Showing posts with label அமிர்தசரஸ். Show all posts
Showing posts with label அமிர்தசரஸ். Show all posts

December 14, 2007

பொற்கோயில் அமிர்தசரஸ் ஸ்பெஷல்-5

அமிர்தசரஸ் சென்ற முக்கிய காரணம் பொற்கோயில் பார்ப்பது தான். சீக்கியர்களின் முக்கியமான புனிதத்தலம் . உலகெங்கிலும் இருந்து சீக்கியர்கள் ஒருமுறையாவது வந்து போக நினைக்கும் கோயில்.சீக்கியர்களின் நான்காவது குரு "குரு ராம் தாஸ்" ஏற்கனவே இருந்த் நீர்நிலையை சுத்தம் செய்து மக்கள் உபயோகிக்கும்படி செய்து அதனை சுற்றி மக்கள் வாழத்தகுந்த இடமாக மாற்றினாராம். அந்த குளத்தின் நடுவில் தான் இந்த தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கோயில் இருக்கிறது.
இக்கோயிலில் நுழையும் முன் ஆண்களும் பெண்களும் தலையை துணியால் மூடவேண்டும் என்பது அவர்கள் மத வழக்கம் என்பதால் பெண்கள் சேலையோ துப்பட்டாவோ கொண்டு முக்காடிட்டு கொள்வார்கள். ஆண்கள் அங்கே வாசலில் வைக்க்ப்பட்டிருக்கும் ப்ளாஸ்டிக் பக்கெட்டில் போட்டு இருக்கும் பல வண்ணத் துணிகளால் தலையில் குல்லா போல கட்டிக்கொள்வார்கள். வாசல் பகுதியில் காலை சுத்தப்படுத்திக்கொள்ள தண்ணீர்
ஓடிக்கொண்டே இருக்கும் படி குழாய்கள் அமைத்திருக்கிறார்கள்..


உள்ளே புனித தீர்த்தகுளத்தில் குளிக்க வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றது.. குறைந்த வாடகையில்தங்கும் அறைகள் இருக்கின்றன.





இக்கோயிலை காலையில் ஒரு முறை யும் இரவில் ஒரு முறையும் பார்த்தால் தான் நிறைவாகத் தோன்றுகிறது எனக்கு.. காலையில் ஒரு முறை நின்று நிதானித்து கோயிலின் உள்ளே சென்று நடுநாயகமான பொற்கோயிலின் ஹர்மன்ந்திர் எனப்படும் இடத்தில் புனித புத்தகமான க்ரந்தசாஹிப் வாசிக்கப்படுவதை பார்த்துவிட்டு வரலாம். பின்னர் அங்கேயே தொடர்ந்து நடத்தப்படும் லங்கர் கானா எனும் இலவச உணவு அளிக்கும் அறைக்கு செல்லலாம்.


தட்டு , தண்ணீர் குடிக்க ஒரு கிண்ணம் தால் எடுக்க ஒரு ஸ்பூன் கையில் தந்து விடுவார்கள். உள்ளே தொடர்ந்து உணவு வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.. இரு கையாலும் ஏந்தி தான் அவர்கள் தரும் ரொட்டியை வாங்கிக்கொள்ளவேண்டும் . தால் மிக அருமையாக இருக்கும். உணவை முடித்துக்கொண்டு வெளியே வந்தால் தட்டுகளை கிண்ணங்களை கழுவ பெரிய ஹால் இருக்கும்.



அங்கே இரும்பாலான பெரிய பெரிய சிங்க்குகள் ஒன்றில் சோப்பு நுரை இன்னொன்றில் தண்ணீர் அலச ..பின்னர் மீண்டும் மீண்டும் அலச வரிசையாக தண்ணீர் நிரப்பிய சிங்க்குகள். நாம் சாப்பிட்ட தட்டுகளை வண்டியில் போட்டு அவர்கள் அங்கே கொண்டு செல்வார்கள்.
விருப்பமிருப்பவர்கள் வேண்டுதலைப்போல அங்கே சென்று அந்த வேலையில் ஈடுபடுவார்கள். போன முறை நான் நினைத்துக்கொண்டேன் முடியவில்லை..இம்முறை போனபோது நானும் என் மகளும் அங்கே சென்று சிறிது நேரம் தட்டு கிண்ணங்களை அலசி எடுக்கும் பணியில் சேர்ந்து கொண்டோம். சமைக்கும் இடத்திலும் உதவி செய்யலாம் என அறிந்தேன்.


பின்னர் இரவில் ஒரு முறை கோயிலின் உள்ளே சென்று மேல் மாடிவரை சென்று மீண்டும் ஒரு முறை க்ரந்தம் வாசிப்பதை தரிசிக்கலாம். ஆங்காங்கே சிறு சிறு புத்தகங்களோடு ஜபித்தபடி இருப்ப்வர்களைக்காணலாம்.

குளத்தில் தண்ணீரை தெளித்துகொள்ள முற்படும் போது கீழே சிந்திவிடும் தன்ணீரை ஒரு துணிகொண்டு துடைத்தப்படி இருப்பார்கள். எல்லாம் வருகின்ற பக்தர்கள் தான்.. கோயில்பணி செய்து கடவுள் அருள் பெற நினைக்கிறார்கள்.

இரவில் குளத்தில் தகதகவென பிரதிபலிக்கும் பொற்கோயிலை பார்த்தபடி அமைதியாக உட்கார்ந்து இருக்கும் போது மனதில் அப்படி ஒரு அமைதி வந்து சேருகிறது.


கிரந்த புக்கத்தை இரவில் வேறொரு அறை யில் கொண்டு சென்று வைத்துவிடுவார்கள் மீண்டும் காலையில் அது ஹர்மந்திருக்கு வரும். அந்த நிகழ்ச்சி நம் ஊரில் சாமியை பல்லாக்கில் கொண்டுசெல்வது போலவே இருக்கும்.. 9.45 இரவு வாத்திய இசையோடு பல்லாக்கில் புத்தகத்தை மூடி கொண்டு செல்வார்கள். பிறகு கதவு சாத்தப்படும்.

இத்தொடரை இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.

November 20, 2007

லவகுசா,துர்கையானா அமிர்தசரஸ்ஸ்பெஷல்-4

அமிர்தசரஸ் தொடர் 1,2,3
ராம் தீர்த் என்கிற இடம் அமிர்தசரஸிலிருந்து சௌகன்வான் சாலையில் 16 கிமீ தூரத்திலிருக்கிறது இங்கே தான் வால்மீகி ஆசிரமத்தில் சீதைதன் மகன்கள் லவாகுசாவைப் பெற்றெடுத்தாளாம். வால்மீகி ராமாயணத்தை எழுதிய இடமும் இது என்று சொல்கிறார்கள்.


மிகப்பெரிய குளம் அதை சுற்றியும் சிறு சிறு கோயில்கள் இருக்கின்றன.இப்போது பூஜ்ய மாதா என்கிற வயதான அம்மா பெயரால் குளக்கரை
யில் ஆங்காங்கே கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன .





லவாகுசாவின் பிறப்பிலிருந்து வளர்ப்புவரை பொம்மைகளால் செய்யப்பட்ட காட்சி கண்ணாடி ஓவியங்கள் என்று இப்போது தான் தயாராகிறது. குகை போன்ற ஒன்றில் அழகான காட்சிகள் செய்துவருகிறார்கள் பின்னாளில் இதுவும் ஒரு நல்ல சுற்றுலா தலமாகிவிடும்.






மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலை. வைஷ்ணோதேவியின் குகைக்கோயிலைப்போன்ற மாடல்கள் தான் எத்தனை விதம். ஒரு சுண்டெலியின் வாயில் குகை இன்னொருகோயிலில் முதலையின் வாய் தான் குகை வாயில். குழந்தைகள் குதித்தபடி உள்ளே ஓடுவதும் ஆடுவதும் என்று ஆனந்தம். குளத்தில் பொரி போட்டு கொஞ்சம் மீன்களோடு விளையாட்டு.




வால்வீகி ஆசிரமத்தில் ஒருவர் சாம்பல் மடித்து கொடுத்துக்கொண்டிருந்தார் பக்கத்தில் ஒரு ஹோம குண்டம் அவரைப்பார்த்தால் முஸ்லீம் துறவி போலக்கூட இருந்தார் வாய்விட்டு எதையோ மந்திரம் முணுமுணுத்தபடி இருந்தார் அதனால் ஒன்றும் கேட்க இயலவில்லை. அங்கெல்லாம் நம் ஓட்டை ஹிந்தியும் கிராமத்தாளுகளிடம் செல்லுபடியும் ஆவதில்லை என்பது வேறு விசயம்.


நவம்பர் மாதம் பௌர்ணமி நாளில் விழா நடக்குமாம்.. 4 நாட்களுக்கு.அங்கே குளிப்பதற்கு ஒரு லட்சம் பேர் வருவார்களா ம்.அத்தனை பெரிய குளம் தான் இந்த படத்தை பாருங்களேன் சிறப்பு பேருந்துகள் இருக்குமாம் அப்போது . ஆனால் சாதாரண நாட்களில் பேருந்துகளைக்கண்களில் காண்பதே அபூர்வமாகத்தெரிகிறது.அமிர்தசரஸில் உள்ளூர் வாகனங்கள் மிக மோசம். எல்லாரும் புகைக்கக்கும் வாகனங்களோடு அதிவேகமாக ஓட்டுகிறார்கள். சின்ன சின்ன சந்துகளில் கூட வளைத்து நெளித்து, ஆனால் இடித்தால் சண்டைப்போட்டு அந்த இரு நாட்களில் பார்க்கவில்லை அது அப்படித்தான் என்று போய்க்கொண்டிருந்தார்கள்.



துர்கையானா தீர்த் இது இன்னொரு பொற்கோயில் போன்ற தோற்றம் தருகிறது.. இக்கோயில் அமிர்தசரஸிலேயே தான் இருக்கிறது ஆட்டோவில் 150 ரூபாய் பேசிக்கொண்டு 4 அல்லது 5 இடங்கள் ஒரு நாளில் பார்த்தோம்.தண்ணீருக்கு நடுவில் இருக்கும் கிருஷ்ணன் கோயில் எப்போதும் அங்கே பஜன் நடந்த வண்ணம் இருக்கிறது. தங்க கோபுரம் நிறைவு பெறவில்லை தங்கம் தானம் செய்யக்கோருகிறார்கள்.இத்தீர்த்ததில் குளிக்க நோய் போகும் என்று நம்பிக்கை .. கொய்யா கனிகள் வைத்து பூஜை செய்வார்களாம்.. இப்படத்தை பெரிதுசெய்து இந்தி தெரிந்தவர்கள் கதையைப் புரிந்துகொள்ளுங்கள்.. இங்கே (130 வருடங்கள் என்று ஞாபகம்..)சியமாளா தேவிக்கோயில் இருக்கிறது..






பூஜ்ய மாதாவின் கோயில் இன்னொன்று அமிர்த சரஸிலேயே ஒரு வைஷ்னோ மாதா கோயில் இது நிஜமாகவே தவழ்ந்து செல்லும்படி ஒரிடத்தில் வருகிறது பிறகு தன்ணீர் காலை நனைக்கும் படியான குகைக்குள் போய் பார்க்கவேண்டும் சாமியை.. ஒரிஜனல் வைஷ்ணோ தேவிகோயில் போக இன்னும் வாய்ப்புகிடைக்கவில்லை..கோயிலில் பெங்களூர் கெம்ப் போர்ட் சிவன் கோயில் போல எல்லா சாமியும் இருக்கிறார்கள் அதில் நம்மூர் சாமிகளும் உண்டு.. மீனாட்சி , ரங்கநாதர் போன்று சில தெய்வங்கள்.

October 15, 2007

அமிர்தசரஸ் -3 ஜாலியன்வாலாபாக்

ஜாலியன் வாலாபாக் பற்றி படிக்காதவர்கள் இல்லை தான். ஆனால் அங்கே சென்று வந்தால் உங்கள் மனநிலை படிப்பதைக்காட்டிலும் அதிகமான வேதனைக்குள்ளாகும். அந்த இடம் மதில்களால் சூழப்பட்ட மிகப்பெரிய மைதானம். உள்ளே செல்லும் வாயிலோ ஒரு மாருதி கார் நுழையக்கூட சிரமமான இடம் மட்டுமே .

மனிதர்களின் உரிமையை மறுக்கும் ரவுலட் சட்டத்தை எதிர்த்து செய்யப்பட்ட கூட்டம் அது என்கிறார்கள். பைசாகி
( நம் பொங்கல் போன்ற விவசாயத்திருநாள் ) கூட்டம் என்கிறார்கள். எதுவானால் என்ன அங்கே கூடிய கூட்டம் அதிகம் ஏதுமறியாதவர்களால் குழந்தைகளால் வ்யதானவர்களால் நிரம்பி இருந்தது மட்டும் உண்மை.

ஜெனரல் டயர் இந்திய வீரர்கள் கை கொண்டே இந்த கொலைக்கட்டத்தை நடத்தி இருக்கிறான். வாசலை மறித்தபடி நின்று கொண்டு சுடுங்கள் என்று உத்தரவிட்டபின் முதலில் நடுவில் சுட்டனராம். மக்கள் சிதறி வலமும் இடமுமாக ஓட .. அடுத்ததாக வலமாகவும் இடமாகவும் சுட்டனராம். மக்கள் தரையோடு தரையாக விழுந்து உயிர் காக்க போராட தரையில் அடுத்ததாக சுட்டனராம்.

மதில்களில் ஏறி கடந்துவிடமுடியாது எனினும் அத்தனை பெரிய மதிலில் ஏறி உயிர் தப்ப நினைத்த பேருக்கும் குண்டு இருந்தது . இன்றும் அந்த மதில்கள் குண்டு துளைத்த அடையாளத்தைத் தாங்கி நிற்கிறது.
இன்று அந்த மைதானம் ஒரு நினைவுச்சின்ன பூங்காவாகப் பராமரிக்கப்படுகிறது.


அணையாத ஒரு விளக்கு எரிகிறது.

புகைப்படங்கள் காட்சிக்குவைக்கப்பட்டுள்ள சின்ன அறையின் உள்ளே நுழைபவர்க்ளின் கண்களைக்கலங்க வைக்கும் அந்த மனித உடல்களின் குவியல்களின் ஓவியம் அந்த காட்சியை நேருக்கு நேர் பார்ப்பது போன்ற ஒரு உணர்வைத்தருகிறது.

டயரை க் கொன்ற உத்தம்சிங் பற்றி படிக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் விட என் மனதில் நின்றது ரத்தன் தேவியின் கலங்கவைக்கும் கதை தான்.

ரத்தன் தேவி சொல்கிறார்... "" நான் அந்த நிகழ்ச்சி நடக்கும் போது வீட்டில் இருந்தேன். என் கணவர் அங்கே சென்றிருந்தார் . துப்பாக்கி சூடு பற்றி அறிந்ததும் நான் இரு பெண்களை துணைக்கு அழைத்துக்கொண்டு அங்கே சென்றேன்.. ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால் யாருக்கும் வெளியே வர பயம். கூட வந்த
பெண்களை திருப்பி அனுப்பிவிட்டு இரத்தவெள்ளத்தில் குவியல் குவியலாக கிடந்தவர்களில் நான் என்கணவரைத் தேடினேன்.

உறவினரைத்தேடி வந்த ஒருவரின் உதவியோடு என் கணவரை நகர்த்தி வைத்தேன். அவர் தோள்களில் உறவினரின் உடலை எடுத்து சென்றார் . என் வீட்டிலிருந்து யாரையாவது கட்டில் கொண்டு வரும்படி பணித்தேன் . யாரும் வரவில்லை. இரவெல்லாம் ஒரு மூங்கில் குச்சி கொண்டு நாய்களிடம் இருந்து என் கணவர் உடலை க் காப்பாற்ற முயற்சித்தேன்.ஒருவர் அவர் காலை எடுத்துவிடும்படி கூறினார். இரத்த வெள்ளத்தில் இருந்த அவருடைய ஆடையை தூக்கி காலை சரி செய்தேன்.

அருகில் 16 வயது சிறுவன் ஒருவன் முனகினான். நான் அருகில் சென்றதும் குளிர்கிறதா என்று கேட்டேன் . அவன் இல்லை எனக்கு தண்ணீர் வேண்டும் என்றான் அந்த மைதானத்தில் தண்ணீருக்கு எங்கே போவேன். என்னை விட்டு போகாதீர்கள் என்றான். நானும் என் கணவர் உடலை எடுத்து செல்லாதவரை எங்கேயும் செல்லமுடியாது இங்கேயே இருப்பேன் என்று சொன்னேன்.
எங்கேயும் முனகல்கள்.. இரத்தத்தின் வாடை. இருட்டு .நான் மட்டும் தனியே உட்கார்ந்து இருந்தேன். அந்த இரவினைப்பற்றி
எனக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும். அதை விளக்க வார்த்தைகள் இல்லை.. ""
படிக்கும்போதே கண்கலங்கியது. எத்தனை கொடூரம் அந்த இரவு.

சொந்த கச்சேரியில் தேவ் நிறைய படம் போட்டிருக்கார்.
அந்த கிணறு குண்டுகளுக்கு பயந்து குழந்தைகளை இடுப்பில் இடுக்கியபடி குதித்த பெண்கள் .. ஆண்கள் என்று நூற்றுக்கணக்கானவர்கள் உயிரைக்குடித்த கிணறு.
கொஞ்சம் கற்பனை கலந்தது தான் திரைப்படங்கள் என்றாலும் இந்த காட்சியை முடிந்தால் பாருங்கள்.

October 7, 2007

அமிர்தசரஸ் ஸ்பெஷல்-2 (வாஹா பார்டர்)

அமிர்தசரஸ் செல்லுவதற்கு நாங்கள் தேர்ந்தெடுத்தது ஷானே பஞ்சாப் ரயில் , வெயிலுக்கு வயதானவர்களுக்கு ஏசி இருக்கட்டுமே என்பதால் சேர்க்கார் புக் செய்திருந்தோம்.. குளிரூட்டப்பட்ட அறையின் பழுப்பு நிறக்கண்ணாடி வழியே இதமாகவே தெரிந்தது சுட்டெரிக்கும் வெயிலும். தாமதமாக கிளம்பிய ரயில் வண்டி அரைமணி நேரம் தாமதமாகவே சென்றடைந்தது. இறங்கிய உடனே யே சாமான்களோடே வண்டி பேசினோம் வாஹா பார்டர் செல்வதற்கு. ஆட்டோ என்றால் 250 கார் என்றால் 400, 450 என்று பேரம் பேசி செல்லலாம். 28 கிலோமீட்டர்ஸ்.

வாஹா பார்டரில் 4.30 மணிக்கு அனுமதி அளிப்பார்கள்.
வெளியே மூவர்ணத்தில் ஐஸ் செய்து விற்கிறார் ஒருவர். சிறு சிறு பையன்கள் மூவர்ணக்கொடிகளும் மூவர்ணத்தில் அமைந்த வெயிலுக்கான நெற்றி ம்றைக்கும் தொப்பிகளும் விற்கின்றன்ர் .


முழு நிகழ்ச்சிகளின் வீடியோ 20 30 ரூபாய்க்களுக்கு கிடைக்கிறது . நல்ல தரமானது . 30 ரூபாய்க்கு வாங்கினால் அமிர்தசரஸின் முக்கியமான இடங்கள் பொற்கோயில் ஜாலியான் வாலாபாக் உட்பட எல்லாமே காட்டுகிறான் அதில் . நியாபகத்துக்கு எல்லாருமே வாங்கிச் செல்லலாம். வெளி வாயிலிலிருந்து உள்ளே செல்ல ஒரு கிலோ மீட்டர் நடக்கவேண்டும். அதற்கும் இம்முறை ரிக்ஷா கிடைக்கிறது. சில வண்டிகள் மட்டும் அனுமதி பெற்று உள்ளே செல்லலாம். வழியில் மின்சாரம் செலுத்தப்பட்ட தடுப்புகள் இரு நாட்டுக்கும் நடுவே செல்வதைக் காணலாம்.



ஸ்வர்ண ஜெயந்தி வாயிலின் முன் இரு கைகள் குலுக்குவதை ப்போன்ற சிற்பம்.
எப்போதுமே இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க கூட்டம் அதிகமாகவும் பாகிஸ்தானில் குறைவாகவும் தான் வருவதா தோன்றுகிறது. வாஹா அருகில் பெரிய ஊரான சுற்றுலா ஊர் அமிர்தசரஸ் இருப்பதால் அப்படி இருக்க்லாம் என்று நினைக்கிறேன். இம்முறை எங்கெங்கும் தலைகள் தான்.






நேரடி யான பாட்டு நிகழ்ச்சி நடந்தது. அதன் சிறு துண்டு காட்சி தான் கீழே. கொடி இறக்கும் காட்சியை ஆரம்பிக்கும் முன் அவர்களின் வர்ணனைகளோடான பாடல்கள் மெய்சிலிர்க்க வைத்தது. ஒரு ஜவான் பெண்குரலில் லதா மங்கேஷ்கரின் பாடலை பாடினார் என் கண்களில் இருந்து கட்டுப்படுத்தமுடியாமல் கண்ணீர் வந்துவிட்டது.. அந்த பாடலை(ம்யூசிக் இண்டியா ஆன்லைன் by anuradha ) எப்போது கேட்டாலும் இப்படித்தான்.. லதா எப்படித்தான் முழுதாக அந்த பாடலைப் பாடினாரோ ...துக்கம் தொண்டை அடைக்கும்.






இந்த முறை நம் மக்களின் அட்டகாசம் தாங்க வில்லை.. அவரவர் இடத்தில் இருந்து பார்த்தால் காலரியில் நன்றாக வே தெரியும்..ஆனால் எழுந்து எழுந்து நின்று சரியாகவே பார்க்க விடவில்லை. ஜவான்கள் முறை மாற்றி பொறுப்பு எடுத்துக்கொள்வதும் கொடிகளை இரு நாட்டு வீரர்களும் இறக்கி மரியாதையோடு ஒருவருக்கொருவர் சல்யூட் அடித்து கதைவை மூடிக்கொண்டு வருவதும் தான் பார்க்க வேண்டிய விசயம். கால்களை அடித்து அடித்து நடை போடும் அவர்களின் வேகம் அசாத்தியமானது.

மக்களை நம் நாட்டின் பெயர் சொல்லி ஜிந்தாபாத் என்று வாழ்த்து மட்டும் சொல்லும்படி கேட்டுக்கொண்டனர் மைக்கில். இல்லையென்றால் உணர்ச்சி பெருக்கில் இவர்கள் பாகிஸ்தான் முராதாபாத் என்று ஒழிக கோசமும் போடுவார்கள். பாடல்கள் சமயத்தில் கட்டுப்படுத்தமுடியாமல் நம் மக்கள் எழுந்து ஆடுவதும் நடந்தது. இறங்கி காவலர்களின் அனுமதியோடு நடுவிலும் ஆடினார்கள் சிலர்.

பாகிஸ்தானியர் கூட்டம் குறைவென்பதால் வரும் ஒரு சிலர் கொஞ்சம் அதீதமாய் செய்வார்கள். ஒரு வர் முழுவதும் அவர்களின் கொடி போன்ற ஆடையுடுத்தி பெரிய கொடியை அசைத்தபடியே இருந்தார்.. அடிக்கடி சிலர் அப்படி கொடியோடு கதவு வரை ஓடி வருவதும் போவதுமாய் இருந்தனர். நம் மக்களின் நாட்டுப்பற்று இது போன்ற நேரங்களில் நன்றாகத்தான் இருக்கிறது. எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை அதை எடுத்துபோகாதே இதை எடுத்துப்போகாதே என்று.. அமிர்தசரஸில்.அதுவே பெரிய விசயமாக இருக்கிறது . லாகூரிலிருந்து பஸ் வருகிறது இல்லையா வருபவர்களை வரவேற்கும் பலகை.

6.30 வரை ஆகிறது வெளியே வரும்போது.

October 3, 2007

அமிர்தசரஸ் ஸ்பெஷல்- 1(லஸ்ஸி,குல்ச்சா,தாபா)

போனவாரக்கடைசியில் அமிர்தரஸில் இருந்தேன். கொஞ்ச நாளாவே எதுவும் எழுத தோன்றாமல் இருந்தேன்.. போகும் முன்னரே நண்பர்கள் அப்ப உங்களுக்கு எழுத விசயம் கிடைச்சிடுச்சு என்று கிண்டலடிக்க ஆரம்பித்தார்கள். அதான் வந்தவுடன் ஒரு பதிவு போடறேன்.



193 வருசமா இருக்காம்நாங்க லஸ்ஸிவாங்கி குடிச்ச ஞான்சந்த் ஹலுவாயி கடை .. (93 ஐ தான் ஆட்டோக்காரர் சொல்லி இருப்பாரோ நம்ம இந்தி அறிவுக்கு அப்படி கேட்டிருக்குமோன்னும் ஒரு சந்தேகம்.) சின்ன எவர்சில்வர் பானையில் மோர் கடையற மிசின் பொருத்தி இருக்காங்க.. தட்டு தட்டா அலமாரியில் தயிர் அடுக்கி வச்சிருக்காங்க.தயிரோட மேல் ஆடையை தனியா எடுத்து வச்சிட்டு தயிரை உள்ள போட்டு ஐஸ்கட்டி போட்டு கடைஞ்சு பைப் பைத் திறந்துவிட்டு பெரிய்ய்ய்ய டம்ளரில் ஊத்திவைக்கிறான் சின்ன பையன்.

கடை ஓனர் ஒரு கிண்ணத்துல இருந்து வெண்ணை ஒரு உருண்டையும் தயிர் ஆடை கொஞ்சமும் போட்டு "கேவ்டா எசென்ஸ்" ( அது வாசனைக்காம் என்ன எஸென்ஸென்று தெரியல) ஊத்தி கொடுத்தார். முழு டம்ளரும் அந்த ஊருக்காரங்க அனாயாசமா குடிக்கறாங்க.

இது காலையில் இருந்து காலியான தயிர் தட்டுக்கள் மதியத்துக்குள். இன்னமும் அலமாரியில் ஒரு தட்டுக்கும் இன்னோரு தட்டுக்கும் நடுவில் இரண்டு கட்டை வைத்து (ஒட்டிக்காமல் இருக்க) அடுக்கடுக்காக அடுக்கி வைத்திருந்தார்கள்.
தயிரும் ஒரு கிண்ணம் நிறைக்க வாங்கி சாப்பிடறாங்க.நல்ல கெட்டித்தயிர் அதனால் தான் அந்த ஊரு காரங்க அப்படி கொழுக்கு மொழுக்குன்னு இருக்காங்க போல.



அப்பறம் குல்ச்சாஹட் ராணி பாக் தெரு. இதுவும் ஒரு பேமஸான கடையாம். சின்ன கடை தான்.
இதுல சப்பாத்திக்குள்ள உருளைக்கிழங்கை வச்சு தந்தூரி அடுப்பில் போட்டு எடுக்கறாங்க. ஒரு பட்டர் சதுரத்தை மேலே வச்சுத்தராங்க வித் சென்னா மசாலா. எதோ இண்டியன் பிட்ஸா மாத்ரி இருக்கு.



கேசர்க்கா தாபா இந்த ஹோட்டல் 1916 ல் இருந்து இருக்காம். அந்த ரோட்டுக்குள்ள மத்த நாளில் கால் வைக்க இடம் இருக்காதாம். ஞாயிறு சாயங்காலம் என்பதால் பரவாயில்லை என்றார் ஆட்டோக்காரர். ஆனால் அதுவே ஒரு திரில்லிங் அனுபவம் தான் மிக சின்ன சின்ன சந்துபொந்துகளில் திறமையாக ஓட்டும் திறனிருந்தால் மட்டுமே முடியும். ஒலிப்பான் உபயோகிக்காமல் யாரும் ஓட்டுவதே இல்லை . அதிவேகம் , இடித்தாலும் யாரும் சண்டை போட்டு பார்க்கவில்லை நாங்கள். காற்றில் மாசு அதிகம்.
கடையின் சமையலறை தரையைப் பார்த்தால் சிலர் சாப்பிட மறுக்கக்கூடும்.
தரை முழுதும் ஈரம் சதசத என்றிருக்கிறது. ரொட்டி செய்பவர்கள் பெரிய மேடைகள் அமைத்து அதன் மேல் அமர்ந்து செய்கிறார்கள் அதனால் பரவாயில்லை. சின்ன சின்ன கவர்களில் தால் விற்கிறார்கள்.. வீட்டில் ரொட்டி செய்து கொண்டு தால் கடையில் வாங்கிக் கொள்வார்கள் போல. எங்கெங்கிருந்தோ இந்த கடையின் பெயரை விசாரித்து வருகிறார்கள்.



பராத்தா , ஸ்டஃப்டு பராத்தா
கொஞ்சம் தயிரில் பூந்தி போட்ட ராய்தா , முழூஉளுந்து போட்ட குழம்பு (தால் மக்கனி) சென்னா மசாலா வெங்காயம் ம் ஷாகி பனீர் இது நாங்கள் டேஸ்ட் செய்த ஐயிட்டங்கள். வீடியோ எடுக்க சமையலறை உள்ளே போன எங்களுக்கு ஒரே மரியாதை நல்லா போஸ் கொடுத்தாங்க எல்லாரும்.