November 14, 2008

காசி தொடர்(4) - படித்துறைகள், உள்ளூர் கோயில்கள்

கங்கா மாதா (படகிலிருந்து காட்சி)

காசியில் இரண்டாவது நாள்.. காலை 6.30 மணிக்கு படகுக்காரர் சத்திரத்திற்கே வந்து அழைத்துச் சென்றார். முதலில் முக்கியமான படித்துறைகளை பார்க்க ஏற்பாடு. தலைக்கு 40 ரூ . தாஸ்வமேத காட் லிருந்து புறப்பட்டு மணிக்கரன் காட், ராணா காட், அரிச்சந்திரா காட்( படித்துறை) . கங்கையின் மறுகரையில் கொஞ்சம் அழுக்கு கம்மியாக இருக்குமென்று அங்கே ஒரு குளியல் திட்டம்.
போன ஒர் இடத்திலும் கங்கையில் நாங்கள் குளிக்கவில்லை. பெரியவர்கள் மட்டுமே முங்கி எழுந்தார்கள்.. நாங்கள் தலையில் தெளித்துக்கொண்டதோடு சரி. மறுகரையில் நன்றாகத்தான் இருந்தது. சிறுவர்களும் சிறுமிகளும் கூட குளிரில் முதலில் நடுங்கிவிட்டு பின்னர் குளிர்விட்டதும் ஜாலியாக குளித்துக்கொண்டிருந்தார்கள்.எதிர்கரையில் ஆடைமாற்ற என்று சிறுதடுப்புகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். எனவே ஒரு ஆளுக்கு குளிக்க 1 ரூ வாங்குகிறார்கள்.


அரிச்சந்திரா மற்றும் மணிகரணில் மட்டுமே இப்போதும் பிணங்களை எரிக்கும் வழக்கம் தொடர்கிறது. கேதார்காட் டில் இருந்த கேதார நாதர் கோயில் நம் ஊர் கோயில் என்று பார்த்த உடனே தெரிந்தது. நேபாள மன்னர் கட்டிய நேபாள கோயில் எல்லாம் படகிலிருந்தே பார்த்துவிட்டோம். படித்துறைகளை படகிலிருந்து பார்க்கும் போது தான் காசி என்றாலே நாம் பார்க்கின்ற படங்களின் தோற்றம் தெரிகிறது.
ராணாகாட்
மீண்டும் தாஸ்வமேத காட். ஆங்காங்கே குடைகளின் கீழே அமர்ந்த பண்டாக்கள் சிரார்த்தம் பூஜைகள் செய்விக்கிறார்கள். எங்களுக்காக ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் அய்யர் வந்தார். அங்கேயே பிறந்து வளர்ந்திருப்பார் போலும் தமிழைக் கடித்துத் துப்பினார். அம்மா இருக்கா? அண்ணா அக்கா இருக்கா? கங்கா யமுனா சொல்லு என்று மிரட்டி மிரட்டியே மாமனாரை மந்திரங்கள் சொல்லவைத்தார். பிண்டம் இங்கே கரையில் கரைக்காதீங்கோ மெம்பர்ஸ் குளிப்பாங்கோ.. பத்துரூபாய் தான் படகில் கொஞ்சமாய் போய் போட்டுட்டு குளிங்கோ என்று அதற்காகவே காத்திருந்த தாத்தா ஒருவரிடம் அனுப்பிவிட்டார்.

பின் நேராக சத்திரம் காலை உணவு . பிறகு பேசிவைத்திருந்த படி ஆட்டோக்காரர் வந்தார். ரயிலிலிருந்து இறங்கி சத்திரம் வரும்போதே அவரிடம் நாங்கள் பேசி வைத்திருந்தோம். 500 ரூ க்கு சில உள்ளூர் கோயில்கள் மற்றும் சாரநாத் .

நியூ காசி விஸ்வநாத் கோயில்( பிர்லா மந்திர்) நாங்கள் 11 மணிக்கு புறப்பட்டதால் கோயில் அடைக்கப்படும் நேரம் ஓடி ஓடி பார்த்தோம். வழக்கமான பிர்லா கோயிலைப்போலவே அழகான கட்டமைப்பு. இது பனாரஸ் ஹிந்து யுனிவர்ஸிட்டிக்குள் இருக்கிறது . காற்றோட்டமான அந்த கோயில் அமைப்பும் அமைதியும் படிக்க நல்ல இடம் தான். ஆங்காங்கே மாணவர்கள் படித்துக்கொண்டிருந்தார்கள்.

மங்கி டெம்பிள்( சங்கட் மோச்சன் அனுமான் கோயில்) இங்கே லாக்கர் ஒன்று தந்து கேமிரா மற்றும் போன் எல்லாவற்றையும் வைத்துப்போகும் படி சொல்லிவிட்டார்கள். தண்ணீர் பாட்டில் மட்டும் அத்தையின் கையில் இருந்தது. எங்கே பார்த்தாலும் குரங்குகளாக தெரிந்த சிறுபாதை. ஏற்கனவே குரங்கு கண்ணாடியை லவட்டிக்கொண்டு போய் கண் தெரியாம கோவர்த்தனம் பார்த்த அனுபவம் இருக்கிறது என்பதால் கண்ணாடியை கழட்டி வைத்துக்கொண்டு நடை போட்டேன்.

பம்மியபடி நடந்த எங்களைக்கண்டதும் அருகே வந்த குரங்கு ஒன்று முதலில் எதாவது வைத்திருக்கிறாயா என்று கேட்பது போல சுடிதார் நுனியைப்புடித்துக்கேட்டது. அடுத்து அத்தையின் சேலையை பிடித்துக்கேட்டது பயந்து பாட்டிலைக் கீழே போட்டதும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டது. பயந்தபடியே கோயிலுக்கு சென்று சேர்ந்தோம். அதற்குள் திரை மூடப்பட்டு விட்டது. சாலிஸா புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. யார் வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம். வெளியே ஆர்ப்பாட்டம் செய்யௌம் குரங்குகள் ஒன்றுமே கோயிலுக்குள் வரவில்லை.மீண்டும் கோயில் 3 மணிக்குத்தான் திறக்கும் சரி என்று கிளம்பிவிட்டோம்.

வழக்கமாக கோயில்கடையில் எதயாவது வாங்காவிட்டால் சாமிகோச்சுக்கும் என்பது குழந்தைகள் எண்ணம். அதேபோல் கேட்ட பையனுக்கு , வாங்கினாலும் வெளியே குரங்கு பிடிங்கிக்கும்டா என்று சமாதானம் செய்திருந்தேன். உண்மையும் அது தான். ஆனால் எங்களுக்கு முன்னால் நடந்து கொண்டிருந்த குடும்பத்தில் ஒரு குழந்தை கையில் பேட் பால் பாக்கெட் ஒன்று இருந்தது. அம்மா பாரேன் அவங்க மட்டும் என்று சபரி ஆரம்பிக்கவும் பாக்கெட்டிலிருந்து பால் கீழே விழவும் சரியாக இருந்தது. பச்சைக்கலர் பால். கொய்யாவைப்போல இருந்தது. குரங்கு வந்து எடுத்துக்கொண்டு போய்விட்டது. அப்பாடா அம்மா கெட்டவ இல்லை..
photo-mang (thanks)
துர்கா கோயில்

பிறகு கால பைரவ் கோயில் , சனி பகவான் கோயில் . அப்போது தான் அங்கேயும் நடை சாத்தி இருக்கிறார்கள் போல ,,மீண்டும் 2 மணிக்குத்தான் . வெளியே இருந்த புகைப்பட சாமியை கும்பிட்டுவிட்டு வலம் வந்தோம். வாங்கோ மயில் பீலி அடிவாங்கிக்கோ என்று அழைத்த சாமியாரைப் புறக்கணித்துவிட்டு வெளியே வந்தோம்.முதுகைக்காட்டினால் பாவம் போக மயில்பீலி அடி விழும்.பின் தட்சனை தான் வேறென்ன...

அடுத்து சாரநாத்...............

28 comments:

Iyappan Krishnan said...

building photos are good. yet needs bit of enhancement to get away from foggy effect

nice series :)

ஆயில்யன் said...

போட்டோவெல்லாம் கலக்கல்!

நம்ம ஊரு ஸ்டைல் கோவில் அந்த மாடங்களை பார்த்தாலே டக்குன்னு கண்டுபிடிக்கமுடியுது! :)

Iyappan Krishnan said...

hai - nandhan "Me the firstttu "


raapp akkaa illai :))

ராமலக்ஷ்மி said...

படங்கள் அருமை. குறிப்பா ராணாகாட் மற்றும் துர்கா கோவிலை நீரில் தெரியும் பிரதிபலிப்புடன் எடுத்தது..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜீவ்ஸ் இன்னைக்கு ரொம்ப ஃப்ரீ போல.. மீ த பர்ஸ்டெல்லாம் போடுறீங்க.. :)

தூரத்துல இருந்து ஃபோகஸ் செய்ததால இருக்குமோ .. என்கான்ஸ்மெண்ட் எல்லாம் செய்ய நீங்க நல்லா போஸ்ட் புகைப்படக்கலையில் சொல்லிக்கொடுங்க..ஆனா செய்துபார்க்கும் பொறுமையை வளர்த்துக்கனும் நான்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆமாம் ஆயில்யன் .. கலர் கலரா சாமி சிலைகள் ன்னாலே நம்ம ஊரு தானே .. கொடி பறந்துகிட்டு பென்சில் கூர் மாதிரி இருந்தா அது வடநாட்டு கோயிலு.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்ஷ்மி ராணா காட் நான் எடுத்தது தான்.நான் எடுத்தது தான்.
ஆனா பாருங்க அந்த துர்கா கோயில் mang ன்னு வேற ஒருத்தரோடது கூகிளில் கிடைச்சது. அந்த கோயிலில் எல்லாம் கேமிரா எடுத்துட்டுப்போகலை.. பாதி கோயிலில் எடுத்துட்டு போகக்கூடாதுங்கறதால குழப்பம்..

சென்ஷி said...

வழக்கம்போல போட்டோவெல்லாம் கலக்கலா இருக்குதுக்கா :))

Thamiz Priyan said...

அக்கா! நல்ல படங்களுடன் சொல்லி இருக்கீங்க...:)

Thamiz Priyan said...

///முத்துலெட்சுமி-கயல்விழி said...

ராமலக்ஷ்மி ராணா காட் நான் எடுத்தது தான்.நான் எடுத்தது தான்.////
அக்கா! நாங்க நம்புறோம்... நம்புறோம்... :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சென்ஷி ..இன்னைக்கு படமெல்லாம் நல்லா தெரிஞ்சதா அங்க?
:)
-------------------
தமிழ்பிரியன்.. நம்பிட்டீங்களா அப்பாடா இப்பத்தான் நிம்மதி... ஆனா பாருங்க என்படங்களோட வேற ஆளுங்க படம் போடும்போது நானே ஒருநன்றி பக்கத்துல போட்டுருவேன்...இல்லன்னா அதுலயே எதாச்சும் ப்ரிண்ட் செய்திருக்கும்.. :)

ராமலக்ஷ்மி said...

//என்படங்களோட வேற ஆளுங்க படம் போடும்போது நானே ஒருநன்றி பக்கத்துல போட்டுருவேன்...இல்லன்னா அதுலயே எதாச்சும் ப்ரிண்ட் செய்திருக்கும்.. :)//

Noted:)!

நானும் அப்படியே, ஆனா பதிவின் கடைசியில் போடுவது வழக்கம்:)!

ராணாகாட்தான் இங்குள்ள படங்களிலேயே சூப்பர் சூப்பர்:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஏற்கனவே குரங்கு கண்ணாடியை லவட்டிக்கொண்டு போய் கண் தெரியாம கோவர்த்தனம் பார்த்த அனுபவம் இருக்கிறது என்பதால் கண்ணாடியை கழட்டி வைத்துக்கொண்டு நடை போட்டேன்//

ஹா ஹா ஹா
கண்ணா ஆடிய கோவர்த்தனத்தில்
கண்ணாடி எதுக்கு-ன்னு தான் அது அப்படி பண்ணி இருக்கு! இதெல்லாம் மனசுல வச்சுக்காதீங்கக்கா! :)

காசித் தொடர் படிச்சிட்டு தான் வரேன்! காசியில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம்! நீங்க சுற்றுலா மாதிரி எழுதறதே நல்லா இருக்கு!

//பச்சைக்கலர் பால். கொய்யாவைப்போல இருந்தது. குரங்கு வந்து எடுத்துக்கொண்டு போய்விட்டது. அப்பாடா அம்மா கெட்டவ இல்லை..//

இது மட்டும் அவங்க அம்மா காதுல விழுந்திருக்கணும்! அப்பறம் தெரியும் சங்கட மோச்சன்! :))

வல்லிசிம்ஹன் said...

போட்டோவோட பதிவு நல்லா இருக்கு முத்து கயல். ரொம்ப நன்றி.
நான் காசி பார்த்ததில்லை. இப்போ புண்ணியம் உங்களுக்குத் தான்.

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ.....

இந்தப் பதிவைப் படிச்சு நல்லாச் சிரிச்சேன்.

குரங்ஸ் சூப்பர்:-)))))

கண்ணாடி லவுட்டுனதைச் சொல்லவே இல்லை!!!!
யூ மேட் மை டே!

Anonymous said...

கங்கையில பிணங்களை அப்படியே தூக்கி போடுவாங்கன்னு சொல்றாங்களே. நீங்க போனப்ப அப்படி ஏதாவது நடந்துதா

நாகை சிவா said...

நானும் இருக்கேன் உங்க காசி பயணத்தில் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராமலக்ஷ்மி ,ரொம்ப நன்றிப்பா.. ராணாகாட் நல்லாருக்கா ..நாளைக்கு இன்னும் கலர்புல்லான படித்துறைகளை க்ளிக்க்ளிக்ல போடறேன்..

------------------
கே. ஆர்.எஸ்.. உங்களுக்கென்ன தெரியும் என் கண்ணின் மகிமை.. கோவர்த்தனத்தில் கடவுளை என் ஞானக்கண்ணால் பார்க்கவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்ட அந்த நிகழ்வைப்பற்றி ஒரு பதிவு போட்டே ஆகனும் போலயே..:)

பின்ன அந்த குரங்குமட்டும் எடுத்துட்டு போகலன்னா .. நம்ம அம்மாதான் ஒன்னும் வாங்கித்தரதில்ல பேட் அம்மான்னு அவன் மனசுல இம்பரஸன் விழுந்துடாதா..ஹனுமான் திரைய போட்டாலும் பேரை காப்பாத்திட்டார் போல... :)

துளசி கோபால் said...

ராணாகாட் நிறைய சினிமா புகழ் பெற்றது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வல்லி நன்றி.வாங்க அடுத்தாப்ப்ல போதிமரத்துப்புத்தரை ப் பார்த்துட்டு வரலாம்...
-------------
துளசி கண்ணாடிய குரங்கு லவட்டினதை சொல்ல கொஞ்ச நாள் முன்ன வெக்கமா இருந்தது.. ஆனா அது ஒரு நல்ல பதிவாக வரக்கூடிய அனுபவம்ன்னு இப்பத்தோணுது சீக்கிரமே கோவர்த்தன சீரிஸிற்கு இன்னொரு பாகம் போட்டிரரேன்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சின்ன அம்மிணி .. அப்படியே தூக்கின்னு இல்ல.. பிணங்களை எறிக்க எங்க எங்க இருந்தோ கொண்டுவருவங்க.. முதலில் எரிச்சுட்டு அப்பறம் அதை கங்கையில் தள்ளிவிடுவாங்க..இப்பல்லாம் பாதி எரிஞ்சுட்டு இருக்கும்போதே தள்ளுவதும் உண்டு. போனமுறை போனப்பத்தான் எரிக்கிறது தள்ளூறத நெருக்கமாக படகில் போய் பார்த்தோம் இந்த முறை தள்ளியே சுத்திட்டு போயிட்டோம்.. நாங்க போன சமயத்தில் ஒன்றும் எரியல.. விறகு அடிக்கின இடத்தை தூரமா காமிச்சிட்டு வந்தார் படகுக்காரர். அந்த இடத்துல வச்சு தானம் கொடுத்தா நல்லது ன்னு ஒரு 21 ரூ பாய் வாங்கிகிட்டார் (டிப்ஸ்) :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நாகை சிவா , நீங்களும் பயணத்தில் இருக்கீங்களா மகிழ்ச்சி.. :)

கோபிநாத் said...

ம்ம்ம்...

ஸ்வாமி ஓம்கார் said...

அன்பு சகோதரி,

உங்கள் பயண கட்டுரைகள் அருமை.
வருடா வருடம் காசிக்கு பயணம் செல்லும் எனக்கு சக பயணிகளுடன் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட உணர்வு.

நாட்டு கோட்டை சத்திரத்தார் செய்யும் பணி அபாரமானது. ஆறு கால பூஜையில் மூன்றுகால பூஜை இவர்களுடையது.

ஆகஸ்டு மாதம் சென்ற போது அலகாபாத்தில் அவர்கள் உபயத்தில் மூன்று நதிகளும் சந்திக்கும் இடத்தில் ஹோமம் செய்ததை தெய்வ சங்கல்ப்பமாக கருதினோம்.

உங்கள் 4ஆம் பதிவில் உள்ள கேதார கட்டத்தில் குமாரஸ்வாமி மடம் எனும் சத்திரம் உள்ளது. அதன் அமைப்பும், கேதர கட்டமும் எனது வாழ்வில் மறக்க முடியாத ஒன்று.

சுவாமி விவேகாநந்தர் வாழ்வில் சங்கட் மோச்சன் கோவிலிலும் துர்க்கா கோவிலிலும் ஓர் சம்பவம் நடந்தது. உங்களுக்கு தெரியுமா?

உங்கள் சார்பில் காசிக்கு செல்பவர்களுக்கு ஓர் முக்கிய விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு செல்லுபவர்கள் அருகில் இருக்கும் மசூதிக்கு பக்கதில் உள்ள கிணற்றை தரிசித்து(காசிபற்றிய முதல் பதிவில் இதை சகோதரி குறிப்பிட்டுள்ளார்) அதில் உள்ள நீரை பருகவும்.
காரணம் உண்மையான காசி விஸ்வநாதர் அந்த கிணற்றுக்குள்தான் இருக்கிறார்...!!

பரமானந்ததுடன்..

ஸவாமி ஓம்கார்
www.pranavapeetam.org

கிரி said...

//பம்மியபடி நடந்த எங்களைக்கண்டதும் அருகே வந்த குரங்கு ஒன்று முதலில் எதாவது வைத்திருக்கிறாயா என்று கேட்பது போல சுடிதார் நுனியைப்புடித்துக்கேட்டது//

:-)

//அதேபோல் கேட்ட பையனுக்கு , வாங்கினாலும் வெளியே குரங்கு பிடிங்கிக்கும்டா என்று சமாதானம் செய்திருந்தேன். உண்மையும் அது தான்//

அம்மான்னா சும்மாவா ;-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஸ்வாமிஓம்கார் விவரங்களுக்கு நன்றி.கிணற்றை அந்த தம்பி காட்டினான். ஆனால் அதில் தண்ணீர் சேந்த வழி இருந்ததா என்று நான் பார்க்கவில்லை.. எக்கச்சக்க போலீஸ் ..நம்மையே கவனித்துக்கொண்டிருந்தால் பதட்டமா இருக்காதா? அதனால் ஜல்தியாக பார்த்திவிட்டு ஓடிவந்துவிட்டோம்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கிரி , சிரிக்கிறீங்க .
அந்த குரங்குகளைப்பார்த்ததும் எந்த நேரம் என்ன நடக்குமோ என்று திகிலோடு தான் அந்த இடத்தை கடந்தோம்.

Expatguru said...

//முதுகைக்காட்டினால் பாவம் போக மயில்பீலி அடி விழும்.//

நான் கேதார்நாத் சென்ற பொழுது இதே போல எனக்கும் அனுபவம் ஏற்பட்டது. கோவிலுக்கு வருகிற பக்தர்களை வலுக்கட்டாயமாக அழைத்து நெற்றியில் குங்கும பொட்டை பெரிய திலகமாக இட்டுவிடுவார்கள். அடுத்த நிமிடமே "தக்ஷிணா இதர் ரகோ" என்று அதட்டுவார்கள். நாம் தராமல் சென்றால் சாபம் வேறு இடுவார்கள்! எதற்கு வம்பு என்று முதலிலேயே உஷாராக "வேண்டாம்" என்று கூறி தப்பிப்பது உத்தமம். இது போன்ற பாண்டாக்களினால் உண்மையான துறவிகளுக்கு தான் அவப்பெயர்.