January 20, 2010

ஏன் ஏஏன், ஏன் இப்படி - வேகம்

முல்லை சாலைப் பாதுகாப்பு தொடர்பதிவுக்கு அழைத்திருக்காங்க.
தில்லியில் இந்தியா கேட்டை சுற்றிய பகுதிகளில் சாலைகள் மிக நேர்த்தியானவை. ஆங்கிலேயர்கள் காலத்தில் ஏற்படுத்தபட்ட பகுதி என்பதாலும் இன்னமும் நம்ம ஊர் தலைவர்கள் தங்குமிடங்கள் என்பதாலும் நேர்த்தி கெடாமலே பாதுகாக்கப்படுகின்ற பகுதியுமாகும். எப்போதுமே குண்டு குழி இல்லாமல் இருக்கிறது. அதில் வேலை நடந்தும் பார்ப்பதில்லை. அங்கே மட்டும் தனிக்கவனமெடுத்து போடும் போதே தரமானதாகப் போடுவார்களோ என்று எனக்குத் தோன்றும்.

இதே எங்க பகுதியிலும் சாலைகள் இருக்கிறது . அவற்றின் தரம் காரணமாக தானாக உடைந்தவை , மழையால் உடைந்தவை, டெலிபோன் கேபிள் , கேஸ் , தண்ணிப்பைப் காரர்களால் உடைபட்டவை என்று அடிக்கடி குறைபாடும் இருக்கும். அதனை சரிசெய்து பிச்சைக்காரர் போட்டிருக்கும் ஒட்டுத்துணி போன்ற வடிவங்களும் மேடும் பள்ளமுமாகவும் இருக்கும். பற்றாக்குறைக்கு பாலங்களின் நகரம் என்றபடி எங்கெங்கு காணினும் பாலங்கள் தான். அவற்றின் வளைவுகள் விரைந்து செல்பவர்கள் உயிருக்கு உத்திரவாதம் அளிப்பதில்லை.

விதிமுறைகளை பின்பற்றினாலே பாதுகாப்பு தானாக அமைந்துவிடும்.
மிகப்பெரிய சாலைகளில் 4 லேன்கள் இருந்தாலும் ட்ராபிக் முண்டியடிக்கும். உண்மையில் அவரவர் லேனில் தொடர்ந்து ப்யணித்தால் ட்ராபிக் இத்தனை இருக்கவே செய்யாது. மக்கள் லேன் பற்றிய எந்த ஒரு உணர்வுமே கொண்டவர்கள் அல்ல. அவர்களுக்கு எப்படி முன்னேறுவது என்பது தான் வழியே ஒழிய விதிமுறைகள் பொருட்டு அல்ல. 5 கார்கள் ஒரு வரிசையில் அதற்கும் நடுவில் மூக்கை நுழைக்க முண்டியபடி ஆறாவது என்பது சர்வ சாதாரணம்.

இடித்து , பெயிண்ட் பெயராத கார்கள் அபூர்வம். ஒருவேளை நீங்கள் பார்ப்பதற்கு முந்தின நாள் தான் போய் பெயிண்ட் செய்திருப்பார்களாக இருக்கும். இங்கே எழுதப்படாத விதி ஒன்று இருக்கிறதாம். (எங்களுக்கு இது கேள்வி தான்...:)இதுவரை செயல்படுத்தியது இல்லை) சாலையில் செல்லும்போது வேறு வண்டியோடு ஒரு சின்ன இடித்தல் உரசல் நடந்துவிட்டால் பிரச்சனை இல்லை, இறங்கி சத்தம் போடும் முதலாமவர் ஜெயிப்பார். சரி அவர் முதலில் சத்தம் போட்டுவிட்டாலும் ப்ரச்சனை இல்லை, நீங்கள் முதலில் அடித்துவிடவேண்டும் அவ்வளவு தான்.(அவர் துப்பாக்கிவைத்திருந்தால் நான் பொறுப்பல்ல)

குளிர்காலத்தில் சாலையில் வெறும் வெள்ளைச்சுவர் உங்களுக்கு நாற்புறமும் சூழ்ந்திருக்கும். வீடோ ஆபீஸோ சென்று சேர்வது உங்கள் சாமர்த்தியம். முந்தாநாள் அப்படித்தான் கீழே இருக்கும் மஞ்சள் கோட்டையோ , டிவைடரையோ பிடித்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தோம். ஒருமுறை யமுனா பாலத்தில் நாற்பது வண்டிகள் ஒன்றன் மேல் ஒன்று சினிமாமாதிரியே மோதி நின்ற சரித்திரம் கூட உண்டு.

இத்தனை இருந்தும் அசுர வேகத்தில் ஓட்டுபவர்களுக்கு மட்டும் குறையில்லை. எங்கள் பகுதியில் கேட் தாண்டி உள்ளே நுழையும் வண்டிகளுக்கு 20 கிமீ வேகம் என்று தான் விதி. ஆனால் வீடுகளுக்கு அருகில் வளைவுகளில் கூட அதிரடியாக 50 கிமீ வேகத்தில் நுழைபவர்கள் உண்டு. எனக்கு வரும் கோபத்தில் பலமுறை அவர்களை கைநீட்டி நிறுத்தி
‘ஏன் ஏஏன்
ஏன் இப்படி’, என்று வடிவேலு பாசையில் கேட்பேன். அவர்களும் சாரி மேடம் என்று சொல்லிவிட்டு பத்தடிக்கு 10 கிமீ வேகத்தில் உருட்டிவிட்டு பின் சீறிப்போவார்கள்.

பஸ், கார், வேன் போன்ற எந்த வாகனங்கத்திலும் செல்லும் போது இரவில் நான் தூங்குவதே இல்லை. நான் தூங்கினால் பிறகு ட்ரைவரை யார் கண்காணிப்பது? ஒருமுறை பெங்களூரில் குடும்பமாக மைசூர்பயணம் முடித்து திரும்பும் வழியில் ட்ரைவர் தூங்கிவிழுந்து கொண்டிருப்பதை பார்த்தேன். அப்போது அவர் மிகவேகமாக ஒரு லாரிக்கு பின் சென்று கொண்டிருந்தார். வண்டி இடமும் வலமுமாக ஆடியபடியே இருந்தது. முன்சீட்டில் தூங்கிய கணவரை எழுப்பியதில் டிரைவர் அல்ர்ட் ஆகிவிட்டார்.

ட்ரைவர் நமக்குத் தெரியாத புதிய ஆள் என்றாலும் மெதுவாகச் செல்லுமாறு சொல்வதற்கு எப்போதுமே நான் வெட்கப்படுவதில்லை. தயானந்தர் சத்சங்கத்துக்கு கடைசி நாள் என்னுடன் எதிர்வீட்டு ஆண்ட்டியை அழைத்துச் சென்றிருந்தேன். வெளியே வந்தபோது ஒரு வயதானவர் காரை நிறுத்தி அவரும் சத்சங்கம் முடித்து குருபிரசாதமாக வாங்கிய புத்தகத்தைக் காட்டியபடி, நீங்கள் எந்த பக்கம் செல்லவேண்டும் என்று விசாரித்தார். பிறகு தானும் அந்த பக்கம் தான் போவதாக சொல்லிக்கொண்டு காரின் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு எங்களுக்குத்தெரிந்த மருத்துவரின் பக்கத்துவீடு அவருடையது என்றும் கூறி வற்புறுத்திக்கொண்டிருந்தார். வீட்டுக்கு போன் போட்டு விவரத்தைச் சொல்லிவிட்டு ஏறிக்கொண்டோம்.

வரும் வழியில் மனுசர் வேகமாக ஓட்டிக்கொண்டு பேசிக்கொண்டே இருந்தார். புதிய பாலத்தின் வழியில் அவர் குழம்பி நின்றுவிட்டார். பின் நான் வழி சொல்லிக்கொண்டே இந்த இடத்தில் நீங்கள் கொஞ்சம் மெதுவாகத் திரும்புங்கள் இன்னோரு பாலம் வந்து சேரும் என்று சொன்னேன். அவர் நிச்சயமாக மேடம் உங்களை பயமுறுத்தமாட்டேன் என்று மெதுவாகவே திரும்பினார். நான் ஜெர்மனியில் இருந்தவன் என்றார். யார் எங்கே இருந்தாலும் எத்தனை திறமை சாலியாக இருந்தாலும் சாலை பாதுகாப்பை பொறுத்தவரை எதிரிலோ பின்னாலோ வரும் மற்றொரு வண்டியோட்டியின் திறமையை நாம் அறியமாட்டோமென்பதால் கவனம் தேவைதானே .

சாலை பாதுகாப்பு பத்தி எழுதறது நல்லது தானே விக்னேஷ்வரி மற்றும் கோமதி அரசு இருவரையும் தொடர்ந்து எழுதி விழிப்புணர்வு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

30 comments:

sathishsangkavi.blogspot.com said...

சாலையில் செல்லும் போது விழிப்புணர்வு நிச்சயம் தேவை... பயனுள்ள பதிவு...

படங்கள் அனைத்தும் நச்...

வடுவூர் குமார் said...

பொதுவாக‌வே டெல்லி சாலைக‌ள் ப‌ர‌வாயில்லை ர‌க‌ம் தான் சென்னையுட‌ன் ஒப்பு நோக்கையில்.
சாலை ம‌ற்றும் ட‌வுன் Planning செய்யும் போதே த‌ண்ணீர் போவ‌த‌ற்கு வ‌ழி செய்துவிட்டால் ப‌ள்ள‌ம் விழும் பிர‌ச்ச‌னை 50% தீர்ந்தது அத‌ன் பிற‌கு கேபிள் போட‌ வேண்டிய‌ வேலைக்கு முன்ன‌மே சாலையின் குறுக்கே பைப் போடுவ‌தால் 20% பிர‌ச்ச‌னை தீர்ந்துவிடும்.மீதி 30% அதை Maintanance க்கும் சாலை போடும் வித‌த்துக்கும் ஒதுக்கிட‌லாம்.இப்ப‌டி செய்தால் சாலை ம‌ஸ்க‌ட்டில் இருக்கும் மாதிரி வ‌ழ‌ வழ‌ வென்று இருக்கும்.

குளிர் கால‌த்தில் சாலை தெரிய‌ அத‌ன் ப‌க்க‌ சுவ‌ர்க‌ளில்(இருந்தால்) Reflective Paiந்ட் அடித்தால் ச‌ரியாகிவிடும்.ப‌க்க‌ சுவ‌ர்க‌ள் இல்லாத‌ ப‌ட்ச‌த்தில் சாலையின் மேல் Deflector பொருத்திவிட்டால் சாலைத்த‌ட‌ம் ஓர‌ள‌வுக்கு ந‌ன்றாக‌வே தெரியும்.


Lane Sense வ‌ந்தாலே சாலை விப‌த்துக‌ளை ஓர‌ள‌வு த‌டுக்க‌லாம்.

சந்தனமுல்லை said...

அலசி ஆராய்ஞ்சுட்டீங்க முத்து! சில இடங்களில் பகீர் என்றாலும் அது எல்லா நகரங்களிலுமே காணக்கூடியதாகத்தான் இருக்கிறது! ஹ்ம்ம்..

யாழினி said...

விபத்துக்கான காரணங்கள்.. படங்கள்..
அருமைக்கா..

அசத்தல்

Anonymous said...

//இறங்கி சத்தம் போடும் முதலாமவர் ஜெயிப்பார்//

பந்திக்கு மட்டுமில்ல. சண்டைக்கும் முந்திக்கணும். :(

வெங்கட் நாகராஜ் said...

இங்கே வேக வேகமா பறக்கிற மோட்டார் பைக்குகளை விட்டு விட்டீர்களே!. இங்கே எல்லோருக்கும் உள்ள ஒரே எண்ணம் நாம் முதலில் செல்ல வேண்டும் என்பதுதான். அடுத்தவரைப் பற்றிய கவலையே கிடையாது.

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சங்கவி .அது என்ன பெண் பெயர் உங்களுக்கு? :)

----------------
வடுவூர்குமார் வாங்க நீண்டநாட்களுக்கு பிறகு பின்னூட்டமிடுகிறீர்கள்..

எனக்கென்னவோ இவங்க ப்ளானிங்க் எலாம் எப்பா திரும்ப எப்ப ரோட் காண்ட்ராக்ட் கிடைக்கும் என்பதற்கான ப்ளானிங்க்கோன்னு தோணுது :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

முல்லை வீட்டைவிட்டு இறங்கிட்டா எல்லாமே பகீர்ன்னு தான் இருக்கு.. :)
-------------------------
நன்றி யாழினி..
---------------------
சின்ன அம்மிணி , அதும் திறமையைப் பொறுத்து தான்.. இல்லன்னா காசை டபால்ல்ன்னு நீட்டவும் முந்திக்கனும்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாங்க வெங்கட் வருகைக்கு நன்றி..

பைக்கில் சத்தமெல்லாம் வச்சிக்கிட்டு சினிமாக்காரங்கமாதிரி இளைஞர்கள் பறப்பது இன்னோரு பகீர்.

கொஞ்ச நாள் முன் டெஸ்ட் ட்ரைவுக்கு எடுத்தா காரில் பின்சீட்டில் குழந்தைகளை வச்சிக்கிட்டே ஒரு அப்பா இன்னோரு காரில் மோதி வேற ரெண்டு பேரை கொண்ணுட்டாராம்.. டெஸ்ட் யாரு உயிருல செய்யறதுன்னு இல்லாம போச்சு :(

கோமதி அரசு said...

முத்துலெட்சுமி,
உங்களின் சாலை பாதுகாப்பு பதிவு நனறாக உள்ளது.

தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறீர்கள்
எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன்.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வீட்டிலிருந்து வெளியே கிளம்பினாலே திரும்பி வர்றதுக்கு உத்தரவாதம் இல்லாம போயிட்டுது.

//முன்சீட்டில் தூங்கிய கணவரை எழுப்பியதில் டிரைவர் அல்ர்ட் ஆகிவிட்டார்//

எப்படீங்க இப்படி..:-))))).

Thekkikattan|தெகா said...

ஆஹ மொத்தத்திலே தினம் தினம் வீட்டை விட்டுக் கிளம்பி திரும்ப வீடு வந்து சேருவது, ஒரு போருக்கு சொன்று வீடு திரும்புவது மாதிரிதாங்கிறீங்க :) எல்லா இடத்திலும் அதே கதைதான்.

இருந்தாலும் நம்மாலுங்க lane dividerஅ மிகச் சரியாக பயன் படுத்துறாங்க எப்படிங்கிறீங்களா அதான் அவங்களுக்கு median மாதிரி; அதாவது, வண்டியோட பம்பர் சரியா அந்தக் கோடு மத்தியில வர்ற மாதிரி ஓட்டி கவனமா வீடு வந்து சேருவது :D ...

Thekkikattan|தெகா said...

இன்னொரு பின்னூட்டத்தையும் போட்டு இடத்தை அடைக்கிறேன்...

//டிரைவர் அல்ர்ட் ஆகிவிட்டார்//

அப்படி செய்றதுக்கு அவசியமில்லாம நல்ல கவனமாக ஓட்டி ஊர் கொண்டு போயி சேர்த்த ஓட்டுனரை இறங்குவதற்கு முன்னால், ஒரு சிறிய பாராட்டு நல்ல அருமையா ஓட்டினீங்க அப்படின்னு உற்சாகப் படுத்தவும் தவறாதீங்க. ஏன்னா, அது நல்லா மனசில பசக்கின்னு ஒட்டிக்கும் அவங்களுக்கு, try it out that too...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி கோமதிம்மா
--------------
நன்றி அமைதிச்சாரல் , எனக்கு என்னன்னா பயம் நேரா டிரைவரை அலர்ட் செய்தா அதுல திடுக்கிட்டு எதாச்சும்ன்னா என்ன செய்யறது .. :( அதான் முன் சீட்டுல உக்காந்து தூங்காதீங்கன்னு கணவரை எழுப்பியது..
-----------------------------

ஹலோ தெகா, வண்டி ஏறியதுல இருந்தே நம்ம வீட்டு மனுசன் மாதிரி தான் அவரை நடத்துவோம். இறங்கியவுடன் பாராட்டறதுக்கு அவர் பத்திரமா சேக்கனுமில்ல.. :))
பொதுவாவே ட்ரைவரை பாராட்டுவது உண்டு , குழந்தைகளுடன் ஒரு புகைப்படமும் எடுப்போம்.

அந்த தூங்கி விழுந்த ட்ரைவர் இறங்கியவுடன் ஒன்னும் ப்ரச்சனை இல்லையே இல்லையே என்று கொஞ்சம் பயமாகக் கேட்டார்.. ஒன்னும் இல்லைங்கன்னு சமாதானமாத்தான் பேசி அனுப்பினோம். :)

குசும்பன் said...

//. நான் தூங்கினால் பிறகு ட்ரைவரை யார் கண்காணிப்பது? ஒருமுறை பெங்களூரில் குடும்பமாக மைசூர்பயணம் முடித்து திரும்பும் வழியில் ட்ரைவர் தூங்கிவிழுந்து கொண்டிருப்பதை பார்த்தேன்//

உங்க ஸ்டைலில் அவரிடம் நான் ஸ்டாப்பா கொஞ்ச நேரம் பேசியிருந்தா அவருக்கு தூக்கம் 10 நாளைக்கு வந்திருக்காதுல்ல:))

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு முத்துலெட்சுமி. இரவுப் பயணத்தின் போதுதான் என்றில்லை எந்த வெளியூர் பயணத்தின் போதும் ட்ரைவரைக் கண்காணிப்பதற்காகவே நானும் கண் அசர மாட்டேன். ஆனால் எல்லோருமே கூடிய வரையில் நள்ளிரவுப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

மங்கை said...

//பொதுவாக‌வே டெல்லி சாலைக‌ள் ப‌ர‌வாயில்லை ர‌க‌ம் ///

குமார்

தில்லியில physical ஆ சாலைகள் நல்லா தான் இருக்கும்...ஆனா போக்குவரத்து விதிகள் னு ஒன்னு இருக்குல்ல..அது என்னன்னே அந்த ஊர் மக்களுக்கு தெரியாது..

அது படிச்சவங்களுக்கும் சரி..படிக்காதவங்களுக்கும் சரி...

அடுத்து தண்ணீர் போவதற்கான வழி.. ஆஹா...அது ஏன் கேட்கறீங்க..பேரு தான் தலைநகரம்.. ஒரு முறை முக்கியமான சாலை ஒன்றில் குடி தண்ணீர் குழாய் உடைந்து 3 மணி நேரம் ரோட்ல இருந்தேன்...வீடு வந்து சேரும் போது இரவு மணி 10.30..

விக்னேஷ்வரி said...

மக்கள் லேன் பற்றிய எந்த ஒரு உணர்வுமே கொண்டவர்கள் அல்ல. //
நீங்க நொய்டாவைப் பத்தி பேசுறீங்களா... டெல்லியில் சாலை விதிகள் மதிக்கப்படுவதையும், கடைபிடிக்கப்படுவதையும் நள்ளிரவில் கூட பார்த்து வியந்திருக்கிறேன் நான்.

குளிர்காலத்தில் டிரைவிங் கொடுமையானது தான். போன வாரம் கூட இருபது வண்டிகள் அடுத்தடுத்து மோதி அனைத்திற்கும் சேதம்.

உங்க ஏரியா டெல்லி அவுட்டர். அங்கு ட்ரக்குகள் அதிகமென்பதால் போக்குவரத்து மோசமாக இருக்கலாம். சென்டர் டெல்லிப் போக்குவரத்து மிகச் சீரானது. அங்கு டிரைவிங் என்பது தனி சுகம்.

யார் எங்கே இருந்தாலும் எத்தனை திறமை சாலியாக இருந்தாலும் சாலை பாதுகாப்பை பொறுத்தவரை எதிரிலோ பின்னாலோ வரும் மற்றொரு வண்டியோட்டியின் திறமையை நாம் அறியமாட்டோமென்பதால் கவனம் தேவைதானே . //
ரொம்ப சரியா சொன்னீங்க.

நானும் எழுதணுமா... ஓக்கே.

Unknown said...

குளிர்காலத்தில் பனிப் பொழிவு அதிகமாக இருக்கும் போது,சாலை தெரியாதபோது ,double இண்டிகேட்டர் போட்டு வாகனத்தை ஓட்டும் வழக்கம் ஓமன் நாட்டில் இருக்கிறது.அது மாதிரி பழக்கம் நம்ப ஊர்ல இல்லனு தோணுது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி குசும்பன் .. நான்ஸ்டாப்பா நான் இப்ப பேசறதில்ல அதனால் தான்.. :)
-----------------------

வாங்க ராமலக்‌ஷ்மி நீங்களும் நம்ம ஆள் தானா.. :) அன்னைக்கு கொஞ்சம் தாமதமாகிடுச்சு வீடு வர இல்லாட்டி நைட் ட்ராவல் செய்வது நாங்களும் தவிர்த்துடுவோம்ப்பா..

------------------

ஆமா மங்கை கட்டின முதல் வாரமே அண்டர்க்ரௌண் பாதையில் பஸ்ஸே மூழ்கிடுச்சு ஒரு நாள் மழையிலே.. ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

விக்னேஷ்வரி உங்களுக்கு எப்பயாச்சும் நொய்டாலேர்ந்து டெல்லிக்கு வந்ததால் அப்படி தெரிஞ்சுருக்குமோ.. :)தொடருங்க ப்ளீஸ்..
--------------------------
மின்னல் இங்கயும் அப்படி செய்வதுண்டு.. ஆனா அப்படி ப்ளிங்க் செய்வது கூட தெரியாத அளவு பனிமூட்டம் இருந்துவிடுவது உண்டு..
உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

க.பாலாசி said...

இரவுநேரங்களில் பயணிக்கும்போது பலநேரம் விழித்துக்கொண்டே இருப்பேன். கொஞ்சம் பயமும் காரணமாக இருக்கலாம்.

நமக்கும் ‘விழி’ப்புணர்ச்சி அவசியமல்லவா...நல்ல சிந்தனை இடுகை....

கமலேஷ் said...

அழகான பகிர்வு... விசயத்தோடு இருக்கிறது...வாழ்த்துக்கள் தொடருங்கள்...

Paleo God said...

இறங்கி சத்தம் போடும் முதலாமவர் ஜெயிப்பார். சரி அவர் முதலில் சத்தம் போட்டுவிட்டாலும் ப்ரச்சனை இல்லை, நீங்கள் முதலில் அடித்துவிடவேண்டும் அவ்வளவு தான்.//
இது முதல் முறை 93 ல் டெல்லி போய் லோக்கல் டூர் போனப்பயே பார்த்தேன்..:) இத்தனைக்கும் இடித்துக்கொண்டவர்கள் யாரோ, அடித்தவர் யாரோ..இப்பதான் தெரியிது இது வாழ்வுமுறைன்னு..:)


(அவர் துப்பாக்கிவைத்திருந்தால் நான் பொறுப்பல்ல)//

நல்ல முன்னேற்றம்..:)

சிங்கக்குட்டி said...

சாலையில் செல்லும் போது பாதுகாப்பான வேகம் அவசியம்... பயனுள்ள பதிவு முத்துலெட்சுமி.


உங்கள் இந்த பதிவை படிக்கும் போது தில்லியில் என் அனுப நகைச்சுவை ஒன்று நினைவில் வருகிறது.

வசத்குஞ் என்னும் இடத்தில் வாசித்தேன், அலுவலகம் செல்ல என் நண்பர் பைக் ஓட்ட நான் பின்னால் அமர்ந்தது சென்றேன், வேகம் என்றால் அப்படி ஒரு வேகமாக சென்றார். இந்தியா கேட்டை சுற்றி கஸ்தூரிபாய் ரோடு செல்ல முற்படும் போது. என் நண்பர் தோலை தட்டிய நான் சொன்னேன், நல்லவேளை வேகமாக வந்து விட்டீர்கள், இன்னும் இந்தியா கேட்டை மூடவில்லை என்று :-) அவ்வளவுதான் என் நண்பர் "செம காண்டு" ஆகிவிட்டார், ஆனால் வேகம் குறைந்து விட்டது.

☀நான் ஆதவன்☀ said...

ஹி ஹி ஹி போட்டுடீங்களா? எங்க எஸ்கேப் ஆகிட்டீங்களோன்னு நினைச்சேன் :)

Deepa said...

நீங்கள் எழுதிய விதத்திலிருந்தே உங்களுக்குச் சாலை பாதுகாப்பு குறித்து தெளிவான பார்வையும் அக்கறையும் இருப்பது தெரிகிறது.

//இறங்கி சத்தம் போடும் முதலாமவர் ஜெயிப்பார். சரி அவர் முதலில் சத்தம் போட்டுவிட்டாலும் ப்ரச்சனை இல்லை, நீங்கள் முதலில் அடித்துவிடவேண்டும் அவ்வளவு தான்.//
:-)))))) சே.. கேவலமாக இருக்கிறது.

//பஸ், கார், வேன் போன்ற எந்த வாகனங்கத்திலும் செல்லும் போது இரவில் நான் தூங்குவதே இல்லை. நான் தூங்கினால் பிறகு ட்ரைவரை யார் கண்காணிப்பது?//
ஆஹா. கடமை காந்தாமணீ!

//ட்ரைவர் நமக்குத் தெரியாத புதிய ஆள் என்றாலும் மெதுவாகச் செல்லுமாறு சொல்வதற்கு எப்போதுமே நான் வெட்கப்படுவதில்லை.
//வெரி குட்.

sathishsangkavi.blogspot.com said...

//நன்றி சங்கவி .அது என்ன பெண் பெயர் உங்களுக்கு? :)//

எனக்கு வரும் ஜீன் மாத்தில் பிறக்கும் குழந்தை பெண் குழந்தை என்று நானும் என் மனைவியும் வைத்த பெயர்...

எனது பெயர் சங்கமேஸ்வரன். என் மனைவி பெயர் கவிதா... என் பெண் குழந்தையின் பெயர் சங்கவி... இது தான் காரணம் சகோதரி....

Unknown said...

//யார் எங்கே இருந்தாலும் எத்தனை திறமை சாலியாக இருந்தாலும் சாலை பாதுகாப்பை பொறுத்தவரை எதிரிலோ பின்னாலோ வரும் மற்றொரு வண்டியோட்டியின் திறமையை நாம் அறியமாட்டோமென்பதால் கவனம் தேவைதானே// .
இன்று உங்கள் பதிவை தற்செயலாகப் பார்த்தேன். மற்ற வண்டியோட்டியின் திறமையை நாம் அறியமாட்டோம் என்று மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். இதை நம் ஓட்டுநர்கள் புரிந்து கொண்டால் பாதி விபத்துக்களை தவிர்த்துவிடலாம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

vijay ..thanks for ur comment..:)