May 8, 2007

நமக்கு மட்டும் தெரிந்த ரகசியம்

காற்று மணலை அள்ளிக்குவித்துக் கொண்டிருந்தது. புல் கூட முளைக்காத அந்தத் திடலின் ஒரு பக்கத்து மதிலின் சுவரோரம் நீல மற்றும் மஞ்சள் பிளாஸ்டிக் ஷீட்களால் கட்டப்பட்டிருந்த கூடாரத்தின் நிலைமைபற்றிக் காற்றுக்கு என்ன கவலை? சுழட்டி சுழட்டி அடித்து ஷீட்களை அங்கும் இங்குமாக கட்டியிருந்த முடிச்சுகளை அவிழ்த்து விடும் வேகத்துடன் வீசிக்கொண்டிருந்தது.


இழுத்துக்கட்ட எத்தனையோ முயன்று கொண்டிருந்தான் , ராம்சிங் . இந்த மாதம் இப்படித்தான் இருக்கும் என்று தெரியும் (bina)பீனா வின் நிலைமையை நினைத்து வேலையை முன்பே முடித்துவிட எண்ணி இருந்தான். எங்கே உச்சியைப் பிளக்கும் வெயிலில் வேலை அத்தனை சீக்கிரம் முடிந்துவிடுமா என்ன?


திடலின் மறுபக்கத்தில் உடைந்திருந்த மதிலை புதுப்பிக்க நியமிக்கப்பட்டவர்களில் ஒருவன் அவன். கூடாரமிட்டு தங்கி , வேலை செய்யுமிடத்திலேயே தான் வாழ்க்கை..இங்கே வேலை முடிந்திருந்தால் மட்டும் என்ன பாதுகாப்பாய் குடியிருக்க என்ன வீடா இருக்கிறது? இருந்தாலும் நல்ல இடத்தில் ஒரு கூடாரம் போட்டிருக்கலாம். புல் தரையோடு மணல் எழும்பாத நிழல் இருப்பதான இடமாக.. இங்கேயோ மணற்காற்றில் இருந்து பீனாவைக் காப்பாற்றுவது பாடாய் இருந்தது அவனுக்கு.


காற்று அவிழ்க்க இவன் முடி போட இருவருக்குமான அந்த போராட்டத்தில் ஒரு கட்டத்தில் காற்று பின்வாங்கி தன் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. தோல்வியுற்ற காற்று அவமானத்தால் இப்போது அவனைப் பழிவாங்குவது போல் இருக்கும் ஓரிரண்டு மரங்களின் கிளைகளைக் கூட அசைக்க மனமில்லாமல் சலனமற்று ப் போனது. வேர்த்து வேதனைப்படட்டும் என்று நினைத்ததோ என்னவோ?


தன் இருப்பை உணர்த்த அவ்வப்போது பீனாவும் சிறு சிறு முனகல்களால்
முயற்சித்துக் கொண்டிருந்தாள். முந்தின வாரமே பத்து ரூபாய் மட்டுமே வாங்கும் மருத்துவரை தேடிக்கண்டுபிடித்து மருந்து சீட்டு எழுதி வாங்கியாயிற்று.ஆனால் மருந்து வாங்க 80 ரூபாய் சேர்க்கத்தான் ஒரு வாரம் ஆகிவிட்டது. அதிலும் ஒரு பத்து குறைகிறது. மூன்று வேளை உணவை ஒரு வேளையாக்கி தினமும் ரொட்டி தால் செய்ய ஆகும் செலவை விடுத்து 10 ரூபாய் சேர்த்து ஒருவாரத்தில் இத்தனை சேர்த்திருந்தான்.



சிறு தூறல் வந்து மணற்பரப்பை ஈரமாக்கியது . இனி காற்றடித்தாலும் கவலையில்லை . மண் இனி முன்போல பறக்காது என்ற நிம்மதி வந்தது அவனுக்கு. பணம் வந்தவுடன் பீனாவிடம் சொல்லிக்கொண்டு கடைக்குப் போய் மருந்து வாங்க வேண்டும் என்று நினைத்தபடி காத்திருந்தான் . ஒருவாரத்தில் மருந்து கொடுக்காவிட்டால் அவளை அதற்கு அப்புறமும் தன்னிடம் அழைத்து வர அவசியமில்லாமல் போகும் என்று அவளுடைய மோசமான நிலைமையை குறிப்பால் உணர்த்தி இருந்தார் மருத்துவர்.


காண்ட்ராக்டரின் ஆள் வந்து வழக்கத்தைவிட குறைவான வேலை தான் அன்று நடந்திருப்பதாகச் சொல்லி குறைத்தே குடுத்தான். சரி இன்று ஒருவேளை உணவும் கிடையாது. பழைய கோதுமையைக் கஞ்சி காய்ச்சி "தலியா" செய்துகொள்வோம் என்ற யோசனைகளுடன் மருந்துக்கடையில் சீட்டை
நீட்டினான். பணம் இருக்கா? கேள்வியோடே வாங்கினான் கடைக்காரன் . ஆமாம் இவன் உடையைப் பார்த்தால் அவன் அப்படி கேட்பது சரிதானே. அவனும் ஒரு தொழிலாளி . முதலாளியிடம் பதில் சொல்லக் கடமைப்பட்டவன் தானே.


எடுத்து வைத்த மருந்துகளில் ஒன்று கூட உண்மையான தரத்தில் செய்யப்பட்டது இல்லை யென்பதும் கடை முதலாளியின் சகோதரன் தனியாக
ஆரம்பித்திருக்கும் போலி கம்பெனியின் மருந்துகள் என்பதும் கொடுப்பவனுக்கும் தெரியாது வாங்குபவனுக்கும் தெரியாது. எனக்கும், இப்போது நான் சொன்னதால் உங்களுக்கும் மட்டும்தான் தெரியும்..இதை ராம்சிங்குக்கு யார் சொல்வது?

28 comments:

சென்ஷி said...

என்னங்க இப்படி சோகமாக்கிட்டீங்க
:(

சென்ஷி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இது இந்த பதிவுக்கான பின்னூட்டமா ?

அப்படியென்றால் அதற்கான ப்தில்

______

அபி அப்பா said...

6 மாதம் முன்பு எனக்கு தமிழ் டைப் செய்ய தெரியாது. ஆனாலும் சுத்தி சுத்தி பின்னூட்டம் போடுவேன். எப்படி தெரியுமா, கலக்கல்/நல்ல பதிவு/அருமையான பதிவு/எனக்கு இந்த கருத்து ஒத்து போகவில்லை/படிச்ச பின்ன எனக்கு மனசு பாரமாயிடுச்சு/இது அட்டெண்டென்ஸ்தான் படிச்சுட்டு வர்ரேன்/ நான் தான் பஸ்ட்/ ஹையா நான் தான் 100/

இப்படியாக பின்னூட்டம் எல்லாம் காபி செய்து தனியே பைல்ல வச்சிருப்பேன். அப்பப்ப எடுத்து விடுவேன் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி. ரொம்ப நாள் இது நீடிச்சுது. அதாவது மொழி ஜோ மாதிரி! கண்டேபிடிக்க முடியலை யாருக்கும்.சில சமயம் பெரிய பினூட்ட விவாத பதில்களை கூட காபி பேஸ்ட் செஞ்சு (சென்ஷி அதிலே கண்டிப்பா ரிபீட்டேன்னு போட்டிருப்பார்.) அதையும் காபி பேஸ்ட் பண்ணி போடுவேன்.

இந்த சமயத்துல கதிர் தம்பி என்கிட்ட பேசும் போது கண்டு புடிச்சுட்டார். பின்ன ஈ கலப்பை அது இது பதிவு அப்டீன்னு வளர்ந்தாச்சு!

இப்ப நான் ஏன் இதெல்லாம் சொல்கிறேன் என்றால்...இப்போ டைப் செய்ய தெரிஞ்சும், இந்த பதிவுக்க்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முதல் பதிவிலே ஒரு புள்ளி மட்டும் வச்சி ஒரு பின்னூட்டம் போட்டேன்.

அதுல என்ன ஜோக்குன்னா எனக்கு இப்போ ஒரு போன்"யோவ் ஒரு புள்ளியிலேயே அருமையான பதில் சொல்லிட்டய்யா"

என்னத்த சொல்ல?????:-)))))))

அபி அப்பா said...

அதுவும் தவிர இந்த சின்ன புள்ளய்ங்க எல்லாம்"நான் தான் பஸ்ட்"ன்னு நான் டைப் செஞ்சு போடும் முன்னமே :-) ன்னு போட்டு முந்திகறாங்க, அதான் நான் ஒரு புள்ளி போட்டேன், இது எப்படி? :-)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பதிவு போடற விஷயத்தை பின்னூட்டத்தில் போட்டுட்டீங்களே..
யார் அது போன் செஞ்சது..
புள்ளிக்கு என்ன அர்த்தம் எடுத்துக்கிட்டாங்க அந்த போன் செஞ்சவங்க ..இனி கதை எழுதாதேன்னு இல்லயே..
இல்ல ஒரு முற்றுப்புள்ளி கதையில் விழுதுன்னு சொல்லியா?
--------

சென்ஷி அதுக்கென்ன பண்ண உண்மை எப்போவும் இப்படித்தான் சோகம்..
உங்களுக்கு தெரியுமே..சினிமால தான் சுபம் எல்லாம்.

சென்ஷி said...

/சில சமயம் பெரிய பினூட்ட விவாத பதில்களை கூட காபி பேஸ்ட் செஞ்சு (சென்ஷி அதிலே கண்டிப்பா ரிபீட்டேன்னு போட்டிருப்பார்.) அதையும் காபி பேஸ்ட் பண்ணி போடுவேன்.//

அபி அப்பா..

இப்படியா மேட்டர ஒடைக்கறது.. :))

ரிப்பீட்டே இல்லாம நான் பின்னூட்டம் போடுறதா.. நெவர்..

பதிவ நாம பாராட்டுறா மாதிரி நல்ல பின்னூட்டத்தையும் நாம பாராட்டறது ரிப்பீட்டே மூலம்தான். இத சோம்பேறிதனம்னு நீங்க நெனச்சுக்க கூடாது. :)

//அதுல என்ன ஜோக்குன்னா எனக்கு இப்போ ஒரு போன்"யோவ் ஒரு புள்ளியிலேயே அருமையான பதில் சொல்லிட்டய்யா"

என்னத்த சொல்ல?????:-)))))))//

என்னத்த சொல்ல. நீங்க எது செஞ்சாலும் அத காமெடியா மாத்த ஒரு கும்பலே கரம்கட்டி அலையுது.
நானும் அதுல இருக்கேன்ல தம்பிஸ் & தங்கச்சீஸ் :))

சென்ஷி

அபி அப்பா said...

//என்னத்த சொல்ல. நீங்க எது செஞ்சாலும் அத காமெடியா மாத்த ஒரு கும்பலே கரம்கட்டி அலையுது.
நானும் அதுல இருக்கேன்ல தம்பிஸ் & தங்கச்சீஸ் :))

சென்ஷி //

ஆமாம்பா சென்ஷி!

நேத்திக்கு கோபிதம்பி போன் செஞ்சு "அடுத்து என்ன பதிவு அபிஅப்பா?"ன்னு கேக்க நான் அதுக்கு நான் உண்மையாவே சீரியஸ் பதிவு போட போகிறேன்ன்னு சொன்னேன். அதுக்கு கோபி"நல்ல தலைப்பு, சூப்பர் காமடியா எழுதுங்க"ன்னு சொல்றேன்ப்பா:-((

துளசி கோபால் said...

மனசைத் தொட்டுருச்சு(-:

அபி அப்பா said...

இப்போது நான் கதைக்கு வருகிறேன்.

எனக்கு சென்ஷிக்கு தோன்றிய அளவு சோகம் வரவில்லை. காரணம் ராம்சிங்கின் "நம்பிக்கை" மற்றும் அவன் "காதல்". அதாவது டாக்டர் பீஸ் 10 ரூபாய், மருந்து செலவு 80 ரூபாய். அந்த 80 ரூபா சேர்க்க அவன் தினமும் இழப்பது 2 வேளை உணவு. அதுவும் குறிப்பாக இன்று இன்னும் குறைவாக கிடைத்ததால் ரொட்டி பருப்பு போய் கோதுமை கஞ்சியாகிவிட்டது.

அந்த நிலமையிலும் அவன்"இது என்னடா வாழ்க்கை, அவ போனா போகட்டும்" என்று விட்டு விடாமல் மனைவி மீது வைத்துள்ள காதல் சிம்ப்ளி சூப்பர்.அந்த "காதல்" அவளை கண்டிப்பாக காப்பாற்றும்-மருந்து போலியாக இருந்தால் கூட.

அடுத்து அவன் நம்பிக்கை. அதாவது 80 ரூபாயில் மருந்து வாங்கி கொடுத்தால் மனைவி பிழைப்பாள் என கூறிய டாக்டரின் வார்த்தை மேல் இருந்த நம்பிக்கை. அதற்காக பட்டினி கிடந்து குருவி மாதிரி சேர்த்த பணத்தை மருந்து கடையில் கொடுக்கும் போது அவன் தன் மணைவியின் உயிரை காப்பற்ற தேவ அமுதம் வாங்குவதாகவே உணர்வான்.

அந்த மருந்தை அவளுக்கு ஊட்டும் போது அவன் காதல்+அவன் அந்த மருந்தின் மீது வைக்கும் நம்பிக்கை இரண்டின் வலிவும் சேர்ந்து மருந்தின் நச்சுதன்மையை நீர்க்க வைத்துவிடும் என்பதே என் நம்பிக்கை.என் நம்பிக்கை பொய்க்காது அவள் மீண்டு வந்து ராம்சிங் கூட குடித்தனம் நடத்துவாள்.

நல்ல கதை. தொடர்ந்து எழுதவும்! வாழ்த்துக்கள்!!

பாரதி தம்பி said...

ராம்சிங்குக்கு நானோ, நீங்களோ சொல்லலாம். ரபீர்சிங்குக்கும், ரண்வீர்சிங்குக்கும் யார் சொல்வது..? ராம்சிங்காவது பரவாயில்லை. தான் அறியாமல்தான் ஏமாறுகிறார். ஆனால், இங்கு போலிகளை நேருக்கு நேர்் கண்டே ஒன்றும் செய்ய இயலாமல், கையாலாகத்தனமாக ஏமாற வேண்டியிருக்கிறதே..

(அனேகமாக இது ஒன்றுதான் பதிவுக்கு தொடர்புடைய பின்னூட்டமாக இருக்கும் என்று நினைக்கிறேன்)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

துளசி நல்லாருக்கா ரொம்ப சந்தோஷம் இது எழுதத் தூண்டிய காட்சியை
இணைக்க எண்ணினேன்...அத்தனை
தொழில்நுட்ப அறிவு பத்தவில்லை.பின்பு எப்போதாவது இங்கே லின்க்க் குடுக்கிறேன்.

______

அபி அப்பா ஆகா என்னமா கதையை அலசி ஆராய்ந்திருக்கீங்க..சும்மா சொல்லக்கூடாது உங்க உரை ரொம்பவே செண்டி.டச்சிங்கா இருக்கு..
உங்கள் நம்ப்பிக்கை பலிக்கட்டும்.இது போன்ற நிஜ பீனாக்கள் அவர்களின் குடும்ப அன்பு காரணமாகவாவது பிழைக்கட்டும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆழியூரான் மூண்று கதை சம்பந்தமான பின்னூட்டம் வந்துவிட்டது சந்தோஷமா இப்போது?

ரொம்ப நன்றி உங்கள் மறுமொழிக்கு.

நல்லவர்கள் ,பார்ப்பவர்கள் எல்லாரையும் நல்லவர்களாக நினைத்துவிடுவதால் போலிகளை அடையாளம் காணமுடிவதில்லை...(இது பதிவுக்கு சம்பந்தமில்லாத என் பதில்)

கோபிநாத் said...

வணக்கம் அக்கா (ரொம்ப நாள் ஆச்சு)

அருமையாக எழுதியிருக்கிங்க, ஒரு உண்மை செய்தியை அழமான வரிகளில் நல்லா எழுதியிருக்கிங்க்கா.

கோபிநாத் said...

\\ென்ஷி said...
/சில சமயம் பெரிய பினூட்ட விவாத பதில்களை கூட காபி பேஸ்ட் செஞ்சு (சென்ஷி அதிலே கண்டிப்பா ரிபீட்டேன்னு போட்டிருப்பார்.) அதையும் காபி பேஸ்ட் பண்ணி போடுவேன்.//

அபி அப்பா..

இப்படியா மேட்டர ஒடைக்கறது.. :))

ரிப்பீட்டே இல்லாம நான் பின்னூட்டம் போடுறதா.. நெவர்..

பதிவ நாம பாராட்டுறா மாதிரி நல்ல பின்னூட்டத்தையும் நாம பாராட்டறது ரிப்பீட்டே மூலம்தான். இத சோம்பேறிதனம்னு நீங்க நெனச்சுக்க கூடாது. :)\\

என் இனம்டா...நீ ;-)))

சென்ஷி said...

//சென்ஷி said...
என்னங்க இப்படி சோகமாக்கிட்டீங்க
:(

சென்ஷி//

அப்போ இத என்ன சும்மா விளையாட்டுக்கு போட்டிருக்கேன்னு நினைச்சுட்டீங்களா ஆழியூரான் :(

இல்ல சென்ஷி எப்பவும் பின்னூட்டத்துல விளையாடுற ஆளுன்னு நெனைச்சுட்டீங்களா?

வல்லிசிம்ஹன் said...

ராம்சிங் போல இன்னும் தொண்ணூறு சதவிகிதம் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

இந்தக் கதை 'ஆவாரா' காலத்திலியே ஆரம்பித்துவிட்டது.
சோகம் மட்டும் மாறவில்லை. நன்றி முத்துலட்சுமி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சென்ஷி கூல் கூல்...
முதல் புள்ளிக்குக்கூட உடனே கதையின் தாக்கத்தால் என்ன சொல்வது என்று தெரியாததால் வைத்ததாகத்தான்
அபி அப்பா சொல்லி இருக்கிறார்,
சென்ஷி கதையின் சோகமான முடிவை குறிப்பிட்டே கூறியிருக்கிறார்.

எப்போதும் புலி வருது என்று சொல்பவர்களை நம்பாமல் போவது போல் கும்மி அடிப்பவர்களை அப்படியே நினைக்க வாய்ப்பிருப்பதை இது நிரூபிக்கிறது. யோசிக்கணும் நம்ம ...

Anonymous said...

//எப்போதும் புலி வருது என்று சொல்பவர்களை நம்பாமல் போவது போல் கும்மி அடிப்பவர்களை அப்படியே நினைக்க வாய்ப்பிருப்பதை இது நிரூபிக்கிறது. யோசிக்கணும் நம்ம ... //

சென்ஷி! நம்ம ஆழியூர்தான்யா அவர்! இன்னிக்கு கூட என் பதிவிலே "என்ன அழகா குடும்பமா வந்து கும்பியடிக்கிறீங்க"ன்னு பாராட்டி இருக்கார் பாருங்க! கூல் கூல்:-)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க கோபி , ஆமா ரொம்ப நாளாச்சு ஏன் வலைச்சரத்தில் எழுதினப்போ கூட ஆளக்காணோமே..சரி பரவால்லா ஒரு தப்புமில்ல...

கதை நல்லாருக்கா நன்றி.

சென்ஷி சொன்னது போல பின்னூட்டத்தினை பாராட்டறது சந்தோஷம் தான். எழுதிய ஒவ்வொரு வரிக்கும் அது பின்னூட்டமா இருந்தாலூம் ஒவ்வொருத்தரும் பாராட்டை எதிர்பார்க்கறாங்க இல்லயா?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வல்லி மறுமொழிக்கு ரொம்ப நன்றி...
என்ன செய்ய
கஷ்டப்பட்டு உழைக்கிறவங்க ஏமாறும் போது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துது.

அமிர்தா said...

முயற்சிக்கு பாராட்டுக்கள். தொடர்ச்சியாக எழுதுங்கள்.

முடிவு செயற்கையாக துருத்திக் கொண்டு தெரிகிறது.

அந்த மருந்தை வாங்கி, ராம்சிங் குடிக்க செய்து, சீரியசாகி அல்லது இறந்த பிறகு மீண்டும் மருத்துவரிடம் கொண்டு செல்லும் பொழுது, மருத்துவர் சோதித்து "போலி மருந்து" என வெளிப்படுத்தினால்.. துருத்தாமல் தெரியும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உண்மைதான் மகா...
எனக்கே தோன்றியது...எனக்கு எப்போதும் முடிவெடுக்கும் சமயம் குழப்பம் வந்து விடுகிறது எனது கதைகள் எல்லாமே முடிவில் திணறுவதை நானும் உணர்ந்திருக்கிறேன்..தொடர்ந்து முயற்சித்தால் கைவரும் என நினைக்கிறேன்..மேலும் சிலர் வந்து நிறைய படிப்பதாலும் புரியும் என்று அறிவுரை சொல்லி இருக்கிறார்கள்...அதையும் கடைபிடிக்கிறேன்...

பாரதி தம்பி said...

//அப்போ இத என்ன சும்மா விளையாட்டுக்கு போட்டிருக்கேன்னு நினைச்சுட்டீங்களா ஆழியூரான் :(

இல்ல சென்ஷி எப்பவும் பின்னூட்டத்துல விளையாடுற ஆளுன்னு நெனைச்சுட்டீங்களா?//

அது ஒண்ணுமில்லீங்க சென்ஷி... மேல அபி அப்பா ஒரு புள்ளி வச்சிருந்தாரு.. அதுக்கும் கீழ நீங்க இன்னும் ரெண்டு புள்ளி வச்சு கோடு போட்டிருந்தீங்க. 'சரி...புள்ளி வச்சு, கோலம் போட்டு விளையாடுறாங்க போல'ன்னு நினைச்சு மிஸ் பண்ணிட்டேன் :::)) (எப்படி என் புள்ளி/கோலம்..?)

மங்கை said...

லட்சுமி

நல்லா ஆரம்பிச்சீங்க...மஹா சொன்ன மாதிரி...முடிக்கிறப்போ வேற சம்பவம் சொல்லி இருக்கலாம்..

எழுதீட்டே இருந்தா வந்துரும்..நான் எல்லாம் சொல்ல வர்ரேன்னு பாக்கரீங்கள..என்ன பண்ண..இப்ப தான் ஒருத்தர் என்னை ஒருத்தர் பாட்டி ஆக்கின எஃபெக்ட்..

கஷ்டப்படு ஃபோன்ல சொன்ன வார்த்தைய போடாம கட்டுப்படுத்தி பின்னூட்டம் போட்டிருக்கேன்..:-))

கோபிநாத் said...

\\முத்துலெட்சுமி said...
வாங்க கோபி , ஆமா ரொம்ப நாளாச்சு ஏன் வலைச்சரத்தில் எழுதினப்போ கூட ஆளக்காணோமே..சரி பரவால்லா ஒரு தப்புமில்ல...\\

அக்கா....
சாரிக்கா....ஆணி அதிகம் அதான் வரமுடியவில்லை ;-((

அபி அப்பாக்கிட்ட கூட சொல்லிக்கிட்டு இருந்தேன். ஆனா வரமுடியவில்லைக்கா

மீண்டும் மீண்டும் சாரிக்கா ;-(

Anonymous said...

முத்துலஷ்மி எனக்கு பிடிச்சிருந்தது கதை படித்தவுடனே. இப்பதான் நேரம் கிடைச்சது பின்னூட்டம் போட. கதையாக படிச்சப்போ ரொம்ப நல்லாயிருக்கு. ஆனா இது எந்த அளவு நிஜத்தில் இருக்குன்ற ஞானம் எனக்கு இதுவரை கிடையாது. யோசிச்சு பாத்தா பயமாதான் இருக்கு. நிஜம் ஏதோ கேள்விப்பட்டுருப்பீங்க நீங்க.

கதை நல்லாருக்கு முத்துலஷ்மி!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அப்பாடா ஆழியூரான் சென்ஷி ஒருவழியா சமாதானமாகிட்டீங்களா? ரொம்ப நன்றிப்பா உங்களுக்கு...

----------

மங்கை அந்த வார்த்தைய நான் சொல்லிடறேன்..எல்லாரும் குழம்பிடுவாங்க இல்லாட்டி...அபி அப்பா எல்லாத்தையும் காமெடி பண்ணறமாதிரி உங்களுக்கு இதில்
என்னவோ ''அவேர்னஸ்'' குடுக்கறமாதிரி இருக்குல்ல...அதனால முடிவ வேறமாதிரி எழுதி இருந்தா கரெக்டா இருக்கும்ன்னு பீல் பண்ணறீங்க சரி சரி எழுத எழுத வரும்ன்ங்கறீங்க..அதுக்குத்தானே இங்க எழுதறேன்.நன்றி நன்றி..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி நாத் ஒரு பிரச்சனையும் இல்லை..
முடியும் போது வாங்க..நான் கோவிக்கல்லாம் மாட்டேன்..சாரி எல்லாம் கேக்கவேண்டாம்..

--------------

மதுரா நீங்க பதிவெழுதறத விட்டுட்டீங்களா நேரம் போதவில்லையா..? என்னப்பா இது தோழி இப்படி அடிக்கடி அப்ஸ்காண்ட் ஆனா மனதுக்கு கஷ்டமாருக்குல்ல..
அப்பப்ப தலைய காட்டுங்க..

ஆமா உண்மையில் இங்க டில்லியில் நிறைய போலி மருந்துகளை கண்டுபிடிக்கிறாங்க...அதுனால எத்தனை உயிர் போயிருக்கும்ன்னு நினைச்சா நடுங்குது..அவங்களுக்கெல்லாம் ஈவு இரக்கம் இல்லையான்னு தெரியல.
மறூமொழிக்கு ரொம்ப நன்றி.