October 24, 2011

தமிழ்மீடியாவில் பதிவு அறிமுகங்கள் -1

சிலவருடங்களுக்கு முன்பு 4தமிழ்மீடியா தளம் உருவாகியபோது அங்கே வாரம் ஒரு வலைப்பூ என்ற ஒரு பகுதியைத் தொடங்கபோவதாகவும் அதற்கு சில அறிமுகங்களைத் தரவேண்டும் என்றும் அதன் நிர்வாகத்திலிருந்து நண்பவரொருவர் கேட்டிருந்தார். வலைச்சரத்தில் பொறுப்பாசிரியராக இருந்து சில நல்ல அறிமுகங்களைக் கொடுத்துக்கொண்டிருந்ததை நினைவில் கொண்டு அப்பொறுப்பை அவர் கொடுத்திருக்கலாம். அவருக்கு நன்றி. முக்கியமாக நான் அதனை ஒத்துக்கொண்டதற்கு காரணம் அப்போது தமிழ்மணத்தில் வந்துவிழும் அத்தனை பதிவுகளையும் வாசித்துத் தள்ளிக்கொண்டிருந்தேன்.

அந்த அறிமுகங்களை ஒரு சேமிப்பிற்காக இங்கே சிறுமுயற்சியில் பதிந்து வைக்கிறேன். இதில் வெளிவந்திருக்கும் பதிவுகளில் சில என் நண்பர்களுடையதாக இருந்தாலும் கூட அந்த நண்பர்களுக்கே அது வெளிவந்த போது நான்தான் அறிமுகம் எழுதி இருந்தேனென்று தெரியாது. இப்பொழுது கூறுவதால் ஏன் எழுதினாய் என்றோ? மற்றவர்களை குறிப்பிடவில்லையென்றெல்லாமும் யாரும் தவறாக நினைக்கப்போவதில்லை என்று ஒரு நம்பிக்கை . முதல் பத்து பதிவுகளைஇங்கே காணலாம்.

1. குழந்தை வளர்ப்புக் குறித்த வலைப்பூ

இணையஉலகில் ஆங்கிலத்தில் குழந்தைவளர்ப்பு பற்றிய குறிப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.. தமிழில் அதன் அவசியத்தை உணர்ந்து சில பெற்றோர்களின் இணைந்த முயற்சியில் இந்த வலைப்பதிவு நடத்தப்படுகிறது. குழந்தைகளிடம் நம் அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும்? மற்றும் குழந்தை வளர்ப்பில் நேர்கிற தவறுகளை சுட்டிக்காட்டி அதற்கான தீர்வுகளும் வழங்குகிறார்கள். மேலும் குழந்தைகளுக்கான உணவுகள் , கல்வி பற்றிய விசயங்களும் காணலாம்.ஒரு சிறுகுழந்தையைப் போலவே மலர்ந்து (வளர்ந்து) வரும் இந்த பதிவின் வெற்றிக்கு வாழ்த்துகள். "பேரன்ட்ஸ் கிளப்" எனும் இவ் வலைப்பூவினைக் காண

2. மென்பொருள் முகவரி தரும் தமிழ்நெஞ்சம்

இவர் இன்னது தான் எழுதுவார் என்று நம்மால் வரையறுக்க இயலாது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் இணையத்தில் கிடைக்கின்ற மென்பொருளுக்கு அறிமுகம் தந்து வருகிறார்.எங்கிருந்து நீங்கள் தரவிறக்கம் செய்யலாம் என்பவற்றையும் கூறுவதோடு அவற்றினை ஓரிடத்தில் தொகுத்தும் அளிக்கிறார். ஆடியோ வீடியோ எடிட்டிங்க் மென்பொருள்கள் ,ரீசைக்கிள் பின்னை காலி செய்த பின்னும் கோப்புக்களை பெறுவது எப்படி? இவை சில உதாரணங்கள்.தமிழ் 2000 வலைப்பதிவுக்கு சென்று பாருங்கள். சலனப்பட வரிசைகள் அதிகம் இடம்பெற்று இருக்கின்றதென்றாலும் அவைகளிலும் எப்படி ? எப்படி? வகை சார்த்தவைகள் இருக்கின்றன. பயனுள்ள பதிவு.

3. தமிழில் புகைப்படக் கலை
தமிழ் வலைப்பதிவுகளிலேயே மிகவும் அதிக வரவேற்பைப் பெற்றவற்றில் இந்த கூட்டுவலைப்பதிவுத்தளம் முக்கியமான ஒன்றாகும். புகைப்படக்கலையில் ஆர்வமிகுந்தவர்கள், அக்கலையின் நுணுக்கங்களை தாங்களாகவே கற்றுக்கொண்டு வருபவர்களின் முயற்சி. எனினும் மற்றவர்களையும் போட்டிகளின் மூலம் கவர்ந்துவருகிறார்கள். மாதாமாதம் நடத்தும் போட்டிகளில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை கூடிவருவது தளத்தின் வெற்றி. இந்த போட்டியில் பங்கேற்பதற்காகவே சிலர் பதிவுகளை தொடங்கியது சுவாரசியம்.

முதலில் எளிதான நிறங்கள், இயற்கை என்ற தலைப்புகளில் வந்த போட்டி பின் இரவுஒளியில் எடுக்கப்பட்ட புகைப்படம், பிரதிபலிப்புகள் போன்ற போட்டியாளர்களுக்கு சவாலான தலைப்புகளை நோக்கி முன்னேறி வந்திருக்கிறது. வெற்றிபெற்றவர்களின் குறை நிறைகளை அலசி ஆராய்ந்து கூறுகிற நடுவர்கள், அந்த போட்டிகளின் மூலமாகவே, நுட்பங்களை கற்றுத்தந்து வருகிறார்கள்.போட்டிகள் தவிர்த்து படம் செய்யவிரும்பு தொடர் மூலமாக ஃபோகல் லென்த் , ஒயிட் பேலன்ஸ் ,ஷட்டர் ஸ்பீடு போன்றவைகளை விளக்கமாக அறிந்து கொள்ளமுடிகிறது.


மிகச்சிறிய அளவிலான பொருள்களை படமெடுப்பது எப்படி? லென்ஸுகளை மாற்றி உபயோகிப்பது மூலம் அவற்றை துல்லியமாக காட்டுதிறன் அதிகரிக்கிறது மேலும் பிற்தயாரிப்பு என்கிற வகைகளில் எடுக்கப்பட்ட படங்களை மேலும் மெருகேற்றும் தொழில்நுட்பங்களை எளிமையாக தருகிறார்கள்.நீங்கள் எந்த வகையான புகைப்படக்கருவி வாங்கலாம் என்பதற்கான ஆலோசனைகளும் கிடைக்கின்றது.
மொத்தத்தில் ஒரு குழுவாக இணைந்து இயங்கும் இவர்கள், பதிவில் எழுதுபவர்கள் மட்டுமில்லாமல் வாசிப்பவர்களும் பங்களிப்பவர்களுமாக மிகப்பெரிய குழுவாக முன்னேறிவருகிறார்கள். தமிழில் புகைப்படக்கலை வலைப்பதிவுலகில் ஒரு ஆரோக்கியமான முயற்சி



4. இணையத்தில் ஒரு இயற்கை போராளி

இயற்கையின் கணக்கு தெரியுமா?. மண் + மரம் = மழை , சோலைவனம் . மண் - மரம் = - மழை , பாலைவனம். மழை - மரம் = வெள்ளம் , மண் அரிப்பு. ''இயற்கை நமக்கு கற்பதற்கு நிறைய தருகிறது. நாம் கற்க மறுக்கிறோம். விளைவுகளை நாம் தினமும் செய்தியாக படிக்கிறோம், பார்க்கிறோம். காலம் தாழ்த்தாமல் கற்க ஆரம்பிப்போம்.'' என்றபடி இங்கே இணையத்தில் ஒரு இயற்கை போராளியாக உருவெடுத்திருப்பவர் பதிவர் வின்சென்ட்.
இயற்கைக்கு எதிரான பாலிதீன்களிடமிருந்து மீண்டுவர அழைக்கிறார். பசுமைப்புரட்சியால் இழந்தோம்! இயற்கை விவசாயத்தால் உயர்வோம்! என்கிற இவரின் பதிவுகள் அனைத்திலும் நாளைய உலகின் இயற்கை சூழலுக்கான நல்லெண்ணத்தை காணமுடிகிறது. மரம் வளர்க்க வங்கிகளின் கடனுதவிகள், வேளாண்மை தொடர்பான பயிலரங்க அறிவுப்புகள் போன்ற தகவல்கள் தருகிறார் .

வெட்டிவேரின் சிறப்புகள் பற்றிய அவரின் பதிவுகளில் களை என்று ஒதுக்கும் வெட்டிவேரின் இயற்கை பாதுகாப்பு திறமையையும் கைத்தொழில் பயன்களையும் எடுத்துரைக்கிறார். ஜப்பானிய இயற்கை ஞானி மாசானபு புகோகா ,கேரள அலையாத்தி காடுகளின் பொக்கூடன், நோபல்பரிசு பெற்ற ஆப்பிரிக்க வங்கேரீ மாத்தாய் ,பிஷ்னாயி இன மக்களின் மரங்களின் மீதான அன்பு, grow bag என காணக்கிடைக்கும் ஒவ்வொரு பதிவும் இயற்கையோடு இசைந்த வாழ்வுக்கான படிப்பினைகளை தருகிறது.

மண் மரம் மழை மனிதன் இணையத்தில் ஒரு இயற்கை போராளியின் முயற்சி.. முயற்சிக்கு தோள்கொடுப்போம்.

5. புது வண்டு எனும் கதை சொல்லி

வலைப்பூவினில் தேன்குடித்து இளைப்பாற வந்த சிலநாட்களில் புதுமுயற்சி ஒன்றைத் தொடங்கி இருக்கும் புதுவண்டு இவர். அனைவரையும் போல வாழ்வில் தான் சந்திக்கின்ற நிகழ்வுகளையும், கருத்துக்களையும் ,மலரும் நினைவுகளையும் பதியத்தொடங்கினார். குழந்தையின் முதல் ஆசிரியை , தாய் என்பது அறிவோம். இன்றைய குழந்தைகளுக்கு அறிவுரைகளை வழங்குவது எளிதான காரியம் இல்லை. இதற்காக ஒரு கதைசொல்லியாக உருவெடுத்திருக்கிறார் புதுவண்டு. வண்டு சிண்டு என்ற இரு பொம்மைகளின் புகைப்படங்களை கொண்டு காட்சி அமைப்பும் பிண்ணனியில் குரல் கொடுத்தும் இயக்கி இருக்கிறார். காட்சிகளின் எளிமை, கனிவான குரல் என்று குழந்தைகளை கவர்வதாக இருக்கின்றது.
அதிகம் இனிப்பு சாப்பிடுவதால் என்ன ஆகும்? வண்டுவுக்கு வந்தது போல வயிற்றுவலி வரும். ஆனால் அவர் மகனின் வருத்தம் உணர்ந்து தாயாக கதையின் முடிவை மாற்றி மறுநாள் சரியாகும்படியா மாற்றிவிட்டார். கதையின் தாக்கம் அவர் குழந்தையிடம் என்ன என்பதையும் சிறு பின்குறிப்பாகத் தருகிறார்.

தமிழில் சிறுவர் இலக்கியங்களுக்கான படைப்பாளிகள் மிகவும் அரிதாகவேயுள்ளார்கள். தமிழகத்தில் அழ.வள்ளியப்பா போன்ற குழந்தைகளுக்கான எழுத்தாளர் தொடர்ந்து உருவாகதது, எங்கள் பிள்ளைககளின் துர்ப்பாக்கியமே. இலங்கை வானொலியில் மாஸ்டர் சிவலிங்கம் என்றொரு கலைஞர் இருந்தார். சிறுவர்களுக்கான கதைசொல்லும் அற்புதமான கலைஞன் அதன்பின் அந்த இடம் இற்றை வரைக்கும் நிரப்பப்படவில்லை. அந்த இடங்களின் வெற்றிடங்களை, எங்கள் வீட்டுக் கூடத்துக்கு வந்த தொலைக்காட்சிகள் ஆக்கிரமித்துக்கொள்ள, எங்கள் பிள்ளைகள் அது சொல்லும் "எவா..அவா.." வார்த்தைகளில் பரிச்சயமாகின்றார்கள். இந்த நிலை மாற்றமுற, இத்தகைய புதுவண்டுகளின் வரவு மிக அவசியமானது. அவரின் இப்புதுமுயற்சிக்கு வாழ்த்துக்கள்.

வாருங்கள் வண்டின் கதை கேட்க


6.இசைக்கு மயங்காதோர் யார்?
இவ்வார வலைப்பதிவின் தாரக மந்திரம் ரசிக்கத்துவங்கிவிட்டால் , ருசிக்கத்துவங்கிவிடலாம் வாருங்கள் இசையின் நுணுக்கங்கள் அறிவோம் . கர்நாடக இசை , திரையிசை , திரையிசையில் கர்நாடக இசை மேலும் இளைஞர்களுக்கு ஜாஸ் ப்ரைய்ன் ஆடம்ஸ் என ஃப்யூசன் கூட்டுப்பதிவு. திரையிசையில் காப்பியடிக்கப்படும் பாடல்களை சொல்லும் சினிமா காரம் காப்பி.வீணையில் ருத்ரவீணை ,சரஸ்வதி வீணை , கொன்னக்கோல், சாரங்கி , புல்லாங்குழல் , வயலின் போன்ற ஒவ்வொரு வாத்தியங்களைப் பற்றிய குறிப்புகள்.அவை பயன்படுத்தப்பட்டு அழகூட்டப்பட்ட பாடல்கள்.

இசையைக்கேட்டுக்கொண்டிருக்கையில் அதன் பிண்ணனியில் நிகழ்ந்த தகவல்களையும் பரிமாறுகிறார்கள். கீர்த்தனைகள் புனையப்பெற்ற காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளையும் கதைகளாக அறிகிறோம். ராக சாயல்களை கண்டுபிடிப்பதுவே ஷெர்லாக் ஹோமெஸ் க்தை மாதிரி ஒரு அலாதி இன்பமான விஷயம் . கண்டுபிடித்ததை பின் கேட்பதுவும் ஆனந்தம் அல்லவா? இசையில் ஆர்வம் மிகுந்தோருக்கு இனிய கலந்துரையாடலைப்போன்றதொரு இசைக்கல்வி . செவிக்கின்பம் , இதயத்திற்கின்பம் தரும் இசையின்பம் குழுவினருக்கு வாழ்த்துகள். வாருங்கள் இசை இன்பம் இரசிப்போம்



7. வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்
/வடிவேலுவின் திரைப்படத்தில் வரும் "வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்" என்பதே இதன் விரிவு. யாருடைய மனமும் நோகாமல் தன்னைமட்டுமே வருத்திக்கொண்டு மற்றவர்களை சிரிக்க செய்யும் வடிவேலுவின் பாணியே இவர்களின் பாணியும். யார் மனதையும் புண்படுத்தாமல் நகைச்சுவை இழையோட வரும் பதிவுகள், மாதம் ஒரு பதிவரை அட்லஸ் வாலிபராக்கி அவருடைய நகைச்சுவை ரசனையை அனைவருக்கும் வெளிப்படுத்துவது என்பவை சிறப்பு. வ.வா.சங்கக் கூட்டுப்பதிவு நகைச்சுவைக்கெனவே ஆரம்பிக்கப்பட்டது.

வெற்றிக்கரமான இரண்டாம் ஆண்டுவிழாவினைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு போட்டி , ப்ரம்ம ரசம் போட்டி போன்று அவ்வப்போது நடக்கும் போட்டிகளெல்லாம் வாசகர்களின் நகைச்சுவை ரசனையை ஊக்கப்படுத்துகிறது. வ.வா.சங்கத்தில் இருக்கும் சிங்கங்களில் கைப்புள்ளையையோ இல்ல அங்கே அப்பரண்டிசா இருக்கறவங்களையோ அவர்களே கலாய்த்துப் (கிண்டலடித்து) போடப்படும் பதிவுகள் நிஜ கைப்புள்ளை வடிவேலுவையே கவர்ந்த விசயங்களாகும்.உங்களுக்காக இரண்டு உதாரணச்சிரிப்பு வெடிகள்.

1.அண்ணே, அண்ணே உங்களுக்கு மூத்திர சந்தில் இருந்து போன் வந்திருக்கு
கைப்புள்ள : கட்டதுரை கட்ட்ட்ட்ட்ட்ட துரை பார்த்தியா என் ரேஞ்ச...நான் ஒன்னும் வேலை வெட்டி இல்லாதவன் இல்லை, அங்கங்கே அப்பாய்ன்மெண்ட் கொடுத்து...அடிவாங்க போன் போட்டு கூப்பிட்டு கொடுக்கிறானுங்க, நான் அவ்வளவு பிசி.... உன்னிய மதிச்சி 2 அரைவாங்கினது நான் உனக்கு கொடுத்த மரியாதை...காப்பாத்திக்க...

2.ஆமாங்க கடைசி ஓவர்ல்ல ஆறு பாலுக்கு முப்பது ரன் இருந்துச்சு... அப்போ எங்க கோச் வந்து காட்டுக் கத்தலா அடிச்சு ஆடுறா கொய்யா.... அடிச்சு ஆடுறா கொய்யா.....அப்படின்னு உசுப்பு ஏத்துனார்"
"சுத்திப் பாத்தேன்... நான் அடிக்கிற அளவுக்கு யாரும் பக்கத்துல்ல இல்ல... எதிரி டீம்ல்ல எல்லாருமே வாட்டச் சாட்டமா இருந்தாங்க.. யோசிச்சேன்... யார் அடிச்சாலும் சும்மா அசால்ட்டா தாங்குற ஒரே மனதைரியம் கொண்ட ஒப்பற்ற மனுசன்.. எங்கத் தல தான் அதான் வேகமா ஓடிப் போய் பெவிலியன்ல்ல குறட்டை விட்டு தூங்கிட்டு இருந்த எங்கத் தல கன்னத்துல்ல பளேர்ன்னு ஒரு அரை விட்டுட்டு வந்து ஆடுனேன்... நாங்க செயிச்சுட்டோம்.. ஆனா எங்கத் தல கண்ணீர் விட்டு அழுததை டிவியிலே திரும்ப திரும்ப பாக்கும் போது தான் மனச் சங்கடமாப் போயிச்சுங்க".சங்கத்தச் சிங்கங்களைச் சந்திக்கலாம் வாங்க..



8.கேன்சருடன் ஒரு யுத்தம்
மார்பகப்புற்றுநோயால் அவதிப்பட்டு கொண்டு நோயின் துன்பத்தை, தீவிரத்தை, காரணங்களை வலையுலகில் பகிர்ந்து கொண்டு வந்த பதிவர் அனுராதா ஆகஸ்ட் 28, 2008 அன்று நோயின் துயரிலிருந்து விடுபட்டார். அவர்களுக்கு எங்கள் அஞ்சலி.அனுராதாவிற்கு புற்றுநோய் வந்தபோதினில் அவருக்கோ அவருடைய துணைக்கோ நோயைப்பற்றிய எந்த ஒன்றும் தெரிந்திருக்கவில்லை.
2003 ஆம் ஆண்டிலிருந்து நோயின் தீவிரத்தினால் பலவாறும் துன்பங்களை எதிர்த்துப்போராடியதோடு இணையத்தில் அவற்றை தொடர்ந்து குறிப்புக்களாக எழுதி சேகரித்தும் வந்தார். அவருக்கு மார்பகத்தை அகற்ற விருப்பமில்லாததால் மாற்று முறைகளை தேர்ந்தெடுத்து சிகிச்சை பெற்று வந்தார். இடையில் மார்பகப்புற்றுநோய் கல்லீரலுக்கும் பரவியது, சர்க்கரை நோய் இணைந்து கொண்டது.

மருத்துவமனை மருத்துவனையாக வெவ்வேறு மருத்துவர்களை கலந்தாலோசித்து நோயின் ஒவ்வொரு மூலத்தையும் அலசி ஆராய்ந்து கொண்டிருந்த அனுராதா ,மார்பகத்தை அகற்றாமல் 5 வருடங்கள் போரடிய நிலையில் , மற்றவர்கள் கருத்து பற்றிய கவலையின்றி மார்பகத்தை அகற்றிவிட்டு போராடி இருந்தால் மேலும் பலநாட்கள் நம்முடன் இருந்திருக்கலாமோ என்ற ஒரு கலக்கம் சிலர் மனதில் தோன்றுகின்ற கருத்தாக இருக்கின்றது.

கேன்சருடன் ஒரு யுத்தம் பதிவில் அனுராதா எழுதி இருக்கின்ற சிகிச்சைகளின் விளக்கங்கள் நம்மை கதிகலங்க வைப்பதாகவும் அவற்றின் பின்விளைவுகள் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கின்றன. ப்ளாஸ்டிக் பொருட்கள் மூலமாகவும் சிடி ஸ்கேன் மூலமாகவும் புற்று பரவுவதை குறிப்பிட்டார். மூளைக்கும் புற்று பரவிய பிறகு அவர் சொல்லச்சொல்ல அவருடைய கணவர் குறிப்புக்களை வலையில் பதிவிடும்படி செய்தார். மே மாதத்தில் அவர் விதியை வெல்லும் நிலைக்கு வந்துவிட்டதாக பதிவிட்டிருந்தார் .. ஆனால் விதியை யாரால் முன்கூட்டி அறிய இயலும்? அனுராதாவின் குறிப்புக்களை புத்தகமாக்கும் ஆசையை நிறைவேற்ற அவரின் கணவர் மற்றும் வலைப்பதிவர் நண்பர்கள் இணைந்து செயல்பட இருக்கிறார்கள்
http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-20-00-21-36/2009-05-01-01-50-40/2125----2

9. சமையலுக்கு என்ன தேவை?

சமையல் குறிப்பு - தேவையான பொருட்கள் - ஒரு ஸ்பூன் இனிய அன்பான மனம், ஒரு ஸ்பூன் ரசிப்பு தன்மை, ஒரு ஸ்பூன் கோப தாபமில்லா அமைதியான மனம். என்ன இது! என்று பார்க்கிறீர்களா? இது தான் முக்கியமான சமையல் குறிப்பு. சமையலுக்கென்ற கூட்டு வலைப்பதிவான சமையல் திரட்டியில் தான் இப்படிப்பட்ட முக்கியமான விசயங்களைத் தருகிறார்கள்.
சுண்டகீரை , பழங்கஞ்சியும் உண்டு. திருநெல்வேலி சிறப்பு சொதியும் உண்டு. ஈழத்து வாழக்காய் சம்பலும் உண்டு. சுண்டைக்காய் கொழம்பு மண்பாண்டத்தில் செய்வது எப்படி? புளியோதரை தெரியும் தக்காளியோதரை தெரியுமா? இறால் வஞ்சிரம் என்னவகையானாலும் சுவைகூட்ட குறிப்பிருக்கிறது. வாரத்திட்டம் என்கிற திட்டத்தின் கீழ் தயிர் ஐயிட்டங்கள், இனிப்பு ஐட்டங்கள், பதிவர்களின் மனதுக்கு பிடித்த ஐட்டங்கள்.

நீங்கள் தனிச்சமையலா? பிடியுங்கள் அவசர ரசம்.அதிலும் பலவகை ரசம்.இடியாப்ப பிரியாணி , தக்காளி சஞ்சிகை, கலர்புல் மிண்ட் ரைஸ் , வினிகர் கத்திரிக்காய். கேட்க கேட்க நாவூறுகிறதா?தமிழ் சமையல் வலைப்பூ திரட்டியை எட்டிப்பாருங்கள் , சமைத்துப்பாருங்கள்.

10.ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை

இவ்வாரத்திய பதிவு , விசய ஞானத்தைப்பகிர்வது மட்டுமின்றி சுள்ளென்ற கேள்விகளையும் பகிர்ந்து வைக்கும் பதிவு .மூகமூடியற்ற நிஜமுகத்தைக்காட்ட விரும்புபவராகவும் , தான் வாழ்நாளில் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் சிந்திக்கவைத்த சில கேள்விகளை ஏன் இப்படி? என்று கேட்டு நம் மனங்களையும் திடுக்கிட வைக்கிறார்.
சில வேளைகளில் நீங்களும் அந்த நிகழ்வுகளை வாழ்வில் சந்தித்திருக்க வாய்ப்புண்டு. அப்போது உங்கள் மனம் ஒரு பாதையிலும் வாழ்வின் சிக்கல்கள் உங்களை வேறு பாதையிலும் செலுத்தி இருக்கலாம்.

சாக்கடை மூடிகள் தயாரிப்பில் நம்மவர்களின் பாடுபற்றி அறிவீர்களா? ஆண்களுக்கும் அப்பாவாகும் போது மன அழுத்தம் வரும் என்பது உண்மையா? உணர்ந்திருக்கிறீர்களா? ஒருகாலத்தில் நாம் இயற்கையாக அனுபவித்த உணவுப்பொருட்களை இன்று ரசாயன உரங்களால் இழந்துவிட்டு அதிக காசுகொடுத்து ஆர்கானிக் காய்கறிகள் உண்பது ஏன்? உடல் உறுப்பு தானம் என்றால் பதறுவது ஏன்? முதுமை சாபக்கேடா? கருக்கலைப்பு சட்டம் இதுநியாயமா?

உலகில் பலபாகங்களில் இயற்கைக்கு மாறான நடைமுறைகளால் நிகழ்ந்த நிகழ்வுகளைக்கூறி இன்னமும் நாம் படிப்பினை பெறவில்லையே ஏன் இப்படி? என்று பல கேள்விக்குறிகளை சுற்றிலும் சுழலவிடுகிறார்.ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை. வாழ்வில் உண்மையை உணர கேள்விகள் கேட்க பழகுங்கள்.

12 comments:

pudugaithendral said...

ஹை பேரண்ட்ஸ் கிளப், தமிழ் சமையல் திரட்டி வந்திருக்கே. நன்றி கயல். வ.வா சங்கம், பா.பா சங்கம் என பலச் சங்கம் வைத்து தமிழ் வளர்த்திருக்கிறார்கள்.:)) அதெல்லாம் படிப்பதே ஒரு சுகம். நன்றி கயல்

'பரிவை' சே.குமார் said...

நல்ல முயற்சி... பதிவர் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்... தமிழ்மீடியாவின் முயற்சி பாராட்டுதலுக்குறியது. தொகுத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா.

கோபிநாத் said...

குட் ;-)

☀நான் ஆதவன்☀ said...

எல்லாம் சூப்பர் கலெக்சன்ஸ் :)

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விஷயம் சகோ..

தொடருங்கள்...

Asiya Omar said...

நல்ல முயற்சி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

நல்லதொரு முயற்சிதான்..

Chitra said...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

rajamelaiyur said...

நல்ல முயற்சி

sury siva said...

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.


சுப்பு தாத்தா
மீனாட்சி பாட்டி.

விச்சு said...

நல்லதொரு தொகுப்பு...நன்றி.

Unknown said...

அருமையான கலெக்ஷன். இவற்றைப்பார்க்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த உங்களுக்கு நன்றி