September 16, 2019

மொழியே நம் அடையாளம்

 ரூட்ஸ் நாவலில் ஆசிரியர் அலெக்ஸ் ,  ஆப்பிரிக்காவிலிருந்து அடிமை வேலைக்கு கடத்தப்பட்ட குண்த்தாவின் பார்வையிலிருந்து அடிமைகள் எப்படி அடிமைத்தனத்தில் ஊறிவிடுகிறார்கள் என்று சொல்லிக்கொண்டே வருகிறார்.  ஒரு முழு ஆண்டு எந்த காவலையும் வைக்காமல் முதலாளி காணாமல் போனால் கூட வந்து பார்க்கும் போது அவர்கள் அப்படியே முணுமுணுத்துக்கொண்டு புலம்பிக்கொண்டும் வேலை செய்தபடியே தான்  இருப்பார்கள் . முதலாளி சொல்லாததையும் முந்திக்கொண்டு செய்யும் அளவுக்கும் போகிறவர்களாக , தன்னை அடிமைப்படுத்தியவர்களின் பெருமைகளை தன்னுடைய பெருமைகளாக நினைத்து பூரிப்பவர்களாக, தன் மதிப்பை , தன் வேர்களை உணராதவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கிடையே சுயமரியாதையோடு வாழ்வதும் விடுதலை எண்ணத்தை ஓரமாய் பிடித்துவைத்துக்கொண்டு வருடங்கள் வீணாக  ஓடுவதை எண்ணிக் கலங்குபவனாக அவனொருவன் மட்டுமே. கொஞ்சம் கொஞ்சமாய் தன் மறுதலிப்பை குறைத்துக்கொண்டு தன்னை அறியாமல் ஒப்படைக்கத் தொடங்கியபின் தான் யாரென்று மறந்து போவதற்கு, அவன் தன் மொழியை மறப்பதே காரணமாக நினைக்கிறான். மொழியைக்கொண்டே தான் அவன் இனக்குழு அடையாளம்.

நம்முள் எழும் சிந்தனையே  நாம் என்றால், அந்த சிந்தனையை எந்த மொழியினால்  செய்கிறோம்; எந்த சிந்தனைகளால் வளர்க்கப்படுகிறோம் என்பதில் உறுதியாக ஒரு தாக்கம் , ஒரு போக்கு இருக்கத்தானே இருக்கும்.

மொழியின் முக்கியத்துவத்தை இழப்பது,  நம் சிந்தனையை , நம்மை இழப்பது இல்லையா? 
#RootsAlexHaley

July 23, 2014

ஓவியத்தின் வழி கைப்பற்றுதல்






 
ஒரு ஓவியத்தின் வழி
கைப்பற்றும் வழியறிதல்
இக்கணத்தின் தேவை

சற்றே விலகிய பொழுதின்
விலையறிந்து
கண்ணிமை எண்ணியழைத்து
எச்சரித்து
கரம் பற்றிக்கொண்ட நினைவை 
நிகழ்வாக்கும் 
மற்றுமொரு 
அத்தினம் தேவை.
-----------------------------------------
 
வாயில் மாற்றி வைத்த
அவ்விடம் தேடி
வெகுதொலைவு நடந்தபோதும்
 துணையற்று திரும்பியபோதிருந்ததும்
ஒன்றல்ல
பாதங்கள் புதைய மணலற்ற
அப்பாதையின்
ஒற்றைச்சருகுமற்ற தன்மை
எழுப்பிய செயற்கையொலியால்
என் மணலை
என் சருகுகளை
அள்ளிக்கொண்டு
கருமை பரப்பி திசை திருப்புவதாய்
நிழலின் மென்மைக்கும்
புதுச்சாயம்

------------------------------------


காலச்சுழல் 
விரிகிறதா சுருங்குகிறதா 
நொடிகளின் ஒலி
எச்சரிக்கையா 
அமைதியின் எதிரொலியா
நெருங்குவது 
ஓய்வா 
முடிவற்ற தேடலா








------------------------------------------------------------


இன்றென ஒவ்வொன்றாய்
வெற்றிடம் நிரப்பவென்றும்
எனைச்சார்ந்தவை என்றே
உரிமை கொண்டும்
வந்தவை எல்லாம்
அரணுடைக்க முடியாமல்
நிரப்பவியலாமல்
மிகச்சரியான வெற்றிடமென்று
ஏதுமில்லை என்றபடி
ஒன்றாய்
வழி திரும்பிக்கொண்டிருக்கின்றன 


-------------------------------------------


 
நட்சத்திரங்களையும் வானையும்
சமைக்கப்படாத
தங்கள் பாதைகளை
தாங்களே அறியும் பறவைகளையும்
உண்டாக்கும் போதே
தனக்காய்
வனங்களை நிழல்களை
உருவாக்குவாள்
சக்தி













------------------------------------------------
ஒவ்வொன்றாய் எடுத்து
பார்வைக்கு அடுக்கியபின்
விழியற்றவர்களின்
வருகை மட்டுமே
உறுதி செய்யப்பட்டதாய் அறிகிறேன்


நீங்கள் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றேதான்
இருந்தும் கடக்கிறீர்கள்
விழியற்றும்
இதோ ஒவ்வொன்றையும் 
பிழையற்று அறிந்துநிற்கின்றன
மனங்கள் 

அன்பின் தூதுவர்கள்


முனைகளில் நின்று 
குதிப்பது போல பாசாங்குடன்
பதறும் இதயத்தை மறந்து 
தாவி இழுக்கும் கைகள் 
விரிகிறதா என்று ரசித்தபடி
வாழ்வின் தீவிரத்தை 
விளிம்புகளில் உணர்கிறார்கள்
சத்தமின்றி உயிர்கொல்லும்
அன்பின் தூதுவர்கள்
-------------------------------------------------
கொஞ்சம் கொஞ்சமாய் உணர
கவனமாக நறுக்குகிறேன்
இதயத்தை
ஒரே அளவாக இருக்கிறதா என்றும்
அதிகம் வீணாகிவிடாமலும்
மறக்காமல் மிச்சமிருக்கும் ஈரத்தையும்
 உலர்த்தி எடுத்துவைக்கிறேன்
அடுத்து..

பதப்படுத்தும் கலையறியாததால்
முடிவற்ற
கவிதை இது.

----------------------------------------
தன்னை எழுதும் 
கதைக்குள் 
விடுபட்டவைகளை
கதையில் யாரோவாக 
தானேயிருந்து  எழுதச்செய்கிறாள்

வாசிப்பவரெல்லாம் 
தம்மைக் காண்பது
எதிர்பார்த்த முடிவென்பதா
எதிர்பாரா முடிவென்பதா

புனைவற்ற உண்மைக்கதை



 
கண்ணிலிருந்து விண்ணேறி
நட்சத்திரங்களாகிவிட்ட
உப்புகற்களைப் பற்றிய கதைககளும்
உண்ணுகையில் அழும் விலங்கின்
இதயப்பசி கதைகளும்
மறுப்பினால் மறுகி
அலங்காரம் களையாத
மூப்பியின் பழியும்
முரண் பேசி குளத்தில் விழாமலிருக்க
அடர்காட்டில் வழிமறந்து
அப்பங்களோடு அவியாமலிருக்க
புனையப்பட்ட கதைகளுமாய் நிறைந்த
புத்தக அறைக்கு வெளியே
மறைவற்ற வெட்டவெளியில்
சிக்கிக்கொள்வதன்பது
புனைவற்ற உண்மைக்கதை

-------------------
ஆச்சரியங்களையும்
அதிசயங்களையும்
விரும்புபவள் வாழ்வில்
ஆச்சரியங்கள்
அதிசயமாய் நிகழத்தொடங்கியது
விருப்பங்களை விரும்பாமல்
இருப்பது எப்படி

ஒளியை
ஒரு  கூண்டில் ஏந்தி
இருளைப் பிரித்து
உள்நுழைந்து
கனவுப் பரணிலிருந்து
எடுத்து அடுக்குகிறாள்
வாழ்வின் பார்வைக்கு 

புறக்கணிக்க இயலாத தாமதங்கள்

இலகுவிற்கு பழகிய 
கரையை விட்டு 
நகர்ந்துவிட்ட  படகுகள்


துடுப்புகளின் இருப்பிற்கும்
பாய்மரத்தின் இழுப்பிற்கும்
நதியின் நடுவிலிருந்து
புதியகோணங்கள் எழுதும் 
போலிப்படகுகள்

----------------------------
புறக்கணிக்க இயலாத தாமதங்கள்
அவதியற்றிருந்தும் கூட 
ஓர்   நிலையின்மை
உரிமையற்றதாகிவிட்ட பின்னும்
சிறுதொலைவுக்குள்
வண்ணம் நிறைக்கும் அந்திச்சூரியன்
முற்றாய் 
கரைத்துவிடத் தயாரான  இரவு

உறக்கம் தொலைத்து 
கீழ்நோக்கி விழுந்து 
பறக்கத்தயாராய்
நாளெல்லாம் பற்றியிருந்த கிளையை 
விடுவிக்கும் வாவல்

ஒவ்வொரு சங்கிலியாய் 
இளகிக்கொண்டிருக்கும்  மனம்
 

புன்னகை


புன்னகை

எப்போதும் 
கையோடு தான் வைத்திருப்பது 
செப்படி வித்தை தெரிந்தவராய் 
கையிலிருப்பதை அறிகிறார்கள்
வாராக்கடனாய் அதும் சென்றுவிடுகிறது

பிம்பங்களை உருவாக்காமல்
ஊடுருவிச் செல்லும் போது 
இரட்டிப்பாவதில்லை
 
அரவமற்றதும் 
ஒளியற்றதுமான பொழுதுகளில் 
கதவிடுக்கில் மேஜைகளுக்கடியிலிருந்து 
அது க்ரீச்சிட்டிக்கொண்டிருக்கும்
அதன் பெயர் அதிர்ஷ்டம்

----------------------------------------------------------------

 
நாட்களாய் படிந்து விட்ட
அலமாரியின்   தரையழுந்திய ஓரங்களும்
கட்டிலின் பாதங்களும்
விட்டுச்சென்ற சுவடுகள்

சற்றும் பொருத்தமற்ற
எம் புதிய அலமாரிகளின்
நீளத்தில் நீளம் மறைந்தாலும்
அகலத்தில்
பழங்கதையின் சில பக்கங்கள்

ஏதும் எழுதிச்செல்லாத
கூரைகளில் சுழலும் விசிறியின்
உராய்விலிருந்து
இறங்குகிறது ஒரு கதை

சுவர்களிலிருந்து
புதியகதையில் இல்லாத
பிஞ்சுக்கைகள் அழைக்கிறது

சிறுகச்சிறுக சேர்க்கும் கேள்விகள்

 
சிறுகச்சிறுக சேர்க்கும் கேள்விகள்

தொலைவுகளின் நீளத்தை
இரட்டிப்பாக்கவும்
இல்லாதாக்கவும்
ஒருசேர முடிவதென்ன கணக்கு ?

பாதம் பட்டறியாத
அறைகளின் துல்லியம்
கால்கள் அறிவதெப்படி?

சொல்லவிரும்பாப்
பொய்களுக்கு மாற்றாக
கரங்களுள் பொதிந்திருக்கும்
உண்மைகளின் பட்டியல்களை
விரல்விரலாக நீக்கியும்
கேட்டு வாங்கியும்
கிழித்துப்போடுவது என்ன விளையாட்டு?

வேரலென
சட்டென்று வளரும்
வருத்தமும் கோபமும்
பூத்து சிதறி மறைவதென்ன மாயம்?

வேரல் - மூங்கில்*
-------------------------------
 
புல்வெளிகள் கடந்து
நடைவேகத்தில்
உரையாடல்
 உலைக்களம் அடைந்தது
நினைவுப்பரிசாக 
அங்கே பரிமாறப்பட்டது 
கனன்று கொண்டிருக்கும் கோளம்
மீண்டு நடந்த ஒற்றைச் சுவடுகளை 
விழுங்கியதில்
அலையற்றுப்போனது கடல்
7

May 6, 2014

லேண்ட்ஸ்டௌன்

லேண்ட்ஸ்டவுன் (Landsdowne) - உத்தரகாண்ட்
தில்லியிலிருந்து மீரட்-> பிஜ்னூர்->நஜிபாபாத் -> கோத்வாருக்குப் பிறகு தான் மலைப்பகுதி தொடங்குகிறது.  அதிகம் சுற்றுலாத்தலமாக அறியப்படாமல் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் தற்போது இல்லை. தில்லியிலிருந்து 250 கிமீ. காலை ஆறுமணிக்கோ அதற்கு முன்போ கிளம்புவதால் மீரட்டின் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கலாம் என்பதால் ஆறுமணிவாக்கில் வீட்டிலிருந்து இறங்கினால் மேகம் இருண்டு , மழைக்காற்று . காரில் ஏறும்போதே சடசட வென மழைத்தூரல். லேண்ட்ஸ்டவுன் தில்லிக்கே வந்துவிட்டிருந்தது.


பயண தூரத்தின் சரிபாதியாக வரக்கூடிய மீராப்பூருக்கு அருகில் சில தாபாக்கள் உண்டு. மதிய உணவுக்கு அங்கே இளைப்பாறுதல்.சாலையோரக்கடைகள் தவிர்த்து மல்டி மில்லியன்ஸ் ( போகும்வழியில் இது சாலையின் மறுபுறத்தில் இருப்பதால் தவறவிட்டோம்) சுகாதாரமான கழிப்பறைகளுடன் கூடிய உணவகம் என்பதாக அறிவுறுத்தப்பட்டிருந்தோம்.

 மலையேறும்  போது நல்ல சாலை. சில இடங்களில் மட்டும் கொண்டை ஊசி வளைவுகள் உண்டு. தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓக் க்ரோவ் இன் ஐ நடத்தும் தம்பதியினர் தொடர்ந்து வருகையை மற்றும் சரியான பாதையில் தான் வருகிறோமா என்பதை விசாரித்துக்கொண்டே இருந்தனர். மதிய உணவுக்கு அவர்களுடன் வெல்கம் லஞ்ச் என்று சொல்லி இருந்தார்கள்.

நாங்கள் கோத்வார் அருகில் சிறிய குன்றின் மீது அனுமன் கோயிலைக்கண்டதும் நிறுத்திவிட்டோம். மகனுக்கு பஜ்ரங்க்பலி என்றால் அவ்வளவு பிரியம். அருகில் ஓடும் ஆறும் ( ஒற்றையடிப்பாதை அளவே ஓடினாலும் சலசலப்பு உயரம் வரைக்கேட்டது) மலையடிவார அழகும் சித்பலி அனுமன் கோயில் இருந்த குன்றில் பல சித்தர்கள் வந்திருந்து தியானம் செய்திருப்பதற்கு காரணமாக இருந்திருக்கலாம். மலையடிவாரத்தில் பொன்வயலழகும் ...

மலையில் காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. மலையேறத்தொடங்கும் முன்பே ஒரு இடத்தில் மகன் எங்களிடம் “கண்களை மூடி இயற்கையின் சத்தத்தைக் கேட்டுப்பாருங்கள்” என்று சொன்னபோது ஆச்சரியமாய் யாரு இவனா இவனா சொன்னது என்று  கேலி செய்துகொண்டிருந்தோம்.
oak grove inn
ஓக் க்ரோவ் இன் சென்றடைந்ததும் தம்பதிகள் எங்களை அவர்கள் வீட்டிற்கு வந்தவர்களைப்போல உபசரித்து உரையாடிவிட்டு  விடுதியின் உணவருந்தும் அறைக்கு அழைத்துச்சென்றார்கள். வீட்டில் தயார் செய்வது போன்ற உணவு. அமைதியான பரிசாரகர்கள். சப்பாத்தி , சாதம், பருப்பு, சப்ஜி வகைகள். எனக்கு சுற்றுலாவில் முதல் விருப்பம்  அடுத்தவர் சமைத்து சுடச்சுட  சாப்பிடுவது. அது இன்னும் சுவையாக இருக்கும் பட்சத்தில் இன்னும் ஒரு படி  மகிழ்வு.  அவர்கள் சமைத்த அறை கூட சமைத்தது போலவே இல்லை. அத்தனை சுத்தம். அவர்களும் எங்களுடன் அமர்ந்து உணவருந்தியது ஒரு உறவினர் வீட்டிற்கு வந்திருந்தது போலவே இருந்தது.

மற்ற அறைகளெல்லாம் தனித்தனி அறைகள். இது ஒன்று பெரியது. அவர்கள் வீட்டைச்சுற்றிலும் விதவிதமான செடிகள். அவை கவர்ந்திழுக்கும் வண்டுகள். பறவைகள். சூரியன் மறையும் போது ரசிக்க அங்கே இரண்டு இடங்கள் . ஒன்று மரவீடு போன்ற ஒரு இடம். அதற்கும் அடியில் ஒரு ஹைட் அவுட்.
oak grove inn



March 10, 2014

ஓவியம்போல் கவிதை போல் குறும்படங்கள்

10th IAWRT Asian Women's Film Festival
(The International Association of Women in Radio and Television )
 முதல் முறையாக இப்படி ஒரு நிகழ்விற்கு சென்றேன். குறும்படங்களின் சிறுகுறிப்பு என்னை இவற்றைப் பார்க்கத்தூண்டியது. நானும் இப்படி முயற்சி எல்லாம் முன்பு செய்திருக்கிறேன். பார்த்தப்படங்களைப்பற்றி ஒரு நினைவுக்குறிப்பு.

 Watermelon, fish and half ghost | payal kapadia - 11 நிமிடங்கள்

 ஒரு ச்சால் ந்னு சொல்கிற குடியிருப்பில் இருக்கிற பழக்கமான வாழ்க்கையைப் பற்றிய ஆரம்பம் எனக்கு மிகவும் பிடித்தது. நேரம் என்பதே அங்கே முக்கியத்துவமற்றது போல இருந்தது ஆனா நேரத்தைக் கணக்கில் கொண்டு செய்யும்  எந்திரத்தனமாக செயல்பாடுகளால் அவர்கள் வாழ்வதை உறுதி செய்துகொண்டிருக்கிறார்கள் என்று ஒரு குரல் சன்னமாக பிண்ணனியில் ஒலிக்க படம் துவங்கியது.  காட்சி நகரும் இடங்களை எல்லாம் கவனிக்கும் ஒரு மனக்குரலின் பதிவு.

பாதியில்  ஐயர் மறந்து போன மந்திரத்தால் அரையுடல் ஆவியாக பாட்டிக்கு மட்டும் காட்சி தரும் தாத்தா . அதை நினைத்து பாட்டியின் தினப்படியான புலம்பல். பாதியில் நின்றுவிட்டது சிரார்த்தம். அவர் நிம்மதியற்றிருக்கிறார் அவர் நிம்மதியற்றிருக்கிறார்.  நிம்மதியற்று  இருப்பதெற்கென்றே இறந்த கணவர்  காரணமாக ஒரு கவலையை ஏற்றி வைத்திருப்பாரோ?  நிழல்கள் படம்  போல ஒரு இளங்காதல் ஜோடி. கீழ்வீட்டில் இளம்பெண். மாடியில் கவிதை வாசிக்கும் இளைஞன். அவளுக்கு திருமணம் ஆனதும் சோகமான கவிதை என்பது மட்டுமே மாற்றம். அவள் எப்போதும் அணியும் அதே சுகந்த மணம் வீசும் பூக்களிட்ட துப்பட்டாவில் குழந்தைக்கு தூளியாட்டுக்கிறாள்.  டைரக்ட் செய்தவங்க வரவில்லை என்பதால் அதைப்பற்றி எதும் கேள்வி வரவில்லை போலும்  நானும் ஒரு தொலைபேசிக்காக வெளியே சென்றிருந்தேன்.

படத்தைப்பற்றி அழைப்பிதழ் குறிப்பு- A fable about life in a chawl where superstitions, relationships, and crises create a unified communtiy


அடுத்த Haze |kanika gupta- Experimental 6 நிமிடங்கள்
படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை ஒரே மழை  காரிலோ ரயிலிலோ அல்லது எதாவது ஜன்னலிருந்தோ முன் கண்ணாடியிலிருந்தோ  பக்கம் பார்க்கும் கண்ணாடியிலிருந்தோ மழையைக் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். சிகப்பு விளக்கில் வெகு நேரம் காத்திருக்கும் வண்டி.  ஒரு ஸ்க்ராப் பேப்பர் ஓவியம். அதும் சிகப்பு கலர்.  நடுவில் அடிக்கடி ஒரு உடைந்த கண்ணாடிக்கு பின் இருக்கும் ஒரு ஓவியம் . பிறகு நகரும் ரயிலிலிருந்து ஒரு தண்டவாளத்தின்  நகர்வையும் பின் அது கிளைத்து பரந்து பிரிகின்ற இவற்றைக் காட்சி படுத்தி முடிந்துவிட்டது.

கேள்விபதில் நேரத்தில் அதை எடுத்த சிறுபெண் அது தன் முதல் முயற்சி என்றும் சில இடங்களை வெறும் மொபைல் கேமிராவில் எடுத்தேன் என்றும் உங்களால் இதை எப்படி விளங்கிக்கொள்ள முடியுமோ அப்படி புரிந்துகொள்ளுங்கள். என்னைப்பொறுத்தவரை இது என்வாழ்க்கையின் ஒரு நிகழ்வைக் குறிக்கிறது என்றாள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அனைவரும் தங்கள் தங்கள் எண்ணத்தை வெளியே வைத்த பின் அந்த ஓவியம் தனக்கு பிரியமான ஒன்று என்றும் அது உடைந்தது மற்றும் சிகப்பு குழப்பத்தையும் ,கண்ணாடியின் வழி காட்சி மறைக்கும் மழைதாரை  எதிலும் தெளிவின்மையையும், நகரும் தண்டவாளம் வாழ்வின் எந்த ஒரு ப்ரச்சனையாலும் நின்றுவிடாத ஓட்டத்தையும் குறிப்பதாக ஒரு மாடர்ன் ஆர்ட் ஓவியத்தின் விளக்கம் போல பேசப்பட்டது எனக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. முதலில் இது என்ன படம் என்று சிரித்த சில முகங்களும் கூட தலையசைத்துக்கொண்டன.  நிட் ல படிச்சிட்டிருந்த பொண்ணுக்கு எதோ தோன்றி இப்படி படமெடுத்து அதையும் விளக்கி சொன்னாளே அது திறமை. ஒரு பெண் இதை உணர்ந்திருக்கிறேன் எனவே சரியாக விளங்கிக்கொள்ளமுடிகிறது என்று சொன்னபோது கனிகா நீங்கள் என்னைப்போலவே உணர்ந்திருக்கிறீர்கள் என்பதற்காக நான் வருந்துகிறேன் என்று சொன்னது அழகா இருந்தது.
படத்தைப்பற்றிய அழைப்பிதழ் குறிப்பு -  A journey from trying to find meaning in everything to a realm beyond meaning.

Bandish| Adwaita Das|Experimental -7 நிமிடங்கள்

அத்வைதா ஒரு கவிதாயினியாம். இப்போ தேடியபோது தெரிந்துகொண்டேன். பந்திஷ் என்பது ஒரு பாடலின் ஒரு ராகத்தின் ஒரு பகுதி மீண்டும் மீண்டும் சிறு வேறுபாடுகளுடன் இசைக்கப்படுவது . ஒரு பெண் தன்னுடைய கேமிராக்கண்களால் தன்னையும் தன் நாளையும் பார்த்துக்கொள்ளும் ஒரு படம். நடப்பது குளிப்பது காபி  , என காலையின் நிகழ்வுகளோடு கூட அவளுடைய உடலையும் அழகையும் உணர்வுகளையும் என எல்லாவற்றையும் வேறொரு கண்களால் பார்ப்பது போல தன் கேமிராவால் தானே படமெடுத்து இருக்கிறார். படம் முடிந்ததும் லீனா அதன் ஒலியமைப்பு சிறப்பாக இருந்ததாக் குறிப்பிட்டார். அத்வைதா அதை தனியாகப் பின்னால் தான் சேர்த்தோம் என்று கூறினார். அவர் நிறுத்தி நிதானமாக பேசுவதே கவிதை வாசிப்பது போல இருந்தது. இன்றைய தினத்தில் செல்ஃபி படமென்பதும் தொடர்ந்து தங்கள் உறவு நட்பு என அனைவருக்கும் படங்களால் தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பதும் ஆச்சரியமில்லை. அது நம் கையில் இருக்கும் ஒரு தூரிகையைப் போல பேனாவைப்போல அந்நேரத்தை அப்படியே அடுத்தவருக்கு கடத்துகிறது, அதனால் என்கையில் கிடைத்த மொபைலில் இது போன்ற ஒரு முயற்சியை செய்தேன் என்றார் அத்வைதா. முழுக்கமுழுக்க மொபைலில் தன்னைத்தானே எடுத்துக்கொண்ட திரைப்படம்.

படத்தைப்பற்றிய அழைப்பிதழ் குறிப்பு - A young woman observes herself through the camera seeking a deeper truth.

For you and me |Tanushree Das - 11 நிமிடங்கள்
இந்த படம் முழுவதும் காட்சியில் வருகிற இடங்களிலிருந்து எல்லாம் வேறெங்கோ இருக்கும் இன்னோருவருக்கு செய்தி தட்டச்சப்பட்டுக்கொண்டே இருக்கிறது. திரையின் மேல் ஒரு கர்சர் ஒளிர்ந்து வார்த்தைகள் தட்டச்சும் ஒலியுடன் வந்து விழுகிறது. "நினைவிலிருத்தி  என்னில் மிகச்சிறிய ஒரு பகுதியை மட்டும் தான் இந்த தூரம் பிரித்திருக்கிறது .  என்னால் எல்லாவற்றையும் முழுமையாக வார்த்தைகளால் இசையால் சொல்லிவிடமுடியாது ஆனால் இவ்வார்த்தைகள் முயற்சிக்கின்றன. இவ்வார்த்தைகளே உனக்கான நான் .”

படத்தைப்பற்றிய அழைப்பிதழ் குறிப்பு - A flim of yearning and the struggle to sustain relationships in a society of technological proximity  and physical distances
Show less

January 12, 2014

ஒளிர்

 
பனியின் கரங்கள்
மிடாஸின் துயரம் போல
உயிர்களை
சிலைகளாக்கி செல்கிறது
உறைந்தும் உயிர்த்திருக்கும் மனம்
தன்னையே
உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது

வெம்மைசூழ் நாட்களுக்குள்
தன்னையறிந்துகொண்டால்
விரிந்துகொண்டிருக்கும்
இடைவெளிகளை நிரப்ப
விலைமதிப்பற்றவைகளை
சேகரிக்கத் தொடங்கலாம்

November 27, 2013

அணுக்கநடை பயணம்

எண்கள்
பொறுமையுடன் 
தலைகீழாய்
இறங்கிக்கொண்டிருக்க
புறந்தள்ளியபடி 
பரபரத்து 
மேலேறுகின்றன எண்ணங்கள்

--------------------------------------------------------


வண்ணக்குறியீடுகளால் 

வரவேற்பெழுதிய அறையின் வாசலில்
வண்ணங்கூட்டுகையில் உச்சரிக்கப்படாத 
பெயரைத் தாங்கியதற்காய்
காத்திருக்க நேர்கையில்
நேரம் நீள்வதாய் இல்லாமல்
ஒவ்வொரு நொடியிலிருந்தும்
மீண்டும்
துவங்குகிறேன்


----------------

நூல் இற்றுக் கொண்டிருக்கும்
புத்தகத்தின் 
தொலைந்துகொண்டிருக்கும்
துவக்கமும் முடிவும்
சுருக்கிக்கொண்டிருக்கிறது
சிறுநிகழ்வென நெடியவாழ்வை

-------------------------

குறையல்ல

அறிந்தும் அறியாதவராய்
அணுக்கநடை பயணம்
எனையறியா நானும்
உனையறியா நீயும்

October 23, 2013

காற்றினிலே வரும் தண்ணென்ற தென்றல் - உதய்பூர்

ஊரைப்பற்றிய குறிப்புகள் எதையுமே நான் படிக்கவில்லை. முன்பே திட்டமிட்ட விடுதியில் அறையில் சேர்ந்ததும் ஆச்சரியம் இணைய இணைப்பு கிடைத்தது. வந்து சேர்ந்ததை கூகிள் ப்ளஸில் தெரிவித்தேன். வெளிநாட்டவர்களின் வருகையால் இணைய இணைப்பு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. எல்லாம் விடுதிகளிலும் பெயர்பலகையிலேயே இலவச இணைய இணைப்பு எனக்குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஊரெங்கும் வெளிநாட்டவர்கள். யாரையாவது நிறுத்தி இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டுவிடும் ஆர்வம் கடைசி நிமிடம் வரை இருந்தது. தனியாக செல்லும் சிலர் பலகாலமாக இங்கேயே இருக்கும் மண்ணின் மைந்தர்களைப்போல நடமாடுகிறார்கள்.
காலை உணவுக்கு ரோட்டோரக்கடைகளைத் தேடினோம். பொதுவாக வடநாட்டு சுற்றுலாவில் காலை உணவாக கிடைக்கும் ஆலு பராத்தா அன்று கிடைக்கவில்லை. அன்று உணவு ப்ரட் பக்கோரா கொரித்து வைத்துக்கொண்டோம்.


 பிறகு ஆட்டோ ஓட்டுனரே சில ஏரிகள் , பூங்காக்களுக்கு அழைத்துச் சென்றார். வெயில் அடித்தாலும் தண்ணென்று ஒரு தென்றல். மேலே இருப்பது ஃபதெ சாகர் ஏரி. சிறிது படகு சவாரி செய்து ஏரியின் நடுவில் ஒரு சிறு தோட்டம். அங்கே சென்றதும் அமைதியும்  அங்கேயே இருந்துவிடத்தோன்ற வைக்கும் குளுமையும் வரவேற்றது.




 சஹேலியோன்கி பாரி - தோழியரின் தோட்டம் 18 நூற்றாண்டில் ஒரு ராணி கல்யாணமாகி வரும்போதே 40 தோழிமாருடன் வந்தாளென்று தனக்காக செய்த தோட்டத்தை ராணிக்கும் தோழியருக்கும் ராஜா பரிசளித்துவிட்டாராம். ஏரியெல்லாம் ஊரில் அழகா கட்டி இருக்காரே என்று  பார்த்தேன். இந்த தோட்டத்திலோ அத்தனையத்தனை நீரூற்றுக்கள். எப்படி அந்தகாலத்தில் நீரூற்றுகள் வேலைசெய்திருக்கும் என்று நானும் மகளும் யோசித்துக்கொண்டிருந்தோம். ஏரியிலிருந்து தான் நீரூற்றுகளுக்கு தண்ணீர் வந்திருக்கிறது. வாழ்ந்திருக்காங்க. இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்டு இருக்கின்றன நீரூற்றுகள்.





மழையைப்போல தோன்றவேண்டுமென்று  சுழலும் பறவையின் வாயிலிருந்து நீர் தெளிக்கிறது. தோழியரின் நடனத்தின் தாளத்திற்கேற்ப நீரூற்றுகளிலிருந்து இசையும் இருந்ததாம். இந்த இடத்தை எங்கோயோ போன ஜென்மத்தில் பார்த்திருக்கோமோ என்று தோன்றிக்கொண்டே இருந்தது.



பேஸ்புக்கில் படம் பகிர்ந்த பொழுது கல்யாணி சங்கர் நினைவுப்படுத்தினார்கள். காற்றினிலே வரும் கீதம் என்று பாடியபடியே எம். எஸ் இந்த தோட்டத்தின் நீரூற்றுக்களுக்கு மத்தியில் தான் நடந்திருக்கிறார்கள்.


 

காலையுணவு கொரித்த அளவுக்கு நேர் மாறாக மதியம் நட்ராஜ் உணவகத்தில் 160 ரூ அன்லிமிடட் தாலி. பையனுக்கு குலோப்ஜாமூன் கூட கூடுதலாக நாலு கிடைத்தது. நடராஜருக்கு பின் கூட ஒரு நீரூற்று.  ட்ராவல் ட்ரெண்ட் டீவியில் நட்ராஜில் தாப்பூ தாழம்பூ என்றால் சாதம் கொடுப்பார்கள் என்றும் எல் மாதிரி காட்டினால் ரொட்டி என்றும் ரோகன் சொன்னதாக  மாற்றி நினைவு வைத்திருந்தோம் போலும்
 அங்கே போனால் வெயிட்டர் அது ரொட்டிங்க மாற்றி சொல்லுறீங்க என்றார் . நம்ம ஊரைப்போல அங்கே சாதம் போடப்பா இங்கே ரொட்டி கொண்டுவா என்று சத்தமில்லை. எப்போதும் எல்லாரும் கவனமாக இருக்கிறார்கள். சைகையைக் கொண்டே மேலாளர் தெரிவிக்கிறார்.





 .

August 24, 2013

ஆயுதங்களற்ற உன் தேசம்




மீள் ஒலிகள் 
வரைய வரைய 

உருபெற்றுக் கொண்டிருந்தபோது
’உம்’ கொட்டியபடி
பதிவாக்கிய சொற்களில்
விடையறியா - உன்
வியூகம் உடைத்தேன்
ஆயுதங்களற்ற உன் தேசத்தில் 
மேற்கொண்டு என்ன செய்ய?




-----------------------------------
அன்றொரு 
சின்ன சொல்லில் தடங்கலாகி 
இடைவிடாது
நேற்றிலிருந்தும் நாளையிலிருந்தும் 
அம்பாரமாய் சொற்கள் 

உயர வளர்ந்த 
மணற்குன்றெங்கும்
சீரான காற்றின் தழுவலில் 
அலையலையாய் 
அழகிய பதிவுகள்


இன்றது 
அமைதியில் இசைக்கவும் 
தொடங்கியது

August 15, 2013

உயரத்தின் ஈர்ப்பு

நீண்ட
மிக நீண்ட
படிவரிசைகளை
ஒன்று ஒன்றாகக்
கடந்து கொண்டிருக்க
விசையோடு ஈர்க்கிறது
முதல்படி
முற்றிலும் விளங்காதது
உயரத்தின் ஈர்ப்பு
-----------------------------------------------------------------------------------------------


இடையறாது 
நகர்கின்ற உலகத்தின்
அசைவற்ற புள்ளியிலும்
அமைதியின்  ஆழத்தில்
நின்றுவிட்ட‌ உலகின்
துவக்க விசையிலும்
ஒரே நேரத்தில்
தன்னைப்
பிணைத்துக்கொண்டிருக்கிறது
ஒவ்வொரு நொடியும்

June 22, 2013

ரிஷிகேஷ் ராஃப்டிங்

River Water Grade
Grade 1: Easy, small waves. No obstacles, 
Grade 2: Moderate difficulty with clear passages, 
Grade 3: Difficult, high irregular waves, narrow passages- require precise maneuvering, 
Grade 4: Difficult, powerful waves. Very precise maneuvering required, 
Grade 5: Extremely difficult, violent, highly congested. 

Water Grade 2/3 in BrahmpuriShivpuri Water Grade 2/3 Plus, Marine Drive 3/4 Plus and Kaudiyala 4 Plus.

நாங்கள் சென்ற ப்ரம்மபுரியிலிருந்து வரும் பகுதியில் 2மற்றும் 3 க்ரேட் களில் அலை இருக்கும் .அந்தப் பகுதி மட்டும் தான் நாங்கள் சென்றபோது ராஃப்டிங் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும். மற்ற பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சொல்லியிருந்தார்கள்.
View My Saved Places in a larger map

கைஸ் முன்னேறுங்கள் என்றதும் எல்லாரும் ஒரே நேரத்தில் துடுப்பிடுகிறோமா என்று பார்த்து தாமதித்து செய்பவர்கள்,  ஒப்புக்குச் செய்கிறவர்களுக்கு பின்னாலிருந்து சளேர் சளேர் என்று தண்ணீரை அடித்து கமாண்டரின் மிரட்டல் வரும். வளைவுகளில் எங்கெங்கே தண்ணீர் வேகம் எந்த பக்கம் நோக்கி இருக்கிறதோ அதற்கேற்ப முன்னேறுகள் என்றோ பின்னோக்கி என்றோ அவர் சொல்ல , நாங்கள் துடுப்பிட,கங்கையின் வேகத்தோடு செல்கின்ற படகுக்கு சரியான பாதையில் செல்ல சிறு உதவியைத்தான் நாங்கள் செய்துகொண்டிருந்தோம். 


இருந்தாலும் நாம் துடுப்பிடுவதாலா இந்த படகு செல்கிறது என்பதில் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. எங்களிடமிருந்து மொபைல் , கேமிரா மற்று பர்ஸ் போன்ற பொருட்களை ட்ரை பேக் என்ற ஒன்றில் பத்திரப்படுத்தி இருந்ததால் நாங்கள் நிறைய படமெடுக்க இயலவில்லை.

சரி இப்போ ரேப்பிட் இல்ல நீங்கள் யாரல்லாம் தண்ணியில் குதிக்க விரும்புறீங்களோ குதித்துவிட்டு இந்த கயிற்றை பிடித்துக்கொள்ளுங்கள் என்று படகின் முனையில் இருந்த ப்ளூ ரோப்பை குறிப்பிட்டார். முதலில் குதித்த பையன் கயிற்றை பிடிக்கற தூரத்தில் இல்லாமல் குதித்ததும் நீரோடு செல்ல ஆரம்பித்தான். கல்யாண்சிங்கை நாங்களெல்லாம் பதட்டத்தோடு பார்த்தோம். அந்தப்பையன் முன்பே சொன்னது போல பயமாக இருந்தால் செய்யவேண்டிய சைகைகளை செய்யவில்லை மற்றும் எப்படியும் காப்பாத்திடுவார் என்கிற தைரியத்தோடு நீரோடு படகையே பார்த்தபடி சென்று கொண்டு இருந்தான். கவசத்தின் துணையால் அவன் மிதந்து கொண்டிருந்தான். கல்யாண் சிங் எங்களுக்கு படகு அவனுக்கருகில் செல்ல வேண்டிய அளவுக்கான துடுப்பு போடும் கட்டளைகளைக் கொடுத்துக்கொண்டே நீரில் குதித்து கயிறை அவன் கையில் கொடுத்துப் பிடித்துக்கொள்ளச் சொன்னார்.

பின் மற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராக நீரில் குதித்து பக்கவாட்டில் இருந்த கயிற்றை பிடித்தபடி படகோடு பயணித்தனர். படகு கங்கையின் ஓட்டத்தில் தன்னைப்போல சென்று கொண்டிருந்தது. நான் மட்டும் படகில் இருந்தபடி படமெடுத்துக்கொண்டிருந்தேன். ரேப்பிட் வரப்போகிறது உடனே அனைவரும் படகில் ஏறுங்கள்   படகில் ஏறுங்கள் என்றபடி ஒவ்வொருவரையாக உள்ளே இழுத்துப்போட்டு விட்டு மீண்டும் கட்டளைகள். பாறைகளுக்கு நடுவில் வளைந்து செல்லும்போது மகனுக்கு டைட்டானிக் நினைவுக்கு வந்துவிட்டது. நீரின் போக்கிற்காக சிறிது தூரம் பாறையை நோக்கி சென்று பின் தான் திசை திருப்ப வேண்டி இருக்கிறது. நீங்கள் அப்பாறையில் மோதப்போகிறீர்களா என்று அவன் பின்னால் திரும்பி சிரித்தான்.

அவன் படகின் முனையில் கயிற்றைப்பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான். நீங்கள் எல்லாம் என் அடிமைகள் . எனக்காக படகு செலுத்துப்பவர்கள் என்று என்னிடம் அவன்  ரகசியமாகச் சொன்னதை நான் கல்யாண்சிங்கிடம் சொல்லிவிட்டேன். அடேய் அப்படியா சொன்னே என்று அவன் மேல் தண்ணீரைத்தெளித்ததும் அவன் நான் சொல்லவே இல்லை என்று பல்டி அடித்துவிட்டான். பயத்தில் தான்..:)

வண்டி  பத்து நிமிசம் நிற்கும் . எதாவது வாங்கிக்குடிக்கறவங்க குடிங்க.. நூடுல்ஸ் செய்து தருவாங்க  சாப்பிடுங்க. என்றபடி ட்ரைவரும் கண்டக்டரும் இறங்கிப்போனாங்க.. பஸ் ஸா படகா..? தொடர்ந்து துடுப்பு போட்டதில் எல்லாரும் சோர்வடைந்ததுதான் ஆனால் சாப்பிடவும்  பயம். சரி ஒரு லெமன் ஜூஸ் குடிக்கலாம் என்று கேட்டால் 12 ரூ பாட்டில் 40 ரூ . சரி வாங்கறோம் என்றதும் நீருக்குள் இருந்து ஒரு கயிற்றைப் பிடித்து இழுத்து அதன் முனையில் இருந்த மூட்டையிலிருந்து பாட்டில்களை எடுக்கிறார்கள். இயற்கையான குளிர்ப்பெட்டி. அதான் கங்கை ஐஸ்கட்டியாக குளிர்கிறதே.

என்ன மேடம் நீங்கள் மட்டும் குதிக்கலையே என்று கல்யாண் கேட்டதும் நான் படமெடுத்துவிட்டு குதிக்கலாம் என்று நினைத்தேன் என்றேன். சரி கேமிரா உமன் என்று எல்லாரும் கேலிசெய்தார்கள். அடுத்த இடத்தில் நீங்கள் தான் முதலில் ..என்றார்.  முதலில் எங்கள் கேமிராவில் எங்கள் குடும்பத்தை எடுத்தேன் மாணவர்களுக்காக அவர்கள் கேமிராவில் அவர்களையும் படமெடுத்துக்கொடுத்துவிட்டுப் பார்க்கும்போது ரேப்பிட் வந்துவிட்டது என்று எல்லாரையும் திரும்ப ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அதற்கு உதவச்சென்று விட்டேன்.

அடுத்த அமைதியான இடம் வந்ததும் நானும் நீரில் குதித்து பக்கக்கயிற்றை பிடித்தபடி பயணித்தேன்.  8 பயணிகளும் ஒரே சமயத்தில் நீரில் இருந்தோம். பிறகு மீண்டும் ராஃப்டிங் பயணம் . இந்தமுறை அதிக அலைகள் நிறைந்த இடம் வந்த போது (குறைந்த பட்சம் கோணம் 50 - 60 இருக்கலாம் என்று நினைக்கிறேன்) படகை அலைகள் உயரத்தூக்கித் தூக்கிப்போட்டது. நாங்கள் தொடர்ந்து கல்யாண்சிங்கின் கட்டளைகளுக்கு ஏற்ப துடுப்பை செலுத்திக்கொண்டிருந்தோம்.

என் கவனம் கட்டளைகளுக்கு மத்தியில்  நீரின் வேகத்தையும் படகின் ஆட்டத்தையும் கவனித்துக்கொண்டே  முன் வரிசையி கயிற்றைப்பிடித்திருக்கிறக் குட்டிப்பையன்  இதை எப்படி அனுபவிக்கிறான் என்று பார்க்கமுடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தது. கார்டூன் மற்றும் சினிமா பார்க்கும் போது அவற்றைவிட குழந்தைகளின் முகபாவங்களைக் கவனிப்பது எனக்கு மிகவும் பிடித்த விசயம். மகளின் முகம் தெரிகின்ற தூரத்தில் இருந்ததால் அவள் ரசித்துப் பயணிப்பதை நான் அறிந்துகொண்டேன்.

ராம்ஜூலாவைத்தாண்டி ரிஷிகேஷ் டேக்ஸி ஸ்டாண்ட் அருகில் இருந்த படிக்கட்டுகளிடம் எங்கள் பயணம் நிறைவுற்றது.  கல்யாண்சிங் எல்லாரும் மீண்டும் ஒருமுறை கண்டிப்பாக வருவீர்கள் எனக்குத்தெரியும். நம்பர் எழுதிக்கொள்ளுங்கள் என்று தன் எண்ணை எல்லாருக்கும் கொடுத்தார். எதிர்பாராமல் அமைந்த திரில்லிங் பயணம்.

இப்போது பதிவு எழுத ராஃப்டிங் க்ரேட் காப்பி பேஸ்ட் செய்வதற்காக கூகிள் செய்தபோது. அடுத்த இரண்டு நாட்களில் இதே போல பயணித்த ஒரு படகு கவிழ்ந்து விட்ட செய்தி. குர்க்காவுனைச் சேர்ந்த 30 வயது பெண்மணி இறந்துபோய்விட்டாராம். அடுத்தபடகின் கைடும் வந்து ஒவ்வொருவராய் காப்பாற்றியும் இந்தப்பெண்மணி அதிக நீரைக்குடித்திருக்கிறார்.

இன்று செய்திகளில் காணும் , தான்  பயணித்த அதே கங்கையின் சீற்றத்தைக் கண்டு குட்டிப்பையனுக்கு  தூங்கச்செல்லும் முன் கலக்கம் என்றாலும் அன்று அவன் காட்டிய தைரியம் எனக்கு என்றும் மறக்காது.  நீச்சல்  கற்றுக்கொள்ள பயந்த அவனை மிகவும் கட்டாயப்படுத்தி சேர்த்திருந்தேன். இன்று எங்களனைவரையும் விட அதிகமாக கற்றுக்கொண்டவனும் அவனே. நீச்சல் தெரிந்ததால் இது போன்ற நீர் விளையாட்டுகளில் பயமின்றி இருப்பார்கள் என்பது உண்மையாகிவிட்டது.

முந்தையபதிவு -