மயிலாடுதுறை நகரினுள் கூறைநாடு என்னும் பகுதியுள் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இப்பகுதி தனியூர் என்று குறிக்கப்பட்டு வந்தது. மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து ஏறக்குறைய 1 ½ கி.மீ மேற்கிலும்,
மயிலாடுதுறை தொடர்வண்டி நிலையத்திலிருந்து1 ½ கி.மீ கிழக்கிலும்,இத்தலம் அமைந்துள்ளது.
இத்தலம் தேவாரப்பாடல் பெறாவிட்டாலும்- வைப்புத்தலமாகக் குறிக்கப்படாவிட்டாலும், சிறப்புடைய தலமாகும்.சிவத்தலங்கள் மொத்தம் 1008 என்று கூறப்படுகிறது. இவற்றுள் 276 தலங்களுக்கு மட்டுமே தேவாரப் பாடல்கள் கிடைக்கின்றன.ஏனைய தலங்களைப் பற்றிய பாடல்கள் அழிந்து போயின. புனுகீசர் திருக்கோயில் அவற்றுள் ஒன்றாக இருக்கலாம்.1008 சிவத்
தலங்கள் பற்றிய பட்டியலில் பாரிஜாதவனேசுரம் என்ற பெயரில் சில தலங்கள் உள்ளன். அவற்றுள் இது ஒன்றாக இருக்கலாம். ஏனெனில் பாரிஜாதம் என்னும் பவழமல்லிகை இத்தலத்தின் தலவிருட்சமாகும்.மேலும் இத்தலம்
பாடல்பெற்ற சிவத்தலங்களுக்கு இணையாகக் கருதப்படும் சிறப்புக்களைப் பெற்றுள்ளது.

திருக்கோயில் அமைப்பு:
கோயிலுள் நுழையுமுன் ஐந்து நிலைக்கோபுரம் அமைந்துள்ளது. நேராகப் பலி
பீடமும்,உயரிய கொடிமரமும் அமைந்துள்ளன.
இத்திருக்கோயில் இரு பிரகாரங்களுடன் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையுள் புனுகீசப்பெருமான் எழுந்தருளியுள்ளார். சாந்தநாயகியம்மை
தெற்கு நோக்கி யவாறு உள்ளார்.அம்மனுக்குத்தனியான உள் பிரகாரம் சிறிதாக அமைந்துள்ளது.கொடிமரத்தின் வலப்புரம் அலங்கார மண்டபமும்,அதன்
அருகில் பள்ளியறையும் உள்ளன.

வெளிப்பிரகாரத்தின் கன்னிமூலையில்
விநாயகப்பெருமான் உள்ளார்.அருகில் சகஸ்ரலிங்கம், சனீஸ்வரர் ஆகியோருக்குச் சந்நிதிகள் அமைந்துள்ளன. தென்பகுதியில் திருக்குளம் அமைந்துள்ளது
வெளிப்பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் யாகசாலையும்,தென்கிழக்கு மூலையில் மடப்பள்ளியும் அமைந்துள்ளன.கீழ்ப்பகுதியில் நந்தவனம்
அமைந்துள்ளது.
உள்பிரகாரத்தின் கன்னிமூலையில் வரதவிநாயகர் சந்நிதியும் அருகில் உற்சவமூர்த்திகள் எழுந்தருளியுள்ள சந்நிதியும் அமைந்துள்ளன.
வடமேற்குப்பகுதியில் ஆறுமுகப்பெருமான்,இலக்குமி ஆகியோரின் சந்நிதிகள் அமைந்துள்ளன.தெற்கு நோக்கி ஆடல்வல்லானின் சந்நிதி அமைந்துள்ளது. வடக்கு உள்பிரகாரத்தில் தலவிருட்சமான பவள
மல்லிகை அமைந்துள்ளது. கருவறையின் வடக்குமாடங்களில் துர்க்கை, பிரம்மா ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன.அதனருகில் சண்டேசர்
சந்நிதி உள்ளது. வடகிழக்கு மூலையில் பைரவர்,சூரியன் ஆகியோரின் திருவுருவச்சிலைகள் உள்ளன. கீழ்ப்பகுதியில் நவக்கிரகங்களுக்கான சந்நிதி உள்ளது. அதனை அடுத்து மேற்கு நோக்கியவாறு கீழக்குமரர்சந்நிதி
உள்ளது. கருவறையின் கிழக்கு மாடத்தில் லிங்கோத்பவர் அமைந்துள்ளார்.
உள்பிரகாரத்தின் தென்கிழக்குப் பகுதியிலும்,தெற்கிலும் அறுபத்து மூவர் சந்நிதி உள்ளது.ஆலமர்கடவுள்(தட்சிணாமூர்த்தி) தெற்கு நோக்கி
அருள் பாலிக்கிறார். இங்கு நால்வருக்கும் சேக்கிழாருக்கும் திருவுருவங்கள் உள்ளன. மாடத்தில் ஜுரஹரேசுரர்,பிள்ளையார் உருவங்கள் உள்ளன.
புதிதாகச் செய்யப்பட்ட அறுபத்துமூவரின் செப்புச்சிலைகள் உள்ளன. அதனை அடுத்து இத்தலத்தில் திருவவதாரம் செய்ததாகக் கருதப்படுபவரும்
அறுபத்துமூன்று நாயனார்களில் ஒருவருமாகிய
நேசநாயனாரின் சந்நிதி உள்ளது.சிவனடியார்களுக்கு ஆடைகள் ஈந்த தொண்டினை இவர் செய்ததாகப் பெரியபுராணம் கூறுகிறது. (தொடரும்)
(பி.கு) என்ன இது என் வழக்கமான பேச்சுத்தொனியிலான பதிவாக இல்லையே என்று குழம்புபவர்களுக்கு ... ஆமாம் இது நான் எழுதியது இல்லை.. மண்டப்பத்தில் எழுதி வாங்கியது.. என் அப்பா எழுதி அனுப்பியிருந்தார்கள்... பிரதி எடுத்து ஒட்டியிருக்கிறேன்.
புனுகீஸ்வரர்கோயில் சில நினைவுகள்

