December 14, 2010

கருத்தரங்கக்குறிப்பு -கவிதையும் கணினியும்-2

முதல் பகுதி யின் காணொளியிலேயே இங்குள்ளவற்றின் காட்சி உள்ளது.

அடுத்த அமர்வாகிய கவிதை இலக்கியத்தினை நெறியாளுகை செய்யவேண்டிய தில்லியைச் சேர்ந்த சிந்துகவி . மா.சேது ராமலிங்கம் அவர்கள் வர இயலாததால் அந்நிகழ்வுக்கு ரவி சுப்ரமணியன் அவர்கள் ஏற்று நடத்தினார். ஒரு கவிதையை அழகிய பாடலாகவே பாடிக்காண்பித்தார்.

1.பிறகு கவிஞர் கலாப்ரியா கட்டுரை வழங்கினார்.
எதிலும் நமக்கு தேவையான ஒரு பகுதியை நமக்குத் தேவையானபடியாக புரிந்துகொள்வது என்பது தவிர்க்கமுடிவதில்லை. மற்றபகுதிகள் மறந்தும் போகும்படி அந்த வரிகள் உள்ளுக்குள் நின்று விடுகின்றன.
அவர் , 70களில் ஆங்கில வார்த்தைகள் சில கவிஞர்களால் சரளமாக உபயோகிக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்து. பின்னாளில் அவர்களே தமிழின் மிக முக்கியகவிகளாக பரிணமித்ததாகக் கூறினார்.

ஆக இன்றைய நிலையில் இவர்களெல்லாம் கவிதை எழுதாவிட்டால் என்ன கேடு என்று தலையில் அடித்துக்கொண்டு புதிய முயற்சிகளை தரையோடு நசுக்கப்பார்ப்பவர்கள் சிந்தித்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது.

( நான் கூட என் கவிதையை அனுப்பிவைப்பதாகச் சொன்னேன் :) )

முன்காலத்தில் எழுதியவர்கள் அனுபவங்களின் கொந்தளிப்பாகவும் தற்போது மொழியின் பெருங்குகையினுள் நுழைந்தவர்களாக புதிர்மொழியில் கவிதை படைப்பதைக்குறிப்பிட்டார்.


2. மரபுக்கவிதை மறக்கப்படவேண்டியதா ? என்று தலைப்பு வைத்தாலும் வைத்தார்கள். நிகழ்வை ஒரு பட்டிமன்றம் என்று நினைக்கவைக்கும்படியாக சுவையாக ( சிலருக்கு கட்டுரை வாசிப்பு சுவராசியக்குறைவாகத்தோன்றி இருக்கும்பட்சத்தில் இது அவர்களை இலகுவாக்கி இருக்கும்) இருந்தது கவிஞர் முத்துலிங்கத்தின் பேச்சு. நடுநடுவே அவர் குறிப்பிட்ட நிகழ்வுகளைக் கேட்டு அவையோருடன் மேடையில் இருந்தவர்களும் சிரித்து ரசித்து மகிழ்ந்தனர். ஒவ்வொரு கருத்தையும் முன் வைத்துவிட்டு மரபுக்கவிதை மறக்கப்படக்கூடியதா என்று கேட்டீர்களே அது எப்படி மறக்கமுடியும் ’அதற்குத்தான் சொன்னேன்’
என்று முடித்தார். தெரியாமல் வைத்துவிட்டார்களைய்யா என்று சிலரும் அப்படி வைத்ததால் தானே அருமையான வாதங்களை அவர் வைத்தார் எனச் சிலரும் சொல்லிக்கொண்டார்கள்.
முதல் நாள் ப்ரேம் அவர்கள் எல்லாவற்றையும் நாம் பின் சென்று தொன்மத்திலிருந்தே உதாரணம் காட்ட முனைகிறோம் என்று சொன்னதைப்போல இவரும் பல அறிவியல் உண்மைகளை பல ஆண்டுகளுக்கு முன்பே நாம் அறிந்திருந்ததை எடுத்து வைத்தார். ஆச்சரியம் தான். ’ஓரறிவதுவே உற்றறிவதுவே’ மற்றும் ’புல்லும் பூண்டும் ஓரறிவினவே’ என்று தொல்காப்பிய சூத்திரங்களை முன்வைத்தார்.

தாலாட்டுப்பாடல்கள் கலிப்பா வகையைச்சார்ந்தது. எந்த பள்ளியில் கற்றுக்கொண்டு தாய்மார்கள் இப்படி பாடுகிறார்கள்? என்று அப்பாடல்களை எடுத்து வைத்து கேட்க எல்லாருக்கும் சிலிர்ப்புத்தான். பல நல்ல மரபுகவிதைகளைக்கூறி அவை மறக்கப்படக்கூடியதுமல்ல என்று விளக்கமளித்தார்.
புதுக்கவிதை மலரென்றால் மரபுக்கவிதை வேர் என்றார்.

3 அடுத்து கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் அவர்கள் கவிதை என்பது வாழ்க்கையை கட்டமைக்கும் சக்தியிலிருந்தும், மனித அனுபவங்களிலிருந்தும், சமூகட்தின் சூழலிருந்தும் உருவாகுவதால் உள்ள உண்மைத்தன்மையைப் பற்றிக்கூறினார். இந்திய அளவில் நல்ல கவிதைகளை கவிஞர்களைப் பற்றிய குறிப்புக்களை வழங்கி இன்றைய நிலையில் பெண்கவிஞர்களே தமிழ் புதுக்கவிதையின் தலைஎழுத்தாக மாறி வருவதாகவும் குறிப்பிட்டார்..

( நமக்கு வேண்டியது தான் மனதில் நிற்குமென்றேனே:) )

கணினித்தமிழ் நிகழ்வினை திரு ஜான்சுந்தர் அவர்கள் முன்னெடுத்து வைக்க எழுத்துரு தரப்படுத்தல் தலைப்பில் பத்ரி சேஷாத்திரி எல்லாருடனும் சாதரணமாக மேடையின் கீழ் நின்று பேசுவது போலவே ..எழுத்துரு படைப்பில் ஏற்படும்  ப்ரச்சனை இது .. என்ன செய்யலாம்? என சிறு சிறு குறிப்புகளாக எல்லாருக்கும் புரியும்வண்ணம் எடுத்துக்கூறினார். என்னை மட்டும் அதற்கான பதவியில் அமர்த்தினால் இரண்டு நாளில் நடத்திக்கொடுக்கிறேன் என்றார். ஒரு ப்ரஸ் மீட் ஏற்பாடு செய்வதாக்கூட யாரோ வாக்களித்தார்கள்.. ”:)

அடுத்ததாகப் பேசிய பேராசிரியர் பெ. சந்திரபோஸ் அவர்கள் கணினித்தமிழ் மொழியாக்கச்சிக்கல்களை சுவைபட பகிர்ந்துகொண்டார்.

பத்ரியும் சரி பேராசிரியரும் சரி இருவருமே முன்வைத்தது ஜப்பான் சீனா போல எங்கள் மொழியில் மென்பொருளையும் எங்கள் மொழியை எளிதாகப்பயன்படுத்தக்கூடிய ஒரு கைபேசி , கணினி என நாம் அதிரடியாக கட்டாயப்படுத்தினால் வியாபாரம் முக்கியமானதாக நினைப்பவர்கள் முயன்று அதனைத்தருவார்கள் . நாம் கேட்காமல் இருப்பதே நமது தவறு என்று தான் சொன்னார்கள். யார் காதிலாவது விழுமோ?



நிகழ்வின் இறுதியில் தில்லி சௌம்யாவின் பாரதியார் பாடல்கள் நிகழ்ச்சி அருமையாக இருந்தது.’ செய்யும் தொழிலே உன் தொழில் காண்’ பாடலை நான் முதல் முறையாக கேட்டேன்.

சுசீலா அம்மாவின் கருத்தரங்கக்குறிப்பு
ச.வீரமணி அவர்களின்
நல்வாழ்வும் நற்பண்பும் இணைந்த நாட்டை உருவாக்குவோம்-தில்லித் தமிழ்ச்சங்கக் கருத்தரங்கில் அப்துல் கலாம் அறைகூவல்