January 7, 2010

கயிறு நாவலின் சில துளிகள்

கதையின் தொடக்கத்தில் கோயிலைச் சேர்ந்த 'எருமத்ர' மடத்தினை 'கண்டெழுத்து' (நில அளவுRevenue survey and settelment period) எழுதவருகிற 'க்ளாசிப்பேரு கொச்சுப்பிள்ளை' (classifier)க்காக சுத்தம் செய்து தயார் ஆக்குகிறார்கள். கோடாந்திர முத்தாசான் போன்றவர்களுக்கு கிளாசிப்பேர் என்றால் அந்த பெயரை வைத்து என்ன மாதிரியான வேலை அது, என்ன ஜாதியைச் சேர்ந்தவர் என்று பல குழப்பங்கள். அதுகாலம் வரையிலும் பிராமணல்லாதவரை எருமத்ரமடத்தில் தங்க வைத்ததில்லை. ஆனால் பொன்னு தம்பிரான் (ராஜா) உத்தரவு . இதனைக் காலமாற்றம் நிகழத்தொடங்கியதின் குறிப்பு எனக்கொள்ளலாம். செய்யும் வேலையினைக் கொண்டு ஒருவருடைய நிலை உயர்த்தப்பட்டுவிட்டது.

க்ளாசிப்பேர் கொச்சுப்பிள்ளை ஊரிலுள்ள குடும்பங்களில் இருக்கின்ற உழைக்கின்ற மக்களை கணக்கெடுத்து அதன் பேரில் அவர்களுக்கு நிலங்களை எழுதி வைப்பார். உழைக்க இருக்கும் ஆண்மகன்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் குடும்பங்கள் பின் வரி கட்டுவது சிரமாமாகும் என்கிற எண்ணத்தினால் தங்கள் பெயரில் அதிக நிலம் வந்துவிடகூடாதென நினைத்தனர்.

குட்டநாட்டு பகுதியில் நிலங்கள் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டவையே. கடல்மட்டத்துக்கு மூன்றடி தாழ்வாக இருக்கும் நிலங்களின் கடல்நீரினை வெளியேற்றி சுற்றுவேலியாக தடுப்புக்களை ஏற்படுத்தியே நிலங்களை விளைச்சலுக்கு ஏற்றபடி மாற்றி விவசாயம் செய்துவந்தனர். எனவே க்ளாசிப்பேருக்கு லஞ்சமாக பலரும் கிழங்குகள், நேந்திரங்கள், பறை பறையாக நெல் மற்றும் சக்கிரங்கள் (தங்கம்) கொண்டுவந்து கொடுப்பதும் வேண்டுதல் விடுப்பதுமாக இருந்தனர்.

தர்மசாஸ்தாவின் கோவில் என்பது அவ்வூரில் முக்கியமான அங்கம். வங்கிகள் போன்ற அமைப்பாகவும் அது செயல்பட்டு வந்திருக்கிறது. கோவிலில் பூஜை செய்பவர்கள் தங்கும் இடத்தை இல்லம் என்றும், இல்லத்துக்கும் மடத்துக்கும் சொந்தமான நிலங்களை குத்தகைக்கு விட்டு அதன் பலனாக வருகிற நெல்லை மடத்தில் சேமிக்கிறார்கள். கடனாகவும் நெல். வட்டியாகவும் நெல். கோடாந்திர், சீரட்ட , மங்கலச்சேரி என பல குடும்பங்களின் நிலைகள் முதல் பாகத்தில் அவர்களின் உழைக்கும் மக்களின் எண்ணிக்கையாலும் கோவில் மடத்தின் முக்கிய பங்கு வகிப்பதனாலும் உயர்ந்தே இருந்து வந்திருக்கின்றன.

க்ளாசிப்பேரின் மனைவி பேராசை கொண்டவளாக இருக்கிறாள். அவளுடைய தாய் அரண்மனையில் தம்பிராவின் தோழி என்பதால் கிடைத்த பரிசே கொச்சுப்பிள்ளையின் க்ளாசிப்பேர் வேலை. தங்கம் கொடுக்க முடிந்தவர்களுக்கே க்ளாசிப்பேர் தேவையானபடி செய்துகொடுக்கிறார். இதனால் ஊரில் அசாதாரண சூழல் உருவாகி சில குடும்பங்கள் அதிகப்படியாக கடன்பட்டு நெல் அளக்கவேண்டியாகிறது . உழைக்கின்ற எண்ணிக்கை அதிகமிருக்கின்ற குடும்பங்கள் உயர்கின்றன. அவ்வப்போது உயர்ந்தநிலையில் இருப்பவர்கள் கோவிலில் முக்கிய அங்கம் வகிக்க நகர்கின்றது காலம். இங்கேயும் ஜாதியிலிருந்து நகர்ந்து பணத்தின் முக்கியத்துவம் , நிலையை உயர்த்தத் தொடங்கிவிடுகிறது.

அதிகாரிகளின் நட்பினால் ஔதவ் என்கிற கிரிஸ்துவருக்கும் நிலம் கிடைத்து மற்ற இனத்தினரும் விவசாயம் தொடங்கினர். அவர்கள் கடின உழைப்பு கொண்டவர்களாய் இருந்தனர். வெள்ளைக்காரர்களின் நட்பின் காரணமாக நிலத்து நீரை வெளியேற்ற மோட்டார்கள் அமைத்தும் விவசாயத்தில் சிறந்து அதிகப்படியான நிலங்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கினர். முஸ்லீம் மதத்தினராக மதம் மாறியவர்களும் வியாபாரங்களினால் சிறந்து மேலே வந்தனர்.

சீலந்திபிள்ளில் பரமுஆசான் காசிக்கு செல்லுமுன் அவருடைய குடும்ப சொத்தான பல ஏடுகளும் ஓலைகளும் கல்யாணி அம்மாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. கல்யாணி அம்மாவின் மகன் கேசவன் போன்ற சிலரால் கல்வியறிவு அனைத்து நிலை மக்களுக்கும் கொண்டு செல்ல முயற்சிக்கப்படுகிறது. ஆனால் ஊராரின் எதிர்ப்பால் காலந்தாழ்ந்தாலும் காந்தீயம் அச்சிற்றூருக்கும் நுழைவது மற்றும் ஆளும் பிரிட்ஷ் அரசாங்கத்தால் அரச குடும்பத்தினரும் அனைத்து நிலை மக்களுக்கும் கல்வி தர ஆசிரியர்களை கட்டாயப்படுத்துவதுமான காலமாற்றத்தில் கல்வி பல தரப்பு மக்களுக்கும் சென்று சேர்கின்றது. இக்கல்விசீர்த்திருத்தமே பின்னாளைய பலமாற்றங்களுக்கும் வித்தாகிறது.


மருமக்கள் தாய அமைப்பினால் பெண்களுக்குத்தான் சொத்துரிமை. ஒரு தரவாடு அல்லது குடும்பம் என்பது அம்மா , அம்மாவின் தங்கைகள் , அண்ணன் தம்பிகள் , குழந்தைகளைக் கொண்டது. கணவன் என்பவர் வந்து போகும் வழக்கம் இருந்தது. குடும்பத்தின் முழுபொறுப்பையும் அம்மாவன் என்கிற அம்மாவின் அண்ணன் தலைமை ஏற்று காரணவர் என்ற பெயருடன் வழிநடத்திவருவார். அவர் உழைத்த அனைத்தும் குடும்ப மொத்தத்துக்குமாக இருந்து வந்தது. நாயர் ஆக்ட் காரணமாக சொத்துரிமை கணவன்- மனைவி என்று மாறிய நேரத்தில் தலை எண்ணி பாகம் பிரித்தபோது காரணவர் - தலைவர் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் தங்கைகளின் மகன் மகளுக்கு சென்று சேர்ந்ததே அன்றி அவரின் குழந்தைகளுக்குச் சென்று சேரவில்லை.

கொச்சூட்டிலி அம்மா ,உன்னாச்சி அம்மா வரிசையில் வந்த குஞ்சுமாளுவின் கணவர் குஞ்சுநாயர் நாயர் ஆக்ட் சட்டத்தால் தன் சொத்துக்களை இழந்து வாழ நேரிடுகிறது. விவசாயத்தில் ஏற்பட்ட கஷ்டநஷ்டங்களால் ரப்பர்தோட்டங்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்களை மலையில் இருக்கும் காடுகளை அழித்து ஏற்படுத்துகிறார்கள். குஞ்சுநாயரின் மகன் மணிகண்டன் திருவனந்தபுரத்துக்கு கல்லூரியில் படிக்கச் செல்கிறான். இக்கதாபாத்திரம் தகழியை ஒத்து வருகிறது.

கவிதை எழுதும் மணிகண்டனுக்கு விசு என்கிற நண்பனால் புரட்சி போராட்டங்கள் செய்யும் யூத் லீக் உடன் அறிமுகம் ஏற்படுகிறது. ஆனால் குஞ்சுநாயரின் உணர்ச்சிபூர்வமான கடிதம் அவனை அவற்றிலிருந்து விலகி ஊருக்கு திரும்பச் செய்கிறது. விசு மணிகண்டனை கோழை என்கிறான். குஞ்சுநாயரின் இறப்பும் அதனைத்தொடர்ந்து கணவருடனேயே இறந்த தாயின் இறப்பும் மணிகண்டனை மனம் பிறழ்ந்தவனைப் போல ஆக்குகிறது. மனதால் சுதந்திரத்தையும் மக்கள் வாழ்வில் ஒரு மேன்மையும் ஏற்பட ஏங்கியபடி சுற்றியலைகிறான். மணிகண்டனின் எண்ணங்களின் வடிவில் தகழியின் பல எண்ணங்களைக் காணமுடிகிறது. அவ்வபோது மணிகண்டன் காணுகின்ற கனவில் அதிகார வர்க்கங்களின் சுரண்டல்களுக்கு எதிரான செயல்கள் வெற்றி பெற்று எங்கும் பசுமையும் மகிழ்வும் வெற்றியுமாக தோன்றி வருகிறது.



நெல்லுக்கு பற்றாக்குறை நேர்ந்த நேரம் யுத்தத்திற்கு நெல் சென்ற காலம். எதற்குமே விலையின்றி மக்கள் வாழ்வின் நிலை தடுமாறுகிறது. இளைஞர்கள் வாழ்வாதாரத்திற்காக இராணுவத்தில் சேருகிறார்கள்.சிலர் மலேயாவுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். மலேயாவில் என்ன நடக்கிறது என்றும் தெரியாது , இராணுவமென்றாலும் தெரியாது யாருக்காக யுத்தம் எதற்கு இறக்கிறோம் என்றும் தெரியாது. இங்கிருந்து உணவுக்கு இல்லாமல் இறப்பதற்கு இருக்கும்வரை குடும்பமாவது நிம்மதியாக உண்டு உறங்கட்டுமென்று செல்கிறார்கள். குடும்பத்தினரோ தினம் தினம் கடிதத்திற்கோ தந்திக்கோ காத்திருக்கிறார்கள். அவர்களின் மணியார்டரையோ , அவர்களின் இறப்பையோ, காணாமல் போன செய்தியையோ கொண்டுவரும் தபால்காரர் அவர்கள் வாழ்வில் முக்கியமானவராகிறார்.


பல வருடங்களாக எதிர்பார்த்திருந்த சுதந்திரதினக் காலையை வர்ணிக்கும் போது ,
'விடிவெள்ளி உதித்து உயர்ந்து நின்றது. சூரியனுக்குப் பிரத்தியேகத் தன்மை எதுவுமில்லை. பிரத்தியேகமான பிரகாசமோ
தெளிவோ ஏதுமில்லை. அது என்றும் போல நடைபெற்றதொரு சூரியோதம் சிற்சில வீடுகளில் தேசீயக் கொடி ஏற்ற்ப்பட்டிருந்தது ' என விவரித்துவிட்டு சோதருபுலையர் வீட்டில் காலைப்பொழுது வெற்றிலைக்கு பாக்கு இல்லாத ஒரு சாதரண நாளாக விடிந்ததைக் குறிப்பிடுகிறார். தொழிலாளிகளுக்கு மாற்றம் வந்துவிடவில்லை என்பது அவருடைய கருத்தாக இருந்திருக்கிறது.

மூன்றாம் பாகத்தில் மிக விரிவாக சுதந்திர இந்தியாவின் தொடக்கத்தில் நடந்த தேர்தல்கள் ,காங்கிரஸ் கம்ப்யூனிசம் இடையிலான போட்டிகள் மற்றும் ஜாதி அரசியல்களை அவர் குறிப்பிட்டிருப்பதை வாசித்தால் இன்றைய தேர்தல் நிலைகளுக்கு அன்றைக்கும் சற்றும் குறைவு இல்லை. பணமும் மிரட்டலும் அன்றைக்கும் சாதித்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

\\காங்கிரஸுக்குள்ளே கூட பரஸ்பரம் காலுக்கடியிலேருந்து மண்ணை அள்ளி எடுத்துக்கிறாங்க என்றார் ஔசேப்பு .

ஆமாம் அது தானே நாசம் !
கிரிகரி சொன்னார் :"ஒருவன் இன்னொருவனுக்கு உடன்படமாட்டான் அது இந்த நாட்டின் இயல்பு பண்டைய
நாட்களிலிருந்தே அப்படித்தான் //


குத்தகைகள் வரத்து இல்லை. இல்லத்தில் விவசாயம் செய்பவர்களும் இல்லை. ஒருவேளை உணவுக்கும் தவிக்கின்ற நிலை இல்லத்துக்கு நேர்கிறது. கோவில் இல்லத்து நம்பூதிரிகளின் மகன் நக்சலில் சேர்ந்துவிடுகிறான். இயக்கத்துக்கு எதிராக இயக்கத்தின் பணத்தில் குடும்பத்துக்கு உதவி செய்த காரணத்துக்காக அவன் தற்கொலை செய்து இறக்கிறான்.


எருமத்ரமடம் இடிந்து அவ்விடம் ஒரு விளையாட்டு மைதானமாகிவிட்ட .காலத்தின் சுழற்சியில் நிலச்சீர்திருத்தம் வருகிறது. அன்று க்ளாசிப்பேருக்கு செய்த ஏற்பாடுகளை மீண்டும் லேண்ட் ட்ரிப்யூனல் அதிகாரிகளுக்கு செய்யவேண்டியாகிறது. கண்டெழுத்தில் மக்களைத் தேடி நிலங்களை எழுதிவைத்தார்கள். மாறாக லேண்ட் ட்ரிப்யூனல் அதிகாரிகளோ நிலங்களைப் பறித்தெடுக்க வந்திருப்பதாக அஞ்சுகிறார்கள். அதிகப்படியாக இருக்கும் நிலங்களை அரசு பட்டா போட்டு நிலமற்றவர்களுக்கு பிரித்துக் கொடுக்கும். மீண்டும் ஒரு கேள்வி . வருபவர் எந்த ஜாதிக்காரராக இருப்பார். யாருக்கு நன்மை செய்வாரோ என்ற அவர்களின் பயம் அப்படி கேட்க வைக்கிறது.

\\'எந்த ஜாதியென்றாலும் படித்தவர்களுக்கு உத்தியோகம். அப்போ என்னன்னா , கல்வி கிடைச்சிட்டா அவன் யாருன்னாலும்
சரி அவங்க ஜாதிக்காரங்களிலே உயர்ந்தவனாயிடுவான் , மேலேமேலே உயர்ந்து போயிடுவான் , புலையன்
மேலதியகாரியாயிட்டா, ஏனைய ஜாதிக்காரங்க அதிகாரிகள் ஆகிற மாதிரிதான். அவனவன் காரியத்தை அவனவன்
பார்த்துக்குவான். அவனவனுக்கு பணம் சேரணும்: அவனவன் நல்லா வரணும் கார் வேணும் பங்களாவேணும் '//

விவசாயப்புரட்சியினால் ரசாயன உரங்களும் சுற்றுவேலிகள் கருங்கல்லாயும் மாறிய நேரத்தில், மலைவெள்ளத்தின் குணாதிசயம் என்னவென்று இன்றைய விவசாயிகளுக்கு தெரியாத வருத்தத்தை கிரிகரி மூலம் காட்டுகிறார்.
\\-'மலை வெள்ளத்தைப் பார்த்தீங்களா கிரிகரியண்ணா?'
-'ஓ அதுக்கு இப்போ என்ன செய்யறது , ஒரு துளி நீர் வயலுக்குள்ளே விழவில்லை. ரசாயன வளமும் விஷமும்
போட்டு மண்ணைக் கெடுத்தாச்சு இப்போ மண்ணில் புல்லு கூட முளைக்காது'
-'அப்படின்னா இந்த ஊரில்லுள்ள ஜனங்களெல்லாம் கஞ்சித்தண்ணி குடிக்கிறதெப்படி"
-'அரிசி தரவேண்டியது அரசாங்கமல்லவா? அரசாங்கம் எங்கிருந்தாவது அரிசி கொண்டாந்து தந்திடும் .
அதை வாங்கிச் சாப்பிடுவோம்.'
- காசெங்கிருந்து? வேலை வெட்டி இருந்தாதானே காசிருக்கும்.//

நிலம் வேண்டாமா? யாருக்குமே வேண்டாமா? படிப்பும் வேலையும் என்று சென்றுவிட்ட தலைமுறையை, பழைய தலைமுறை கேட்கும் கேள்வி எதிரொலிக்கிறது. . விவசாயம் வேண்டாம் விவசாய நிலம் வேண்டாம். எங்கெங்கு பார்த்தாலும் வீடுகளும் தொழிற்சாலைகளும் அரக்கனைபோல விவசாய நிலங்களை விழுங்கிக்கொண்டு, இன்றும் இந்நிலைத் தொடர்வதை நாம் பார்க்கத்தானே செய்கிறோம்.
’ஆனால் காணப்படுகின்ற இம்மக்களுக்கெல்லாம் உணவு வேண்டாமா? ’- என
முடிவில் கதாபாத்திரத்துனூடாக ஒலிக்கும் இயற்கையை நேசித்த தகழியின் கேள்விக்கு விடை தான் எங்கே?
[ஈழநேசனுக்காக எழுதியது இங்கேயும் ஒரு பகிர்தலுக்காக..]
நன்றி: ஈழநேசன் முல்லை.ஆர்ஜ்

8 comments:

Thekkikattan|தெகா said...

இந்தக் 'கயிறு' புதினத்தை வைச்சு திறனாய்வு செஞ்சு தமிழில் எம். ஃபில் டிகிரி ஒண்ணு வாங்கியிருக்கலாம், ஜஸ்ட் மிஸ்டுங்க :)

உங்க பொறுமைக்கு அளவே இல்லாம போச்சு.

சந்தனமுல்லை said...

கயிறு ரொம்ப நீளமா இருக்கே! :-)

Anonymous said...

//உங்க பொறுமைக்கு அளவே இல்லாம போச்சு.//

கன்னா பின்னாவென்று ரிப்பீட்டுக்கிறேன். :)

நசரேயன் said...

கயிறு நல்லா இருக்கு

சிங்கக்குட்டி said...

முடிந்ததா இல்ல இன்னும் ஏதாவது கயிறு இருக்கா :-)

☀நான் ஆதவன்☀ said...

// சந்தனமுல்லை said...

கயிறு ரொம்ப நீளமா இருக்கே! :-)//

ஹி ஹி எக்கசக்க நீளம் :) மூனு பாகம்னா சும்மாவா? ஒவ்வொரு பாகமும் 1000 பக்கமாமே! ”பொறுமையின் சிகரம் முத்தக்கா” :)

Thekkikattan|தெகா said...

முத்து, இங்க பாருங்க கூடுதல் பொறுப்பு உங்களுக்கு வந்து சேர்ந்திருச்சு. இன்னும் நிறைய படிச்சு இங்கன பதிஞ்சு வைங்க. ஈழ நேசன்ல இப்படி ஒருத்தர் கமெண்டிருக்கார் பாருங்க...

...//கயிறின் வரலாறும் கயிறில் வரலாறும், என்னும் தலைப்பை ஈழநேசனில் நான் முன்னரே பார்த்திரு‍ந்‍தபோதிலும் அதை வாசிக்காது விட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போது உணர்கின்றேன்.தகழி அவர்களின் அற்புதமான எழுத்தினை தோட்டியின் மக்ன் மூலமாகவே முதலில் வாசித்தேன். பின் செம்மீன் ,மானிட வாழ்வியலின் நெருக்குவாரங்களையெல்லாம் தகழியைப்போல் அத்தனை சிறப்பான சொற்களால் மனதிற்குள் தைக்கவைக்க யாரால் முடியும். கயல் லக்சுமியின் வாசிப்பும், வார்த்தையாடல்களும், படித்தத‌தை மற்றவர்களுடன் பகிர்ந்‍து கொள்ளவேண்டுமென்னும் பெரும் குணமும் போற்றுதற்குரியது. /கதையை உருவாக்குவது என்பதும், வாழ்க்கையை கதையாக்குவது என்பதும் ஒன்று அல்ல/ உண்மையான வார்த்தை. உங்கள் ஆய்வு தொடரட்டும். சாகக்கிடக்கிற தமிழியற்கலைக்கு மேலும் மெருகூட்ட‌ வாழ்த்துக்க‌ள்.

ர‌மோனா//

சென்ஷி said...

ரமொனாவின் கருத்தாய்வு கயிறின் விமர்சனத்திற்கு மஞ்சா தடவி பலப்படுத்தியிருக்கிறது.
(முழுசா படிக்கல.. அப்பாலிக்கா வர்றேன்)