March 21, 2007

வித்தியாசமாய் செய்

வித்தியாசமா எதையாச்சும் செய்யணும் அப்படிங்கறது ஒரு
விதமான நோயா இருக்குமோ? தெரியல. ஆனா எப்போதும் அப்படித்தான் எனக்குத் தோணுது. டீச்சர் வேலைக்குப்
போனா நல்லதுன்னு பேசிட்டு இருந்த தோழிகளுக்கு நடுவில்
நான் மட்டும் ஃபேஷன் டிசைனிங் படிச்சுட்டு வியாபாரத்துல பெரிசாகனும்ன்னு பேசிட்டு இருந்தேன். சில பல காரணத்தால
அது முடியாமப் போச்சு.


கரஸ்பாண்டஸ் கோர்ஸ் எடுத்துச் சும்மா எதையாச்சும் படிக்கலாம்ன்னா அங்கயும் நம்ம வித்தியாசமாய் நோய் வந்து
விளம்பரத்துறை பத்திப் படிக்கற அளவுக்கு முத்திப் போய் இருந்தது. ஆனா இது சில சமயம் உதவியா இருக்கு.

என் பொண்ணுக்கு ஓவியப்போட்டிகளில் எப்போதும் பரிசு கிடைத்து விடும். காரணம் நாங்க எடுத்துக்கிற வித்தியாசமான
தலைப்புகள் தான். சின்னப்பிள்ளைங்க தானே எதை வேணாலும்
வரைங்கன்னு சொன்னா கூட அதுக்குன்னு நாங்க சில தலைப்புகளை யோசித்து வச்சுருப்போம்.7 வயதுக்குள் தலைப்பு கொடுக்கப்படுவதில்லை குழந்தைகளுக்கு . மற்ற தோழிகளிடமும் சொல்லுவேன். போட்டி இருக்கும் இடத்தில் வித்தியாசமாக எதையாவது செய்யாவிட்டால் வெற்றிப் பெறுவது எப்படின்னு..ஆனாலும் கேட்கமாட்டாங்க. பிள்ளைங்கள அவங்க போக்குல விடனும் அப்படின்னு சொல்லுவாங்க .


நான் சொல்லுவேன் . குழந்தைங்க தன் போக்குல வீட்டில் இருக்கட்டும் வெளியே மற்றவர்களுக்கு வித்தியாசப்படுத்திக்
காட்டினால் தான் தனியாகத் தெரிய முடியும் என்று. அதுமட்டுமில்லாமல் வித்தியாசமாய் சிந்திப்பது அவர்களுக்கு மேலும் மேலும் விஷயங்களை விளையாட்டாய் புகுத்த சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுக்கும் .

உதாரணத்திற்கு இந்த ஓவியப்போட்டி பற்றி சொல்கிறேனே.
அவளுக்கு சுற்றுப்புறத் தூய்மைப் பற்றி உணர்த்த ஒரு தலைப்பு கொடுத்தேன். சேவ் எர்த் . சிறு கலந்துரையாடலில் கிடைத்தது இந்த ஓவியத்தின் வடிவம் . ஒரு பெண் வரைந்து அவள் கையில் ஒரு பை. இங்கே சஃபல் என்பது காய்கறிகளை விற்கும் அங்காடி . அந்த கடையில் காய்கறி வாங்க வருபவர்கள் அப்போதெல்லாம் பாலிதீன் பைகளில் வாங்கிச் செல்வார்கள். இப்போது பாலிதீன் அவர்களே வைத்துக் கொள்வதில்லை துணிப் பை தான் கண்டிப்பாக கொண்டு செல்லவேண்டும்.


எனவே , சஃபல் கடை வரைந்து பழங்கள் வரைந்து அப்பெண் கையில் இருக்கும் பையில் மை க்ளாத் பேக் என்று எழுதிவிட்டாள் . வீட்டிலிருந்து பை கொண்டு வாருங்கள் , பாலிதீன் உபயோக்கத்தைக் குறையுங்கள் என்பது கருத்து.


மற்றொரு முறை காந்தியின் கனவுகளும் நடைமுறை வாழ்க்கையும் என்பதை கருத்தாக்கி , நடுவில் காந்தியும் மேலே அவர் கண்ட கனவாக அமைதிப்புறாவும் , ராட்டையும் [சுதேசி]
கீழே துப்பாக்கியும் டெரரிஸ்டும் , கோலாவும் ப்ராண்டட் ஐட்டங்களும் வரைந்தோம். பரிசு அவளுக்குத்தான்
என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.

இன்னொரு முறை நகரத்தின் பளபளப்பும் மறுபுறம் கிராமத்தின் அவலநிலையும் வரைந்து வறுமை என்பதே மிகப்பெரும் வன்முறை என்ற தலைப்பு. அவளுக்கும் இது போன்ற பெரியோர்களின் எழுத்துக்களை அறிமுக்கப்படுத்தியதாக
அமையும் .

மகளின் வகுப்பில் எல்லாரும் ஃப்ரெஞ்ச் எடுத்து படிக்கிறார்கள் இந்த வருடம் . நாங்கள் தான் வித்தியாசமாய் செய் என்னும் தாரக மந்திரம்
வைத்திருக்கிறோமே ஜெர்மன் எடுத்திருக்கிறோம். இந்த முடிவு சரியானதா? பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

22 comments:

இலவசக்கொத்தனார் said...

//மகளின் வகுப்பில் எல்லாரும் ஃப்ரெஞ்ச் எடுத்து படிக்கிறார்கள் இந்த வருடம் . நாங்கள் தான் வித்தியாசமாய் செய் என்னும் தாரக மந்திரம்
வைத்திருக்கிறோமே ஜெர்மன் எடுத்திருக்கிறோம். இந்த முடிவு சரியானதா? பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.//

டோண்டுவைக் கேளுங்க. சொல்லுவார்.
அப்புறம் இஎத வித்தியாச வியாதி ஒரு அளவுக்குள்ள இருக்கணும். முத்தினா ஆபத்துதான்.

துளசி கோபால் said...

//நடுவில் காந்தியும் மேலே அவர் கண்ட கனவாக அமைதிப்புறாவும் , ராட்டையும் [சுதேசி]
கீழே துப்பாக்கியும் டெரரிஸ்டும் , கோலாவும் ப்ராண்டட் ஐட்டங்களும் வரைந்தோம். பரிசு அவளுக்குத்தான்
என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.//

வரைந்தோம்............ஆஹா பூனைக்குட்டி வெளியில் வந்தாச்சு:-))))


சரி சரி

குடன் டாக்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\இலவசக்கொத்தனார் said... அப்புறம் இஎத வித்தியாச வியாதி ஒரு அளவுக்குள்ள இருக்கணும். முத்தினா ஆபத்துதான். //

ஆமாங்க கொத்தனார்ஜி எதுவுமே
அளவுக்கு மீறினா நல்லது இல்லதான்
பாத்துக்கறேன்.. நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\துளசி கோபால் said...
வரைந்தோம்............ஆஹா பூனைக்குட்டி வெளியில் வந்தாச்சு:-))))//

என்னங்க துளசி இப்படி சொல்லிட்டீங்க.
இவ்வளவு மோட்டிவேட் பண்ணற
நான் அப்படி எல்லாம் செய்வேனா.
இந்த டீம் ஒர்க் கலந்துரையாடல் , இப்படி வரை அப்படி வரைங்கறதும் கலர் பத்தி ஐடியா குடுக்கறதும்ங்கற ப்ராக்டிஸ் வீட்டுல மட்டும். அங்க போய் அவ தானே வரையணும்.
தனியா நாங்கள் ஒரு டிராயிங் க்ளாஸ்
நடத்திக்குவோம் எங்களுக்குள்ள.
அதுக்குள்ள பூனைக்குட்டி ...அது இதுன்னு... :(

பொன்ஸ்~~Poorna said...

முத்துலட்சுமி,
எனக்கென்னவோ, நீங்க வித்தியாசமா சிந்திக்கிறதை உங்க பெண்ணும் அதே மாதிரி சிந்திக்கச் செய்து, அவங்க தன்னுடைய தனித்தன்மையைப் புரிந்து கொள்ள இடம் கொடுக்காமல்.... அத்தனை சரியான விசயமாத் தெரியலை.

அதாவது, அவங்களுக்கான அசைன்மெண்டில், அவங்க வித்தியாசமா சிந்திச்சி ஏதேனும் ஐடியாவோட உங்க கிட்ட வந்து, அந்த ஐடியாவுக்கு நீங்க கொஞ்சம் உங்க அனுபவம், அறிவு, ஐடியான்னு கலந்து கட்டி அழகுபடுத்திக் கொடுத்தீங்கன்னா, அவங்களுடைய தனித்தன்மையும் இருக்கும்; அவங்க பொதுவா எப்படி யோசிக்கிறாங்க, இதெல்லாம் உங்களுக்கும் தெரியவரும்; அதை மேம்படுத்தவும் உங்களால் முடியும்..

அப்படித் தான் நீங்க செய்திருக்கீங்க, அதைத் தான் இந்த இடுகையில் எழுதி இருக்கீங்கன்னா, எல்லாத்தையும் அவங்களே செய்ததாகச் சொல்லி இருக்கலாம்; ஒரு குழு முயற்சி போல் சொல்லாமல்.. அது இன்னும் அவங்களுக்கு credit-ஆக, புது முயற்சிகளுக்கு ஊக்கமாக இருந்திருக்கும்.. (assuming அவங்களும் உங்க பதிவைப் படிக்கிறாங்க..)

கலை said...

வித்தியாசமாத்தான் இருக்கு. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பொன்ஸ் , ஒருவகையில்
நீங்கசொல்வதும் சரிதான்.
அவளுடைய பாடதிட்டத்தில்
அவளுக்கு கொடுக்கப்படும் ப்ராஜக்ட் என்றால் அவளுடைய
ஐடியாக்கள் முதலில் என்னுடையவை
பின்னால்.
இப்படி வெளியே நடக்கும்
போட்டிகள் என்றால் அதில்
என் ஐடியாக்கள் முதலில் அவள்
ஐடியாக்கள் பின்னால். இந்த விஷயத்தில்
காந்தியைப்பற்றியும் சுற்றுப்புறசூழல் பத்தியும் அவளுக்கு முழுமையாய்த்
தெரியாது என்பதால் அதை நான் தானே அவளுக்கு சொல்லித்தரணும். ஒரு கோடு போட்டா அவள் அதில் இப்படி செய்யலாம் என்று மேலும் மெருகேற்றுவாள். இது உண்மையில் டீம் ஒர்க் தான். தனியாக இவ்வளவு சிந்திக்க முடியாது.எனக்குள்ள இருக்கற வாத்தியாரம்மா எதயாச்சும் எப்பவும் குழந்தைக்கு சொல்லிக்கொடுத்துக்கிட்டே இருக்கறா..என்ன செய்ய.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மறுமொழிக்கு நன்றி , கலை.

ஒப்பாரி said...

போட்டிகளில் வித்தியாசமாக யோசிப்பதுதான் கைகொடுக்கும். எனுக்கும் கொஞ்சம் அனுபவம் இருக்கு இரண்டு முறை ஒவியப்போட்டியில் ஓவியத்திறமைக்கல்லாமல் வித்தியாசப்படுத்தியதற்க்காக இராண்டாம் பரிசு பெற்றிருக்கிறேன்.

த வெ உ புகைப்படபோட்டியிலும் இதுபோல் நடந்தது.

//எனக்கென்னவோ, நீங்க வித்தியாசமா சிந்திக்கிறதை உங்க பெண்ணும் அதே மாதிரி சிந்திக்கச் செய்து, அவங்க தன்னுடைய தனித்தன்மையைப் புரிந்து கொள்ள இடம் கொடுக்காமல்.... அத்தனை சரியான விசயமாத் தெரியலை.//


இது அவர்களுடைய வயதை பொருத்தது. குறிப்பிட்ட வயது வரை அவர்களை செதுக்குவது நல்லது.

heritage said...

அந்தக் கடைக்குப் போகும்பொழுதே, அந்த எண்ணத்தை நீங்கள் அவர்களுக்கு ( உங்கள் குழந்தைக்குச் சொல்லல்லாம்), காந்திபடத்தை அவர் (உங்கள் பெண்) எப்பொழுது பார்த்தாரோ அப்பொழுதே அவரைப் (காந்தியைப்) பற்றிச் (அதுவும் உங்களது பார்வையில் அப்படி என்று மட்டூம் சொல்லி, கருத்தளவில்கூட திணிக்காமல்) சொல்லலாம். ஆனால் ஒரு போட்டி என்று வந்தவுடன், குழுவாக இயங்குதல் ( தாயோ அல்லது தந்தையோ) , அந்தக் குழந்தையின் நாட்பட்ட வளர்சியின் தடைக்கல் என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில், தற்பொழுது உங்களின் கையில் அவர் உலகம் இருப்பதால் நீங்கள் உங்களது உதவியைச் செய்கிறிர்கள். ஆனால் காலத்துக்கும், ஒவ்வொரு இடத்திலும் இதுபோல் செய்யமுடியாது/சாத்ட்தியமும் இல்லை. எனவே நீங்கள் ஒரு குறிப்பிட்ட செயலை/பொருளை/மனிதனை/காரியத்தை/அறிவியலை எவ்வாறு பார்க்கிறிர்கள் என்பதனை மகளுக்குச் சொல்லித் தந்தால் அதுவே அவருக்கு நல்லது (அவருக்கு மிகப் பெரிய உதவி) என்றுபடுகிறது. பசியில் இருப்பவனுக்கு மீனோ/ரொட்டித் துண்டோ கொடுப்பதைக் காட்டிலும், மீஇன் பிடிக்க சொல்லிக் கொடுப்பது எவ்வளவு உயர்ந்ததோ அதேபோல்தான் இந்த போட்டியீல் வெற்றிபெறுதல்//வாழ்க்கையைப் புரிந்துகோள்ளுதலும்.


எனவே மீனை/ரொட்டித்துண்டைக் கொடுப்பதிலும், மீன் பிடிக்கக்கற்றுக் கொடுங்கள் எனச் சொல்கிறேன்.



சாரா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி ஒப்பாரி...\\இது அவர்களுடைய வயதை பொருத்தது. குறிப்பிட்ட வயது வரை அவர்களை செதுக்குவது நல்லது. //

இப்படி நினைத்துத்தான் செய்தேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்கள் கருத்துக்கு நன்றி சாரா. யாராவது சொன்னால் அது தான் சரி என்ற மனமாற்றம் முதலில் வந்தாலும் யோசித்தால் என் செயலுக்கு காரணம் வேறு மாதிரி தோன்றியதை உணர்வேன். பார்வைகள் பலவிதம். ஏழு வயது வரை தலைப்பு கொடுக்கப்படாத போது அவளைத்
தனித்துக் காட்ட பழக்கிவருகிறேன்.
அதற்கு அப்பால் தலைப்பு அவர்களே
கொடுக்கும் போது படித்ததை பொருத்தி
வித்தியாசம் காட்ட இது அடிப்படைக்கல்வி என்ற எண்ணத்தில்
செய்து வருகிறேன்.

மீன் பிடிக்கத்தான் கற்றுத்தருகிறேன். கூட்டமாய் எல்லாரும் மீன் பிடிக்கிறார்கள். உன் வலையில் மீன் மாட்டுவதற்கு எந்த உணவை தூண்டிலில் வைக்கனும்..ஆழப்பகுதிக்கு போ அலை இருக்கும் பகுதியில் கிடைக்காது
இப்படி அனுபவத்தை சொல்லிக்கொடுக்கிறேன்.இப்படித்தான் நான் நினைக்கிறேன்.

பொன்ஸ்~~Poorna said...

பின்னூட்டம் போட முடியுதே! ஏதோ ஜாவாஸ்கிரிப்ட் எர்ரர் வருது எனக்கு... அது எங்க அலுவலகக் கோளாறுன்னு நினைச்சேன்..எல்லார் பதிவிலும் வருது இன்னிக்கு :(

நாகை சிவா said...

Great peoples dont do the different things
But they do the things in different way.

நாகை சிவா said...

உங்களுக்கு ஒரு வேலை கொடுத்து இருக்கேன்....

நம்ம பக்கம் வந்து ஒரு பார்வை பாத்துட்டு போங்க....

http://tsivaram.blogspot.com/2007/03/blog-post_21.html

முத்துலெட்சுமி/muthuletchumi said...

they do the things in different way. சரிதாங்க நாகை சிவா அப்படி க்ரேட் ஆக்கனும்ன்னு பார்க்கறேன் என் பொண்ண .

ஏங்க இந்த வேலைக்கொடுத்ததுக்கு
நன்றி சொல்றதா இல்ல ...
என்னபண்ண :0

கோபிநாத் said...

இந்த பதிவை படிச்சதற்கு பிறகு சிவா சரியான ஆளுக்கு தான் வேலை கொடுத்துயிருக்காருன்னு தோணுது ;-)))

ஃபேஷன் டிசைனிங், விளம்பரத்துறைன்னு வித்தியாசமான பல துறைகளில் இருந்துயிருக்கிங்க. அதில் கிடைத்த அனுபவங்கள், எப்படி அந்த மாதிரி துறையில் நுழைய வேண்டும் என்பதை பற்றி எல்லாம் பதிவாக போடலாமே. வித்தியாசமாக படிக்க வேண்டும் என்று நினைக்கும் பல நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க கோபி நாத்.பேஷன் படிக்கவேல்லங்க சரியா பாருங்க பதிவ. விளம்பரத்துறை பத்தி
படிச்சேன் ஆனா வேலைக்கு போகலயே. அப்புறம் எப்படி அதப்பத்தி இப்ப எழுத.
அது ரெண்டும் படிக்கனும்ன்னு ஆசை வந்ததும் என்னல்லாம் செஞ்சேன்னு வேணா எழுதலாம் அப்புறம் எழுதறேன்.

Arun's Thoughts said...

எதையும் வித்யாசமாய் செய்யனும் என்று நினைத்தாலே நம்முடைய சிந்தனைத் திரண் வளரும். உங்கள் பெண்ணிற்கும் இதே திறமை உள்ளதா என்று பாருங்கள். இருந்தால் அந்தத் திறமையை வளர்த்து விடுங்கள்.

அன்புத்தோழி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இல்லாவிட்டாலும் அந்த திறமை
வரவேண்டும் என்பதால் தான்
முயற்சிகளை செய்தேன்
அன்புத்தோழி.நன்றி.
இப்போது அவளும் புதிது
புதிதாய் யோசிக்கிறாள் .

Jazeela said...

நீங்களும் நம்பல மாதிரிதானா? ஓவியப் போட்டிகளில் எனக்கும் ரொம்ப ஆர்வம். பள்ளிக்கூடத்தில் எதுக்கு பரிசு வாங்குகிறேனோ இல்லையோ ஓவியப் போட்டிகளில் வாங்கிவிடுவேன். நானும் காத்திருக்கிறேன் என் மகள் பள்ளிக்குப் போக ஆரம்பிக்க, போட்டிகளில் கலந்துக் கொள்ள, அவளுக்கு நான் உதவ...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜெஸிலா நான் படித்தப் பள்ளியில் போட்டிகள் என்பது மிகக்
குறைவு..ஓவியப்போட்டிகளில் நான் கலந்து கொண்டதுமில்லை.
என் திறமையை நான் வெகு தாமதமாகவே புரிந்து கொண்டிருக்கிறேன்.