Showing posts with label கோயில். Show all posts
Showing posts with label கோயில். Show all posts

March 4, 2008

தனியூர் - புனுகீஸ்வரர் கோயில்

அருள்மிகு சாந்தநாயகி உடனுறை புனுகீசுரர் திருக்கோயில் மயிலாடுதுறை,நாகைமாவட்டம், தமிழ்நாடு.
மயிலாடுதுறை நகரினுள் கூறைநாடு என்னும் பகுதியுள் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இப்பகுதி தனியூர் என்று குறிக்கப்பட்டு வந்தது. மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து ஏறக்குறைய 1 ½ கி.மீ மேற்கிலும்,
மயிலாடுதுறை தொடர்வண்டி நிலையத்திலிருந்து1 ½ கி.மீ கிழக்கிலும்,இத்தலம் அமைந்துள்ளது.

இத்தலம் தேவாரப்பாடல் பெறாவிட்டாலும்- வைப்புத்தலமாகக் குறிக்கப்படாவிட்டாலும், சிறப்புடைய தலமாகும்.சிவத்தலங்கள் மொத்தம் 1008 என்று கூறப்படுகிறது. இவற்றுள் 276 தலங்களுக்கு மட்டுமே தேவாரப் பாடல்கள் கிடைக்கின்றன.ஏனைய தலங்களைப் பற்றிய பாடல்கள் அழிந்து போயின. புனுகீசர் திருக்கோயில் அவற்றுள் ஒன்றாக இருக்கலாம்.1008 சிவத்
தலங்கள் பற்றிய பட்டியலில் பாரிஜாதவனேசுரம் என்ற பெயரில் சில தலங்கள் உள்ளன். அவற்றுள் இது ஒன்றாக இருக்கலாம். ஏனெனில் பாரிஜாதம் என்னும் பவழமல்லிகை இத்தலத்தின் தலவிருட்சமாகும்.மேலும் இத்தலம்
பாடல்பெற்ற சிவத்தலங்களுக்கு இணையாகக் கருதப்படும் சிறப்புக்களைப் பெற்றுள்ளது.

திருக்கோயில் அமைப்பு:
கோயிலுள் நுழையுமுன் ஐந்து நிலைக்கோபுரம் அமைந்துள்ளது. நேராகப் பலி
பீடமும்,உயரிய கொடிமரமும் அமைந்துள்ளன.

இத்திருக்கோயில் இரு பிரகாரங்களுடன் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையுள் புனுகீசப்பெருமான் எழுந்தருளியுள்ளார். சாந்தநாயகியம்மை
தெற்கு நோக்கி யவாறு உள்ளார்.அம்மனுக்குத்தனியான உள் பிரகாரம் சிறிதாக அமைந்துள்ளது.கொடிமரத்தின் வலப்புரம் அலங்கார மண்டபமும்,அதன்
அருகில் பள்ளியறையும் உள்ளன.

வெளிப்பிரகாரத்தின் கன்னிமூலையில்
விநாயகப்பெருமான் உள்ளார்.அருகில் சகஸ்ரலிங்கம், சனீஸ்வரர் ஆகியோருக்குச் சந்நிதிகள் அமைந்துள்ளன. தென்பகுதியில் திருக்குளம் அமைந்துள்ளது
வெளிப்பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் யாகசாலையும்,தென்கிழக்கு மூலையில் மடப்பள்ளியும் அமைந்துள்ளன.கீழ்ப்பகுதியில் நந்தவனம்
அமைந்துள்ளது.

உள்பிரகாரத்தின் கன்னிமூலையில் வரதவிநாயகர் சந்நிதியும் அருகில் உற்சவமூர்த்திகள் எழுந்தருளியுள்ள சந்நிதியும் அமைந்துள்ளன.
வடமேற்குப்பகுதியில் ஆறுமுகப்பெருமான்,இலக்குமி ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன.தெற்கு நோக்கி ஆடல்வல்லானின் சந்நிதி அமைந்துள்ளது. வடக்கு உள்பிரகாரத்தில் தலவிருட்சமான பவள
மல்லிகை அமைந்துள்ளது. கருவறையின் வடக்குமாடங்களில் துர்க்கை, பிரம்மா ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன.அதனருகில் சண்டேசர்
சந்நிதி உள்ளது. வடகிழக்கு மூலையில் பைரவர்,சூரியன் ஆகியோரின் திருவுருவச்சிலைகள் உள்ளன. கீழ்ப்பகுதியில் நவக்கிரகங்களுக்கான சந்நிதி உள்ளது. அதனை அடுத்து மேற்கு நோக்கியவாறு கீழக்குமரர்சந்நிதி
உள்ளது. கருவறையின் கிழக்கு மாடத்தில் லிங்கோத்பவர் அமைந்துள்ளார்.

உள்பிரகாரத்தின் தென்கிழக்குப் பகுதியிலும்,தெற்கிலும் அறுபத்து மூவர் சந்நிதி உள்ளது.ஆலமர்கடவுள்(தட்சிணாமூர்த்தி) தெற்கு நோக்கி
அருள் பாலிக்கிறார். இங்கு நால்வருக்கும் சேக்கிழாருக்கும் திருவுருவங்கள் உள்ளன. மாடத்தில் ஜுரஹரேசுரர்,பிள்ளையார் உருவங்கள் உள்ளன.
புதிதாகச் செய்யப்பட்ட அறுபத்துமூவரின் செப்புச்சிலைகள் உள்ளன. அதனை அடுத்து இத்தலத்தில் திருவவதாரம் செய்ததாகக் கருதப்படுபவரும்
அறுபத்துமூன்று நாயனார்களில் ஒருவருமாகிய
நேசநாயனாரின் சந்நிதி உள்ளது.சிவனடியார்களுக்கு ஆடைகள் ஈந்த தொண்டினை இவர் செய்ததாகப் பெரியபுராணம் கூறுகிறது. (தொடரும்)

(பி.கு) என்ன இது என் வழக்கமான பேச்சுத்தொனியிலான பதிவாக இல்லையே என்று குழம்புபவர்களுக்கு ... ஆமாம் இது நான் எழுதியது இல்லை.. மண்டப்பத்தில் எழுதி வாங்கியது.. என் அப்பா எழுதி அனுப்பியிருந்தார்கள்... பிரதி எடுத்து ஒட்டியிருக்கிறேன்.
புனுகீஸ்வரர்கோயில் சில நினைவுகள்

February 28, 2008

புனுகீஸ்வரர் கோயில்

புனுகீஸ்வரர் கோயில்.. சின்ன வயசில் வாரத்தில் முக்கால்வாசி நாட்கள் கோயிலில் தான் சாயங்காலப்பொழுதுகள். வியாழன் தட்சிணாமூர்த்திக்கு ..அபிசேகத்திலிருந்து ஒரு கை சுண்டல் வரை என்று ஆரம்பிக்கும் , வெள்ளிக்கிழமை விடுமுறை என்றால் துர்க்கைக்கு விளக்கு .. சனிக்கிழமை சனிபகவான் அர்ச்சனை, எள்ளுசாதம் ஒரு பிடி.. ஞாயிற்றுக்கிழமை வாரவழிபாடு.. அம்மா அப்பா போகும் இடமெல்லாம் நாங்களும்..
( punugeeswarar temple)

அன்றைக்கெல்லாம் வீட்டில் தொலைகாட்சிப்பெட்டியும் கிடையாது. ஒவ்வொரு சன்னதியிலும் எல்லாரும் பாடல்களைப்பாடி பின்னர் ஒவ்வொரு பூசையாக முடியும்.சாயங்காலம் ஆரம்பிச்சு இரவு ஆகிவிடும் . அடுத்து அங்கே, அடுத்து இங்கே என்று ஓடி ஓடி வரிசையில் முன்னால் இடம் பிடித்து , சில சமயம் எங்களைப்போன்ற சின்னப்பிள்ளைங்களுக்கும் தனியா பாட வாய்ப்பு கிடைக்கும் ..

தேவாரம் இன்னும் சின்ன சின்ன பாட்டெல்லாம் பழகிவைத்திருப்போம். கூட்டத்தோட கூட்டமா சிவபுராணம் மங்கள ரூபிணி கூட சொல்ல பழகி விட்டோம். ப்ரதோஷம்ன்னா அது ஒரு மகிழ்ச்சி நந்திக்கு அபிசேகம் , முள் பாதையில் ப்ரகாரம் சுற்றுவது என்று. ..இப்ப முழுதும் சிமெண்ட் போட்டாச்சு.ப்ரதோஷம்ன்னா இப்பகொஞ்ச காலமா எல்லா கோயிலிலும் கூட்டம் இருக்கு.. அப்பவே எங்க கோயிலில் கூட்டம் தான்.

வருடத்தில் ஒரு நாள் ஆண்டுவிழா அன்று நிறைய சிவபூசை செய்பவர்களை அழைத்து சிறப்புற பூசை நடக்கும் . ஒவ்வொருவரிடமும் போய் விபூதி பூசிக்கொள்வோம் . விளக்குபூஜை நாட்கள் , வேடிக்கை பார்த்த காலத்திலிருந்து நானே செய்த வரை அந்த கோயில் பத்திய நினைவுகள் இருக்கிறது. கார்த்திகை க்கு சொக்கப்பனை. இப்படி ஒவ்வொரு விசேச நாட்களும் கோயிலோடே நகர்ந்தது.

ஏறக்குறைய் என் வீடு போல அந்த கோயில் என்று சொல்லலாம்..என் திருமண வரவேற்புக்கு மாப்பிள்ளை அழைப்பு அங்கிருந்து ஆரம்பிக்கும்வரை.. சின்னபிள்ளைங்களா இருக்கும்போது
கோயிலில் வாரவழிபாட்டில் ஒரு தாத்தா ஆச்சி கிடைச்சாங்க கோயில் ஆச்சி கோயில் தாத்தான்னு சொல்லுவோம் சிவன் எனக்கு நண்பரைப்போல.. எப்பவும் வேண்டுதலாக எதையும் வைத்ததே இல்லை. ஒரு பாட்டு மனதில் , அதன்பின் , எனக்கு எது நல்லது தெரியாதா .. அதெல்லாம் தானா செய்வே இல்ல,என்று சொல்லிவிட்டு திரும்பிடுவேன்..

மக்கள் முருகன் மகாலட்சுமி சனிபகவான்னு ஒரு இடம் விடாம பரிட்சைபேப்பர் நம்பரை திரிக்கரியாலேயே எழுதி எக்கசக்கமா வேண்டுதல் வச்சிருப்பாங்க...

சுத்தி வரும்போது சாமிக்கு நேர் பின்னால் அடிமுடி காணும் முயற்சி யில் ப்ரம்மாவும் விஷ்னுவும் இருக்கும் லிங்கோத்பவர் சாமி எனக்கு ரொம்ப பிடிக்கும். தட்சணாமூர்த்தி கிட்ட மட்டும் கூடுதலா கொஞ்ச நேரம் அமைதியா நின்னு மனதுக்குள் நமச்சிவாய சொல்வதும் ரொம்ப பிடிக்கும். கொஞ்ச நாள் முன்னால் அறுபத்து மூவருக்கும் உற்சவ மூர்த்தி செய்திருந்தார்கள் .. அழகோ அழகு .
பதிவர் ஆயில்யன் ஊருக்குபோய் எடுத்து வந்த கோயில் படங்களை அனுப்பிய உடனே எனக்கு வந்த நியாபகங்களை இங்கே எழுதி திரும்ப கொண்டுவருகிறேன் அந்த நினைவுகளை...
சாந்தநாயகி சமேத புனுகீஸ்வரர் கோயில் பத்தி விளக்கமா பத்தி அடுத்த பதிவில்..


கோயில் படங்கள் இணையத்தில் ரொம்ப நாளா தேடியும்கிடைக்கல.. ஆயில்யன் உதவியில் இன்னைக்கு நானே போட்டுடறேன்.. (பாருங்க ஆங்கிலத்தில் யாராவது தேடினாலும் கிடைக்கனும்ன்னு போட்டோ விற்கு
கீழே ஆங்கிலத்தில் பெயர் )