December 13, 2010

தமிழ் 2010 கருத்தரங்க குறிப்புகள் -1

ஒரு காலத்தில் கதைகள் வாசிக்கிற சிறுமியாக இருக்கும்போது தில்லி , கொல்கத்தா ,மும்பையின் சில பகுதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு கதாப்பாத்திரங்கள் வரும். அக்கதாபாத்திரங்கள் கச்சேரிகளுக்கும் , நாடகங்களுக்கும் செல்வார்கள். சிற்றூரில் இருந்த எனக்கு அதெல்லாம் எதோ வேறு உலகத்தில் நிகழ்வதைப்போலத் தோன்றும் காட்சிகள். நானும் திருமணமாகி இப்படி ஒருநாள் தில்லியில் வசிப்பேன் என்றோ அப்படியே கச்சேரிகளையும் நாடகங்களையும் நேரடியாக எளிதாகச் சென்று பார்க்கக்கூடும் என்றோ நான் நினைத்திருக்கவில்லை. நடந்தது.


என் தந்தை கட்டுரை வாசிக்கப்போகும் போது ஒரு முறை கல்லூரி கருத்தரங்கத்திற்கு சென்று இருக்கிறேன். அதன் அனுபவத்தை எழுதிவைக்கும் டைரிப்பழக்கம் எனக்கு அப்பொழுது இல்லை. இப்போது அது நினைவிலும் இல்லை. கல்லூரி தவிர எங்கோ இலக்கியக் கூட்டங்கள் நடைபெற்றன என்பதையெல்லாம் படித்திருக்கிறேனே தவிர அவை எப்படிப்பட்டதாய் இருக்கும். படைப்பாளிகள் என்று அறியப்பட்டவர்கள் பலர் கூடி இருக்கும் ஒரு அவையும் அதனை வாசிப்பவர்களாகிய பார்வையாளர்களும் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்வு எப்படி இருக்குமென்று நேரில் கண்டதில்லை.

முதல் முறையாக தில்லியில் அப்படி ஒரு நிகழ்ச்சி தமிழ் 2010 நடைந்தேறியுள்ளது. ஆரம்பவிழாவைத் தவிர மீதி இரண்டு நாட்களும் நான் முழுமையாக கலந்துகொண்டேன். நிகழ்ச்சியை நடத்திய தமிழ்சங்க குழுவினர் ஒவ்வொருவரையும் மிகப்பாராட்டி நன்றி கூறவேண்டியது அவசியம். அவர்களிடம் நிகழ்வு ஒரு பண்டிகை நாளின் இலை நிறைந்த இனிப்பு வகைகள் போன்றது ஆனால் திகட்டாத ஒன்று என்று நன்றி கூறினேன். இதுபோன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து அளிப்பார்கள் என்று இவ்விழாவின் வெற்றி நம்பிக்கை அளிக்கிறது. இது ஒரு குழுவின் வெற்றி ஆனாலும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் குருமூர்த்தி மற்று ஷாஜஹான் அவர்களுக்கு தனிப்பட்ட நன்றி.



இரண்டாம் நாள் பாரதியின் பிறந்தநாளை ஒட்டி தில்லி தமிழ் கல்விக் கழகப் பள்ளிக்குழந்தைகளின் பாரதி பாடலுடன் தொடங்கியது ..அவர்களின் ஆசிரியர் திருமதி ராஜிரமணி அவர்கள் .
பிறகு தமிழ்சங்கத்தில் திருமதி லலிதா ஆனந்திடம் இசை பயிலும் குழந்தைகளும் பாரதியார் பாடல்களைப் பாடினார்கள்..







திரு மறவன் புலவு க.சச்சிதானந்தன் அவர்கள் நிகழ்வின் காணொளியை வலையேற்றி இருக்கிறார். நிகழ்விற்கு வர இயலாத பலரும் பயன்பெறும் வகையில் அவற்றை வலையேற்றியதோடு அதனைப்பற்றி உலகமயமாகும் தமிழ் என்கிற தலைப்பின் போது திரையில் காண்பித்தார். நம் வலைத்தளங்களை திரட்டுகின்ற தமிழ்மணம் அன்று ப்ரஜக்டர் மூலம் பெரிய திரையில் தமிழ்ச்சங்கத்தில் ஒளிர்ந்தது மிக மகிழ்ச்சியான தருணம். . நம் தமிழின் குறிஞ்சி முல்லை நிலப்பரப்பைப்போன்று பனிப்ரதேசங்களிலிருந்தும் தமிழ் இன்று எழுதப்படுகிறது என்று அவர் சொல்லும்போது சுவிஸ் ஹேமாவின் கவிதைப்பக்கம் வெளிவந்த காற்றுவெளி இதழ் பற்றிய காட்சிக் காட்டப்பட்டது.
கட்டுரைவாசிப்பாளர்களாகிய படைப்பாளிகள் பழக எளியவர்களாக .. பார்வையாளர்களாகிய எங்களிடம் பழகியது மற்றொரு மகிழ்ச்சி.. செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழ்ச்சங்கத்து நண்பர்கள் குருமூர்த்தியும் , சத்யா அசோகனும் என்னையும் சிலரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். குளிர் காரணமாக என் தொண்டை அடைத்துக்கொண்டு குரல் ஒருவழியாக மிகச்சிரமமாகப் பேசிக்கொண்டிருந்தேன். அந்த கோரத்தை பொருட்படுத்தாமல் அவர்கள் என் பேச்சையும் கேட்டார்கள்.( கொஞ்சம் அவர்கள் பேசுவதையும் நான் கேட்டேன்)
கட்டுரை வாசித்தவர்களில் சந்தித்து பேசமுடிந்த அவர்கள்
‘வெளி’ ரங்கராஜன் , அமரந்த்தா, ரவிசுப்ரமணியன், அம்பை , லிவிங் ஸ்மைல்



நெறியாளுகை செய்யதவர்களில் இருவர் எங்கள் பகுதியிலிருந்து வந்திருந்தார்கள் முதன் முறையாக அவர்களிடமும் பேசும் வாய்ப்பு அமைந்தது.
திரு டாக்டர் எஸ். பாலசுப்ரமணியன் மற்றும் திரு நாக. வேணுகோபால்.


அனைத்து எழுத்தாளர்களையும் குழுவாக மேடையில் படமெடுக்கும் போது என்னையும் அழைத்து ஒரு இடமளித்தார்கள். ஒரு கணம் தயங்கி பின் ஓடிப்போய் ஓரத்தில் நின்று கொண்டேன்.புகைப்படம் பின்பு கிடைக்கும் என நினைக்கிறேன்.

கலாம் அவர்கள் வெளியிட்டு வைக்க கருத்தரங்க மலர் ‘ இதுவரை , இன்று , இனி...’ கைகளில் கிடைத்துவிட்டது.
சலுகை விலையில் அன்று 100 ரூபாய்க்கு கிடைத்தது. புத்தகத்தில் 150 ரூ எனப்போட்டிருக்கிறது. விநியோடம் கிழக்கு பதிப்பகம் என இருக்கிறது. வெளியூரிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வாங்க விரும்புவோருக்கு சென்று சேரும் வகையை அவர்கள் தெரியப்படுத்துவார்கள் என நினைக்கிறேன்.


நிகழ்வின் பேச்சுக்கள் குறித்து என் சிறு குறிப்புகள்.

தமிழில் கோட்பாட்டு எழுத்துக்கள் பற்றிய திரு ப்ரேம் அவர்களின் விரிவான கட்டுரைப்பற்றிய பேச்சு சுவாரசியமானதாக சிந்திக்க வைப்பதாக இருந்தது. ஒரு கோட்பாடு தன்னை காலத்திற்கும் நிகழும் சூழலுக்கும் ஏற்ப புதுப்பித்துக் கொள்ளாதபோது அது நம்பிக்கை என்ற நிலைய அடைந்து பின் தொன்ம வடிவம் பெற்று இறுகி அடிமைகொள்ளும் கட்டளையில் ஒன்றாக மாறிவிடும். என்று கூறி கோட்பாடுகளை தொடர்ந்து புதுப்பித்தல் அவசியம் என வலியுறுத்திப் பேசினார்.


நாஞ்சில் நாடன் அவர்களின் நாவல்கள் குறித்த கட்டுரை வாசிப்பிலிருந்து புதிய வாசகர்களுக்கு நல்லதொரு தொகுப்பு. பேச்சின் (கட்டுரையின்) நடுநடுவே நகைச்சுவை தூவி வைத்திருந்தார்.
“ஒருமலரை அனுபவிக்க வடிவம் வண்ணம் அழகு வாசனை போதாதா..? தாவர பேரினப்பெயர் ,தாவர இயல்பு வளரியல்பு இலை மஞ்சரி புல்லிவட்டம் அல்லிவட்டம் சூலகம் கனி விதை இத்தனை தகவல்களும் தேவைதானா என்று அடுக்கினார்”

(அப்படியே தான் நான் குழம்புவேன். படித்தால் அன்று ரசித்து அன்றே மறந்தும் போகும் எனக்கு எழுதிய எழுத்தாளர்களைப்பற்றிய் விரல் நுனியில் வைத்துக்கொண்டு இருப்பவர்களும் அதனை அக்குவேறு ஆணிவேறாக அலசுபவர்கள் ஆச்சரியமும் கலவரமும் ஒரு சேரத்தருகிறார்கள்.)

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் வர இயலாத நிலையில் அவருடைய கட்டுரை திரு ஷாஜகான் அவர்களின் தெளிவான உச்சரிப்பில் வாசிக்கப்பட்டது. சிறுகதைகள் இன்று இணையத்தில் தான் அதிகம் பரிட்சிக்கப்படுகிறது என்றும் கவிதை போல கட்டுரை போல இளைஞர்கள் சிறுகதையை முயற்சிக்கவில்லை என்றும் தற்போதைய சிறுகதைகள் ஆய்வு செய்யப்படாமல் விமர்சிக்கப்படாமல் மற்ற மொழியிலிருந்து அதிகம் மொழிபெயர்க்கப்படாமல் இருக்கின்றது என்று இன்றைய தேவைகள் முன் வைத்திருக்கிற கட்டுரையாக இருந்தது.

இந்த முதல் அமர்வின் நெறியாளுகை செய்த முனைவர் சுசீலா அம்மா சிறப்பாக அவர்களையும் அவர்கள் தலைப்புகளை அறிமுகப்படுத்தி நிகழ்ச்சியை முன்னெடுத்துச் சென்றார்கள்.


- மற்றவர்கள் அமர்வுகள் பற்றிய என் நினைவுகளை அடுத்த பதிவில் பதிகிறேன்.


முதல் நாள் நிகழ்வு பற்றி திரு வீரமணி அவர்களின் பதிவு



1. இலக்கியா  ச.வீரமணி அவர்களின் பதிவு

2.கருத்தரங்க மலர் வெளியீட்டு நிகழ்வில் கலாம் அவர்களின் உரைப்பற்றி பென்னேஸ்வரன் அவர்களின் கட்டுரை