Showing posts with label தில்லி தமிழ்ச்சங்கம். Show all posts
Showing posts with label தில்லி தமிழ்ச்சங்கம். Show all posts

February 17, 2011

நாஞ்சில்நாடனுக்கு பாராட்டுவிழா - தில்லி தமிழ்ச்சங்கம்




தில்லி தமிழ்ச்சங்கம் சார்பில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டது. வெளியே மழைக்காற்றும் சிலுசிலுப்புமாக இருந்தது. வழக்கம்போலவே போவதா வேண்டாமா குழப்பங்களுடன் முதல் முறையாக( இப்படியே எத்தனை முறை சொல்வேனென்று கேட்காதீர்கள்) நிஜம்மாகவே முதல் முறையாக இரண்டு பேருந்து(1மணிநேரம்) மாற்றித் தமிழ்ச்சங்க வாசலை அடைந்தேன்.

6 மணிக்கு தொடங்கவேண்டிய நிகழ்வு 6.30 வாக்கில் தொடங்கியது. பேராசிரியர் நாச்சிமுத்து அவர்கள் நாஞ்சில் நாடன் அவர்களை வாழ்த்தி நிகழ்வைத் தொடங்கிவைத்தார். நுணுக்கமான விவரங்களை காவியமரபில் வருவது போன்றே நாஞ்சில் நாடன் அவர்களின் படைப்பில் காணமுடிகிறது என்று சுட்டிக்காட்டினார். இன்றைய இளைஞர்களைத் தமிழின்பாலும் வாசிப்பின்பாலும் ஈர்க்கக்கூடிய கவர்ச்சியுடைய எழுத்தாளர்களில் இவரும் ஒருவர் எனப்பாரட்டினார். இந்த விருது சக தமிழனாக அனைவருக்குமே பெருமை அளிக்ககூடிய விருதென்று வாழ்த்தினார்.

அனைவரின் வாழ்த்துக்களையும் தன் நெஞ்சின் மீது கரம் வைத்து நாஞ்சில் நாடன் அவர்கள் மேடையில் ஏற்றுக்கொண்ட காட்சியே சிறப்பாக இருந்தது. இதயபூர்வமாக வரும் பாரட்டுக்களை இதயபூர்வமாகவே அவர் ஏற்றுக்கொண்டதன் அடையாளமாகவும் தோன்றியது.

இதழியலாளர் திரு ஏ.ஆர்.ராஜாமணி அவர்கள் விருதுகள் பெறுவது கூட பூர்வஜென்ம பலன் தான் என்று நகைச்சுவையுடன் பேசிக்கொண்டிருந்தார். சட்டதிட்டங்களுக்கு மத்தியில் அனைவருக்கும் சரியானபடி விருது போய்ச்சேர வழியில்லை. அப்படி சரியானபடி விருது வந்து சேர்ந்தால் பேரதிர்ஷ்டக்காரராகத்தான் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார். அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை கட்டுரைகளில் வழங்குவதை குறைத்துக்கொண்டு கதை நாவல்களில் அதிகம் கவனம் செலுத்துபடியாகவும் கேட்டுக்கொண்டார்.

ஒய்வு பெற்ற பேராசிரியை எம்.ஏ. சுசிலா அம்மா நாஞ்சில் நாடன் அவர்களின், விருது பெற்ற ’சூடிய பூ சூடற்க’ தொகுப்பிலிருந்து சில அறிமுகங்களைக் கொடுத்துப் பேசினார். ’யாம் உண்பேம் ‘ கதை பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார். ’மஞ்சனமாட்ட கனாக்கண்டேன்’ என வரும் இடம் பற்றிக் குறிப்பிட்டபோது நாஞ்சில் நாடன் அவர்களும் கதையில் அவ்வுணர்ச்சி மிக்க இடத்தினை நினைவு கூர்ந்து வருத்தப்பட்டார். எப்படி அவருடைய கதைகளில் மனிதம் ஓங்கி நிற்கின்றது என்று கூறி வனம் சிறுகதையையும் உதாரணமாகக் குறிப்பிட்டார்கள்.

தனக்கு தில்லியின் நகரமும் மக்களும் உணவும் பதட்டத்தை தருகின்றன ஆனால் நாஞ்சில் நாடனோ புலம்பெயர் உலகின் மண்வாசனையையும், ’நல் உணவும் நாப்பழக்கம்’ என்று உணவுப்பழக்கத்தையும், மண்ணின் மக்களையும் உள்வாங்கி அதன் வாடையை தன் படைப்பில் கொண்டுவருவது தனக்கு வியப்பளிக்கிறது என்றார். மேலும் பல நகரங்களுக்கும் நாடுகளுக்கும் சென்று நாஞ்சில் அவர்கள் தங்கினால் இன்னும் பல மண்ணின் மணத்தை நாம் அறிய வாய்ப்பாக இருக்குமென்ற தன் அவாவினை வெளிப்படுத்தினார்.

திரு பென்னேஸ்வரன் அவர்கள் பேசியபோது ”இன்றைய தினத்தில் இணையத்தில் சிலர் எல்லாம் தெரிந்ததைப் போல எழுதுகிறார்கள் - கூகிள் உதவியுடன், அவர்களின் வாசிப்பின் வீச்சும் பரப்பும் எனக்குத் தெரியும் ஆனால் இணையத்தில் செயல்படாத நாடன் எழுத்துக்களோ அசலாக இருக்கின்றன” என்று குறிப்பிட்டார். விருதுக்கு தகுதியான மனிதர் என்று அனைவராலும் ஒருமுகமாக நாஞ்சில் நாடன் பாராட்டப்பட்டார்.

விழா நாயகன் நாஞ்சில் நாடனின் மனைவி அவர்களையும் மேடையேற்றி அவருக்கும் மரியாதைகளை செய்து அவரையும் மேடையில் அமரவைத்தார்கள். நெகிழ்ச்சியுடன் அவர் அமர்ந்திருந்தார்.

விழாவுக்கு கூட்டம் பரவாயில்லை எனும்படியே இருந்தது. இலக்கியக்கூட்டங்களுக்கு அதுவும் அலுவலக தினத்தில் இது அதிகமே என்று பென்னேஸ்வரன் அவர்களும் குறிப்பிட்டார். அதனபடியும் கூட நாஞ்சில் நாடன் பேரதிஷ்டக்காரர் தான்.

திரைப்பட நடிகர் தாமு அவர்கள் தற்செயலாக நிகழ்ச்சியன்று தமிழ்சங்கம் வந்திருந்தார். அவரும் வாழ்த்திப்பேசினார். இருதயபூர்வமான கைத்தட்டல்களென்றால் இன்னும் உரத்து ஒலிக்கட்டுமென்று கேட்டார். பெற்றோரிடத்து அன்புமிக்கவராக இருந்திருக்கவேண்டும் அதனால் தான் இத்தகைய விருதினைப் பெற்றார் எனவே அவருடைய பெற்றோருக்கும் நற்றுணையாக இருக்கும் மனைவியை அளித்த மாமனார் மாமியாருக்கும் கூட கைத்தட்டல்களை வாங்கிக்கொடுத்தார். அப்படியே அடுத்த வருடம் அவர் இயக்குனாராக இருக்கிறாராம் அதற்கும் எங்களிடமிருந்தும் விருது பெற்ற சாம்பினிடமிருந்தும் ஆசிகளாக கைத்தட்டல்களைப் பெற்றுக்கொண்டார்.

நாஞ்சில் நாடன் அவர்கள் தன் படைப்புகளின் தரம் பற்றிய அதன் தகுதி பற்றிய நம்பிக்கையின் பேரில் விருதினை ஏற்றுக்கொண்டாலும் இதனைப் பெறாத ஆனால் தகுதியுடையமற்றவர்களை நினைவு கூர்ந்து பேசினார். அதன் உட்கருத்து இப்பேட்டியிலும் உண்டு. பரிசில் வாழ்க்கை தானே.. விருது என்பதும் அவசியம் தான். காலதாமதமாக அளிக்கப்படும் விருதுகளைத்தான் தான் விமர்சிப்பதாகவும் கூறினார். மேலும் ஏனைய மொழிகளில் விருதுபெற்றவர்களின் படைப்புகள் தமிழுக்கு முன் மிக சாதரணமாகவே தெரிகின்றதென்றும் தமிழில் விருதுபெறுவதற்கு தகுதியான படைப்புகள் பல இருந்தும் அவை அளிக்கப்படாமல் விடுபடுவதுதான் விமர்சிக்கப்படக் காரணமும் என்றார்.

விருது பெற்றதிலிருந்து தினம் வீட்டில் மூன்றரை லிட்டர் பால் வாங்கி விருந்தினரை உபசரிக்கும் மனைவியைப் பற்றியும் தொடர்ந்த வருகையால் இரண்டு நாள் குளிக்கக்கூட நேரமில்லாமல் போய்விட்டதென்றும் விருதினால் கிடைத்த பணமெல்லாம் தில்லியிலேயே கூட செலவழிந்தும் போய்விடலாமென்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார். ஆனால் பணம் புகழ் பாராட்டு இதையும் தாண்டி விருது தனக்கு மட்டுமல்லாம் தன் மொழிக்கும் சக எழுத்தாளர்களுக்குமான ஒன்றாக அவர் பார்க்கின்றார்.

எழுத்தாளர்களின் சொற்கிடங்கு என்பது அம்புறாத்தூணி போல எடுக்கஎடுக்க குறையாத சொற்கள் நிறைந்ததாக இருக்கவேண்டுமென்று கூறி சொற்கள் அம்புகள் என்பதற்கு கம்பராமயணத்திலிருந்து உதாரணமளித்தார். தொன்மையான நம் மொழியின் பல சொற்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றதென்றும் அவற்றை படைப்புகளில் பயன்படுத்துவது அவசியமென்றும் கூறினார். பயணங்களில் உணவு முக்கியமில்லை பயணங்களும் மனிதர்களை படிப்பதும் தனக்கு எப்படி உதவியதென்றார். விற்பனை பிரதிநிதியாக இருந்த நாட்களில் எப்படி அலுவலக வரவேற்பரையில் காத்திருக்கும் நேரங்களிலேலாம் தான் படித்துக்கொண்டிருந்ததையும் குறிப்பிட்டார்.

நாஞ்சில் உணவுகள் பற்றிய தன் புத்தகத்தை முடித்துவிட்டு கதை நாவல்கள் பக்கம் திரும்ப இருக்கிறாராம். இருந்தாலும் சமூகத்தைப்பற்றிய விமர்சனங்களை கட்டுரைகள் தானே சிறப்பாக வெளிப்படுத்தும் அதனை கதைகளில் வைத்து என்னபயன்? என்றும் கேட்டுக்கொண்டார்.

கேள்வி நேரம் என்று இரண்டு கேள்விகளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இரவு வெகுநேரமாகிவிட்டதென்பதால் நான் அதற்கு அமரமுடியவில்லை.

விருது அவருக்கு தாமதகமாக அளிக்கப்பட்டதாகச் சொன்னாலும் கூட, எப்போது அளிக்கப்பட்டாலும், அப்பொழுது தான் வாசிப்பின் பக்கம் திரும்பும் வாய்ப்புள்ள சிலர் அந்த தருணத்தில் இருக்கத்தானே இருப்பார்கள். அவர்கள் இதுபோன்ற ஏற்புரைகளை கேட்கும்போது இலக்கியத்தின் அமைதியான பக்கங்களையும் தெரிந்துகொள்ள வாய்ப்பாக அமையுமென்றே தொன்றுகிறது.

சுசீலாம்மாவின் விரிவான பதிவு இங்கே 

December 14, 2010

கருத்தரங்கக்குறிப்பு -கவிதையும் கணினியும்-2

முதல் பகுதி யின் காணொளியிலேயே இங்குள்ளவற்றின் காட்சி உள்ளது.

அடுத்த அமர்வாகிய கவிதை இலக்கியத்தினை நெறியாளுகை செய்யவேண்டிய தில்லியைச் சேர்ந்த சிந்துகவி . மா.சேது ராமலிங்கம் அவர்கள் வர இயலாததால் அந்நிகழ்வுக்கு ரவி சுப்ரமணியன் அவர்கள் ஏற்று நடத்தினார். ஒரு கவிதையை அழகிய பாடலாகவே பாடிக்காண்பித்தார்.

1.பிறகு கவிஞர் கலாப்ரியா கட்டுரை வழங்கினார்.
எதிலும் நமக்கு தேவையான ஒரு பகுதியை நமக்குத் தேவையானபடியாக புரிந்துகொள்வது என்பது தவிர்க்கமுடிவதில்லை. மற்றபகுதிகள் மறந்தும் போகும்படி அந்த வரிகள் உள்ளுக்குள் நின்று விடுகின்றன.
அவர் , 70களில் ஆங்கில வார்த்தைகள் சில கவிஞர்களால் சரளமாக உபயோகிக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்து. பின்னாளில் அவர்களே தமிழின் மிக முக்கியகவிகளாக பரிணமித்ததாகக் கூறினார்.

ஆக இன்றைய நிலையில் இவர்களெல்லாம் கவிதை எழுதாவிட்டால் என்ன கேடு என்று தலையில் அடித்துக்கொண்டு புதிய முயற்சிகளை தரையோடு நசுக்கப்பார்ப்பவர்கள் சிந்தித்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது.

( நான் கூட என் கவிதையை அனுப்பிவைப்பதாகச் சொன்னேன் :) )

முன்காலத்தில் எழுதியவர்கள் அனுபவங்களின் கொந்தளிப்பாகவும் தற்போது மொழியின் பெருங்குகையினுள் நுழைந்தவர்களாக புதிர்மொழியில் கவிதை படைப்பதைக்குறிப்பிட்டார்.


2. மரபுக்கவிதை மறக்கப்படவேண்டியதா ? என்று தலைப்பு வைத்தாலும் வைத்தார்கள். நிகழ்வை ஒரு பட்டிமன்றம் என்று நினைக்கவைக்கும்படியாக சுவையாக ( சிலருக்கு கட்டுரை வாசிப்பு சுவராசியக்குறைவாகத்தோன்றி இருக்கும்பட்சத்தில் இது அவர்களை இலகுவாக்கி இருக்கும்) இருந்தது கவிஞர் முத்துலிங்கத்தின் பேச்சு. நடுநடுவே அவர் குறிப்பிட்ட நிகழ்வுகளைக் கேட்டு அவையோருடன் மேடையில் இருந்தவர்களும் சிரித்து ரசித்து மகிழ்ந்தனர். ஒவ்வொரு கருத்தையும் முன் வைத்துவிட்டு மரபுக்கவிதை மறக்கப்படக்கூடியதா என்று கேட்டீர்களே அது எப்படி மறக்கமுடியும் ’அதற்குத்தான் சொன்னேன்’
என்று முடித்தார். தெரியாமல் வைத்துவிட்டார்களைய்யா என்று சிலரும் அப்படி வைத்ததால் தானே அருமையான வாதங்களை அவர் வைத்தார் எனச் சிலரும் சொல்லிக்கொண்டார்கள்.
முதல் நாள் ப்ரேம் அவர்கள் எல்லாவற்றையும் நாம் பின் சென்று தொன்மத்திலிருந்தே உதாரணம் காட்ட முனைகிறோம் என்று சொன்னதைப்போல இவரும் பல அறிவியல் உண்மைகளை பல ஆண்டுகளுக்கு முன்பே நாம் அறிந்திருந்ததை எடுத்து வைத்தார். ஆச்சரியம் தான். ’ஓரறிவதுவே உற்றறிவதுவே’ மற்றும் ’புல்லும் பூண்டும் ஓரறிவினவே’ என்று தொல்காப்பிய சூத்திரங்களை முன்வைத்தார்.

தாலாட்டுப்பாடல்கள் கலிப்பா வகையைச்சார்ந்தது. எந்த பள்ளியில் கற்றுக்கொண்டு தாய்மார்கள் இப்படி பாடுகிறார்கள்? என்று அப்பாடல்களை எடுத்து வைத்து கேட்க எல்லாருக்கும் சிலிர்ப்புத்தான். பல நல்ல மரபுகவிதைகளைக்கூறி அவை மறக்கப்படக்கூடியதுமல்ல என்று விளக்கமளித்தார்.
புதுக்கவிதை மலரென்றால் மரபுக்கவிதை வேர் என்றார்.

3 அடுத்து கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் அவர்கள் கவிதை என்பது வாழ்க்கையை கட்டமைக்கும் சக்தியிலிருந்தும், மனித அனுபவங்களிலிருந்தும், சமூகட்தின் சூழலிருந்தும் உருவாகுவதால் உள்ள உண்மைத்தன்மையைப் பற்றிக்கூறினார். இந்திய அளவில் நல்ல கவிதைகளை கவிஞர்களைப் பற்றிய குறிப்புக்களை வழங்கி இன்றைய நிலையில் பெண்கவிஞர்களே தமிழ் புதுக்கவிதையின் தலைஎழுத்தாக மாறி வருவதாகவும் குறிப்பிட்டார்..

( நமக்கு வேண்டியது தான் மனதில் நிற்குமென்றேனே:) )

கணினித்தமிழ் நிகழ்வினை திரு ஜான்சுந்தர் அவர்கள் முன்னெடுத்து வைக்க எழுத்துரு தரப்படுத்தல் தலைப்பில் பத்ரி சேஷாத்திரி எல்லாருடனும் சாதரணமாக மேடையின் கீழ் நின்று பேசுவது போலவே ..எழுத்துரு படைப்பில் ஏற்படும்  ப்ரச்சனை இது .. என்ன செய்யலாம்? என சிறு சிறு குறிப்புகளாக எல்லாருக்கும் புரியும்வண்ணம் எடுத்துக்கூறினார். என்னை மட்டும் அதற்கான பதவியில் அமர்த்தினால் இரண்டு நாளில் நடத்திக்கொடுக்கிறேன் என்றார். ஒரு ப்ரஸ் மீட் ஏற்பாடு செய்வதாக்கூட யாரோ வாக்களித்தார்கள்.. ”:)

அடுத்ததாகப் பேசிய பேராசிரியர் பெ. சந்திரபோஸ் அவர்கள் கணினித்தமிழ் மொழியாக்கச்சிக்கல்களை சுவைபட பகிர்ந்துகொண்டார்.

பத்ரியும் சரி பேராசிரியரும் சரி இருவருமே முன்வைத்தது ஜப்பான் சீனா போல எங்கள் மொழியில் மென்பொருளையும் எங்கள் மொழியை எளிதாகப்பயன்படுத்தக்கூடிய ஒரு கைபேசி , கணினி என நாம் அதிரடியாக கட்டாயப்படுத்தினால் வியாபாரம் முக்கியமானதாக நினைப்பவர்கள் முயன்று அதனைத்தருவார்கள் . நாம் கேட்காமல் இருப்பதே நமது தவறு என்று தான் சொன்னார்கள். யார் காதிலாவது விழுமோ?



நிகழ்வின் இறுதியில் தில்லி சௌம்யாவின் பாரதியார் பாடல்கள் நிகழ்ச்சி அருமையாக இருந்தது.’ செய்யும் தொழிலே உன் தொழில் காண்’ பாடலை நான் முதல் முறையாக கேட்டேன்.

சுசீலா அம்மாவின் கருத்தரங்கக்குறிப்பு
ச.வீரமணி அவர்களின்
நல்வாழ்வும் நற்பண்பும் இணைந்த நாட்டை உருவாக்குவோம்-தில்லித் தமிழ்ச்சங்கக் கருத்தரங்கில் அப்துல் கலாம் அறைகூவல்

December 13, 2010

தமிழ் 2010 கருத்தரங்க குறிப்புகள் -1

ஒரு காலத்தில் கதைகள் வாசிக்கிற சிறுமியாக இருக்கும்போது தில்லி , கொல்கத்தா ,மும்பையின் சில பகுதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு கதாப்பாத்திரங்கள் வரும். அக்கதாபாத்திரங்கள் கச்சேரிகளுக்கும் , நாடகங்களுக்கும் செல்வார்கள். சிற்றூரில் இருந்த எனக்கு அதெல்லாம் எதோ வேறு உலகத்தில் நிகழ்வதைப்போலத் தோன்றும் காட்சிகள். நானும் திருமணமாகி இப்படி ஒருநாள் தில்லியில் வசிப்பேன் என்றோ அப்படியே கச்சேரிகளையும் நாடகங்களையும் நேரடியாக எளிதாகச் சென்று பார்க்கக்கூடும் என்றோ நான் நினைத்திருக்கவில்லை. நடந்தது.


என் தந்தை கட்டுரை வாசிக்கப்போகும் போது ஒரு முறை கல்லூரி கருத்தரங்கத்திற்கு சென்று இருக்கிறேன். அதன் அனுபவத்தை எழுதிவைக்கும் டைரிப்பழக்கம் எனக்கு அப்பொழுது இல்லை. இப்போது அது நினைவிலும் இல்லை. கல்லூரி தவிர எங்கோ இலக்கியக் கூட்டங்கள் நடைபெற்றன என்பதையெல்லாம் படித்திருக்கிறேனே தவிர அவை எப்படிப்பட்டதாய் இருக்கும். படைப்பாளிகள் என்று அறியப்பட்டவர்கள் பலர் கூடி இருக்கும் ஒரு அவையும் அதனை வாசிப்பவர்களாகிய பார்வையாளர்களும் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வு எப்படி இருக்குமென்று நேரில் கண்டதில்லை.

முதல் முறையாக தில்லியில் அப்படி ஒரு நிகழ்ச்சி தமிழ் 2010 நடைந்தேறியுள்ளது. ஆரம்பவிழாவைத் தவிர மீதி இரண்டு நாட்களும் நான் முழுமையாக கலந்துகொண்டேன். நிகழ்ச்சியை நடத்திய தமிழ்சங்க குழுவினர் ஒவ்வொருவரையும் மிகப்பாராட்டி நன்றி கூறவேண்டியது அவசியம். அவர்களிடம் நிகழ்வு ஒரு பண்டிகை நாளின் இலை நிறைந்த இனிப்பு வகைகள் போன்றது ஆனால் திகட்டாத ஒன்று என்று நன்றி கூறினேன். இதுபோன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து அளிப்பார்கள் என்று இவ்விழாவின் வெற்றி நம்பிக்கை அளிக்கிறது. இது ஒரு குழுவின் வெற்றி ஆனாலும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் குருமூர்த்தி மற்று ஷாஜஹான் அவர்களுக்கு தனிப்பட்ட நன்றி.



இரண்டாம் நாள் பாரதியின் பிறந்தநாளை ஒட்டி தில்லி தமிழ் கல்விக் கழகப் பள்ளிக்குழந்தைகளின் பாரதி பாடலுடன் தொடங்கியது ..அவர்களின் ஆசிரியர் திருமதி ராஜிரமணி அவர்கள் .
பிறகு தமிழ்சங்கத்தில் திருமதி லலிதா ஆனந்திடம் இசை பயிலும் குழந்தைகளும் பாரதியார் பாடல்களைப் பாடினார்கள்..







திரு மறவன் புலவு க.சச்சிதானந்தன் அவர்கள் நிகழ்வின் காணொளியை வலையேற்றி இருக்கிறார். நிகழ்விற்கு வர இயலாத பலரும் பயன்பெறும் வகையில் அவற்றை வலையேற்றியதோடு அதனைப்பற்றி உலகமயமாகும் தமிழ் என்கிற தலைப்பின் போது திரையில் காண்பித்தார். நம் வலைத்தளங்களை திரட்டுகின்ற தமிழ்மணம் அன்று ப்ரஜக்டர் மூலம் பெரிய திரையில் தமிழ்ச்சங்கத்தில் ஒளிர்ந்தது மிக மகிழ்ச்சியான தருணம். . நம் தமிழின் குறிஞ்சி முல்லை நிலப்பரப்பைப்போன்று பனிப்ரதேசங்களிலிருந்தும் தமிழ் இன்று எழுதப்படுகிறது என்று அவர் சொல்லும்போது சுவிஸ் ஹேமாவின் கவிதைப்பக்கம் வெளிவந்த காற்றுவெளி இதழ் பற்றிய காட்சிக் காட்டப்பட்டது.
கட்டுரைவாசிப்பாளர்களாகிய படைப்பாளிகள் பழக எளியவர்களாக .. பார்வையாளர்களாகிய எங்களிடம் பழகியது மற்றொரு மகிழ்ச்சி.. செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழ்ச்சங்கத்து நண்பர்கள் குருமூர்த்தியும் , சத்யா அசோகனும் என்னையும் சிலரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். குளிர் காரணமாக என் தொண்டை அடைத்துக்கொண்டு குரல் ஒருவழியாக மிகச்சிரமமாகப் பேசிக்கொண்டிருந்தேன். அந்த கோரத்தை பொருட்படுத்தாமல் அவர்கள் என் பேச்சையும் கேட்டார்கள்.( கொஞ்சம் அவர்கள் பேசுவதையும் நான் கேட்டேன்)
கட்டுரை வாசித்தவர்களில் சந்தித்து பேசமுடிந்த அவர்கள்
‘வெளி’ ரங்கராஜன் , அமரந்த்தா, ரவிசுப்ரமணியன், அம்பை , லிவிங் ஸ்மைல்



நெறியாளுகை செய்யதவர்களில் இருவர் எங்கள் பகுதியிலிருந்து வந்திருந்தார்கள் முதன் முறையாக அவர்களிடமும் பேசும் வாய்ப்பு அமைந்தது.
திரு டாக்டர் எஸ். பாலசுப்ரமணியன் மற்றும் திரு நாக. வேணுகோபால்.


அனைத்து எழுத்தாளர்களையும் குழுவாக மேடையில் படமெடுக்கும் போது என்னையும் அழைத்து ஒரு இடமளித்தார்கள். ஒரு கணம் தயங்கி பின் ஓடிப்போய் ஓரத்தில் நின்று கொண்டேன்.புகைப்படம் பின்பு கிடைக்கும் என நினைக்கிறேன்.

கலாம் அவர்கள் வெளியிட்டு வைக்க கருத்தரங்க மலர் ‘ இதுவரை , இன்று , இனி...’ கைகளில் கிடைத்துவிட்டது.
சலுகை விலையில் அன்று 100 ரூபாய்க்கு கிடைத்தது. புத்தகத்தில் 150 ரூ எனப்போட்டிருக்கிறது. விநியோடம் கிழக்கு பதிப்பகம் என இருக்கிறது. வெளியூரிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வாங்க விரும்புவோருக்கு சென்று சேரும் வகையை அவர்கள் தெரியப்படுத்துவார்கள் என நினைக்கிறேன்.


நிகழ்வின் பேச்சுக்கள் குறித்து என் சிறு குறிப்புகள்.

தமிழில் கோட்பாட்டு எழுத்துக்கள் பற்றிய திரு ப்ரேம் அவர்களின் விரிவான கட்டுரைப்பற்றிய பேச்சு சுவாரசியமானதாக சிந்திக்க வைப்பதாக இருந்தது. ஒரு கோட்பாடு தன்னை காலத்திற்கும் நிகழும் சூழலுக்கும் ஏற்ப புதுப்பித்துக் கொள்ளாதபோது அது நம்பிக்கை என்ற நிலைய அடைந்து பின் தொன்ம வடிவம் பெற்று இறுகி அடிமைகொள்ளும் கட்டளையில் ஒன்றாக மாறிவிடும். என்று கூறி கோட்பாடுகளை தொடர்ந்து புதுப்பித்தல் அவசியம் என வலியுறுத்திப் பேசினார்.


நாஞ்சில் நாடன் அவர்களின் நாவல்கள் குறித்த கட்டுரை வாசிப்பிலிருந்து புதிய வாசகர்களுக்கு நல்லதொரு தொகுப்பு. பேச்சின் (கட்டுரையின்) நடுநடுவே நகைச்சுவை தூவி வைத்திருந்தார்.
“ஒருமலரை அனுபவிக்க வடிவம் வண்ணம் அழகு வாசனை போதாதா..? தாவர பேரினப்பெயர் ,தாவர இயல்பு வளரியல்பு இலை மஞ்சரி புல்லிவட்டம் அல்லிவட்டம் சூலகம் கனி விதை இத்தனை தகவல்களும் தேவைதானா என்று அடுக்கினார்”

(அப்படியே தான் நான் குழம்புவேன். படித்தால் அன்று ரசித்து அன்றே மறந்தும் போகும் எனக்கு எழுதிய எழுத்தாளர்களைப்பற்றிய் விரல் நுனியில் வைத்துக்கொண்டு இருப்பவர்களும் அதனை அக்குவேறு ஆணிவேறாக அலசுபவர்கள் ஆச்சரியமும் கலவரமும் ஒரு சேரத்தருகிறார்கள்.)

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் வர இயலாத நிலையில் அவருடைய கட்டுரை திரு ஷாஜகான் அவர்களின் தெளிவான உச்சரிப்பில் வாசிக்கப்பட்டது. சிறுகதைகள் இன்று இணையத்தில் தான் அதிகம் பரிட்சிக்கப்படுகிறது என்றும் கவிதை போல கட்டுரை போல இளைஞர்கள் சிறுகதையை முயற்சிக்கவில்லை என்றும் தற்போதைய சிறுகதைகள் ஆய்வு செய்யப்படாமல் விமர்சிக்கப்படாமல் மற்ற மொழியிலிருந்து அதிகம் மொழிபெயர்க்கப்படாமல் இருக்கின்றது என்று இன்றைய தேவைகள் முன் வைத்திருக்கிற கட்டுரையாக இருந்தது.

இந்த முதல் அமர்வின் நெறியாளுகை செய்த முனைவர் சுசீலா அம்மா சிறப்பாக அவர்களையும் அவர்கள் தலைப்புகளை அறிமுகப்படுத்தி நிகழ்ச்சியை முன்னெடுத்துச் சென்றார்கள்.


- மற்றவர்கள் அமர்வுகள் பற்றிய என் நினைவுகளை அடுத்த பதிவில் பதிகிறேன்.


முதல் நாள் நிகழ்வு பற்றி திரு வீரமணி அவர்களின் பதிவு



1. இலக்கியா  ச.வீரமணி அவர்களின் பதிவு

2.கருத்தரங்க மலர் வெளியீட்டு நிகழ்வில் கலாம் அவர்களின் உரைப்பற்றி பென்னேஸ்வரன் அவர்களின் கட்டுரை

August 10, 2010

இப்படித்தான் ஒருமுறை மதுரைமுத்து தில்லிதமிழ்சங்கத்துல...

அப்பா பெரியப்பாக்கள் சித்தப்பா என்று கூடி உட்கார்ந்தாலே சிரிப்புத்தான். பழைய கதையைச் சொல்லி நாங்களெல்லாம் ஆ வென்று கதை கேட்டும் சிரித்தப்படியும் இருப்போம்.
இப்படித்தான் பெரியப்பா இன்னோரு கரண்டி கூட்டாஞ்சோறு எடுக்கும் போது என்பையன் ஆரம்பித்து வைத்தான். ”தாத்தா நீங்க மட்டும் எவ்ளொ சாப்பாடு சாப்பிடறீங்க ?” (அடப்பாவி )

அவங்களுக்கு பழைய நினைவு வந்துவிட்டது.

“இப்படித்தான் ஒருமுறை தென்காசி அத்த எங்களை ஒருத்தங்க வீட்டுக்கு கூட்டிப்போனா. அங்க அவங்க பாயசம் இன்னும் கொஞ்சம் வேணுமான்னாங்க. சரின்னு சொன்னேன். அவங்க வீட்டுப்பையன் ‘ பாயசம்ன்னா எவ்ளோவும் குடிப்பீங்களோ’ன்னான்.- பெரியப்பா

”அப்பறம் அந்த பாயசத்தைக் குடிச்சீங்களா?”- என் தங்கச்சி

”ஆமா அவன் கேட்டான்னு குடிக்காமலா வருவேன்” - பெரியப்பா.

அடுத்த நாள் இன்னோரு பெரியப்பா வீட்டில் நேத்து சாப்பாடு விசயமாக சில பழைய விசயம் பேசிக்கொண்டிருந்தோம் என்றதும். பாயாசக்கதையைச் சொல்லி இருப்பானே என்று சொல்ல எல்லாரும் சிரித்துக்கொண்டிருந்தோம். இப்படி நமக்குள்ள கலகலப்பாய் இருப்பது போல . இப்படித்தான் அங்க இங்கன்னு பேசறதுக்கு பேரு ஸ்டாண்டப் காமெடியாம்.

மதுரை முத்து டீவியில் பேசப்போறார்ன்னா ஸ்டேட்டஸ்லயே இருங்க முத்து பேச்சைக் கேட்டுட்டு வந்துடறேன்னு போட்டுவிட்டுப் போகும் ஆள் . தில்லி தமிழ்சங்கத்துக்கு வந்தால் போகாமல் இருப்பமா? நல்ல கூட்டம். விமானம் தாமதமாக வந்ததால் நிகழ்ச்சியும் தாமதமாகத்தான் தொடங்கியது. ஆனால் அரங்கு நிறைந்து கலையாமல் ஆர்வத்துடன் காத்திருந்து அளித்த வரவேற்பில் அசத்தபோவது தானென்று நினைத்து வந்த முத்துவை தில்லிக்காரங்க நாங்க அசத்திவிட்டோம்.

நிகழ்ச்சியின் முன்பு பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் மகன் மாணிக்கம் அவர்களுக்கு டாக்டர் பட்டம் கிடைத்ததற்கு பாராட்டுதல் வழங்கப்பட்டது. அவரே நிகழ்ச்சியினைத் தலைமை தாங்கவும் செய்தார். முடிவில் ரசித்து சிரித்துவிட்டு காசோலை ஒன்றும் பரிசளித்துச் சென்றார்.

எதையுமே அவர் சிரிப்பாகவே பேசினார். பேச்சுக்கு நடுவில் அதிகம் கைதட்டி பேச்சைகேட்காமல் போய்விடுவோமோ என்று எல்லாரும் இருந்த போது ஒருவர் மட்டும் கையைத்தட்டிவைக்க.. ’அய்யா நான் எதோ உங்களுக்கு 200 ரூ குடுத்து கைதட்டச் சொன்னதா நினைச்சிடுவாங்க இல்ல.. தனியா தட்டாதீங்க’
சிறிது நேரத்தில் வேறொரு பக்கத்திலிருந்து தனியாக கைத்தட்டுவரவே.. ’அய்யா இப்ப அங்க போயிட்டாரா’ என்றார்.

இது போன்ற எளிய மனிதர்கள் எல்லாராலும் ரசிக்கப்படுவதும் அவசியம் தான். அவர் கூட வந்த இருவரும் விமானத்தில் முதல் முறை வந்ததையும் தமிழ்நாடு தாண்டி வந்ததையே ஒரு வெளிநாடு போல் உணர்ச்சிவசப்பட்டதையும் பார்த்தபோது எளிய மனிதர்களுக்கு இது போல பல வாய்ப்புக்களை வழங்கும் தமிழ் சங்கத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.



நகைச்சுவையில் சிரித்து சிரித்து முடியாமல் பலர் அங்காங்கே இருமிக்கொண்டும் கண்ணைத் தொடைத்துக்கொண்டும் இருந்தார்கள். முடிவில் ஒரு பெண்கள் குழு அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். அதில் ஒரு வயதான பெண்மணி ‘ மதுரையிலிருந்து இங்கு வந்து ‘ என்று பாராட்டத்தொடங்கியதும்.. என்னம்மா அங்க...ருந்து வந்தா இந்த கொடுமை யை செய்யறேன்னு கேக்கப்போறீங்களா என்று ஜோக் அடித்துவிட்டு வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டார்.

அவருடன் நாகேஷ் செல்லக்கண்ணு என்பவர் நாகேஷ் போன்று ஆடிய நடனத்தைப் பார்த்து மகனுக்கு ஒரே சிரிப்பு. டமால் டமால் என்று சேரிலிருந்து கீழே விழுகிறார். ஆடும்போதே பந்து போல விழுந்து எழுகிறார். பீடியை வாய்க்குள்ளயே வைத்தபடி ஆடிக்கொண்டிருந்துவிட்டு திடீரென திரும்ப எடுத்து புகையை வெளியே விடுகிறார். இந்த முயற்சியால் அவர் சுவை நரம்பு பாதிக்கப்பட்டிருக்கிறதாம் . இருந்தும் நாம் சிரிக்க ரசிக்க என்று சொல்லிவிட்டு முத்து அவர்கள் நாங்க என்னைக்கு சிரித்திருக்கிறோம் என்றார். உண்மை .

மேஜிக் அப்துல்லா மிகக்குறைந்த நேரத்தில் நிறைய மேஜிக் செய்து காட்டி அசத்தினார். ஒரு பையனை அழைத்து மேஜிக் நடுவே ஹிண்ட்களை எல்லாம் பின்னிருந்து சொல்லிக் கொடுக்க அவன் சொல்லும் பதில்கள் அரங்கத்தை அதிர வைத்தது. என்னதான் பின்னிருந்து சொல்லிக்கொடுத்தாலும் அந்த பையனும் உடனுக்குடன் அதை தானே சொல்வது போல சொல்லியதும் பாராட்டத்தான் வேண்டும். ஆனால் வயதுக்குமீறிய விசயங்களைப் பேசவைத்ததை மட்டும் தவிர்த்திருக்கலாம்.


முடிவில் மேஜிக் சொல்லித்தருகிறேன் என்று சொல்லிவிட்டு எல்லாரையும் ஏமாத்தி டாட்டா காட்டவைத்துவிட்டார் அப்துல்லா.
அந்த மாலைப்பொழுது உரத்த சிரிப்பில் கரைந்தது.

April 15, 2009

நடிகர் விவேக் சொற்பொழிவு

புதன்கிழமை வேலை நாளாக இருந்தாலும் மக்கள் விவேக் ஒருவருக்காக அலைகடலென (சே தில்லியில் கடலே கிடையாதே! ) ஆந்தி காற்றென( மணற்புயல் ) வந்து குமிஞ்சிட்டாங்க.. சாலை நெறிசலில் சிக்கி தாமதமாக தமிழ்ச்சங்க அரங்கத்தை அடைந்தோம்.. மக்கள் கீழ் தளம் நிரம்பி பலகணியிலும் நிரம்பி பலகணியின் இடைப்பட்ட படிக்கட்டுகளையும் நிரப்பிக்கொண்டிருந்தார்கள். நாங்களும் கார்பெட் விரித்த படிக்கட்டுகளில் அமர்ந்தோம். ஒரு இளைஞர் அதிசயமாய் நீங்க உக்காருங்களேன் என்று எனக்கு இருக்கை அளித்தார். நன்றி சொல்லி அமர்ந்தேனோ பிழைத்தோனோ.. ? ஏறுவோரும் இறங்குவோரும் என்று தொந்திரவாக இருந்திருக்கும்.

விவேக்கும் சாலை நெரிசல் காரணமாக தாமதம் எனவே நிகழ்ச்சியும் தாமதமாகவே ஆரம்பித்தது. பத்மஸ்ரீ விருது வாங்கியவர்களுக்கு சுடச்சுட தில்லித் தமிழ்சங்கம் தரும் பாராட்டுவிழா. விவேக் பேச்சிலேயே சொன்னார் ..தமிழனுக்கு சூடுன்னா ரொம்ப பிடிக்கும்ன்னு ( தமிழ்மணம் படிப்பாரோ சூடான இடுகை எல்லாம் தெரிஞ்சுருக்கே அவருக்கு) ரெண்டு நண்பர்கள் சந்திச்சா அடிக்கிற வெயிலப்பத்தி கண்டுக்காம வாயேன் சூடா ஒரு டீ குடிக்கலாம்ன்னு சொல்வாங்கன்னு ..:)

அவரைத்தவிர அங்கே வந்திருந்த அறிஞர்களைப் பற்றிய அறிமுகம் கொஞ்சம் குறைவானதே ( ஒருவேளை என்கருத்தாக இருக்கக்கூடும்) பத்ம பூஷன்
டாக்டர் சரோஜினி வரதப்பன் சிறந்த சமூக சேவகி
பத்மஸ்ரீ
டாக்டர் கிருஷ்ணக்குமார் ( ஆரியவைத்தியசாலை கோவை )
பத்மஸ்ரீ டாக்டர் தன்வந்திரி சிவராமன் (அலோபதி டாக்டர்)
பத்மஸ்ரீ சுப்ரமணியம் கிருஷ்ணஸ்வாமி ( குறும்பட இயக்குனர்)
பத்மஸ்ரீ காஞ்சிவரம் ஸ்ரீரங்கச்சாரி சேஷாத்ரி ( கணிதம்)

ஐ ஏ எஸ் அதிகாரி பாலசந்திரன் அவர்கள் வழக்கம்போல அழகான ப்ரசங்கத்துடன் தலைமை தாங்கி ஒவ்வொருவரையும் பாராட்டிப் பேசினார். போன முறை சுசீலா அம்மாவுக்கெல்லாம் பாராட்டு விழா நடந்தபோது ஒவ்வொருவரையும் பேச வைத்தனர். ஆனால் இம்முறை யாரும் தயாராக வரவில்லையோ என்னவோ? ஆனால் விவேக் தான் சொற்பொழிவு ஆற்றுவதாக இருந்தாரே அதுக்குத்தானே கூட்டம்.

சுடச்சுடத் தமிழ்சங்கம் அளிக்கும் விழாவில் அவருக்கு பல வெளிநாட்டு தமிழ்சங்கங்களுக்கு சென்றுவந்ததில் ஒரு சுவையான நிகழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். ஊரைச்சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது கதையாக அந்த அமரிக்க தமிழ்சங்க பெயரை மட்டும் சொல்லவில்லை. சொன்னால் இண்டர்நெட்டில் அவரை திட்டுவார்களாம்.. ( நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா..)
விழாவுக்கு போகும் முன் கிருஷ்ணா ஸ்வீட் ஓனரை கோயிலில் வைத்து பார்த்தாராம் அடுத்த நாள் நிகழ்ச்சிக்கு வாங்க என்று சொந்த அழைப்பில் அழைத்துப் போனாராம். அங்கே நன்கொடையாக எல்லாருக்கும் இலவசமாக குடுக்க என்று கிருஷ்ணாக்காரர் குடுத்த மைசூர்ப்பாக்கை டேபிள் போட்டு வித்துட்டிருந்தாங்களாம்.. பஞ்ச் டயலாக் என்னனா க்ருஷ்ணா ஸ்வீட் ஓனர் கிட்டயே சார் கிருஷ்ணா மைசூர் பாக்கு சார் 50 ரூபாதான் இண்டியாலேர்ந்து வந்திருக்கு நல்லாருக்கும்ன்னு விக்கப்பாத்தாங்களாம்.. சரி சரி நன்கொடை எப்படியோ வசூலாகுதுன்னு சிரிச்சிக்கிட்டாங்களாம்..

பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கும் போது தன் பெற்றோரையும் மேடை ஏற்றி அவர்களுக்கும் சிறப்பு செய்தார்.

வரிசையா அவர் நடித்த பல படங்களின் சாதா ( ஆனா செம ஹிட்) காமெடிகளை அடுக்கினார் . ஒவ்வொன்று க்கு பின்னும் இதுக்காகவெல்லாம் எனக்கு பத்மஸ்ரீ குடுக்கல என்று சொல்லிக்கொண்டே வந்து பகுத்தறிவு மற்றும் இன்னபிற கருத்து கந்தசாமி காமெடிகளை சொல்லி இவற்றுக்காகத் தான் கொடுத்திருக்கனும் என்று முடித்தார். விழா ஆரம்பத்தில் நடுவில் எழுந்து உள்ளே போய்விட்டு வந்தார். போகும் போது எங்க ரசிகர்கள் பயந்துடுவாங்களோ என்று இந்தா வரேன் வரேன்னு சைகை செய்ததை நினைத்து ஒவ்வொரு ரசிகர்களும் ஆனந்தப்பட்டார்கள்.

வழக்கம்போல மைக் கிடைச்சா அறுத்தெடுப்பார்ன்னு நினைச்சுத்தான் போனேன். ஆனா நாம நினைச்சது எங்க நடக்குது அவர் நல்லாவே பேசிட்டார். ஐ. ஏ. எஸ் அதிகாரியின் பேச்சை விவேக் மிகவும் பாராட்டினார்.. என்னய்யா அதிகாரிகள் என்னத்த பேசப்போறாங்க.. லெட்ஸ் ஸ்டார்ட் சொல்லிட்டு கிளம்பிருவாய்ங்களேன்னு நினைச்சேன் . யூ மேட் மை டே ன்னு சொல்லிட்டார்.


சென்னையில் மூணு க்ளைமேட் உண்டாம் ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்.. அது மாதிரி அவருக்கு டெல்லின்னா ஹாட்டஸ்ட் ஒன்னாம் இன்னோன்னு கோல்டஸ்ட் ஆம். ஒன்னுல உடம்புவெடிக்க வெயிலாம். இன்னோன்னு உதடு வெடிக்க குளிராம்.. ஆக மொத்தம் வெடிச்சிட்டே இருக்குமாம். காலையில் வாக்கிங் கீக்கிங் போய் உடம்பை ட்ரிம்மா வச்சிக்கவேண்டிய கட்டாயத்துல இருக்காராம் ஏன்னா இன்னு ம் வர இளைய நடிகர்களுக்கும் நண்பரா வரவேண்டாமா? அமைச்சர்கள் வீடுகிட்ட ஹோட்டல். காலை வாக்கிங் போனப்ப எங்க பாத்தாலும் துப்பாக்கி காவலர்களையும் சிமெண்டு மூட்டைக்கிடையில் காவலர்கள் என்று நிம்மதியா இந்த ஊருல வாக்கிங் போகமுடியுமாய்யா.. வேகமா நடந்தாலும் பாக்கறாங்க ..மெதுவாப்போனால் சந்தேகப்படராங்க.. உத்துப்பாத்தா சுட்டுடுவாங்கன்னு பயந்துகிட்டே வாக்கிங்க் போனாராம்.

சரோஜினி வரதப்பன் கூட நல்ல வாக்கர் பீச்ல வாக்கிங்க் வருவாங்க் காந்தி மாதிரி பெரிய பெரிய ஆளுங்கள்ளாம் கூட நல்ல வாக்கர்ஸ் ன்னு அங்கயே கருத்து கந்தசாமியாகிட்டார். எல்லாரும் மன நிறைவோட அவர் ஜோக்குகளுக்கு சிரித்துவிட்டு ஆட்டோக்ராப்க்கு முண்டியடித்துக்கொண்டிருந்தார்கள்.

பி.கு நிஜம்மாகவே மேடையில் இருந்த மற்றவர்களைப் பற்றி இனிதான் நான் தெரிந்துகொள்ளவேண்டும். அவர்களைக் குறிப்பிட்டு அதிகம் எழுதாததற்கு மன்னிக்கவேண்டுகிறேன்.