July 23, 2014

அன்பின் தூதுவர்கள்


முனைகளில் நின்று 
குதிப்பது போல பாசாங்குடன்
பதறும் இதயத்தை மறந்து 
தாவி இழுக்கும் கைகள் 
விரிகிறதா என்று ரசித்தபடி
வாழ்வின் தீவிரத்தை 
விளிம்புகளில் உணர்கிறார்கள்
சத்தமின்றி உயிர்கொல்லும்
அன்பின் தூதுவர்கள்
-------------------------------------------------
கொஞ்சம் கொஞ்சமாய் உணர
கவனமாக நறுக்குகிறேன்
இதயத்தை
ஒரே அளவாக இருக்கிறதா என்றும்
அதிகம் வீணாகிவிடாமலும்
மறக்காமல் மிச்சமிருக்கும் ஈரத்தையும்
 உலர்த்தி எடுத்துவைக்கிறேன்
அடுத்து..

பதப்படுத்தும் கலையறியாததால்
முடிவற்ற
கவிதை இது.

----------------------------------------
தன்னை எழுதும் 
கதைக்குள் 
விடுபட்டவைகளை
கதையில் யாரோவாக 
தானேயிருந்து  எழுதச்செய்கிறாள்

வாசிப்பவரெல்லாம் 
தம்மைக் காண்பது
எதிர்பார்த்த முடிவென்பதா
எதிர்பாரா முடிவென்பதா

No comments: