நாங்கள் தமிழ்நாடு செல்லவேண்டியிருந்த தினங்களில் தான் சரியாக எல்லா பள்ளிகளும் தங்கள் விண்ணப்பங்களை வாங்க வேண்டிய தேதிகளையும் திரும்ப கொடுக்கும் தேதிகளையும் வைத்திருந்தார்கள். எனவே நன்றாக தெரிந்துவிட்டது . அக்காவின் பள்ளியில் தம்பியை போட்டாலொழிய வேறு வழியில்லை. ஆனால் அவர்களும் இன்னோரு பிள்ளை தங்கள் பள்ளியில் என்றாலும் அதற்கு ஒன்றும் உறுதி அளிக்க முடியாது என்கிறார்கள். ப்ளே ஸ்கூல் டீச்சர் அறிவுரையில் நாங்கள் பள்ளி தலைமையாசிரியை இடம் அக்காவின் பெருமைகளை சொல்லி தம்பிக்கு இண்டர்வியூ கால் செய்வதை தள்ளிவைக்க சொல்லிவிட்டு சென்றோம். தன்னால் ஆனதை செய்வதாக சொன்னார்கள். அதுவே பெரிது இந்த காலத்தில்.
தில்லி திரும்பியதும் பார்த்தால் , இனி இண்டர்வியூ அழைப்பு வராது என்று இணையத்தில் போட்டிருந்த செய்தி மேலும் அதிர்ச்சி. மீண்டும் படையெடுத்து தலைமை ஆசிரியை பார்த்து இண்டர்வியூ தேதி வாங்கியாயிற்று. முதல் கட்டமாக கலரிங் .. உள்ளே நுழையவே சில குழந்தைகள் அழுது தேம்ப இவர் தலையை சொரிந்தபடி உள்ளே போய் சின்ன சின்ன நாற்காலியில் உட்கார்ந்தார். வண்ணம் தீட்டுதல் மும்முறமாக செய்யும் போது ஒரு முறை நிமிர்ந்து என்னை கவனித்தான். போதும் அவனை டென்சனாக்காதே என்ற மறுபாதியின் மிரட்டலுக்கு பயந்து தொடரவில்லை. ( வெளியே வந்ததும் " நீ என்னை பார்க்கவே இல்லையே அம்மா என்றான்" :)... ) வண்ணம் தீட்டுதலுக்கு இடையில் ஆசிரியை ஓரிரண்டு கேள்விகள் கேட்டார். ஆனால் அவை என்ன என்ன என்று சொல்லவே இல்லை இன்று வரை."குச் நஹி ஹை அம்மா"தான் பதில்.
எங்களையும் உள்ளே அழைத்து எங்கள் முன்னிலையில் ஒரு ஹெலிக்காப்டர் புதிரை கொடுத்தார்கள் அவர் தான் புதிரில் புலியாயிற்றே மேலும் அவன் ப்ளே ஸ்கூலிலும் இது பயிற்சி அளிக்கப்பட்டதே என்பதால் கண்மூடி திறப்பதற்குள் முடித்துவிட்டான். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். பின்னர் பேட்டர்ன் போர்ட் ..மற்றும் ஞாபகத்திறனுக்கான ஒரு சோதனை . அவன் பெயர் ப்ளே ஸ்கூல் பெயர் எல்லாம் சரியாக பதில் சொல்லிவிட்டான். நன்றி என்றபடி எங்களை வெளியே செல்ல அனுமதித்தார் ஆசிரியை. ஆனால் வரும்போதே அத்தனையும் செய்தால் மிட்டாய் கிடைக்கும் நன்றி சொல்லவேண்டும் என்று பழக்கியதால் மிட்டாய் தரவில்லையே என்று ரகசியமாக என்னிடம் கேட்டுக்கொண்டான். பின்னர் நாங்களே வெளியே வாங்கிக்கொடுத்தோம்.
இரண்டாம் கட்டமாக ஒரு கான்ஸ்ப்ரன்ஸ் ஹாலில் பெற்றவர்கள் அனைவரும் அமரவைக்கப்பட்டனர். ப்ரின்ஸி மற்றும் தலைமையாசிரியை முன் பெற்றவர்கள் பெயர் , படிப்பு வேலை பற்றி சிறு அறிமுகம் தரவேண்டும். மற்றொரு குழந்தை இருந்தால் அவர்கள் எங்கே படிக்கிறார்கள் என்று குறிப்பிட சொன்னார்கள்.என் வாழ்நாளில் எனக்கு இது தான் முதன் முறையாக்கும், இத்தனை பேர் முன்னிலையில் இப்படி ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்திக்கொள்வது.. டெக் தீபாவிடம் நேர்முகத்தேர்வுக்கு நான் தனியாக பயிற்சி எடுத்தேனாக்கும் ஸ்கைப்பில்...:) சிலர் ஆகா ஊஹூ என்று டம்பம் அடித்தார்கள். என் கம்பெனி வேல்யூ அது இது .. என் குழந்தை இந்த வயசில் இத்தனை சிறப்பா பார்க்கமுடியாது என்று .. ஆனால் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பது அடுத்த நாள் கதை.

[மகளின் பள்ளி ஒரு கல்லூரியைப்போல இருக்குமே தவிர படோடபம் இருக்காது.
இதற்கான முடிவு தெரியும் முன் எதற்கும் இருக்கட்டுமென்று இன்னொரு பள்ளியிலும் போட்டுவைத்திருந்தோம் அங்கே அது பள்ளியா இல்லை ஹோட்டலா என்று எண்ணும் படி இருந்தது வரவேற்பரை.. பள்ளி ஏக்கர்களை வளைத்துப்போட்ட பெரும் இடம். 3 ஆண்டுகளாகத்தான் நடக்கிறது என்றாலும் 1870 ல் இருந்தே அவர்களுக்கு கல்விப்பாரம்பரியம் இருக்கிறது. கல்லூரி நடத்தி வருகிறார்களாம். உள்ளே நுழைந்ததும் குழந்தைகளைக்கவர சிறு வீடு,ஓக்கே ப்ளே ஐயிட்டங்கள் சறுக்கு , சீசா. அந்த சிறுவீட்டில் நுழைந்ததும் இங்கே கிச்சன் எங்கே அம்மா? என்கிறான் பையன்.. :)அங்கே இன்னும் முடிவு வரவில்லை 1 ம் தேதி தான் ஆன்லைனில் வரும்.]
பணம் கட்டும் தினத்தில் தலைமையாசிரியை மிக அழகான ஒரு உரையாற்றினார். மகளின் பள்ளி எளியோருக்கான ஒரு இலவசப்பள்ளியை நடத்திவருகிறார்கள். அதற்கான ஒரு சிறு தொகையை அளிப்பது ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தி நம் பிள்ளைகளின் கல்வியை தொடங்கும் நேரத்தில் மனநிறைவைத்தரும் என்றார். அவர்கள் கையில் கொண்டுவரச் சொன்ன அளவு பணத்திலே 5000 ரூ பள்ளிக்கட்டணத்தோடு அதிகமாக சொல்லி இருந்திருக்கிறார்கள் என்பதால் செக் இல்லை என்றோ பணம் இல்லை என்றோ ஆகாது. உங்களுக்கு மனநிறைவைத்தரும் என்றால் 5000ரூ தரலாம். இல்லை என்றாலும் இல்லை. ஆனால் பொதுவாக அப்படிப்பட்ட நிலையில் தருவதே ஒரே வழி. அதை மனநிறைவோடு தருகிறார்களா கட்டாயமாக நினைத்துத் தருகிறார்களா என்பது தான் வித்தியாசம்.
ஒரு தந்தை எழுந்து, நாங்கள் குழந்தைகளுக்கு உடைகள் கொண்டுவந்து தரலாமா ? என்று கேட்டார். தலைமையாசிரியை அழகாக இல்லை அது அவர்களின் தன்மானத்தை பாதிக்கும் என்றார். அவர் மீண்டும் பழைய உடைகள் அல்ல புதியவைகளே பண்டிகை மற்றும் விசேச தினங்களில் பகிர்வுக்கு மறுப்பில்லை என்றார்.
எளியவர்களின் குழந்தைகளுக்கான நேரம் மதியத்தில் தொடங்குகிறது. அவர்களுக்கு முழுப்பள்ளியிலும் நடமாட மற்றும் வசதிபடைத்தோரின் குழந்தைகள் அனுபவிக்கும் அத்தனை பொருட்களும் பங்கிடப்படுகிறது என்று கூறினார். கணினி போன்ற பள்ளியின் பொருட்கள்.அப்பள்ளியில் வாலண்டியராக ஆசிரியைப்பணி செய்ய அழைப்பு விடுக்கிறார்கள்.
பள்ளிக்கும் எங்களுக்குமான தொலைவு அதிகமென்பதால் அங்கே வாலண்டியராக இணைந்து செயல்பட தற்போது இயலவில்லை . ஒருவேளை மெட்ரோ எங்கள் பகுதியில் வந்துவிட்டால் முயற்சிக்கலாம் என்று ஒரு எண்ணம்.
புதிய தலைமையாசிரியை வந்த இவ்வருடத்தில் எளியவருக்கான பள்ளியின் சில குழந்தைகளில் மிக அறிவார்ந்த பிள்ளைகள் பகல் பள்ளிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பது எங்களுக்கு புதிய செய்தியாக இருந்தது.
வீட்டுக்கு வந்ததும் மகளிடம் முதல் கேள்வியாக அவர்களைப்பற்றியே கேட்டேன். மகளின் பதில் கேட்டதும் மிக ஆச்சரியமாகவும் அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. மேல் வகுப்பில் தான் இந்த புது சேர்க்கை நிகழ்ந்திருக்கிறது என்று அந்த அக்காமார்களின் பேச்சில் மகிழ்ச்சி இருந்ததாகவும்.. இந்த எளியவர்களின் குழந்தைகளின் மிக அன்பான கனிவான அணுகுமுறையை அவர்கள் இதற்கு முன் அவர்கள் வகுப்பின் தோழிகளிடமிருந்து கூட் பெற்றதில்லை என்றும் சொன்னார்களாம்.
உனக்கு இடம் கிடைத்துவிட்டதுடா ! என்ற குதூகலத்தைப்பார்த்து அவனுக்கு ஆச்சரியம். அவன் சொன்னது என்னவென்றால்...
அம்மா ஏக் நஹித்தோ தூஸ்ரே மே பேட்டூங்கா , ஜஹாத்தோ ஹே ன்னா... பர் மே ஆகே பேட்டூங்கா" ("அம்மா அங்கே நிறைய இடம் இருந்ததே ஒன்று இல்லாவிட்டால் இன்னோன்று.. உட்கார்ந்துக்குவேனே.. ஆனா நாம் முன்னாடி உக்காந்துக்குவேன்.. ")