October 20, 2011

அன்றொரு காலத்தில்,..



இடுப்பொடிய சுடாதேயம்மா
அடுக்கு நிறைய மட்டும் வேண்டுமெனக்கு
குளிக்கமறுப்பவன் முன்னால் எழுப்பச்சொல்லி
முறையிடுவான்

காசைக்கரியாக்க ஆசையோடு
அட்டவணையில் குறிப்பெடுப்போம்
வாழ்வினிமைக்கு வாழ்த்தி
மருந்தோடு வருவாள் ஆச்சி
உனக்கெத்தனை எனக்கெத்தனை
பங்கிட்டோம் பட்டாசுகளை
சேர்ந்தே குதூகலிக்க

வரிசை வரிசையாய் ஆசைகள்
கொளுத்தி வைத்து
பூக்கிண்ணமாய் சிதறிக்கொண்டிருந்தன

இன்று
பக்கத்திற்கொன்றாய்
தெறித்த பட்டாஸாய்
வாழ்வைப்போன்ற இரட்டை நாக்கு
எவருக்குமில்லை..

வல்லமை இதழுக்காக எழுதிய அந்தக்கால தீபாவளிய மிஸ் செய்யும் என் கவிதை

14 comments:

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...
வாழ்த்துக்கள் அக்கா.

ஹுஸைனம்மா said...

ம்.. நிறைய மிஸ் பண்றோம்.. :-(((

அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துகள்க்கா.

கோமதி அரசு said...

இடுப்பொடிய சுடாதேயம்மா
அடுக்கு நிறைய மட்டும் வேண்டுமெனக்கு
குளிக்கமறுப்பவன் முன்னால் எழுப்பச்சொல்லி
முறையிடுவான்//

பழைய நினைவுகளை தட்டி எழுப்புகிறது
கவிதை.

அடுக்கு நிறைய செய்வதா? சமையல் அய்யரிடம் பட்சணம் வாங்கி தீபாவளி கொண்டாடும் காலமாய் போய்விட்டது.

கவிதை நல்லா இருக்கிறது.

Yaathoramani.blogspot.com said...

யதார்த்தத்தை அழகாகச் சொல்லிப்போகும்
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

த.ம 1

கோபிநாத் said...

அருமை ;-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி குமார் :) உங்களுக்கும் வாழ்த்துக்கள்

ஹூசைனம்மா நன்றிப்பா:)

அம்மா பிஸ்கட் டப்பா நிறையமுறுக்கு நினைச்சுப்பாக்கறேன்.. பாவம் நீங்க...

ரமணி நன்றிங்க :)

வெங்கட் நாகராஜ் said...

காலையில் நாலு மணிக்கி அப்பா எழுப்பி விடுவார். சூடு பறக்க அம்மா எண்ணெய் வைத்து தேய்ப்பாங்க... எல்லாம் நினைவுக்கு வருது.. இப்பவோ காலையில் எழுந்திருப்பதே ரொம்ப லேட்..

நல்ல கவிதை. பகிர்வுக்கு நன்றி. வல்லமை-ல் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்...

சாந்தி மாரியப்பன் said...

கடைகளில் இனிப்பு வாங்கி கொண்டாடும் காலமாகி விட்டது முத்து லெட்சுமி.

எங்க ஆச்சி ஒரு மாசத்துக்கு முன்னாடியே அரிசி முறுக்கு, முந்திரிக்கொத்துன்னு அண்டா நிறய சுட்டு அடுக்கிடுவாங்க. எங்களுக்கெல்லாம் கொடுத்து விடறதுக்காக. அப்பத்திய பழக்க வழக்கங்களைச் சொன்னா இளைய தலைமுறை விசித்திரமாப் பாக்குது :-)

ராமலக்ஷ்மி said...

நினைவுகளை மீட்டெடுக்கும் அருமையான கவிதை. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

ஸ்வர்ணரேக்கா said...

//இன்று பக்கத்திற்கொன்றாய் தெறித்த பட்டாஸாய்//

உண்மை தான்... நிலைமை ரொம்ப மாறிடுச்சு...

நல்லாயிருக்கு உங்க கவிதை...

அன்புடன் அருணா said...

ம்ம்ம்ம் ஒரு காலத்தில் கதைகள்தான் எவ்வளவு??

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கோபி நன்றிப்பா :)

நன்றி வெங்கட் மெதுவா எழுந்து..டீவியில் நுழைஞ்சு தீபாவளி :)


சாரல்.. அந்தக்காலம்ன்னு நீங்களே ஆரம்பிச்சிட்டா எப்படின்னு கேக்கராங்க.. .அப்படித்தானே ஆகிடுச்சு..

அருள் பாக்கறேங்க

ஸ்வர்ணரேகா நன்றிங்க.. என் அண்ணா அக்கா தம்பின்னு எங்கெங்கோ இருக்கோம் தீபாவளிக்கு ..ம்..

அருணா நமக்கு வயசாகிடுச்சுங்க :))

Thekkikattan|தெகா said...

இதை விட எப்படி வாழ்வின் இரட்டைத் தன்மையை அழகா உடைத்துக் காட்ட முடியும்...

நல்ல கவிதை!