ,மாநில மற்றும் தேசிய விருதுபெற்ற கலைஞர்களின் பொருட்கள் காணக்கிடைக்கிறது. மண் குடிசைகளும் வெள்ளைக்கோலங்களுமாக அந்த சூழ்நிலையே அசத்துகிறது.



உள்ளே நுழையும் போது கேரள பாணி வாயிலில் நுழைந்தோம். இது போன்ற நுழைவாயில்கள் ஒவ்வொன்றும் விதவிதமாக அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
பாண்டிச்சேரியிலிருந்து நம்மவர்களின் கடையில் வாங்குவதத ஆரம்பித்தோம் பிள்ளையார் விளக்கு.. பேப்பரால் செய்யப்பட்ட பழங்களின் வடிவங்கள் (கொலுவிற்கு ) காரணம் அவர்கள் தான் மினிமம் 25 ரூபாய்க்குக்கூட சில பொருட்களை வைத்திருந்தார்கள்.. மரத்தாலான பொருட்கள் அடுத்தபடியாக கவர்ந்தவை என சொல்லலாம்.. விளையாட்டு பொருட்கள் அங்கேயும் வாங்கு வாங்கு என்றது.



இந்தமுறை மேற்கு வங்கம் முக்கிய பங்கு என்பதால் "அப்னா கர்" எங்கள் வீடு என்று ஒரு மண் வீடு கட்டி அதில் பதினைந்து நாட்களுக்கு ஒரு குடும்பம் வசிக்கிறார்களாம். உள்ளே செல்ல கோயிலில் முண்டியடிப்பது போல இருந்ததால் தவிர்த்துவிட்டோம்.
மணிப்பூரி மப்ளர் காதி சுடிதார் என்று என் பக்கமும் அதிர்ஷ்டமும் கொஞ்சம் அடித்தது.
உணவுக்கு என்றேபெரிய இடம் இருந்தது அங்கே கூட்டம் அலைமோதியது. நாங்களும் பஞ்சுமிட்டாயிலிருந்து சோளாப்பூரி பாவ்பாஜி ராஜ்மா ரைஸ் என்று ஒரு கை பார்த்தோம்.




உள்நுழைய 35 ரூ கட்டணம். பலரையும் நல்ல தரமான கேமிராக்களோடு பார்க்க முடிந்தது.. வீடியோ கேமிராக்களுக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். படங்களைகூகிளில் தேடினால் ஃப்ளிக்கரில் அமெச்சூர் புகைப்படக்கலைஞர்களின் படங்கள் அசத்துகின்றன .
நான் எடுத்த சில மொபைல் கேமிரா படங்கள் இங்கே.
ரிக்ஷாக்களில் விதவிதமான உருவங்கள் செய்து குழந்தைகளை சுற்றிக்காட்டுகிறார்கள். ஒட்டகசவாரியும் உண்டு ஆனால் மேளா மைதானத்துக்கு வெளியே.





ராஜஸ்தானிய நடனம்.. பஞ்சாபி நடனம்.. ஒரிஸ்ஸா கலை நிகழ்ச்சி என்று நடனங்களும் மக்களை கவரும்படி இருந்தது. ஒரு நாள் பொழுது இனிதே அமைந்தது.

21 comments:

வடுவூர் குமார் said...

ஹூம்! பாவ் பஜ்ஜி சாப்பிட்டு எவ்வளவு வருடம் ஆகிறது?
பேரை பார்த்தவுடன் ஞாபகம் வந்தது.

துளசி கோபால் said...

அந்த 'அப்னா கர்' ஐடியாத்தோ புரா நஹி(ன்)

நம்மூர்லே ஒரு மண்குடிசையில் இருந்து பார்க்க எனக்கே ஆசையா இருக்கு.

நவநாகரீகமா எதுவும் இருக்கக்கூடாது கழிப்பரை தவிர.

சிற்பங்கள் எல்லாம் செட் போட்டதா? அட்டகாசமா இருக்கே.

ஜமாய்ச்சுட்டுத்தான் வந்துருக்கீங்க.

TBCD said...

பாவ் பாஜ்ஜி..

குறுந்தீனிகளில் பிடிக்காத ஒன்று... :P

இம்மாம் பெரிய பதிவில் பாவ் பாஜ்ஜி தான் கவர்ந்திருக்கு... :P

அம்மினிகள் பணப்பையயைப் பற்றி பேசுவது கேட்க தேன் வந்து பாய்கிறது காதினிலே... :)

துளசி கோபால் said...

oops.......ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிருச்சு(-:

கழிப்பரை = கழிப்பறை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏன் வருடம் ?வடுவூர்குமார். உங்க ஊருல கிடைக்காதா பாவ் ப்ரட்.. இல்லாட்டி என்ன சாதா ப்ரட் கூட.. பாஜி செய்து சாப்பிட வேண்டியது தானே. பாவ்பாஜி மசாலா தான் ரெடிமேடாகிடைக்குதே..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம் துளசி சொல்ல மறந்துட்டேனே.. அங்க கழிப்பறைகளைக்கூட வெளியே மண் குடிசை மாதிரியே செய்திருந்தார்கள். ..

கேமிரா எடுத்துபோகலையேன்னு வருத்தமா இருந்தேன்.. மொபைலில் ஏற்கனவே இருந்த படங்களையும் வீடியோவையும் கணினிக்குமாற்றாததால் அதில் கூட இன்னும் எடுக்க இயலவில்லை. பிளிக்கரில் பார்த்தீர்களா என்னம்மா படம் எடுத்து தள்ளி இருக்கிறார்கள்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்கய்யா டிபிசிடி.. பாவ்பாஜி குமாருக்கு பெரிசா பட்டிருக்குன்ன உங்களுக்கு அம்மணிகளின் பணப்பை பற்றிய கமெண்ட் முக்கியமா பட்டிருக்கு பாருங்க.. நானெல்லாம் அளவா ஆசைப்படறது தான்...

அபி அப்பா said...

பாவ் பாஜி எனக்கு நெம்ப பிடிக்கும்! நீங்களும் பிஸியாத்தான் இருக்கீங்க எப்பவும்:-))

கோபிநாத் said...

இந்த மாதிரி அழகாக எல்லா இடங்களையும் சுற்றிப்பார்க்க வைக்கிறதுல உங்களை விட்ட யாரு இருக்க இந்த தமிழ்மணத்துல....சூப்பர் ;)

என்னாமே எனக்கு இந்த வடநாட்டு ஆயிட்டாங்கள் எல்லாம் ரொம்ப தூரம்.

மங்கை said...

ஓ போயிட்டு வந்தாச்சா...குட் குட்

நல்ல பொழுது போக்கு இல்ல லட்சுமி..எத்தன வைகாயான கைவினைப் பொருட்கள்..ஹ்ம்ம்

Anonymous said...

பயணகட்டுரை ஸ்பெசலிஸ்ட் ஆய்ட்டு வர்றீங்க...

அசத்துங்க...அசத்துங்க...

sury siva said...

மாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக//


முத‌ல் முறையாக‌ உங்க‌ள் ப‌திவுக்கு வ‌ரும் வாய்ப்பு
கிடைத்த‌து. ப‌திவு ஆரவாரமில்லாது அமைதியாக‌ இருக்கிற‌து. யாரையும்
தேவையில்லாது வ‌ம்புக்கிழுப்ப‌து போல் தோன்றும் இன்று காண‌ப்ப‌டும்
ப‌ல‌ ப‌திவுக‌ளுக்கிடையே உங்க‌ள் ப‌திவு ஓர் அமைதிப்பூங்கா
என்றே சொல்ல‌வேண்டும்.
சொல்ல‌வ‌ரும் செய்தியை காய்த‌ல் உவ‌த்த‌லின்றி சொல்லும் பாணி
ப‌ரிண‌மிக்கிற‌து.
நிற்க‌.

உங்க‌ளைப் ப‌ற்றிய‌ குறிப்பு ஏதும் இல்லையே என‌க் க‌வ‌னித்தேன்.
ஆனால், த‌லைப்பின் விள‌க்க‌மாக‌க் கொடுத்துள்ள‌தைக் க‌வ‌னிக்கும்பொழுது
உங்க‌ள் ஆர்வ‌ நிலை நித‌ர்ச‌ன‌மாக‌ உள்ள‌து.

ஆமாம்..இருண்மை என்ற‌ த‌னிச் சொல் உண்டா என்ன‌?
இருளை ஒளியாக‌ என்று தான் எண்ணுகிறீக‌ள் என‌ நினைக்கிறேன்.

இருப்பினும், இருண்மை எனும் சொல்லை
இருள் + உண்மை என‌ப்பிரித்தால்,
இருள்தான் இன்றைய‌ ய‌தார்த்த‌ நிலை என‌வும் பொருள்
கொள்ள‌லாமோ என‌ யோசிக்கிறேன்.

என‌து குழ‌ப்ப‌த்தை தெளிவாக்க‌வேண்டும்.

சுப்பு ர‌த்தின‌ம்.
த‌ஞ்சை.

பி.கு: நேர‌ம் கிடைத்தால் வ‌ருக‌:

http://movieraghas.blogspot.com

http://vazhvuneri.blogspot.com
http://meenasury.googlepages.com/home

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அபி அப்பா, ஆமாங்க பிசியா இருந்தாத்தான் மனசுக்கு நல்லது..

------------
கோபி நிறைய பேரு எழுதறாங்கப்பா இருந்தாலும் அன்பின் மிகுதியால இப்படி சொல்லி இருக்கீங்க.. அது என்ன "என்னமோ"ன்னு அடிக்க என்னாமே ன்னு அடிச்சதும் சரி மெட்ராஸ் பாசையில் எதோஅடிச்சிருக்கீங்களோன்னு நினைச்சுட்டேன் முதல்ல :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மங்கை விண்டோ ஷாப்பிங்க் போல நல்ல பொழுதுபோக்கு வேறென்னங்க இருக்கமுடியும்.. ஜாலியா இருந்தது ..
--------------

இரண்டாம் சொக்கன் .. எதோ பாத்தது எனக்கே மறக்கக்கூடாது அப்பறம்.. கூட்டிட்டு போனவருக்கு பெருமை கிடைக்குமே அதான்.. ;))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சூரி , தங்கள் வருகைக்கும் மனதுக்கு இதமான கருத்திற்கும் நன்றி.
இந்த தலைப்பின் கீழ் தெரியும் வாக்கியங்கள் பாண்டிச்சேரி அன்னையின் அருள் மொழிகளில் ஒன்று. என் தாய் அவரிடம் கொண்ட பற்று காரணமாக எங்களுக்கு அவருடைய புத்தகங்களை பரிசளிப்பது வழக்கம்.. அவற்றில் என் மனம்கவர்ந்த இந்தவரிகளை வாழ்வில் கடைப்பிடிக்க மிக ஆசை .. எனவே தான் அதனை என் பதிவில் சேர்த்துக்கொண்டேன்..
இருண்மையின் முழு அர்த்தத்தை இரண்டொரு நாளில் நான் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.. (நானும் முழுமையாக விளங்கிக்கொண்டு)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இருண்மையை இருள் என்றே இதுவரை பொருள் கொண்டேன்.. வேறு எதும் அர்த்தம் இருக்குமோ என்று தந்தையிடம் கேட்டு சொல்கிறேன்.

sury siva said...

நன்றி.
வருக.
http://arthamullaValaipathivugal.blogspot.com
சுப்புரத்தினம்.
தஞ்சை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சூரி ,இருண்மை என்பது இருள் .. அறியாமை என்று இரு பொருள் படுமாம். இருளை அகற்றி ஒளியாக.. அறியாமையை அகற்றி அறிவொளியாக என்று இரண்டுக்கும் அச்சொற்றொடர் பொருந்தும் என்கிறார்கள் .

காட்டாறு said...

அருமையான மேளா. அதிலும் உங்கள் நடையில் அழகா சொல்லியிருக்கீங்க. அமிர்தசரஸ் பதிவுகள் ஞாபகம் வந்து போனது. :-)

sury siva said...

உங்கள் நடை அழகாக உள்ளது என காட்டாறு அவர்கள்
பாராட்டுகிறார்களே ! எங்கே என நீங்கள் பார்க்கவேண்டாமா?
http://arthamullaValaipathivugal.com
சுப்புரத்தினம்.
தஞ்சை

கண்மணி/kanmani said...

முத்து கொடுத்து வச்சவங்கப்பா நீங்க நல்லா அனுபவிச்சி பாக்கறீங்க..ஆமாம் நிறைய கைவினைப் பொருட்களின் படங்களையாவது போட்டிருக்கலாமே[பணப்பை பத்திரமா இருக்கா;))நீங்க என்ன வாங்கினீங்க?